Monday, October 29, 2018

நான்முகன் நாயகி


அன்னம் போல் நடையழகு
அல்லி மலர் நகையழகு
அந்தி மதி முக அழகு
அன்னையவள் பேரழகு
(அன்னம்)

கரத்தினில் ஜபமாலை 
மறுகரத்தில் வேதங்களாம்
அன்னை பதம் துதிப்பவர்க்கு
மனதில் இன்ப கீதங்களாம்
(அன்னம்)

நான்முகன் நாவினிலே
நான்மறையாய் ஒலித்திருப்பாள்
நம்பித் தொழும் பக்தருக்கு
ஞான ஒளியா யிருப்பாள்

வெள்ளைக் கலை யுடுத்தி
வீணையினை மீட்டிடுவாள்
பிள்ளை போல் அன்பு செய்தால்
பேரருளைப் பொழிந்திடுவாள்
(அன்னம்)


--கவிநயா


Monday, October 22, 2018

மஹாலக்ஷ்மி!



மாமலர் மீதமர்ந்த மாலக்ஷ்மியே
மாதவன் மார்பொளிரும் ஸ்ரீலக்ஷ்மியே
(மாமலர்)

வறுமையெல்லாம் தீரும், உன்திரு முகம் கண்டால்
செல்வமெல்லாம் சேரும், உன்கடைப் பார்வை கொண்டால்
(மாமலர்)

சங்கரர் பாடலுக்கு (தங்க)நெல்லிக் கனி தந்தாய்
ஏழையும் பாடுகிறேன், எனக்கென என்ன தருவாய்?
செல்வங்கள் யாவற்றுக்கும் அதிபதி நீயாவாய், உன்
கருணைச் செல்வம் தனைத்தந்து எனையாள்வாய்
(மாமலர்)



--கவிநயா


Friday, October 19, 2018

வெற்றித்திருநாள்

வெற்றித்திருநாள் 

      அன்னையின் வெற்றித்திருநாளாகக் கொண்டாடப்படும்
விஜயதசமி நமது  காமம் ,க்ரோதம் ,மோகம், லோபம் ,
மதம் [பெருமை] ,மாத்சர்யம் [பொறாமை ] ,ஸ்வார்த்தம் [சுயநலம்] , அநியாயம் , அமானவதம்[கொடுமைத்தன்மை ] ,அஹங்காரம் ஆகிய 10 அசுரகுணங்களையும்  அழித்து ஒழித்து நம்மை நாம் வெல்ல  அன்னை அருள் பெருக்கும் நாள் .
               சிவனின் பூத கணத்தலைவனாம் சிற்பக்கலைஞன் சித்திரசேனன் ,முதல் அசுரகுணத்தலைவனாம் காமனை சிவன் தகனம் செய்ததால் குவிந்து கிடந்த சாம்பரை அசுரப் பதுமையாய்ப்  பிடித்து வைக்க ,ஈசன் பார்வை பட்டதும் அப்பதுமை உயிர்பெற்று இரண்டாம் அசுரகுணமாம் க்ரோதமே உருவான பண்டாசுரனாயிற்று. ருத்ர மந்திரம் ஜெபித்ததன் பலனாய் "அயோநிஜையாக[ஸ்த்ரீ புருஷ சம்பந்தமின்றி]பிறக்கும் பெண்ணாலன்றி வேறெவராலும் மரணமில்லை" என்று வரம்பெற்ற பண்டாஸுரனை தேவயஞாக்னி குண்டத்தில் உதித்த ஸ்ரீ லலிதா  மஹாத்ரிபுரசுந்தரி வதம் செய்த கதை யாவரும் அறிந்ததே ! இதே லலிதை , மாந்தரும் உபாசித்து அசுரகுணங்களை அழித்து வெற்றி பெற அருளவேண்டி பரம கருணையுடன் விக்ரஹமாக ஆலயத்தில் எழுந்தருளும் திவ்ய கோலமே காஞ்சி காமாக்ஷி !
             காமாட்சியின் வழிபாடோ , க்ரோதத்திற்கு உதாரணமாக நாம் யாவரும் கருதும் துர்வாசர் எழுதிய ஆகமநூலாகிய  சௌபாக்கிய சிந்தாமணி என்ற சாக்த வழிபாட்டு முறையை அனுசரித்து நடக்கிறது! மஹா கோபக்காரரான துர்வாசர் அன்னையை எவ்வளவு அழகாகத் துதிபாடித்  தொழுதவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது . அவர் எழுதிய அருமையான அன்னைத்துதிகளில்  ஒரு சின்ன துதியையாவது அம்மா பாட்டு அன்பர்களுக்கு அளிக்க வேண்டும்  என்று தோன்றியதன் பலனே இப்பதிவு [ பிழை இருந்தால் மன்னிக்கும்படி துர்வாசரிஷியை வேண்டியவண்ணம் இயன்றவரை தமிழிலும் துதி ஆக்கி அளிக்கிறேன் ]

