Wednesday, April 15, 2009

அன்னை மீனாட்சியின் மேல் ஒரு சௌராஷ்ட்ரப் பாடல்


madhuraapuri raaNi miinaakSii
monnum r:hanO maayii tora aaTchi
vedur rhii tuu mogo rakSi
vinayamkan mii mellarEsi


மது4ராபுரி ராணி மீனாக்ஷி
மொந்நும் ர:நோ மாயீ தொர ஆட்சி
வெது4ர் ர்ஹி தூ மொகொ3 ரக்ஷி
விநயம்கன் மீ மெல்லரேசி


மதுராபுரி ராணி மீனாட்சி
மனதில் வேண்டும் அம்மா உனதாட்சி
எதிரில் நின்று நீ என்னை காப்பாய்
பணிவுடனே நான் வேண்டுகிறேன்


chokkEsuk sompu karan maayii
sukhapaaNi shrii kalyaaNi
chokkaT vaaTum soDNO sriidEvii
sontOShkan mii jivlarEsi

சொ2க்கேசுக் சொம்பு கரன் மாயீ
சுக2பா2ணி ஸ்ரீ கல்யாணி
சொ2க்கட் வாடும் சொட்நொ ஸ்ரீதேவி
சொந்தோஷ்கன் மீ ஜிவ்லரேசி

சொக்கேசனுக்(கு) உவகை தரும் தாயே
சுகபாணி ஸ்ரீ கல்யாணி
நல்வழியில் என்னை நடத்து ஸ்ரீதேவி
மகிழ்வுடனே நான் வாழ்கின்றேன்

amirdu tamizh amko tuu diisi
ammaa miinaakSi paramEsi
amirdu thamizh hovDe madhuraapurim
sauraaShTra maataa tuu hoyisi

அமிர்து3 தமிழ் அம்கோ தூ தீசி
அம்மா மீனாக்ஷி பரமேசி
அமிர்து3 தமிழ் ஹொவ்டெ மது4ராபுரிம்
சௌராஷ்ட்ர மாதா தூ ஹொயிசி

அமுதத் தமிழ் எமக்கு நீ தந்தாய்
அம்மா மீனாட்சி பரமேசி
அமுதத் தமிழ் வளர்த்த மதுரையிலே
சௌராஷ்ட்ர அன்னை நீ ஆனாய்

பாடலை இயற்றியவர்: மொல்லின் குமரன் (மல்லி. குமரன்)
வருடம்: சௌராஷ்ட்ர விஜயாப்தம் 697 சித்திரை மாதம் முதல் நாள்


(சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 697: ஆங்கில ஆண்டு 2009; சக வருடம்: விரோதி)

Tuesday, April 7, 2009

மனசுக்குள் நடக்கும் மீனாட்சி கும்பாபிஷேகம்!

இது மதுரை அரசாளும் மீனாட்சிக் குழந்தையின் சிறப்பு கும்பாபிஷேகப் (குடமுழுக்கு) பதிவு!
ஊருக்கே மகாராணி என்றாலும் அன்பர்களுக்கு அவள் குழந்தை தானே!
குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலத் தானே குடமுழுக்குக் கொண்டாட்டங்களும்!

கேக்-க்குப் பதில் பிரசாத அப்பம்! கேண்டிலுக்குப் பதில் நெய் தீபம்!
தலைக் குளியலுக்குப் பதில் கோபுரத் தலைக் கலசங்களுக்குக் குளியல்! :)

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)


அதான் இன்றைய சிறப்பு மீனாட்சிப் பாடல், பிள்ளைப் பாடல்! பார்ப்போமா? கேட்போமா? - பங்குனியில் ஒரு நவராத்திரி - 9!


மனசுக்குள் குடமுழுக்கு செய்து மகிழ்ந்தவர் பூசலார் நாயனார்! ஈசன் அந்தக் குடமுழுக்கைத் தான் முதலில் பெற்றுக் கொண்டானாம்!
அதே போல், மதுரை மீனாட்சி அன்பர்கள், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும்...

உங்க மனசுல நடப்பது தான் இந்த மீனாட்சி கும்பாபிஷேகம்! மனக் குடமுழுக்கு!
"கண்"ணார மட்டுமில்லாமல், "மன"மாரக் கண்டு களியுங்கள்!

ஈசனும் இப்படித் தான் மீனாட்சியை மனசுக்குள்ளாறவே வரைஞ்சி வரைஞ்சி பாக்குறாராம்! = ஒருவன் திருவுள்ளத்தில் அழகின் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டு பல இலக்கிய மேடைகளிலும், இசை மேடைகளிலும் பிரபலம்! தொடுக்கும் கடவுள் என்று துவங்கும் பாட்டு!
கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இசை அரசி எம்.எஸ். அம்மாவின் தேன் குரலில்!



மெல்ல மெல்ல அடி எடுத்து வச்சி வாம்மா! வருகவே வருகவே என்று குழந்தை மீனாளுக்கு நடை காட்டுகிறார் கவிஞர்! அப்படியே நைசா நடத்தி நடத்தி, அவளை நம்மிடம் அழைத்து வந்து விடுகிறார்! யார்? = "குமர" குருபரர்!
* இன்று தான் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமரன் என்றால்,
* அன்றும் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமர-குருபரன் இருந்திருக்கிறார்! :)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே! நறை பழுத்த
துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து


தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே =
தொடையல்-ன்னா மாலை என்ற பொருளும் உண்டு! எப்படி மாலைக்கு நார், பூக்கள், இலை, சரிகை, நூல் என்று பலதும் தேவைப்படுதோ,
அதே போல் பாட்டுக்கும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை-ன்னு பலதும் தொடுக்கத் தேவைப்படுகிறது! அதுல தொடை என்பது இன்னும் சிறப்பு!

எதுகைத் தொடை, மோனைத் தொடை-ன்னு பாட்டுக்கு அழகு சேர்க்கும்! ஆனால் அது மட்டுமே இருந்து, பாட்டில் பொருள் இல்லீன்னா?
அதே போல, தொடை நிரம்பிய பல கடவுள் பாடல்களுக்கு எல்லாம், உள்ளுறைப் பொருளாய் இருக்கிறாள் குழந்தை மீனாட்சி!

என்ன தான் விதம் விதமா தொடுத்தாலும், இறைவன் தோளில் போய் அமர்ந்தால் அல்லவோ மாலைக்கு அழகு?
பழம் பாடலும் இறைவனுக்குப் பயனாய் அமர்ந்தால் தான் அழகு! அதான் தொடையின் பயனே!

நறை பழுத்த துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே =
ந"றை"-ன்னா தேன்! ந"ரை"-ன்னா தான் வெள்ளை முடி! :)
ஆனா நறையைத் தலையில் தடவினா, தலை நரை ஆயிடும்-ன்னு சில பேரு வீட்டுல இன்னும் சொல்லுவாய்ங்க! :)

நறை பழுத்த = தேன் பழுத்த = தேன் எப்படிங்க பழுக்கும்?
பூ தான் காயாகி, அப்புறம் கனி ஆகுது இல்லையா? அந்தப் பூவில் இருக்கும் தித்திப்பான தேன் தானே பழத்தின் ருசிக்குக் காரணம்!
அந்த மகரந்தமே, ஒட்டு மொத்தமா பழுத்தா எப்படி இருக்கும்? சும்மா வண்டு போல உறிஞ்சிக் குடிச்சிற மாட்டோம்? :) அதான் நறை பழுத்த என்கிறார்!

