Monday, October 25, 2010

கயிலாயம் உனக்கெதற்கு?


எழில்ராணி உன்பதங்கள் போற்றுகின்றேன்
தமிழ்ப் பாமாலை தினமுனக்கு சாற்றுகின்றேன்
உனக்கெனவே ஒருகோவில் அமைத்து வைத்தேன்
அதில் உடன்வந்து குடிபுகவே உனை அழைத்தேன்

கயிலாயம் உனக்கெதற்கு, குளிர் நடுக்கும் - உன்றன்
மலர்ப்பாதம் தரைதொட்டால் மனம் பதைக்கும்;
தாமரையில் நீநின்றால் கால் கடுக்கும் - நறு
மணமலர்நீ எனமயங்கி வண்டு கடிக்கும்!

வீணைமீட்டி மீட்டிப்பிஞ்சு விரல் வலிக்கும் - சிம்மம்
ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்;
பூந்தளிரே புதுமலரே இனியேனும் நீயென் - உளக்
கோவில் வந்தமர்ந்தால் மனம் களிக்கும்!


--கவிநயா

Monday, October 18, 2010

கற்பனைக் கெட்டாத கற்பகமே!



கற்பனைக் கெட்டாத கற்பகமே
அன்புருவே அமுதே அற்புதமே

பொற்பதம் பணிதலன்றி வேறறியேன் - உன்றன்
நற்புகழ் பாடலன்றி தொழிலறியேன்

பற்பலரும் போற்ற பனிமலை வீற்றிருப்பாய்
சொற்பதங் கள்கடந்த சுந்தர னுடன்களிப்பாய்
நற்கதி அருள்பவளே நலந்தரும் உமையவளே
சிற்சபை யில்ஆடும் சிவனிடம் உறைபவளே!


--கவிநயா

Wednesday, October 13, 2010

முக்தி ப்ரதாயினி !. மனமிரங்கி அருள்வாய் நீ !

 அம்பே !அம்பிகே !  அபிராமியே  !!
 அகிலத்து நாயகியே !                                      
 ஓம் ஜெகதம்பாயை நம: !!  
அஞ்ஞான இருளகற்றும் அறிவே !
 ஆனந்தவல்லித்தாயே... 
ஓம் தமோ நாசின்யை நம;
      
  அ  உ ம் உன்னுள் ! உமையே ! ஓம்காரமே !
  அவை உச்சரிக்கும்போதெழும் நாதமும் நீயே !!     
ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம :
  ஓம் நாதரூபாயை நம:
         
 ஆனைக்காவலிலே அகிலாண்ட நாயகியே  ! 
 ஆரணி நாரணியே ! ஆனந்தரூபிணியும்  நீயே !!   
  ம் மஹேஸ்வர்யை நம:


    அம்ருத வர்ஷிணி !ஆவுடை நாயகி !

  





இடப வாகன‌ன்  ஈசன்  இடபுறம் நீ! பார்வதியே !!
இயற்கையின் கண் உயிர் ஈந்த பவானியும் நீயே !!       
  ஓம் பவான்யை நம:
  உமையே ! உண்ணாமுலையாளே !
  வையம தோன்றுமுன்னே நிஜமாய் நின்றவளே !    
   ஓம் அஜாயை நம: 




 விஸ்வ ஜனனி நீ ! விஸ்வ காரணியும் நீ ! 
 எமை எல்லாம் ஈன்ற பின்னே எம் பசி ஆற்றுபவள் நீ. !  

