Monday, August 27, 2018

அழகி!



உன் நினைவே நெய்யாக
உன் நாமம் திரியாக
முக மதியே சுடராக
விளக்கேற்றினேன், அம்மா
என் மனமாம் கோவிலிலே
ஒளியேற்றினேன்

கதிரவனைக் கண்டாலுன்
கண்ணொளியே தோணுதடி
நிலவொளியின் தண்மையிலுன்
கருணை முகம் காணுதடி

தென்றல் காற்றின் தழுவல் போல
உன்பார்வை என்னைத் தழுவுதடி
அலைகள் பேசும் ரகசியமாய்
மேகக் கூந்தல் அலையுதடி

சலசலக்கும் நதியைப் போல
கால் கொலுசு குலுங்குதடி
களிச் சிரிப்பைப் போல வளையல்
கலகலத்துப் தோற்குதடி

அம்மா உன் அழகைச் சொல்ல
சிறு பெண்ணால் ஆகிடுமோ?
வைத்த விழி வாங்காமல்
பார்த்தாலும் (ஆவல்) தீர்ந்திடுமோ?


--கவிநயா

Monday, August 20, 2018

என் நிலவு


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என் மன வானில் ஒரு நிலவு
தினம் தினம் தோணுதந்த முழு நிலவு
(என்)

நிலவு உலவுகையில் ஒளி பெருகும், அந்த
நிலவின் ஒளியினில் களி பெருகும்
(என்)

நினைவினில் அவள் முகம் நிலவாகும்
ஒரு நொடி மறந்தாலும் இருள் சூழும்
ஒரு தரம் பெயர் சொன்னால் சுகமாகும், அவள்
மதிமுகம் என் நெஞ்சின் துடிப்பாகும்
(என்)


--கவிநயா

Monday, August 13, 2018

உலகமெல்லாம்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகமெல்லாம் உன்னுருவே
உள்ளமெல்லாம் உன் நினைவே
(உலகமெல்லாம்)

நிலமாய் நீராய் நெருப்பாய் காற்றாய்
வெளியாய் விரிவது உன்னுருவே
நினைவாய் நிஜமாய் ஒளியாய் வழியாய்
உள்ளே ஒளிர்வது உன்னுணர்வே
(உலகமெல்லாம்)

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை
அனைத்தும் ஆக்கிய துன்னருளே
சேயாய் அந்த உயிர்களை யெல்லாம்
தாயாய் அணைப்பது உன்னருளே

உன்னை நினைத்தல் உன்னருளே
உன்னைப் புகழ்தல் உன்னருளே
உன்னைப் பணிதல் உன்னருளே
உந்தன் கருணை உன்னருளே
(உலகமெல்லாம்)


--கவிநயா

Tuesday, August 7, 2018

தாயே நீயே துணை!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தாயே நீயே துணை, எந்தன்
தாயே நீயே துணை
(தாயே)

அருள்விழி அமுதே அஞ்சுகமே
உன்னை நினைத்தால் இனிக்குமென் நெஞ்சகமே
(தாயே)

பவ சாகரமும் சுக சாகரமாகும்
சிவ காமினி உந்தன் அருளால் நலமாகும்
அம்மா அருள்வாயே, அன்பைத் தருவாயே
எந்தை சிவனோடு விடைமேல் வருவாயே
(தாயே)


--கவிநயா