துறைத் தீந் தமிழின் ஒழுகு நறும் சுவை! பல திணை/துறைகளில் ஊறிக் கிடக்கும் தமிழ்த் தேன்! தீம்பால், தீஞ்சுவை-ன்னு சொல்றோம்-ல்ல? அதே தான் தீம்+தமிழ் = தீந்தமிழ்!

அந்தத் தமிழை ஆசை ஆசையாக் கடிச்சித் தின்னும் போது...ஒழுகு நறும் சுவை!
மல்கோவா மாம்பழத்தைக் கடிச்சித் தின்னும் போது, விரலிடுக்கில் ஒழுகும் பாருங்க!
வெட்கம் மானம் பார்ப்போமா வீட்டுக்குள்ள? சப்பு கொட்டி மாம்பழச் சாறை வழித்துச் சாப்பிட்டு விட்டு தானே மறு வேலை? அதே போல் தான் ஒழுகு தமிழ்ச் சுவை! :)



எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே! வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இள மென் பிடியே! எறி தரங்கம்

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் = கிழங்கை வெட்ட முடியாது, அரிய முடியாது! நாரோட ஒட்டிக்கிட்டு தான் வரும்! பனங்கிழங்கு சாப்பிட்டிருந்தா தெரியும்! கிழங்கைப் பல்லால் அகழ்ந்து தான் எடுக்கணும்! அதே போலத் தான் அகந்தை என்னும் கிழங்கு!
தான்-தான்-தான் = இதையும் நம்ம மனசுக்குள்ள நாமே போய், அகழ்ந்து எடுத்தாத் தான் முடியுமே தவிர, எம்புட்டு சாத்திரம் பேசினாலும் ஒன்னும் முடியாது! :)

தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! = ஆனா அகழ்ந்துட்டா அதுல குழி விழுந்துருமே! அதனால் என்ன? குழியில் அன்பு என்னும் நெய்யை உற்றி அதையே விளக்கு ஆக்கிருவாங்களாம் அடியவர்கள்! தொழும்பர்கள்!
அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாக, இன்பு உருகு சிந்தை இடு திரியாய்-ன்னு பாடினாரே ஆழ்வார்! அது போல, தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! தாயே மீனாட்சி!

வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே = பிடி-ன்னா பெண் யானை! களிறு=ஆண் யானை!
இமயமலைச் சிகரங்கள் வளருதாம்! எப்படி? பனி உருகினாப் பிறகு ஒரு உசரம்! பனி மூடி இருக்கும் போது அதை விட உசரம்! அதான் "வளர்" சிமய-ன்னு சொல்றாரு!
அந்த மலைச் சிகரங்களில் பெண் யானையைப் போல் ஓடி விளையாடியவள், இமவான் மகள்! பார்வதி!



உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
உயிர் ஓவியமே! மதுகரம் வாய்


இது தான் சிறப்பு வர்ணனை! பாட்டுக்கே மகுடம்!

காதலன் எப்படி அழகாத் தெரியறான் காதலிக்கு?
காதலுக்கு முன்னாடி அவனை லூசு என்கிறாள்! கல்யாணம் ஆன பிறகு சரியான வெத்து வேட்டு என்கிறாள்! :))
ஆனால் காதலின் போது மட்டும், அவன் அழகாத் தெரியக் காரணம் என்ன?
இருங்க அக்கம் பக்கத்துல கேட்டுட்டு வந்து சொல்லுறேன்! :))

ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!
ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!

மனசு தாங்க அழகுக்கு காரணம்! சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் சும்மா கொஞ்ச நாளு தான்! அப்புறம் நம்மளயே பேக் பண்ணி அனுப்பிச்சிருவாங்க! :)
ஆனால் மனசை அழகா வச்சிக்கிட்டா, சிரிப்பும் அழகா வரும்! சிரிப்பும் அழகா வந்தா, முக அழகு தானே வரும்! - சரி தானே டார்லிங் நான் சொல்றது? :)

இப்படி மனசுக்குள்ள வரைஞ்சி பார்த்த ஓவியம்! அழகு வண்ணங்கள் ஒழுக ஒழுக, வரைஞ்சிப் பார்த்த உயிர் உள்ள ஓவியம் = மீனாட்சி!

தரங்கம்-ன்னா அலை! தரங்கம்பாடி-ன்னு ஊரு இருக்குல்ல?
அலைகடலை பார்டர் போட்ட புடைவையை உடுத்திக் கொண்டிருக்கும் மண் மகள்! அவளையும் கடந்து கயிலை நின்ற ஒருவன்! எறி தரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன்!

* யார் வரைஞ்சாங்க? = சொக்கன்! சிவன்!
* யாரை வரைஞ்சான்? = மீனாட்சி என்னும் ஓவியத்தையே, ஓவியத்தில் வரைஞ்சான்!


மடுக்கும் குழற் காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!!


மதுகரம் வாய் மடுக்கும் = வண்டுகள் வாய் மடுக்கும்
குழற் காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடி = கருங் காடு போல கூந்தல் பரவிக் கிடக்க, ஒரு வஞ்சிக் கொடி மீனாட்சி பூத்துக் குலுங்குகிறாள்!
அவளைச் சுற்றி வண்டு போல், ங்கொய், ங்கொய்-ன்னு நாமளும் சுற்றி சுற்றி வருகிறோம்!

இட்டும், தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை, மெய்ப்பட விதிர்த்தும்,
சிறு கை நீட்டி, குறு குறு நடந்து.......

* மலையத்துவச பாண்டியன் பெற்றவளே! வருக! வருகவே!
* என்னைப் பெத்த ராசாத்தீ! யம்மாடீ! வருக வருகவே!

* இந்த அம்மன் பாட்டு வலைப்பூவில், எங்கள் மனக் கும்பாபிஷேகம் காண, வருக வருகவே!

தென்னாடுடைய சிவளே போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவீ போற்றி!! எங்கள் மீனாட்சி போற்றி போற்றியே!!!

பசுங்கிளி தாங்கிய பைங்கிளி! (பங்குனியில் ஒரு நவராத்திரி -8)




மதுரையின் ஒளியே மாணிக்கமே
மரகதக் கொடியே மீனாட்சி!
சுந்தரர் மனதில் வீற்றிருக்கும்
சுந்தரியே எங்கும் உனதாட்சி!

மாயவன் மருகனின் தாயவளாம்
மாதவர் பணிந்திடும் தூயவளாம்
சேயென நமையென்றும் காப்பவளாம்
பூவெனச் சிரித்திடும் பூமகளாம்!

ஆலவாய் அழகனின் நாயகியே
அன்பால் நிறைந்த அருள்மதியே!
பசுங்கிளி தாங்கிய பைங்கிளியே
சுடரொளியே உள்ளம்கவர் எழிலே!