   கௌரி கல்யாணி காயத்ரி  காம வர்தினி 
   சுஹாசினி சுவாசினி சுகந்தினி சுக ப்ரதாயினி 
    தருணி  தத்வமயி தாரித்ரிய த்வம்சினி தேவி 
    பத்மினி புஷ்டி நீ பிரசன்ன புவனேஸ்வரி
kamakshi
 
  கரும வினை தொலைத்திடவே
  காஞ்சி நகர் வருவார்தம்
  காம க்ரோத மதமழிக்கும்
  காமாட்சியே ! காமேஸ்வரி தாயே !  
  ம் ப்ரபன்ன துக்க ஹாரிண்யை நம: 
     
    சங்கரி  சந்திர வதனி சாம்பவி சரஸ்வதி
    சத்ய ஸ்வரூபிணி சதுர்வேத நிவாசினி
    சியாமளி சின்மயி சர்வ சித்தி ப்ரதாயினி 
    சிவமயி சூலினி சாவித்ரி ஸ்ரீசக்ர நிவாசினி 





 கசியும் விழியுடனே காசி அடைந்தோர்க்கு
 காலபயம் நீங்க  கங்கை நீர் தருபவளே !
முக்தி அளிப்பவளே !! முந்தைவினை அழிப்பவளே !!
நற்கதி விண்ட‌ருள்வாய்  ! விசாலாட்சி தாயே நீ !!  
ம் அபவர்கப்ரதாயை நம:
  வைகை நகர் ஆளும்
  சொக்கனின் சுந்தரியே !! அவன்
  கைபிடித்து மணம் புரிய
  மாமதுரை வந்தனையோ  !!
  மீன்விழியாளே ! மீனாட்சி தாயே !!             
   ஓம் ஸித்தி ரூபாயை நம:
Devi Karpagambikai
  மயிலை நகரிலே ஒயிலாக வலம் வந்து
  கயிலை மலை வாசன்  கபாலியும் கண்டு மகிழ
 அறுபத்து மூவர் போற்றும் அன்னையே
 கற்பக அம்பிகையே ! எமை
 ரக்ஷிப்பதுன்னதருளே !!                
  ஓம் சங்கர்யை  நம:
மந்திரமே மருந்தாய் ஈசன்   வைத்தீச்வரன் அருகில்
சுந்தரியாய்  வீற்றிருக்கும்  பாலா அம்பிகையும் நீயே
தான்  (ஐ)அறுப்பவளே தையல் நாயகியே !!
தருமத்தைக் காப்பவளே ! தர்மசம்வர்த்தினியே !!     
ஓம் அபய ப்ரதாயை நம:
Neelayadakshi
  கருந்தடங் கண்ணி என சுந்தரவிடங்கருடன்
  அரும்பதிகமது புனையும் விரி கேட்டனையோ !!
   நீலக்கடலோரம் நாகைத் தலத்தினிலே
   நீலாய தாட்சி நீ  உடன் வந்து எனை ரட்சி.        
   ஓம் சிவாயை நம:

குடம் நிறை பாலும் தேனும் அம்மா உனக்கபிஷேகம்.
 ஞ்சள் நீராட்டிய பின்,மலர்  மாலை ஆபரணம்
 க்த வர்ண சேலை கட்டி குங்குமத்திலகமிட்டு
(உ)ன்னை நான் பூசிப்பேன் வண்ண வண்ண மலரெடுத்து.

 கேட்கும் ஒலியெல்லாம் துர்கே !! நின் ஓம்காரம்
   ஆர்ப்பரிக்கும் அலை  மனதில்,  நிர்மலே ! நீ நங்கூரம்
   எஸ்ஸ்ருதி எவ்வேதம்  ஸரஸ்வதி  நீ ஸானித்யம்
   ஞ்சினி விமலி  சங்கரி   நிதர்சனம் நின்  சத்தியம் ..
  
                         ஓம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாயை நம:

    ஓம் தயாகர்யை நம:

ரும்பு வில்லாளே கடைக்கண் பார்வையுந்தன் 
விழுந்தாலும் போதும் விமோசனம் யான் பெற்றிடுவேன்.
 ற்சங்கம் நாடி,   நிர்மோக  நிலை அடைவேன். 
 யாதுமான நின் ஒளியில் இரு வினையும் தொலைத்திடுவேன்.
    
