Monday, May 25, 2009

என்று வருவாய்?


ஆத்தான்னு கூப்பிட்டாக்க
ஆசையோட வந்திடுவா
அம்மான்னு கூப்பிட்டாக்க
அன்போட அருள்புரிவா

ஆத்திரமாப் பேசினாலும்
ஆதரவாக் கேட்டுக்குவா
அழுதழுது கெஞ்சினாக்க
ஆறுதலத் தந்திடுவா

ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
ஆனந்தமா வருவாயேன்னு
ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
ஆத்தா ஒன்னக் காணலியே

தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
தெய்வமேநீ வருவாயேன்னு
தேடித் தவிச்சிருந்தேன்
தாயே ஒன்னக் காணலியே

கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
ஒத்தத்தாயி நீதானேடி
ஓடிவந்து என்னப்பாக்க
ஒருநொடியும் இல்லையோடி?


--கவிநயா

Friday, May 22, 2009

சகல கலா வாணியே சரணம் தாயே


சகல கலா வாணியே சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே (சகலகலாவாணியே)

இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக்கு அருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலாவாணியே)

அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலாவாணியே)

முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும் அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
(சகலகலாவாணியே)

இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. தமிழ்த்தேனீயார் (நன்றி)

Wednesday, May 20, 2009

முத்து நகை வடிவழகி !

வருடா வருடம் சித்திரை மாதம் பிறந்து முதல் வியாழக்கிழமை, புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சு, செவ்வாய்க் கிழமை போய் சேருவது வழக்கம். நானும் இந்த வருடம் (இரண்டாவது முறையா) இந்த பாத யாத்திரையை அவளருளால் நல்லபடியா முடிச்சிட்டு வந்தேன். தினமும் பகலில் தூங்கிட்டு சாயந்திரம் வெயில் தணிஞ்சதும் நடக்க ஆரம்பிச்சு, மறுபடி காலைல சூரியன் சுடற வரை நடப்போம். வழியெல்லாம் அவள் நினைவும் பாடல்களும்தான் துணை. அந்த தையல் நாயகிக்காக ஒரு பாட்டு...



சித்திரை மாதத்திலே தையல்நாயகி - தங்க
சித்திரமாம் உன்னைக் காண தையல்நாயகி

தத்திநடை பழகி வந்தோம் தையல்நாயகி - எங்கள்
முத்து நகை வடிவழகே தையல்நாயகி

பாதையெல்லாம் கல்லும் முள்ளும் தையல்நாயகி - நாங்கள்
பாதம் நோக நடந்து வந்தோம் தையல்நாயகி

வாதையெல்லாம் தீர்த்திடுவாய் தையல்நாயகி - தாயின்
வாஞ்சையுடன் அரவணைப்பாய் தையல்நாயகி

காட்டுவழி வந்தோமடி தையல்நாயகி - நாங்கள்
காரிருளில் தடுமாறி தையல்நாயகி

கண்ணொளியால் இருளகற்றி தையல்நாயகி - நீதான்
காப்பாற்ற வேணுமடி தையல்நாயகி

சித்தமெல்லாம் நிறைஞ்சிருக்கு தையல்நாயகி - உந்தன்
சின்ன முல்லைச் சிரிப்பாலே தையல்நாயகி

பித்தமெல்லாம் தெளிய வைப்பாய் தையல்நாயகி - உந்தன்
பேரருளின் ஒரு துளியால் தையல்நாயகி

நித்திலமாம் உன் பெயரை தையல்நாயகி - நாங்கள்
நித்தம் நித்தம் பாடி வந்தோம் தையல் நாயகி

சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
சொந்தமானால் போதுமடி தையல்நாயகி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/