மீன்விழியாள் மனம் மீட்டிடுவாள்
தேன்மொழியாள் வழி காட்டிடுவாள்
சரணடைந் தோரைக் காத்திடுவாள்
கருணையி னால்இருள் நீக்கிடுவாள்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.eprarthana.com/images/gallery/amman/srimeenakshi.jpg

ஒரு அறிவிப்பு: இந்த வாரத்திற்கு பிறகு இன்னும் கொஞ்ச நாளைக்கு பதிவுலகப் பக்கம் வர்றது கஷ்டம். அதனால தற்காலிக விடுதலையை கிடைக்கும் போதே முடிஞ்ச வரை அனுபவிச்சுக்கோங்க :) அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்.

Monday, April 6, 2009

அங்கயற்கண் அம்மை 108 போற்றி - பங்குனியில் ஒரு நவராத்திரி - 7


சிறுவயதில் மீனாட்சி அம்மன் திருமுன்னர் நின்று அவளைத் தரிசிக்கும் போது பல நேரங்களில் அங்கே எழுதி வைக்கப்பட்டிருக்கும் அன்னையின் 108 போற்றியை சொல்லி வணங்குவது வழக்கம். அவளின் திருக்கோவில் திருக்குடமுழுக்கு நேரத்தில் அந்த 108 போற்றி திருநாமங்களை இங்கே எழுதினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இதோ அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்.

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

Sunday, April 5, 2009

காட்சியெல்லாம் மீனாட்சி ! (பங்குனியில் ஒரு நவராத்திரி - 6)



உலகத்திலே காண்ப தெல்லாம்
உன் னுருவாய் தோணுதம்மா
உள்ளத்திலே உன் நினைவே
உயிர் மூச்சாய் ஆனதம்மா

பச்சை நிறம் பார்க்கையிலே
பசுமை யதன் குளிர்ச்சியிலே
இச்சா சக்தி உன்நிறமே
இத மாகத் தோணுதம்மா

கீழை வானச் சிவப்பினிலே
கிளியின் சிவந்த மூக்கினிலே - உன்
பவழ வாய்ச் சிவப்பழகே
பரவச மாய் தோணுதம்மா

கதிர வனைக் காணுகையில் - உன்
கண் ணொளியே தோணுதம்மா
நில வொளியில் நனைகையிலே - உன்
விழியின் குளுமை தழுவுதம்மா

மலர்கள் மலர்ந்து சிரிக்கையிலே - உன்
முறுவல் நினைவில் தோணுதம்மா
பட்டாம் பூச்சி பறக்கையிலே - உன்
இமைகள் சிறகு அடிக்குதம்மா

வெள்ளிக் கெண்டை மீனினமும்
துள்ளித் தாவும் மானினமும்
சுற்றும் கரு வண்டினமும் - உன்
கொஞ்சும் விழிகள் ஆனதம்மா

அன்னப் பறவை நடையினிலும்
தோகை மயிலின் அசைவினிலும்
தென்றல் காற்றின் மென்மையிலும்
உந்தன் நளினம் தோணுதம்மா

உலகத்திலே காண்ப தெல்லாம்
உன் னுருவாய் தோணுதம்மா
உள்ளத்திலே உன் நினைவே
உயிர் மூச்சாய் ஆனதம்மா!


--கவிநயா

Thursday, April 2, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -- 3 [61 - 91]
[பங்குனியில் ஒரு நவராத்திரி-5]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’


[முந்தைய பதிவு]

நித்திலமே கற்பகமே நின்மலமே நன்மணியே
சுத்தபரி பூரணியே சுந்தரியே - அத்தருடன்

வாதாடு மங்கையே மாமந்த்ர ரூபியே
வேதாந்தி யேகமல மெல்லியலே - நாதாந்த

மாயேச் சுவரியே மங்கையே மாமறைக்குந்
தாயாகி நின்ற சரஸ்வதியே - காயாய்ப்

பழுத்த பழமாய்ப் பழத்திரதத் தானாய்
முழுத்தபரா னந்த முதலாய் - எழுத்துமுதல்

ஆறுசம யங்களுக்குள் அவ்வவர்க்கும் வெவ்வேறாய்
வேறுபல ரூப விகற்பமதாய்க் - கூறரிதாய்

அங்கங்குந் தானாய் அமர்ந்தவளே ஆதியந்தம்
எங்கெங்குந் தானாய் இருந்தவளே - திங்கள்நுதல்

அஞ்சுகமே தேனே யணங்கே யமுதமொழிக்
கிஞ்சுகமே பிஞ்சுமதிக் கிள்ளையே - கொஞ்சுகுயில்

கன்னி திரிசூலி கபாலி சிவகாமி
மன்னு கவுரி மகமாயி - பொன்னின் மலர்த்

தாளி சதுரி சவுந்தரிமுக் கண்ணுடைய
காளி பகவதி கங்காளி - தூளியாத்

தக்கன் தலையறுத்த தத்துவத்தி தற்பரத்தி
அக்கினிகை யீர்ந்த அமர்க்களத்தி - மிக்கபுகழ் [70]

வீரசக்தி மேருவினை வில்லா வளைத்தவொரு
பராசக்தி வேதப் பராசக்தி - தாரணிகள்

கொண்டகா ரிச்சிக்குங் குந்தளத்தி மாமதனன்
சண்டைக்கா ரிச்சி சகலத்தி - துண்டமதிச்

செஞ்சடைச்சி கஞ்சுளிச்சி செம்படத்தி கங்கணத்தி
பஞ்சசக்தி கொந்தளத்தி பைம்பணத்தி - அஞ்சனத்தி

முத்துவடக் கொங்கைச்சி முல்லை முகிழ் நகைச்சி
பத்தரவர் நெஞ்சகத்தி பாரிடத்தி - சுத்தவெள்ளை

அக்கு வடத்தி அறம்வளர்த்தி அன்புடைச்சி
செக்க ரிளம்பிறைச்சி செண்பகத்தி - தக்கமணி

ஓலைக் குழைச்சி உபதேசக் குண்டலச்சி
மாலைக் கழுத்தி மவுனத்தி - ஞாலமெல்லாம்

அக்கரத்தி பொக்கணத்தி அண்டபகி ரண்டத்தி
முக்கணத்தி நிட்களத்தி மோட்சத்தி - மிக்கபுகழ்

ஏகாக் கரத்தி இமயப் பருப்பதத்தி
நாகாதி பூண்டசிங்க நாதத்தி - வாகான

பத்மா சனத்தி பரிமளத்தி பாம்பணைத்தி
கற்பாந் தரத்தி கருநிறத்தி - விற்காம

வேடிச்சி நல்லதொரு மீனவனுக் கன்றுமுடி
சூடிச்சி கொக்கிறகு சூடிச்சி - நாடிச்சீர் [80]

பாதந் தனைத்தேடும் பங்கயத்தில் வீற்றிருக்கும்
வேதன் தலையறுத்த வித்தகத்தி - நீதிபுனை

பாடகத்தி கீதப்ர பந்தத்தி வெள்ளிமன்றுள்
ஆடகத்தி கூடலுக்குள் ஆதியே ஏடெதிரே

ஏற்றுவித்து முன்சமணர் எண்ணா யிரர்கழுவில்
வீற்றிருக்க வைத்தமறை வித்தகியே - நாற்றிசையும்