    ஓம் தஹராகாச ரூபிண்யை நம: 



ற்பூர நாயகி கமனீயகாந்தி கஸ்தூரி திலக கதம்பவனவாசினி  
விண்ணோரும் வந்திக்கும் வாக்தேவி வைசாலி விஸ்வேஸ்வரி
வராத்ரி நாயகி நவரத்ன பூஷணி  நான்முகனின் தேவி நமோ நம:  .
 யாண்டும் யாவர்க்கும் யாதுமானாய். நின் தாள்  போற்றி போற்றி.
ஓம் சர்வ மங்களாயை நம:
Devi RajaRajeswari
 
 மாயே !  மாதே ! மாதங்கி !   மஹாசக்தி  !
மோகினி ! மஹேஸ்வரி ! மாங்கல்ய தாயினி ! மஞ்சு பாஷிணி !  
முக்தி ப்ரதாயினி !.   மனமிரங்கி அருள்வாய் நீ !
வேதவல்லியே ! வித்யே ! வந்திப்போம் யாம் உனையே !
 ஓம் ராஜ ராஜேச்வர்யை நம: 

Please Click here to listen to Aarthi
                                                           (courtesy: Sri Kumaran )
நவராத்திரி நாட்களில் , திருலோக நாயகியை திருவரங்க நாயகியை  மஹா லக்ஷ்மியை வந்தித்து எழுத அழைப்பு வந்ததும் அவளது அருளே.
ல்லோருக்கும்து ராத்திரி வாழ்த்துக்ள்.
தேவியின் சில நாமாக்களுடன் அதற்கேற்ற பாடல்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டு உள்ளன. கிளிக்கினால் கேட்கலாம்.

எழுதியது: சுப்பு ரத்தினம் ( சூரி ) 







Sunday, October 10, 2010

"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


காப்பு

எல்லாம் தருவான் எதையும் தருவான்
அல்லாதன வெல்லாம் அகற்றிட வருவான்
நல்லோர் புகழும் லலிதையின் தோத்திரம்
சொல்லா லிசைத்திட கணபதி காப்பான்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********

நவமணி மாலை.

அன்பின் திருவாய் அகமெலாம் திறந்திட
ஆயிரங்கையுடன் நீயெதிர் வந்தாய்
துன்பம் நீங்கிடத் தயவுட னணைத்தே
தாயென நின்னிரு தாளெனக் கீந்தாய்
நின்பத மொன்றே கதியென வேண்டிடும்
அடியவர் நெஞ்சினில் அமைந்துநீ இருப்பாய்
மன்புகழ் வயிரப் படைவாள் கொண்டயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

கோலம் இட்டுனைக் கூடத்துள் அழைத்தேன்
கோணம் நடுவினில் நீவந் தமர்ந்தாய்
மாலைகள் சூட்டியே பாக்களும் படித்தேன்
மங்கலமாய் நின் திருமுகம் கண்டேன்
சோலைத் தருவே சுந்தர வடிவே
சோகம் அகற்றியென் வாழ்வினில் மலர்வாய்
நீலக் கடலனை நித்தில மேயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தத்தும் மழலையின் தளிர்நடை கண்டே
தாயவள் மகிழும் பாங்கினை யொத்தாய்
கத்துங் கிளியின் கவினுறு வெழிலாய்
பாயும் ஒளியாய்ப் பரவசம் தந்தாய்
வித்தகியே நவ ராத்ரியின் நாயகி
தோயும் அன்பினைத் தினந்தினம் தருவாய்
முத்தே ரனையமென் முறுவலைப் பூக்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

முந்தையென் வினைகள் யாவும் நீங்கிட
எந்தாய் நினையே சரண மடைந்தேன்
சிந்தையில் நினைந்தே தினம்நான் துதித்தேன்
வாராதிரு ந்திட மனமோ அம்மா
தந்திடும் வரங்கள் சொல்லிடத் தகுமோ
தாயே எனக்குநின் பதமலர் தருவாய்
வந்தே நிரம்ப வளம்நீ தருவாயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்
நாணிக் கோணி நீநகர்ந்து செல்லாதுன்
தாளிணை சுகமே எனக்கினி வேண்டும்
மாணிக்கப் பரல் தண்டைகள் குலுங்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