துர்வாச மகரிஷி இயற்றிய  அன்னைத் துதி

 

பவநமயி ! பாவகமயி !
க்ஷோணிமயி ! ககனமயி !  க்ருபீடமயி !
ரவிமயி ! சசிமயி !
திங்மயி ! ஸமயமயி! பிராணமயி ! சிவே பாஹி !
               
               [தமிழில்]

வாயுமயமானவளே ! 
தீயுமாய்த் திகழ்பவளே !
மண்மயமானவளே ! 
விண்ணாக  விரிந்தவளே !
நீராக நிறைந்தவளே !
கதிரவனாய்க் காய்பவளே!
தண்மதியாய்க் குளிர்பவளே !
திக்கெல்லாம் தாய் நீயே !
காலமயமான மாயே !
உயிர் யாவும் நீ தாயே !
சிவையே ! காத்தருள்வாயே !

Tuesday, October 16, 2018

காளியம்மா!




சூலமேந்தும் தாயே
காளி நீலி மாயே
கோரப் பார்வை கொண்ட போதும்
அழகு கொஞ்சும் தாயே
(சூலம்)

மயானத்தில் ஆடும் தாயே
மேடை இல்லையோ?
மண்டை ஓட்டை அணியும் தாயே
மாலை இல்லையோ?
(சூலம்)

நீதியை நிலை நாட்டவென்று
தோற்றம் கொண்டாய்
அசுரர்களை அழிப்பதற்கு
ஆத்திரம் கொண்டாய்

கோபந் தணிய பரசிவன் மேல்
பாதம் வைத்தாய்
வைத்த பாதம் எடுத்து எந்தன் மீதும்
வைப்பாய்
(சூலம்)



---கவிநயா


Monday, October 8, 2018

கருணைக்கு அளவில்லை


அம்மா உன் கருணைக்கு அளவில்லையே, உன்
கருணைக்கு எழுகடலும் இணையில்லையே
(அம்மா)

உன் கருவிழியழகு கருத்துக்கு விருந்தாகும்
அவை பொழியும் கருணை மனதுக்கு மருந்தாகும்
(அம்மா)

எந்தன் மனக் கோயில் உள்ளே
உன்னை வைத்துப் பூசிக்கின்றேன்
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி
            நாளும் நானும் சுவாசிக்கின்றேன்
உன் புகழைச் செந்தமிழில்
            சேர்த்து வைத்து வாசிக்கின்றேன்
அன்பையன்றி வேறெதை நான்
            உன்னிடத்தில் யாசிக்கின்றேன்?
(அம்மா)


--கவிநயா

Monday, October 1, 2018

என்று வருவாய்?



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீதம்
உனக்காய்ப் பாடுகிறேன்
கீதம் கேட்டு தாய் நீ வரும் நாள்
என்றோ ஏங்குகிறேன்

சூலம் ஏந்தும் போதில் காளி
வீணை ஏந்தும் போதில் வாணி
மாமலர் மீதில் எழில் ஸ்ரீதேவி
எல்லாம் நீயே அருள்வாய் தாயே

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீதம்
உனக்காய்ப் பாடுகிறேன்
கீதம் கேட்டு தாய் நீ வரும் நாள்
என்றோ ஏங்குகிறேன்

நான்முகி நீயே நாரணி நீயே
மாலினி நீயே சூலினி நீயே
வான்முகில் பொழியும் தேன்மழை நீயே
வளம் தரும் தாயே வாழ வைப்பாயே


--கவிநயா