கொண்டாடப் பெற்றதொரு கோமளமே சாமளையே
தண்டா மரைத்திருவே தையலே - மண்டலங்கள்

எங்குமொத்து நின்றருளும் ஈஸ்வரியே மாமதுரை
அங்கயற்கண் நாயகியே அம்மையே - துங்க

ஒளியே பெருந்திருவே ஓதிமமே உண்மை
வெளியே பரப்பிரம வித்தையே - அளிசேரும்

கொந்தளக பந்திக் குயிலே சிவயோகத்
தைந்தருவே மூவருக்கும் அன்னையே - எந்தன் இடர்

அல்லல்வினை யெல்லாம் அகற்றியே அஞ்சலென்று
நல்லசவு பாக்கியத்தை நல்கியே - வல்லபத்தின்

ஆசுமது ரஞ்சித்ர வித்தார மென்றறிஞர்
பேசுகின்ற வுண்மைப் பெருவாக்கு - நேசமுடன்

தந்தென்னை யாட்கொண்டு சற்குருவாய் என் அகத்தில்
வந்திருந்து புத்தி மதிகொடுத்துச் - சந்ததமும்

நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண்
தாயே சரணம் சரண். [91]
*************************


“மீனாட்சியம்மை கலிவெண்பா” நிறைந்தது!

யாவினும் நலம் சூழ்க!

*******************************


அருஞ்சொற்பொருள்:

61-நித்திலம்-முத்து; நின்மலம்-குற்றமற்றவள்; பரிபூரணி-எங்கும் நிறைந்தவள்; அத்தர்-தலைவர்.

62. வாதாடும்-வாதிக்கும்; தர்க்கம் செய்யும்; மந்த்ர ரூபி-மந்திரங்களையே வடிவாகக் கொண்டவள்; வேதாந்தி-வேத முடிவிலுள்ளவள்; நாதாந்த-நாத தத்துவத்தின் முடிவிடமாய்.

63. மாயேஸ்வரி-பெரிய நாயகி.

64. ரசம்-சுவை; முழுத்த-நிறைந்த; பரானந்தம்-சிவானந்தம்; முதல்-அடிப்படை; எழுத்துமுதல்-முதல் எழுத்தான அகரம் போன்றவள்.

65. அவ் உவர்-அந்தந்த மதத்தினர்; வெவ்வேறு-வேறுபட்ட தெய்வங்கள்; விகற்பம்-மாறுபட்ட புன்சிறு தெய்வங்கள்.

66. திங்கள்-சந்திரன்; நுதல்-நெற்றி.

67.அஞ்சுகம்-அழகிய சிறந்த கிளி; அணங்கு-தெய்வப் பெண்; சிஞ்சுகம்-கோவைக் கனி போன்ற சிவந்த வாயையுடையவள்; பிஞ்சுமதி-பிறைச் சந்திரன்; கொஞ்சு-பிரியமாகப் பாடவல்ல.

68. கன்னி-என்றும் இளமையானவள்; திரிசூலி-முத்தலை சூலமுடையவள்; கபாலி-மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவள்.

69. தாளி-கால்களையுடையவள்; சதுரி-சாமர்த்தியம் வாய்ந்தவள்; பகவதி-சிறந்த பிராட்டி; கங்காளி-எலும்பு மாலை அணிந்தவள்; தூளியா-தூளாகும்படி.

70. தத்துவத்தி-தத்துவங்களின் முடிவிடமாக உடையவள்; தற்பரத்தி-தானாகத் தோன்றிய மேன்மை பொருந்திய தனக்கு ஒப்பில்லாதவள்; ஈர்ந்த-அகப்படுத்திய.

71. பராசக்தி-மேலான ஆற்றல் பொருந்தியவள்; தாரணி-பூமி.

72. கார்-மேகம்; குந்தளத்தி-கருமையான கூந்தலையுடையவள்; சண்டை காரிச்சி- எதிர்த்துப் போரிடும் காமரூபம் பொருந்தியவள்; சகலத்தி-எல்லா தன்மைகளையும் தன்னிடம் இயல்பாய்ப் பெற்றவள்; துண்டமதி-பிறைச் சந்திரன்.

73. கஞ்சுளிச்சி-சட்டை அணிந்தவள்; கங்கணத்தி-நாகமாகிய காப்பை அணிந்தவள்; பஞ்ச சத்தி- ஐந்து சக்திகளாகவும் உள்ளவள்;கொந்தளத்தி-சிறந்த சூழலை உடையவள்; பைம்பணத்தி-பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவள்; அஞ்சணத்தி-மை பூசப் பெற்ற கண்ணை உடையவள்.

74. முத்து வடம்-முத்து மாலை; கொங்கை-தனம்; நகைச்சி-சிரிப்பினை உடையவள்; பத்தர்-அடியார்கள்; நெஞ்சகத்தி-மனத்தில் இருப்பவள்;பார் இடத்தி-பூமியை இருப்பிடமாக உடையவள்.

75. அக்குவடம்-சங்கு மாலை; வளர்த்தி-வளர்த்தவள்; செக்கர்-சிவந்த; பிறைச்சி-சந்திரனைத் தரித்தவள்.

76. ஓலை-காதணி; குழைச்சி-குண்டலத்தை உடையவள்; குண்டலச்சி-ஆகாய வழியே செல்லும் தன்மை வாய்ந்தவள்; மாலை-சிறந்தமங்கல மாலை; ஞாலம்-பூமி.

77. அக்கரத்தி-மந்திர எழுத்தே உருவகமாக உடையவள்; பொக்கணத்தி-திருநீற்றுப் பையை உடையவள்; அண்டம்-வானுலகம்; பகிர் அண்டம்-வானுலகின் வேறான பல உலகங்கள்; முக்கணத்தி-சத்துவ, ராஜஸ,தமோ குணங்களை உடையவள்; நிட்களத்தி-உருவமில்லாதவள்;குற்றமில்லாதவள்; மோட்சத்தி முத்தி தருபவள்.

78. ஏகாக் கரத்தி-ஓம் என்னும் பிரணவ ரூபமாயிருப்பவள்; நீங்காத கையை உடையவள் எனவும் வரும்; நாகாதி பூண்ட-நாகம், எலும்பு முதலியவற்றை ஆபரணங்களாக அணிந்த; நாதத்தி-வீர முழக்கம் செய்பவள்; வாகு-அழகு.

79. பரிமளம்-வாசனை; அணைத்தி-படுக்கையாக உடையவள்; கற்பாந்தந்தரத்தி- ஊழிக் காலத்தின்இறுதியிலும் இருப்பவள்.

80. வேடிச்சி-வேடுவர் குலப் பெண்; மீனவன் -சோமசுந்தரக் கடவுள் [பாண்டியன்]; சூடிச்சி-சூட்டியவள்; நாடி-தேடி.

81. வேதன் -பிரமன்; பங்கயம்-விஷ்ணுவின் உந்திக் கமலம்; வித்தகத்தி-மேலான தன்மை உடையவள்.

