Monday, November 9, 2009

யாரிந்தப் பெண்?

வணக்கம். நலந்தானே?

ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கு. அவற்றுக்குமே மூலம் பெங்காலியா இருக்கும்னு நினைக்கிறேன். அதில் ஒரு பாடல்தான் இது. "Who is this Woman yonder who lights the field of battle?", என்று தொடங்கும்.




யாரிந்தப் பெண்?
இருள் சூழ்ந்த போர்க் களத்தில்
கதிரவன்போல் திரிகின்றாள்!

கருமேக நிறம் விஞ்சும்
பளபளக்கும் கருமேனி

கண்கூசச் செய்கின்ற
மின்னல்போல் பல்வரிசை

அலைகின்ற வேகத்தில்
கலைகின்ற கருங்கூந்தலுடன்

ஆங்காரச் சிரிப்புடனே
அசுரர்களை வதைக்கின்றாள்!

அச்சமூட்டும் போர்நடுவே
அயராமல் இருக்கின்றாள்!

முத்துமுத்தாய் வியர்வையவள்
புருவங்கள் மேல்துளிர்க்க

கொத்துமலர் இவள் கூந்தலென
தேனீக்கள் மொய்த்திருக்க

முழுமதியும் இவள் அழகைக்
கண்டுநாணி ஒளிந்துகொள்ள

அதிசயங்களுக் கெல்லாம் அதிசயமாய்
திகழ்கின்ற இந்தத் தேவதை யாரோ?

கண்டவர் மயங்குகின்ற
இந்த அதிரூப சுந்தரி யாரோ?

சிவன்கூட பிணம்போல
அவள் காலடியில் கிடக்கின்றானே!

பிடியதனின் கம்பீரத்துடன்
போர்க்களத்தில் திரிகின்ற இவள்...

யாரென்று நான் கண்டு கொண்டேன்!
இவள்தான் காளி!
அண்டங்களனைத்தையும் ஈன்ற என் அன்னை!!


--கவிநயா


Thursday, October 15, 2009

அன்னையே போற்றி !

அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!





('செந்தமிழ் நாடெனும் போதினிலே' மெட்டு)

என்அன்னை என்னுயிர்த் தாயேஉன்னைநான்
எண்ணி அனுதினம் வணங்குகின்றேன்
நீயேஎன் கதிஎன வந்து விட்டேன் - நான்
உன்னை நம்பி என்னைத் தந்து விட்டேன்

பளிங்கினால் மண்டபம் கட்டி வைத்தேன் - அதில்
பற்பல சிற்பங்கள் செதுக்கி வைத்தேன்
சுற்றுச் சுவரெல்லாம் உந்தன் பெருமைகள்
பேசும் ஓவியங்கள் வரைந்து வைத்தேன்

என்அன்னை நீ வந்து வீற்றிருக்க - ஒரு
தங்கச் சிம்மாசனம் அமைத்து வைத்தேன்
ரத்தினக் கற்களை இழைத்து வைத்தேன் - அதில்
அழகுப் பதுமைகளை நிறுத்தி வைத்தேன்

என்அன்னை நீகொஞ்சம் இளைப்பாற வேண்டி
உனக்கென அழகான ஊஞ்சல் செய்தேன்
பஞ்சு மெத்தை அதில் விரித்து வைத்தேன் - அதைப்
பட்டுப் பூக்களாலே அலங்கரித்தேன்

முத்துச் சரங்களால் கைப்பிடியாம் - இனிக்கும்
முத் தமிழாலே இசைப் பாட்டாம்
இதமாக ஆட்டிட மங்கையராம் - எந்தன்
அன்னை புகழ்பாடக் கூடுவராம்

அமிர்தத்தை ஒத்த அன்னை உனக்கு
பஞ்சா மிர்தத்தால் அபிஷேகம்
பால்போலத் தூய்மையாய் அன்பு செய்ய வேண்டி
பாலாலே குடங்குடமாய் அபிஷேகம்

தாயாகத் தன்மையாய் அன்பு செய்யும் உனக்கு
தண்மை யான தயிரில் அபிஷேகம்
தேவி உன்னுடைய இனிமை சொல்ல உனக்கு
இனிக்கும் தேனாலே அபிஷேகம்

பாவங்கள் யாவையும் போக்கிக் கரையேற்றிட
பலவித பழச்சாறால் அபிஷேகம்
மனச் சுத்தம் தந்திட வேண்டிக் கொண்டு...
சுத்த மஞ்சள் நீரால் அபிஷேகம்

