Monday, January 25, 2010

என்று தருவாய்?

அன்னை உன்னைக் காணாமல் அலை பாய்கிறேன் - அம்மா
உன்னருளை உணராமல் உள்ளம் காய்கிறேன்
காணும் பொருள் ஒவ்வொன்றிலும் உன்னைத் தேடினேன்
காணாமல் கண்ணீரிலே நானே மூழ்கினேன்

வானெங்கும் விண்மீன்கள் சிரிக்குதம்மா - ஆனால்
வெண்ணிலவை மேகங்கள் மறைக்குதம்மா
தண்ணொளியாம் உன்னருளை வேண்டி நிற்கும் - இந்தப்
பெண்மகளைக் கண்ணால் கொஞ்சம் பாராய் அம்மா

தேனை தேடும் வண்டாக அலையுதம்மா மனம் - ஆனால்
பூ மலரக் காணாமல் குமையுதம்மா தினம்
என்னுயிரில் பூவாக என்று மலர்வாய் - அம்மா
உன்னருள் தேன் எனக்கு என்று தருவாய்?


--கவிநயா

Friday, January 22, 2010

நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!



ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


எனக்கு என் தந்தையோ தாயோ உறவினர்களோ நண்பர்களோ மகன்களோ மகள்களோ பணியாட்களோ கணவனோ மனைவியோ கல்வியோ தொழிலோ எதுவுமே அடைக்கலம்/கதி இல்லை. நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

பெரும் துன்பத்தைத் தரும் இந்த பிறப்பிறப்புக் கடலில் நான் இருக்கிறேன். இத்துன்பத்தைக் கண்டு பெரும் பயம் கொள்கிறேன். பாவத்தாலும் காமத்தாலும் கஞ்சத்தனத்தாலும் ஆசையாலும் எப்போதும் பீடிக்கப்பட்டு பிறப்பிறப்புக் கட்டினால் கட்டப்பட்டு பயனில்லா வாழ்கை வாழ்கிறேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

தானம் தருவதை அறியேன்; தியான யோகம் அறியேன்; துதிகள் மந்திரங்கள் தந்திரங்கள் அறியேன்; பூஜை செய்யும் முறைகளும் அறியேன்; அனைத்தையும் துறக்கும் யோகமும் அறியேன். நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!

புண்ணியச் செயல்களை அறியேன்; புண்ணியத் தலங்களை அறியேன்; முக்தி வழிகளை அறியேன்; இறையுடன் மனத்தைக் கலக்கும் வழி அறியேன்; பக்தியும் அறியேன்; விரதங்களையும் அறியேன். தாயே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் தீய செயல்களைச் செய்பவன்; தீய உறவுகளை உடையவன்; தீய எண்ணங்களை உடையவன்; தீயவர்களிடம் பணி செய்பவன்; நன்னடத்தை இல்லாதவன்; தீய நடத்தை உடையவன்; தீய பார்வை கொண்டவன்; தீய சொற்களின் குவியல்களைக் கொண்டவன்; எப்போதும்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

மக்களின் தலைவனையோ, மகாலக்ஷ்மி தலைவனையோ, மகேசனையோ, தேவர் தலைவனையோ, நாளின் தலைவனையோ, இரவின் தலைவனையோ மற்ற எந்தத் தலைவனையும் நான் அறியேன்! எப்போதும்! கதியானவளே! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!



விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

விவாதங்களிலும், கவலையிலும், விபத்துகளிலும், தூர தேசங்களிலும், நீரிலும், நெருப்பிலும், மலையிலும், எதிரிகள் நடுவிலும், காட்டிலும், கதியானவளே, எப்போதும் என்னை நன்கு காத்தருள்வாய்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே பவானி!

அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நான் அனாதை! நான் ஏழை! முதுமையும் நோயும் கொண்டவன்! நான் மிகவும் களைத்தவன்! நான் மிகவும் வருந்தத்தகுந்தவன்! எப்போதும் பிரச்சனைகளால் விழுங்கப்படுபவன்! எப்போதும் விபத்துகளால் நஷ்டமடைபவன்! நீயே கதி! நீயே கதி! நீ மட்டுமே கதி பவானி!




Tuesday, January 19, 2010

என்னுள்ளத் தாமரையில்...



என்னுள்ளத் தாமரையில்
குடிபுகுவாய் அம்மா
பெண்ணுள்ளம் ஏங்கிடுதே
பதில்தருவாய் அம்மா

(என்னுள்ள)

விண்ணுக்குள் உறைகின்ற
வேதத்தின் விழுப்பொருளே
கண்ணின்மணியே உமையே
கவின்மிகு கற்பகமே

(என்னுள்ள)

பண்டனெனும் அரக்கன்தனை
துண்டுதுண்டாய் துணித்தவளே
மாண்டவனாம் மன்மதனை
மீண்டுவரப் பணித்தவளே

வேண்டாத உயிர்களுக்கும்
வேண்டும்வரம் தருபவளே
தூண்டா மணிவிளக்கே
தூயவளே தேவியளே

(என்னுள்ள)

--கவிநயா

Monday, January 11, 2010

எல்லாம் உந்தன் கையிலடி !



குயவன் கைக் களிமண்ணாய்
என்னை உனக்குத் தந்து விட்டேன்
என்ன பாண்டம் செய்குவையோ
எல்லாம் உந்தன் கையிலடி

கல்லான என் மனதை
உளி கொண்டு செதுக்குவையோ
கல்லைக் கனியச் செய்யும் விழியால்
என்னைக் கனியச் செய்குவையோ

பிறவிகளில் அழுக்குகளைச்
சேர்த்துச் சேர்த்துக் கரியான
எந்தன் மனதை உந்தன் அன்பால்
கட்டி வைரம் ஆக்குவையோ

எல்லாம் உந்தன் கையிலடி!

--கவிநயா

சுப்புத்தாத்தாவின் இசையில், குரலில்: நன்றி தாத்தா!

Monday, January 4, 2010

சிவகாமியே! அபிராமியே!



சிவகாமியே! அபிராமியே!

நற்றில்லை அம்பலத்தின்
நலம்தரும் நாயகியே
கொற்றவையே உமையே
களிதரும் கனியமுதே!

குற்றமில்லா உள்ளம்
குடிபுகும் கோமகளே
இட்டமுடன் அங்கு
நடமிடும் கோமளமே!

அபிராமியே! சிவகாமியே!

திருக்கட வூரினிலே
திகழ்ந்திடும் அம்பிகையே
நெருப்பென நின்றவர்க்கு
ஒருபுறம் தந்தவளே!

கறுத்திடும் திருமிடற்றான்
இடப்புறம் அமர்ந்தவளே
பொறுத்தருள் புரிபவளே
புவிபுகழ் மலைமகளே!


--கவிநயா