82. பாடகத்தி-பாடகம் என்கிற காலணி அணிந்தவள்; கீதம்-இசைப் பாடல்; ப்ரபந்தத்தி-நூல்களுக்குத் தலைவி;ஆடகத்தி-கால் மாறி ஆடியவள்; ஆதி-ஆதி சக்தியாய் அமைந்தவள்.

83. மறை வித்தகி-வேத விழுப் பொருள்.

84. கோமளம்-பேரழகு; யாமனை-காளி;தாமரைத் திரு-தாமரை போன்ற முகமுடைய பார்வதி; தையல்-பேரழகு வாய்ந்த பெண்.

85. நின்று-நிலை பெற்று; துங்க-தூய்மையான.

86. ஓதிமம்-அன்னம் போன்ற நடையுடையவள்; உண்மை வெளி-சத்து ஆகாயமாய் இருப்பவள்; பரப் பிரமம்-மேலான பொருள்; வித்து-அடிப்படையாய் இருப்பவள்; அளி-வண்டு.

87. கொந்து-கொத்துப் போன்று திரண்ட; அளகம்-கூந்தல்; பந்திக் குயில்-வரிசையான குயில்கள் கூவுவது போன்ற இனிமையான குரலை உடையவள்; ஐந்தரு-அரி சந்தனம், கற்பகம்,சந்தானம், பாரிஜாதம்,மந்தாரம் என்னும் தேவலோகத்திலுள்ள சிறந்த ஐவகை மரங்கள்; மூவருக்கும்-மும்மூர்த்திகளுக்கும்.

88. இடர்-சிறு துன்பம்; அல்லல்-பெருந் துன்பம்; வினை-பிறப்புக்கு ஏதுவாய நல்வினை, தீவினை; அஞ்சல்-பயப்படாதே; சவுபாக்கியம்-சிறந்த பேறுகள்; வல்லபம்-ஆற்றல்.

89. ஆசு-உடனே பாடப் பெறும் பாடல்; மதுரம்-இன்னிசைப் பாடல்; சித்திரம்-ஓவியத்தில் பொருந்தும்படியாகப்பாடப் பெறும் பாடல்; வித்தாரம்-விளக்கமாகப் பாடும் பாடல்; பெருவாக்கு-சிறந்த புகழ் வார்த்தைகள்.

90. அகம்-மனம்; புத்திமதி-பேரறிவு; சந்ததம்-எப்போதும்.

91. நீயே-நீ ஒருத்தியே; நின்று-நிலையாக; இரட்சி-பாதுகாப்பாயாக; சரணம்-பாதம்; சரண்-அடைக்கலம்.

**********************

[மேற்சொன்ன அருஞ்சொற்பொருள் விளக்கம் சென்னை, பச்சையப்பன் கல்லூரிப் பள்ளித் தலைமைத் தமிழ் ஆசிரியர், வித்துவான், அம்பை, இரா. சங்கரனார் எழுதியது.]

யாவர்க்கும் பொதுவாகி எல்லார்க்கும் நலமளிப்பவள் மீனாட்சியம்மை என்னும் பொருள் இதனைப் படிப்பவர்க்கு எளிதில் விளங்கும்!

அனைத்து உயிரிடத்தும் அன்பு பூண்டு, நல்லனவே நினைத்து அனைவரும் அருள்பெற அம்மையை வேண்டுகிறேன்.

இந்த அரும் பெரும் நூலான ‘மீனாட்சியம்மை கலிவெண்பா’வை இங்கு இட அருளிய அன்னைக்கு வந்தனம் சொல்லி முடிக்கிறேன்.
http://ammanpaattu.blogspot.com/2009/04/2_02.html

யாவினும் நலம் சூழ்க!

முருகனருள் முன்னிற்கும்!

+++++++++++++++++++


"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]
[பங்குனியில் ஒரு நவராத்திரி-4]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’




[முந்தைய பதிவு]


[இந்தப் பகுதியில் வரும் பண்ணழகும், சொல்லழகும், பொருளழகும் அம்மையை நம் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தும்! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள் இதில் சுருங்கச் சொல்லி விளங்கியிருக்கும்! படித்து இன்புறுவோம்!]


நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை

ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்

இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த

மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்

உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்

பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்

ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்

போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய

பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத

அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்

வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்

கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி

தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்

காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி

பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி

சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி

பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா

அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்

செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு

மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற

சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத

தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்

சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்

தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]


********************************



[அருள்கூர்ந்து பொருள் விளக்கமும் படிக்க வேண்டுகிறேன். பல அரிய செய்திகள் விளங்கும். நன்றி.]


அருஞ்சொற்பொருள்:


31. நிட்களம்-குற்றமற்ற தன்மை; வெளி-சிதாகாசம்; உத்தமி-சிறந்த இலக்கணமுடையவள்; பத்தி-வரிசை.

32. ஒளி- சுடர்; அந்தரம்-ஞானாகாசம்; ரூபம்-வடிவு; விளை பொருள்-உண்டாகும் உயிர்ச்சத்து; மேகம்-மழை; வாகு-அழகு.

33. இடை- இடைகலை, இடதுபக்க நாசி மூச்சுக்காற்று; பிங்கலை- வலதுபக்க நாசியில் வரும் மூச்சுக்காற்று; கடை- இறுதியானது; சுழிமுனை-இடைகலையும், பிங்கலையும் சேரும் இடம்; கால்-காற்று; மடல்-இதழ்கள்; அவிழ்ந்த-மலர்ந்த.

34. மூலாதாரம்- ஆறு ஆதாரங்களில் முதன்மையானது, மும் மண்டலம்- சூரிய, சந்திர, அக்கினி எனும் 3 மண்டலங்கள்; கடந்து- சென்று; மேல் ஆதாரம்-உச்சி இடத்துக்கும் மேல்நிலை; ஊறல்- சுரக்கும்[அமுதம்].

35. எண்-நினைத்தல்; அரிய-முடியாத.

36. மெய்ஞ்ஞானம்-உண்மை அறிவு; அஞ்ஞானம்-அறியாமை; பைந்நாகம்-படத்தைப் பெற்ற பாம்பு.

37. பாங்கு-முறை; ஆண்டி-பிச்சாண்டி.

38. கூத்தாடிச்சி- கூத்தாடியின் பெண்பால்; அம்மனை- ஏழாங்காய் ஆட்டம்; பந்தாடிச்சி-பந்தாட்டம் ஆடுபவள்; மால்-விஷ்ணு.

39. வினை-நல்வினை, தீவினை இரண்டும்; அஞ்சல்-பயப்படாதே; தோற்றுதல்-தரிசனம் தருதல்; துடி-உடுக்கை; இடைச்சி-இடுப்பை உடையவள்; ஏத்து-துதித்தல்.

40. நிறத்தி-நிறம் உடையவள்; கச்சு-இரவிக்கை; பொரு-முட்டுகின்ற; முலைச்சி-தனங்களை உடையவள்; வளைச்சி-வளையல்களை அணிந்தவள்; கொச்சை-மழலைப் பேச்சு.