என்அன்னை என்னுள்ளே மணம்பரப்பிடவே
மணக்கும் சந்தனத்தால் அபிஷேகம்
பிறவிப் பயனதை அடைந்திட வேண்டி
பன்னீரால் அன்னைக்கு அபிஷேகம்

சிவப்புச் சேலை கட்டி தேவி நீயும்
மிகச் சிங்காரமாகவே வீற்றிருக்க
செவ்வந்திப் பூக்களால் செய்த மாலை - உந்தன்
செம்மேனி யதனை அலங்கரிக்க

வைரங்கள் பதித்த கிரீடம் அது - உந்தன்
சென்னியைக் கர்வமாய் மகுடம் செய்ய
பிறைச் சந்திரனும் கூட வந்து அதன்
பக்கத்திலே நின்று அழகு செய்ய

கார்மேகம் தனைத்தந்த கருங்கூந்தல் - அது
அகிற்புகை மணத்திலே சுகித்திருக்க
பலவண்ண நறுமண மலர்கள் பலவும்
அன்னையின் பின்னலை அணிசெய்ய

செக்கச் சிவந்த சிந்தூரத் திலகம்
உன்னெழில் நெற்றியில் ஒளிர்ந்திருக்க
வில்லாக வளைந்த புருவங்கள் இரண்டும்
குனிந்து உன் பாதங்கள் பார்த்திருக்க

அஞ்சனம் எழுதிய அகன்ற விழிகள் - பொன்
வண்டுகள் போலவே சுற்றிவர
ஒற்றை மூக்குத்தி ஜொலிஜொலிக்க - சின்ன
நாசியைப் புல்லாக்கு அலங்கரிக்க

காதணிகள் காற்றில் அசைந்திருக்க - இரண்டு
கன்னமும் ரோஜாவாய்ச் சிவந்திருக்க
சிமிழ் போன்ற இதழ் சற்றே விரிந்திருக்க - அதில்
சின்னதாய்ச் சிரிப்பொன்று மலர்ந்திருக்க

சங்குக் கழுத்திலே தங்கத்தாலே செய்த
தகதகத்து மின்னும் அட்டிகையாம்
முத்து மணி கோர்த்த ஆரங்களாம் - நவ
ரத்தினங்கள் சேர்த்த மாலைகளாம்

தந்தத்தை மிஞ்சும் மென் கைகளிலே
சந்தம் பாடி வளைகள் கலகலக்க
விரல்நகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு
விரல்களில் மோதிரங்கள் பளபளக்க

கற்கள் பதித்திட்ட ஒட்டியாணம் - உந்தன்
சின்ன இடையினைத் தழுவி நிற்க
வெண்பஞ்சுப் பாதத்தில் கொஞ்சிக் கொஞ்சி - வெள்ளிச்
சலங்கையும் மெட்டியும் கிணுகிணுக்க

என்அன்னை உன்னெழில் தோற்றந்தன்னை - என்ன
வென்று சொல்லி நானும் போற்றிடுவேன்
உன்மேல் நீங்கா அன்பு வேண்டுமென்றே - நாள்
தோறும் உன்னை நான் வேண்டுகின்றேன்!


--கவிநயா

பி.கு: ஒரு சில நாட்களுக்கு பதிவிட இயலாது. அதனால் வெள்ளிக் கிழமைக்கு, அதுவும் பெரீய்ய பாடலாகவே இட்டாச்!

Monday, October 12, 2009

உன்னையன்றி ஒருவரிடம் உள்ளம் செல்லுமோ?



உன்னையன்றி ஒருவரிடம் உள்ளம் செல்லுமோ? - உந்தன்
நாமமன்றி வேறுஒன்றை நாவும் சொல்லுமோ? - அம்மா

(உன்னை)

உன்னையன்றி ஒருவரைஎன் கண்கள் காணுமோ? - உந்தன்
புகழையன்றி வேறெதுவும் செவிகள் கேளுமோ? - அம்மா

(உன்னை)

கண்ணை விட்டு மணியிருந்தால் ஒளியும் உண்டோ?
உன்னை விட்டு நானிருந்தால் பொருளும் உண்டோ?
என்னி(ண்ணி)ல் உடன் நீவரவே உன்னை எண்ணியே
பண்ணில் வைத்துப் பாடுகின்றேன் எந்தன் அன்னையே

(உன்னை)


--கவிநயா

Monday, October 5, 2009

பூமகளே பசும்பொன்னழகே!

