Monday, June 27, 2011

வர வேண்டும் வர வேண்டும் தாயே!



வர வேண்டும் வர வேண்டும் தாயே – ஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயே – அம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி – திரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே – இவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )


பத்மா சூரி என்கிறவங்க இந்தப் பாடலை இடும்படி கேட்டிருந்தாங்க. பாடல் ஆசிரியர் யார்னு தெரியலை. பாடல் வரிகளைத் தந்த தம்பி சங்கருக்கு நன்றிகள் பல. பத்மா கேட்டிருந்த பாடகர்களின் குரலில் பாடல் கிடைக்கலை; சங்கரே பாடி அனுப்பறேன்னு சொல்லி இருக்கார். அனுப்பிய பிறகு இங்கே சேர்த்துடறேன்...

இதோ... பாடல் சங்கர் குரலில்... நன்றி சங்கர்!

அன்புடன்
கவிநயா

Monday, June 20, 2011

சின்னச் செவ்விதழில்...


சின்னச் செவ்விதழில்
சிறுநகை பூத்திருக்கும்

கருவிழியில் கருணைமழை
அருவியெனப் பொழிந்திருக்கும்

நெற்றித் திலகஒளி
நீள்நிலத்தை வழிநடத்தும்

கைவளைகள் கலகலத்து
காற்றினிலே ஒலிபரப்பும்

காதணியின் அசைவினிலே
கண்மலர்ந்து சொக்கிநிற்கும்

பொற்சிலம்புப் பாதங்கள்
பூஞ்சிறகாய் உயிர்அணைக்கும்!


--கவிநயா

Monday, June 13, 2011

அன்பாலே பாடுகிறேன்...


உன்மேலே அன்புகொண்டேன் உன் னாலே
அன்பாலே பாடுகிறேன் தன் னாலே

அம்மாநீ வந்து நின்றால் முன் னாலே
என்வாதை தீருமடி தன் னாலே

ஆயிரம் ஆயிராமாய் குற்றங்குறை கள்இருக்கும்
பாடுகின்ற பாடலிலும் எத்தனையோ பிழையிருக்கும்
ஆயிரம் இருந்தாலும் நானுமுன் பிள்ளையன்றோ
தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ

--கவிநயா

Monday, June 6, 2011

அன்னையே அபிராமியே!



அன்பாலே வந்தென்னை அமுதாக ஆட்கொண்டாய்
அன்னையே அபிராமியே!
உன்பாலே எனை ஈந்தேன் உலகெல்லாம் ஆள்கின்ற
உண்மையே உமைராணியே!

செந்தா மரைப்பூவே சிந்தாத செந்தேனே
சிந்தைநிறை சிவகாமியே!
வண்டாடும் மலர்போல கொண்டாடு வேனுன்னை
என்தாயே சுகவாணியே!

பந்தாடும் வாழ்விதனை உன்பாத கமலத்தில்
மலராகத் தந்துவிட்டேன்!
மண்ணோடும் வேர்போலே உள்ளோடும் உன்றனையே
கொழுகொம்பாய்க் கொண்டுவிட்டேன்!

அந்தமெதும் இல்லாத விந்தைமிகும் என்தாயே
சொந்தமென வந்தவளே!
சந்ததமும் உனைப்போற்றி செந்தமிழால் பாடுந்தொழில்
தந்திடுவாய் என்றன்மயிலே!!


--கவிநயா

Thursday, June 2, 2011

தமிழிசை: நீ இரங்காய் எனில் புகலேது?

அம்மன் பாட்டு-ன்னாலே கவிநயா அக்கா தான்!
இருந்தாலும் அம்மா-க்கு பொண்ணுங்களை விட பசங்க தான் ஒரு சுத்து ஜாஸ்தியா பிடிக்குமாம்!:)

அதனால் நான்...இன்று, இங்கு, அம்மன் பாட்டிலே...
ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்

கந்தன் மனக் கல்லுருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே!

அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?


பலருக்கும் இந்தப் பாட்டு தெரியும்!
புகழ்பெற்ற இந்தப் பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் (தஞ்சை இராமையா)!
தஞ்சைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில், ஒரு சிவன் கோயில்! உடல் முழுக்க திருநீறு பூசிக் கொண்டு, கோயிலில் போக்கற்று திரிந்த காலத்தில், இவர் பாடிக் கொண்டே இருப்பதைக் கண்டு, அவ்வூர் மக்கள்...
நம்மூரு "பாபநாசத்தில் ஒரு சிவன்" போல இருக்கிறாரே என்று வியக்க...அதுவே நாளடைவில் "பாபநாசம் சிவன்" என்றே நிலைத்து விட்டது!

கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் சொற்பமாக இருந்த காலத்திலே...
தமிழ்ப் பாடல்களாக எழுதிக் குவித்த அண்ணல்! தமிழ்த் தியாகைய்யர் என்றும் போற்றுவார்கள்! 1973-இல் மறைந்தார்!
தமிழிசை, மற்றும் தமிழ்மொழியில் கர்நாடக இசை...இரண்டுக்கும் பெருந்தொண்டு ஆற்றியவர் நம் பாபநாசம் சிவன்!

நீ இரங்காயெனில் புகலேது - இந்தப் பாடலின் பின் ஒரு கதையும் உண்டு!

இதை சினிமாவுக்காக எழுதிக் கொண்டு சென்றார் சிவன்! ஆனால் அந்த இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லை! மனமொடிந்த சிவன், இதை இராஜாஜி-யிடம் காண்பிக்க...
அவர் அதை எம்.எஸ் அம்மாவிடம் காண்பிக்க, ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கே-ன்னு எம்.எஸ் அதை "ஹம்" பண்ணிக் காட்ட, அருகில் இருந்த பலரும் சொக்கிப் போய் விட்டார்கள்!

பின்பு.....எம்.எஸ் அதை உருக உருகப் பாடி.....
ஒரு மறுதலிக்கப்பட்ட பாடல்...
ஏற்றுக்கொண்ட பாடலாகி...
மேடை தோறும் மேடை தோறும்...

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகல் ஒன்றில்லா அடியேன்,
நீ இரங்காய் எனில் - புகல் ஏது?

கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
* எம்.எஸ்.சுப்புலட்சுமி
* மகாராஜபுரம் சந்தானம்
* நாதசுரம் - Fusion - கோகுல்

நீ இரங்காய் எனில் புகல் ஏது? - அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)

தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?
சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)

பாற்கடலில் உதித்த திருமகளே - செள
பாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)

வரிகள்: பாபநாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி

பிற கலைஞர்கள்: (One Stop Shop)
* சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்
* வயலின் - குன்னக்குடி
* வீணை - காயத்ரி


* சுதா ரகுநாதன்
* மும்பை ஜெயஸ்ரீ
* உன்னி கிருஷ்ணன்