41. மலையரையன் - மலை அரசன் மலையத்வஜன். மலைச்சி- குறிஞ்சி நிலப் பெண்; கலைச்சி- பல கலைகளையும் அறிந்தவள், சிறந்த ஆடைகளை அணிந்தவள்;மேகலை என்னும் ஒட்டியாணத்தை அணிந்தவள்[[மே]கலைச்சி என்பது முதற் குறைந்து வந்தது]; நிலை- உண்மைத் தன்மை; நிலைச்சி- நிலை பெற்றுள்ளவள்;அலையாத-அசையாத.

42.நடைச்சி-நடையை உடையவள்; மறைச்சி- வேதங்களால் புகழ்ந்து கூறப்படுபவள், வேதங்களுக்குள் மறைந்து காணப்பெறும் உட்பொருளாய் இருப்பவள்; ஆண்டிச்சி-எல்லாவற்றையும்ஆளும் தகுதி பெற்றவள்; கன்னல்-கரும்பு; மொழிச்சி-இனிய சொற்களை உடையவள்; கருணைச்சி- உயிர்களிடம் இரக்கம் உள்ளவள்.

43.வாய்ச்சி- இன்சொல்லுடையவள்; சடைச்சி-சடையை உடையவள்; மங்கைச்சி-இளம்பெண்; பேய்ச்சி- பேய்களால் சூழப் பெற்றவள்;அச்சம் தரத் தக்கவள்; இளமுலைச்சி- பிறரால் சுவைக்கப் பெறாத இளமையான தனங்களை உடையவள்; பேதைச்சி-ஒன்றும் அறியாப் பருவத்தை உடையவள்.

44. மொழிச்சி- சொற்களை உடையவள்; வெளிச்சி-வெட்டவெளியை இருப்பிடமாகக் கொண்டவள்; வஞ்சம் அற்ற வெளிப்படையான குணமுடையவள்; வெளி இடைச்சி- வெட்டவெளியின் நடுவே தோன்றாது இருப்பவள்; அண்ணுபுரம்- நெருங்கிய முப்புரம்; படைச்சி-நகை[சிரிப்பு] என்னும் போர்க்கருவியை உடையவள்; நண்னில்-எளிதில் அடையமுடியாத; அரும்-விலையுயர்ந்த.

45. கொப்பு-மேல் காதில் அணியும் கொப்பு என்னும் அணி; குழைச்சி-கீழ்க் காதில் அணியும் குழை என்னும் நகையணியை உடையவள்; பொரு-போன்ற, வென்ற; விழிச்சி-கண்களை உடையவள்; அப்பு-[கங்கை]நீர்; சிவாகமச்சி- சைவ ஆகமத்தின் தலைவி; மெய்ப்பு ஆம்- உண்மை ஆகிய.

46. கருப்பு-கரும்பாகிய; சிலைச்சி-வில்லை உடையவள்; கலைச்சி-கலைகளின் தலைவி; வலைச்சி-மீனவர் குலத்தில் பிறந்த உமை.;மருப்பு-யானைக்கொம்பு; மவுனத்தி-மோன நிலையில் இருக்கும் பரமேஸ்வரி; பொருப்பு-[இமய]மலை.

47. தாமம்-மாலை; சமர்த்தி-சாமர்த்தியமானவள்; தருமத்தி- அறம் வளர்த்த அரசி; நாமம்-புகழ் வாய்ந்த; சிவபுரத்தி-மதுரையைத் தன்இருப்பிடமாக உடையவள்; நாரணத்தி- நாராயணன் தங்கையான வைஷ்ணவி; தே-தெய்வீகத் தன்மை.

48. காரணத்தி-எல்லாவற்றுக்கும் மூல காரணமாயுள்ளவள்; கணத்தி-கூட்டமாக இருப்பவள்; வாரணத்தி-பெண்யானை போன்ற நடையையுள்ளவள்; மாரணத்தி-அனைத்துக்கும் இறுதி தரக் கூடிய வல்லமையுள்ளவள்; [ஆரணத்தி எனப் பிரித்து வேதங்களுக்குத் தலைவியானவள் எனவும் பொருள் கொள்ளலாம்; பூரணத்தி-எங்கும், எதிலும் நிறைந்தவள்.

49. பரிபுரத்தி-பரிபுரம் என்னும் சிலம்பினை அணிந்தவள்; பங்கயத்தி-அடியார்களின் இதய கமலத்தில் அமர்ந்திருப்பவள்; செங்கரத்தி-செம்மை வாய்ந்த கைத்தலங்களை உடையவள்; சொப்பனத்தி-கனவிலும் வந்து அருள் சுரப்பவள்; பாதிமதி- அரைச் சந்திரன்.[பறைச் சந்திரன் எனவும் கொள்ளலாம்]

50. துய்ய-தூய்மையான; காரனி-உலகின் மூல காரணமாக உள்ள தலைவி.

51. சேணிச்சி-நிலையாதார்க்கு எட்டாத தூரத்தில் இருப்பவள்;[ஆடை நெய்யும் குலத்தில் பிறந்தவள், சொர்க்கத்தை விரும்பும் அடியார்க்கு கொடுத்து அருள்பவள் எனவும் கொள்ளலாம்];ஊணிச்சி- நல்ல உணவை விரும்புபவள், உண்டவள்; பாணிச்சி-செங்கரங்களை உடையவள்;விறகு விற்ற படலத்தில் பாணனாக வந்த சிவனின் தலைவி].

52. பாசம்-பாசக் கயிறு; அங்குசம்- யானையை அடக்கப் பயன்படும் ஈட்டி; பரத்தி-மேலான பிராட்டி, பரதர் குலத்தில் பிறந்த பெண்; பருப்பதத்தி-மலை நாட்டில் பிறந்தவள்; மேலான பதத்தைத் தர வல்லவள்; காசாம் பூ- நீலோத்பல மலர்.

53. அம்பரத்தி- குற்றமற்ற சேலையை உடுத்தியவள்; ஆகாயத்தை உருவாக உடையவள்; ஐம்புலத்தி-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களின் ஆதாரமாயிருப்பவள்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களின் தலைவி; ஒரு-ஒப்பற்ற;உம்பர்-தேவர்; உத்தமத்தி-மேலான இலக்கணங்களையுடைய செல்வி.

54. செட்டிச்சி-செட்டி குலப்பெண்; ஒட்டச்சி-மண் வேலை செய்பவள் [சிவனார் மண் சுமந்த படலம் அறிக.] பூதி-திருநீறு; உத்தளத்தி-உடல் முழுதும் பூசியிருப்பவள்.

55. மின் -மின்னலைப் போன்ற பிரகாசம் உடையவள்; விளக்கு-அஞ்ஞான இருளைப் போக்கும் பிரகாசம்போன்றவள்; சீவ ரத்தினம்-ஐந்தலை நாகத்தின் மணி போன்ற; பொன் -அழகிய இலக்குமி.

56. பணி-ஆபரணங்கள் அணிந்தவள்; ஆணிக் கனகம்- பொன்னால் ஆன ஆபரணம்; மாண்-சிறப்பு.

57. சிங்காரம்-அலங்காரம்; சிலை-மலை; கங்காளர்-எலும்பு மாலை அணிந்த சிவபிரான்; மங்காத-ஒளி குறையாத.

58. கொழுந்து-இளந்தளிர் போன்றவள்; திரு-தெய்வத்தன்மை நிறைந்தவள்; ஐவர்-பிரமன். விஷ்ணு,உருத்திரன், மகேஸ்வரன்,சதாசிவன் எனும் 5 கடவுளர்.தாய்-ஆதி சக்தி;மெய்யர்-உண்மை அடியார்கள்.

59. சிவானந்தி- சிவானுபவம் பெற்றொளிரும் பிராட்டி; மூர்த்தி-தலைவி.

60. தாயகம்-பிறப்பிடம்; தாவரம்-நிலைபொருள்; சங்கமம்-இயங்கு பொருள்; சுடர் மூன்று-தீபச் சுடர்கள் மூன்று[சூரிய,சந்திர,அக்கினி];சங்கமம்-நுண்ணிய பொருள்; வேய்-மூங்கில்.

******************************

[நாளை நிறைவுறும்]

Wednesday, April 1, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1 [பங்குனியில் ஒரு நவராத்திரி-3]

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1
[பங்குனியில் ஒரு நவராத்திரி-3]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’





அருள்மிகு மீனாக்ஷி அம்மன் ஆலயக் கும்பாபிஷேகத்தை ஒட்டி பதிவுகள் எழுதலாமா எனக் குமரன் கேட்டவுடன் மிக ஆவலுடன் ஒப்புக்கொண்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன், என் இல்லத்திற்கு வருகை தந்த ஒரு பெரியவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்து இதைப் படித்து வரச் சொன்னார். தொடர்ந்து படிக்காமல் அவ்வப்போது மட்டுமே படித்து வந்தேன்.

மிகச் சிறந்த முருக பக்தரான ”திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள்” இயற்றிய இந்த “மீனாட்சியம்மை கலிவெண்பா” மிகவும் அருமையான ஒரு நூல்! மீனாட்சி அம்மனின் பக்தராக இருந்து, அன்னையின் தரிசனம் பெற்று, அவளால் தொட்டெழுப்பப்பட்டு, அவள் ஆணையின் பேரில், சுயம்பு மூர்த்தியான முருகப் பெருமானுக்கு திருப்போரூரில் ஆலயம் எழுப்பிய மகான் இவர்!




91 கண்னிகள் கொண்ட இந்தத் துதி, முதல் வரியில் தொடங்கி, 182-ம் வரியில்தான் நிறைகிறது! அற்புதமான சொல்லாடல்களும், ஆழமான கருத்துகளும் கொண்ட இந்த நூல் அன்னையின் அடியவர் அனைவராலும் படிக்கப் படவேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை! அதிகம் அறிமுகமில்லாத இந்த அரிய நூலை பதிவேற்ற வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா! அவளருளால் இன்று நிறைவேறியது!


அன்னையை இவர் துதிக்கும் அழகை, நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு நாளைக்கு 30 கண்ணிகள் எனத் தொடர்ந்து 3 நாட்களுக்கு இது வரும்! பாடல் விளக்கம் என இல்லாமல், சில சொற்களின் பொருள் மட்டும்
இறுதியில் வரும்.
அனைவரும் படித்துத் துதித்து, அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் பெற வேண்டுகிறேன்!


"மீனாட்சியம்மை கலிவெண்பா”

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’


“காப்பு”

அங்கையற்கும் மாற்கும் அரியபெரு மான்இடஞ்சேர்
அங்கையற்கண் ணம்மைக் கணியவே - அங்கயத்தின்
மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா
நாமுகந்து பாடுவோம் நன்கு.

”கலிவெண்பா”

சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்

வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே

அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்

வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா

மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி

மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே

அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்
எட்டெட்டுந் தானாய் இருந்தவளே - முட்டஎங்கும்

அவ்வெழுத்தாய் நின்ற அரும்பொருளே ஆரணங்கே
உவ்வெழுத்தாய் நின்றதொரு உண்மையே - எவ்வெழுத்துந்

தானாகி நின்றதொரு தற்பரையே யெவ்வுயிர்க்கும்
ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்

படியளக்க மால்பார் பதினான்கும் ஒக்க
அடியவரை யீடேற்றும் அன்னாய் - முடிவிலா [10]

ஓங்காரத் துட்பொருளே உற்றநவ கோணத்தில்
ரீங்காரந் தன்னில் இருப்பவளே - பாங்கான

முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே மூவிரண்டாஞ்
சட்கோணத் துள்ளிருக்குஞ் சக்தியே - மிக்கபுகழ்

எண்ணிரண்டாங் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்
பண்ணிசைந்த பாட்டின் பழம்பொருளே - விண்ணுலகின்

மேற்பட்டங் கூடுருவி மேலாகி நின்றதொரு
நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற

பஞ்ச கோணத்திருந்த பைங்கிளியே பார்முழுதுந்
தஞ்சமது வாகிநின்ற தையலே - செஞ்சொல்மறைச்

சொல்லே பொருளே சுவையே அறுசுவையே
எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை

எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்
உறும் பொருளாய் அங்கங் குணர்வாய்ப் - பெறும்பயனாய்

ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்
கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பஞ்ச வர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற

ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்
வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாய் [20]

கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற
பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு

சோத்திரத்திற் சத்தமாய்த் தொக்கிற் பரிசமாய்
நேத்திரத்திற் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்

மெத்திரத மாய்மூக்கின் மேவுகந்த மாய்ப்பிறவாய்
மத்தபிர மத்த வயிரவியாய்ச் - சுத்த

துரியமதாய்ப் பின்னுந் துரியாதீ தத்தின்
அரிய சிலம் பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்

நாடுதனிற் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்
ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்

களங்கமற வேதான் கரும்புருவந் தன்னிற்
பளிங் கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே

கண்ணிரண்டி னுள்ளே கருணைத் திருவடிவாய்ப்
புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த

நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்
ஓசைவிந்து நாதாந்தத் துட்பொருளாய் - நேசமுடன்

அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்
பஞ்சபூ தம்மான பைங்கிளியே - கஞ்சமலர்ப்

பாத மிரண்டாகிப் பச்சைநிறந் தானாகி
ஆதிமுத லாகிநின்ற அம்பரமே - தீதிலா [30]
****************************************

அருஞ்சொற்பொருள்:

காப்பு: அயன்-பிரமன்; மால்-விஷ்ணு; இடம்-இடப்பாகம்; கயல்-ஒருவகை மீன்; கயம்-யானை; கோமான் -தலைவன்; உகந்து-விரும்பி.

கலிவெண்பா- கண்ணி:

1. சீர்-அழகு,சிறப்பு; தெள்ளமுதே, சேயிழையே என்பன அம்மையை விளிக்கும் விளிகள்; கார்-கருமை.

2. ஆதி-முதன்மை வாய்ந்த; பராபரை-சிவசக்தி.

3. அண்டர்-தேவர்; அணங்கு-தெய்வமகள்; திரை-அலைகளுடன் கூடிய கடல்.