(நவராத்திரிக்கு அங்கே இட்ட பாடல்கள் இப்போ இங்கேயும்...)




திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!

பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!

வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!

பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!

தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!

--கவிநயா

ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!

SriLakshmi_song_su...

Tuesday, September 29, 2009

அன்னையே அருந்துணையே!



அன்னையே அருந்துணையே
அகில மாளும் நாயகியே
தங்கமே தத்துவமே
தத்து வத்தின் வித்தகமே

(அன்னையே)

தேவி உன்னைத் துதித்திடவே
பேதை என்ன பேறு செய்தேனோ
தேவி உன்னை வணங்கிடவே
தேடி இந்தப் பிறவி கொண்டேனோ

(அன்னையே)

உந்தன் தூரப் பார்வையிலேனும்
என்னைச் சின்னத் துகளாய்க் கொள்வாய்
என்றும் என்னை உன்மல ரடியில்
நிரந்தரமாய்ச் சேர்த்துக் கொள்வாய்!

(அன்னையே)


--கவிநயா

பலப்பல நாட்களில் முதல் முறையாக செவ்வாயன்று பதிவிட முடியவில்லை. மன்னிச்சுக்கோ அம்மா.

Saturday, September 26, 2009

"கண்ட களிப்பா"

"கண்ட களிப்பா"


கண்டவர் பின்னலையாமல் கண்ணெதிரே கண்டுகொண்டேன்
கொண்டவள் இவளென்றே குவலயத்தில் நான்கண்டேன்
வண்டார்குழலி வண்ணக் கண்ணுடையாள் என்னவளைச்
செண்டார் நாயகியை என்னுள்ளே நான் கண்டுகொண்டேன்!1

கண்டேன் கண்ணெதிரே கனகமணி மகுடம்கண்டேன்
கொண்டேன் இருகைசேர்த்தவளை என்னெஞ்சுள் கொண்டேன்
அண்டம் அனைத்துக்கும் ஆதியான அன்னையிவள் கருணையினால்
பண்டைவினையின் பயனெல்லாம் சிறந்திடவே கண்டேன்!2

கண்டமுகச் சிரிப்பினிலே மனம்நிறையக் கண்டேன்
கொண்டமலர்ச்சரவாசம் நெஞ்சினிக்கக் கொண்டேன்
கொண்டைநிறைக் கூந்தலுடைக் கார்மேகக் கண்மணியை
அண்டமெல்லாம் காப்பவளை என்னுள்ளே கண்டுகொண்டேன்!3

கண்டேன் திருமுகத்தின் ஒளிநிறைக்கக் கண்டேன்
கெண்டைமீனின் துள்ளலாடும் கருவிழிகள் கண்டேன்
தண்டையணி சதங்கைகொஞ்சும் பட்டுமலர்ப்பாதம்
கொண்டவளை நாடியென் நெஞ்சினுள்ளே கொண்டேன்!4

கண்டேன் கருத்தினிலே நிறைந்தவளைக் கண்டுகொண்டேன்
அண்டபகி ரண்டமெலாம் அவளடியில் பணியக் கண்டேன்
கண்டமதில் பொலிகின்ற பொற்றாலிமின்னக் கண்டேன்
கண்டவளை வணங்கியே நெஞ்சினிக்கக் கொண்டேன்!5

கண்டதிரு மேனியிலே காஞ்சிப்பட்டு மின்னக்கண்டேன்
கெண்டைக்கால்களிலே பொன்கொலுசு ஒளிரக் கண்டேன்
செண்டுமலர்த் தாங்கிவரும் கார்மேகக் கூந்தல் கண்டேன்
கண்டவளின் தாள்பணிந்து என்னுள்ளே கொண்டேன்!6

கண்டேன் பொன்னாரம் கழுத்தினிலே மின்னக்கண்டேன்
தண்டுவடப் பொன்னாரப் பதக்கம் மின்னக் கண்டேன்
மொண்டார் பொய்கையென அருள்சுரக்கும் விழிகண்டேன்
கண்டவளைக் கைதொழுது கண்ணாரக் கண்டுகொண்டேன்!7

கண்டவளின் கருணையிலே கண்ணீர் மல்கக் கண்டேன்
மண்டலங்கள் மயங்கவைக்கும் மகத்தான எழில் கண்டேன்
விண்டுரைக்க வொண்ணாத அருள்சுரக்கும் அழகு கண்டேன்
எண்டைவினைதீர்க்க வந்தவளை என்னுள்ளேநான் கொண்டேன்!8