வரமிதை அளிப்பாய் வாழ்வுடைத் தாயே
வந்தென் தாபத்தைத் தீர்த்தெனை யணைப்பாய்
பரகதி தந்தென் வாழ்வினை நிறைப்பாய்
பிறவியிலாதொரு நிலையினைத் தருவாய்
சுரமிசை பாடியென் உள்ளத்து ளழைத்தேன்
சுவைதரும் படையலும் உனக்கென வைத்தேன்
மரகதப் பதக்கம் மின்னிடும் தேவியென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

மாமேரு வினில்நடு நாயகி நீயே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி நீயே
பாமேல் வந்திடும் பாலகி நீயே
பணிபவர் நெஞ்சினுள் உறைபவள் நீயே
பூமே லமர்ந்திடும் தாயவள் நீயே
புனித நவராத்ரி நாயகி நீயே
கோமே தகமே குணவதியே யென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

உதித்திடு முச்சித் திலகமும் நீயே
உண்மையின் வடிவமாம் உமையவள் நீயே
துதித்திடு மன்பரின் துணைநலன் நீயே
தொல்லைகள் நீக்கிடும் துர்க்கையும் நீயே
மதியொளி மகுடம் தாங்கிடும் தேவியே
கதியென வுன்னிரு பதமலர் அருளே
பதும ராகமணி மாலைகள் புனையுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தடுத்தெனை யாண்டிடத் தாயே வருவாய்
தயவுகள் புரிந்துன் சேயெனைக் காப்பாய்
அடுத்திடும் கவலைகள் அணுகிடா வண்ணம்
அன்புருவே யெனை அனுதினம் காப்பாய்
கொடுத்திடும் குருவாய்க் குழந்தையாய் வந்தென்
வினைத்துய ரகற்றியே முத்தியைத் தருவாய்
வைடூரிய நவ மாலை யணியுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவநா யகியரின் தாயினைப் போற்றும்
நவமணிமாலையில் வாழ்ந்திடும் தேவி
நவநவ பாக்கியம் அனைத்தையும் தந்தே
நலமுடன் காப்பாள் தாயே சரணம்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
******************************************

"அன்னையருள் அருகிருக்கும்!"
"அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!"

Thursday, October 7, 2010

ஓம்சக்தி ஓம்!

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்!



மூவாறு கரங்களுடன்
முகம்பொழியும் கருணையுடன்
மூவுலகும் காக்க வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சேலாடும் விழிகளுடன்
நூலாடும் இடையினுடன்
எண்திசையும் வெல்ல வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வேல்விழிகள் பளபளக்க
கோபத்திலே ஜொலிஜொலிக்க
வேகம்மிகக் கொண்டு வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீரமகள் வந்தணைக்க
வெற்றிமகள் சேர்ந்திருக்க
மகிஷன்சிரம் அறுத் தெறிந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

காளியென நீலியென
கனிவுமிகும் அன்னையென
காப்பாற்ற வந்தவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சண்டியென சூலியென
சடுதியிலே வந்துஎங்கள்
சங்கடங்கள் தீர்ப்பவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

ஓமென்று உன்நாமம்
ஓயாமல் உரைத்திருந்தால்
ஓடோடி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீணென்று இப்பிறவி
ஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!


--கவிநயா

Tuesday, October 5, 2010

உயிரினில் இனிப்பவள்!



நினைவினில் நின்றவளே - நிலவின்
கலைதனைக் கொண்டவளே
மலையென நின்றவனை - குலையா
காதலால் வென்றவளே

கருத்தினில் உறைபவளே - குறைகளை
பொறுத்தருள் புரிபவளே
கருத்திட்ட கண்டனுக்கு - ஒருபுறம்
கொடுத்திட்ட உமையவளே

விதியினை அறுப்பவளே - எனக்கு
கதியென இருப்பவளே
ஸ்ருதியுடன் லயமெனவே - எந்தன்
உயிரினில் இனிப்பவளே!

--கவிநயா