4. மாறாமல்-இடைவிடாமல்; சிந்தை-மனம்; அந்தம்-முடிவு.

5. மாயோன் -விஷ்ணு; இணையவல்லி- தங்கையான வல்லிக்கொடி போன்றவள்; மயிலோன் -முருகன்; சங்கரி-நன்மை செய்பவள்.

6. பொன் அம் கிரி- பொன் போலப் பிரகாசிக்கும் மலை.

7. அட்டம்-எட்டு; குலம்-கூட்டம்; வெற்பு-மலை; அமர்ந்தவள்-விரும்பியவள்; எட்டெட்டும்-அறுபத்து நான்கு கலைகளுமாய்; முட்ட-நிறைந்து.

8.’அ’ எழுத்தாய்- எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையான ‘அ’ போல உயிர்களுக்கெல்லாம் முதன்மையைப் பெற்று; ‘உ’ எழுத்தாய்-’உ’ என்கிற சக்தி எழுத்தாகி.
‘அ’வைச் சிவ எழுத்தென்றும், ‘உ’வைச் சக்தி எழுத்தென்றும் கூறல் மரபு. நிறை-நிலை பெற்ற; எவ்வெழுத்தும்-எல்லா மொழிகளிலுமுள்ள எல்லா எழுத்துக்களும்.

9. தற்பரை- தானாய்த் தோன்றிய தலைவி; [சுயம்பு]; ஊன் -உடல்; கோன் -தலைவன்.

10. படி-பூமி; மால்-திருமால்; பார்-உலகம்; ஈடேற்றும்-வாழ்விக்கும்; முடிவு-அழிவு.

11. ஓங்காரம்-ஓம் என்னும் பிரணவ மந்திரம்; நவகோணச் சக்கரம் என்னும் இயந்திரத்தில் ரீங்காரம் என்னும் பீஜ எழுத்தின் மந்திரப் பொருளாய் இருப்பவள் உமை.
[’ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’அபிராமி அந்தாதி]; பாங்கு-பகுதி.

12. முக்கோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருப்பவள் உமாதேவி. மூவிரண்டு- ஆறு; ஆறுகோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருக்கும் மீனாட்சியம்மை.

13. எண்ணிரண்டு-பதினாறு; கோடு-இயந்திரத்தின் எல்லைக்கோடு; இருப்பவள்-அக் கோணத்துள் பொருளாயிருப்பவள்; பண்-இசை; பழம் பொருள்-பழைமையான அர்த்தமாயிருப்பவள்.

14. மேற்பட்டு-மேலாக; ஊடுருவி-கழித்துச் சென்ற. 43 கோணங்கள் அமைந்த இயந்திரத்தின் தலைவி மீனாட்சியம்மையார்.

15. பஞ்சகோணம்- ஐந்து கோண இயந்திரங்கள்.

16. மறைச்சொல்- வேத மந்திரம்; கலை-ஒன்பது வகையான மெய்ப்படு; அறு சுவை- ஆறு வகையான உணவுச் சுவைகள்.

17. தலை-முதல்; எண் இல்-கணக்கற்ற; உறும் பொருள்-பொருந்தும் உடல்; பயன் -ஆற்றல்.

18. ஆறாறு தத்துவமாய்-முப்பத்தாறு தத்துவங்களால்; ஐயிரண்டு-பத்து; கூறு-அவ்வயுப் பகுதி; கூட்டம்-தொகுதி; பேறு-சிறந்த பயன்.

19. அஞ்செழுத்து-பஞ்சாக்கரம் என்னும் ‘நமசிவய’மந்திரம்; எட்டெழுத்து-’ஓம் நமோ நாராயணாய’என்னும் மந்திரம்; ஐம்பத்தோர் அக்கரமாய்- 51 எழுத்து வடிவமாயிருப்பவள்; பஞ்சவர்ணம்-5 நிறங்கள்; பஞ்ச தேவதை-5 சக்திகள்; வஞ்சம்-கபடம்.

20. ஆறாதாரம்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள் நம் உடலில் உண்டு என யோக சாத்திரக் கூற்று.
ஐயைந்தாய்-25 தத்துவங்களாய்; ஐம்மூன்று-5+3=8 அட்டமூர்த்தி; வீறு-மிகு பலம்; சக்கரம்-யந்திரம்; மிந்பிரகாசம்.

21. கருவி-ஐம்புலன்கள்; கரணம்-பூதங்கள்; ஆதி-முதலிய பிற தத்துவங்கள்; கைகலந்து-கூடி; பிரிவாய்-சுத்த, அசுத்தம்,பிரகிருதி எனப் பிரிவுபட்டு.

22. சோத்திரம்-செவி; தொக்கு-உடம்பு; பரிசம்- ஸ்பரிசம், தொடுவுணர்வு; நேத்திரம்-புறக் கண்; நாத்தலன் -நாக்கு என்கிற இடம்.

23. இரதம்-சுவை; கந்தம்-வாசனை; மத்த-இன்பம்; பிரமத்த-வீரம் பொருந்திய; வயிரவி-அச்சம் தருபவள்.

24. துரியமதாய்-சாக்கிரம், சொப்பனம், சுமுத்திக்கு மேலான துரிய நிலையில் உள்ளவளாய்; துரியாதீதம்-முன் சொன்ன நான்கு நிலைகளுக்கும் மேற்பட்ட நிலை.

25. இரந்து-பிச்சையேற்று; பவுரி- ஒருவகைக் கூத்து; தொந்தம்-இருவரும் கலந்து; பார்ப்பதி-பார்வதி.

26. பளிங்கு-நிறமற்ற கண்ணாடி; பரம்-பராசக்தி.

27. கருணை-இரக்கம்; வடிவு-அழகிய பெண்; பூவை-நாகண வாய்ப்பறவை போன்றவள்; பந்செம்மை.

28. தீபம்-சுடர்; உள் பொருள்- உள் இருக்கும் சக்தி.

29. அஞ்சுமுகம்- ஈசானம் முதலிய 5 முகங்கள்; அகண்ட-பிரிவின்றி; பைங்கிளி- பசுமையான கிளி போன்ற உமையவள்; கஞ்ச மலர்-தாமரைப் பூ.

30. பச்சை நிறம்- மரகதம்; ஆதி முதல்-தனி முதன்மை; அம்பரமே-வானவெளி உருவாய் நின்ற தாயே.
******************************


[நாளை வரும்]

மீனாட்சி என்ற பெயர் எனக்கு! பங்குனியில் ஒரு நவராத்திரி - 2

மதுரை மீனாட்சியம்மன் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டு விழாப் பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று...பிரபல பாடல்...நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே!
சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்...

அத்தனை அம்மன்கள் இருந்தாலும், சமயபுரத்தாளே, "நான்மாடக் கூடலிலே நான் மீனாட்சி" என்று தான் துவங்குகிறாள்! அதை இன்று அன்பர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்! குடமுழுக்கு நாயகி மீனாட்சி திருவடிகளே சரணம்!




படம்: ஆதிபராசக்தி
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: உடுமலை நாராயண கவி

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு


கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்


ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!


காஞ்சி காமாட்சி - மதுரை மீனாட்சி - காசி விசாலாட்சி