கண்டவரும் விண்டிடாத கவினழகைக் கண்ணாரக் கண்டேன்
கண்டதிலே மகிழ்ந்திடவே கருத்தினிலே எந்நாளும் கொண்டேன்
கொண்டதெலாம் உணர்ந்திடவே மனம்கரையக் கண்டேன்
திண்டாடும் துயரெல்லாம் தீயினால் தூசாகக் கண்டேன்! 9

கண்டதிங்கே சொல்லிடவே குருவருளைத் தேடிக் கண்டேன்
கண்டதிலே ஒன்றியவர் கைபிடித்து நடத்தக் கண்டேன்
கொண்டதெலாம் சிறந்திடவே அமைதியகம் மிகக்கண்டேன்
கண்ட களிப்பாவிற்குக் காரணியாய்த் தாயைக் கொண்டேன்! [10]

****************************

Friday, September 25, 2009

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

அன்னையிவள் அருகில்வந்து ஆதரவாய்ப் பார்த்தாள்
என்னையிரு கைகளிலே மழலையெனச் சேர்த்தாள்
தன்னுடனே வைத்திருந்து தன்னுருவைக் காட்டி
முன்னையொரு வினைப்பயனாய் வந்தென்னில் கலந்தாள்

அழகென்னும் ஓர் தெய்வம் மேலிருந்து இறங்கி
அருகென்னில் வந்திருந்து அருட்கரத்தைக் காட்டி
திருவுருவச் சிறப்பெல்லாம் தனித்தனியே காட்டி
முறுவலுடன் மகிழ்த்தியதைநான் என்னவெனச் சொல்ல!

நவநவமாய்த் தினம் பிறந்து அல்லலுறும் என்னை
நவக்கோலம் காட்டியவள் நானுயரச் செய்தாள்
தவமிருந்தும் கிடைக்காத தாயவளின் கருணை
நவராத்ரியில் கிட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

குளிர்நிலவாய் வந்தென்றன் குறையெல்லாம் தீர்த்தாள்
பிறைநிலவாய்க் காட்சிதந்து பேரறிவில் நின்றாள்
வளர்நிலவாய் வந்தவளென் வாழ்வுயரச் செய்தாள்
முழுநிலவாய்ப் பொலிந்ததைநான் என்னவெனச் சொல்ல!

உலகோரை வாழவைக்க அன்னைகொண்ட தோற்றம்
உலகாளும் மாயவளின் ஒன்பதுவகைத் தோற்றம்
உலகெல்லாம் கொண்டாடும் நவதுர்கா தோற்றம்
எனக்காகத் தந்ததைநான் என்னவெனச் சொல்ல!

மலைமகளோ அலைமகளோ கலைமகளோ என்றே
மனதினிலே நானெண்ணி இருந்தநிலை எல்லாம்
ஒருநொடியில் தகர்த்தெறிந்து துர்கையுருக்காட்டி
ஆட்கொண்ட திறத்தினைநான் என்னவெனச் சொல்ல!

ஹிமவானின் மகளாக, தவமிருந்த கோலமாக
மணிநிலவின் ஒளியாக, அண்டம்காக்கும் அன்னையாக
கந்தனவன் தாயாக, குலமாதா காத்யாயனியாய்
ஆறுகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

காலத்தை நடுங்கச் செய்யும் காலதாத்ரி ரூபமாக
சீலத்தைக் காட்டிவரும் மஹாகௌரித் தாயாக
அட்டமஹாசித்திதரும் சித்தாத்ரி அன்னையாக
நவகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

எதிரில் வந்து நின்றவளின் எழிட்கோலம் கண்டேன்
கதிரொளியாய் வந்தென்னில் கலந்தவளைக் கொண்டேன்
இனியவளே கதியென்னும் இன்பநிலைக் கொண்டேன்
கனிவான அருள்முகத்தின் கருணையிலே கலந்தேன்!

அன்னையுன்றன் அருட்கோலம் நெஞ்சினிலே வைத்து
நீயின்றிக் கதியில்லை எனமிகவும் கதறி
அனுதினமும் நின்னளருளைத் தந்திடவே வேண்டுமெனும்
ஒருவரம்நீ அருளிடுவாய் உலகாளும் துர்க்கே!

நவதுர்கை அன்னையரின் தாளிணையைப் போற்றி
அவரருளே வேண்டுமென நாள்தோறும் வேண்டி

அடியார்கள் அனைவருக்கும் நல்லருள் நீ செய்திடவே

நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!

*****************
ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே!