Monday, August 31, 2015

நீயே என் உறவு

உறவென்று உனைக் கொண்டேன் உமையவளே – வேறு
எவரிடத்தில் சொல்வேன் என் குறைகளையே?
(உறவென்று)

மனமென்னும் குரங்கின் கை அகப்பட்டேன் - எந்தன்
மதி செய்யும் சதி வலையில் சிறைப்பட்டேன்
கதி என்று உனை அடைந்தேன் நானம்மா - என்னைச்
சிறை மீட்டு அருள் செய்வாய் நீயம்மா
(உறவென்று)

உன்னைத் தானே எண்ணி எண்ணி வாழுகிறேன்
உந்தன் புகழ்தானே தினந் தினமும் பாடுகிறேன்
கண்ணீர் சிந்தும் பிள்ளை பாராம்மா, என்மேல்
கருணை உனக்கேன் இன்னும் இல்லையம்மா?
(உறவென்று)


--கவிநயா 

 

Monday, August 24, 2015

எண்ணமெல்லாம் நீயே...

எண்ணமெல்லாம் நீயே
எந்தன் திருத் தாயே
பின்னமில்லா உள்ளம்
தந்தெம்மைக் காப்பாயே
(எண்ணமெல்லாம்)

உன்னை எண்ணும் போதில்
வலி மறக்கும்
உன்னை எண்ண எண்ண
வழி பிறக்கும்
(எண்ணமெல்லாம்)

வண்ண மலர்கள் உன்னை அலங்கரிக்க
வண்ணத் தமிழ்ப் பாடல் உன்னைப் போற்றித் துதிக்க
சின்ன உள்ளம் அன்னை நீ குடியிருக்க, எந்தன்
சென்னி உண்டு உந்தன் திருப்பதம் பதிக்க
(எண்ணமெல்லாம்)


-- கவிநயா

Monday, August 17, 2015

இன்பம் போதும் போதுமே!

 
துன்பம் மிகுந்து வருகையிலே
            உள்ளம் உன்னை நாடுமே
இன்பம் ஒன்று வந்து விட்டால்
              தன்னில் தானே ஆழுமே
இன்ப துன்பம் எது வந்தாலும்
             உன் நினைவே வேண்டுமே
உன்னை எண்ணும் இன்பம்
            அந்த இன்பம் ஒன்று போதுமே!

முழு மதி போல் எழில் மிகுந்த
            முகம் படைத்த அன்னையே
மழு பிடித்த மன்னனுக்கு
            பாதி மேனி தந்தையே
பொழி கருணை விழியிரண்டால்
            புவியைக் காக்கும் அன்னையே
கொழி தமிழால் உன்னைப் பாடும்
            இன்பம் போதும் போதுமே!

துவண்டு விழும் கொடியினுக்குக்
            கொழு கொம்பான அன்னையே
மிரண்டு அழும் பிள்ளைகளை
            அரவணைக்க வந்தையே
திரளும் கொள்ளை அன்பினாலே
            துயரம் தீர்க்கும் விந்தையே
வளரும் அன்பால் உன்னைப் பாடும்
           இன்பம் போதும் போதுமே!

கன்றின் குரல் கேட்டு வரும்
            பசுவைப் போல வரணுமே
குன்றிலிட்ட விளக்கு போல
            மனதில் ஒளிர வேணுமே
மன்றின் மீது நின்று ஆடும்
            ஈசனுடன் உன்னையே
என்றும் நல்ல தமிழில் பாடும்
           இன்பம் போதும்  போதுமே!


--கவிநயா

Thursday, August 13, 2015

வா தாயி !


வா தாயி !


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
தாழிவெண்ணைத் திருடும் ஆயன்தங்கச்சி!
கூழு படச்சிக் கும்பிடுவோம் பூசவச்சி !


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
பஞ்சுக்காலு பட்ட இடம் பசுமையாகணும்;
புஞ்சைகூட பொன்னு வெளையும்பூமியாகணும்;


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
பஞ்சமெல்லாம்போயி ஏழநெஞ்சு குளிரணும்;
தஞ்சமுன்னு வந்தோம்.நீயி கண்ணத்தொறக்கணும்.


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!

Monday, August 10, 2015

வாருமம்மா!


நாட்டுப்புறப் பாடல் மெட்டில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பது... மிக்க நன்றி தாத்தா!



மலர்களெல்லாம் உனக்கே மாரியம்மா, என்

மனதினிலே மணக்க வாருமம்மா!

கனிகளெல்லாம் உனக்கே காளியம்மா, என்

மனதினில் கனிந்திருக்க வாருமம்மா!

(மலர்களெல்லாம்)



மண்டி வரும் வேதனைகள்

மந்திரமாய்த் தீர்ப்பவளே!

கொண்டு வந்த வினைகளெல்லாம்

கொன்றொழிக்கும் தூயவளே!

முத்துத் தமிழ்ப் பாடல் கேட்டு மாரியம்மா

முல்லை மலர்ச் சிரிப்பழகி வாருமம்மா!

(மலர்களெல்லாம்)



அண்டி வரும் அடியவர்க்கு

அருள் நிழல் தருபவளே!

சண்டியெனவே வந்து

சங்கடங்கள் களைபவளே!

வேகங் கொண்ட வேங்கையளே காளியம்மா

சூலங் கொண்டு எம்மைக் காக்க வாருமம்மா!

(மலர்களெல்லாம்)


--கவிநயா

Monday, August 3, 2015

இன்ப நிலை தருவாய்!


இடப வாகனத்தில் எழுந்தருள்வாய் தேவி

இடர்களெல்லாம் களைந்து அருள் புரிவாய் தேவி

சுடர் அமுதீசனுடன் சொக்கன் சபேசனுடன்

இடம் அமர்ந்து வருவாய், இன்ப நிலை தருவாய்!

(இடப)



கடம்பவன அமர்ந்த கற்பகமே

விடம் அமுதாக்கித் தந்த அற்புதமே

தொடரும் வினை விரட்டும் பொற்பதமே, உன்னைத்

தொழுதால் அருள் கிடைக்கும் அக்கணமே!

(இடப)



அகமெங்கும் உனதன்பால் கனிந்திடவும்

ஜகமெங்கும் உனதருளால் நிறைந்திடவும்

சகலமும் நீயென நான் உணர்ந்திடவும், என்

சகலமும் உன்னைச் சரண் அடைந்திடவும்

(இடப)


--கவிநயா

 படத்துக்கு நன்றி: http://www.shyamartworks.com