Thursday, March 29, 2012

மங்கலம் அருளிடுவாள்!

வசந்த நவராத்திரிக்காக மாதங்கி என்கிற மீனாக்ஷியின் மீது ஒரு பாடல்...


வசந்த நவராத்திரிக்கென நம் சுப்பு தாத்தா, வசந்த ராகத்திலேயே பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! நன்றி தாத்தா!

மங்கலம் அருளிடுவாள் மங்கை மீனாட்சி
மனதினில் என்றென்றும் அன்னை அவள் அன்பாட்சி

மரகத வடிவினளாம் மதுரையின் கோமகளாம்
சிரந்தனில் மணிமுடியாம் கரந்தனில் செங்கோலாம்
மீனென கருவிழியாம் மானென அவள் நடையாம்
தேனவள் கனி மொழியாம் வானவள் அருட் பொழிவாம்

சொன்னதைச் சொல்லும் கிளி தோளினில் அமர்ந்திருக்கும்
சொக்கனிடம் சொக்கியவள் கன்னங்களில் சிவப்பிருக்கும்
சின்னஞ்சிறு செவ்விதழில் குறுநகை மலர்ந்திருக்கும்
வண்ண மலர்ப் பாதங்கள் அஞ்சுவரைக் காத்திருக்கும்!

--கவிநயா

Monday, March 26, 2012

கனக தாரை - 7,8,9

Lord Vishnu and Goddess Laxmi

சுப்பு தாத்தா யதுகுல காம்போதியில் தொடங்கி கானடாவில் முடித்திருக்கும் அழகை இங்கே கேட்கலாம். மிக்க நன்றி தாத்தா!

7.
விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ-
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)-
மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:


நீலத்தா மரைகள் அனைய நிகிலத்தைக் காக்கும் விழிகள்
நிமிடத்தைக் கோர்க்கும் சின்ன நொடியேனும் மேலே பட்டால்
சுவர்க்கத்தை ஆளும் வாழ்வும் சுலபத்தில் வந்தே சேரும்
மதுவென்னும் அசுரனை வென்ற மாதவனை மகிழச் செய்யும்
சுரபதியைக் காத்த விழிகள் சற்றேனும் என்னைப் பார்த்தால்
எண்ணில்லாச் செல்வம் பெற்று என்றென்றும் மகிழ்வேன் தாயே!


8.
இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்
த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே
த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:


பக்தர்கள் போற்றிப் பணியும் பெருநிதி ஆன தேவீ
பரிவோடு கனிவும் மிகுந்து பொங்கிடும் பார்வை யாலே
எத்தனை தவம் செய்தாலும் எளிதினில் கிட்டா சுவர்க்கம்
இகபர சுகம் எல்லாமே அடியார்க்கு அருள்வாய் நீயே
மலர்ந்திட்ட பதுமம் ஒத்த மங்கையுன் விழிகள் பட்டால்
உலகத்தில் யாவும் பெற்று உவப்பேன்நான் கமலத்தாயே!

9.
த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்
அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்
நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:


அலைகின்ற காற்றுப் பட்டு பொழிகின்ற மேகம் போல
பாலையாய் வறண்ட பூமி பசுமையாய் ஆக மழையாய்
சாதகப் பறவை தன்னின் தாகத்தைத் தீர்க்கும் பொழிவாய்
அன்னை நின் கருணை என்னும் காற்றினை வீசச் செய்வாய்
நாரணன் நங்கை உன்றன் கார்மேக விழிகள் பட்டால்
வினையெல்லாம் நிமிடம் கூட நிற்காமல் ஓடும் தாயே!

--கவிநயா

(தொடரும்)

Monday, March 19, 2012

கனக தாரை - 4,5,6

Devi Lakshmi e Vishnu

சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடியிருப்பதைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!

4.
பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா


கௌஸ்துபம் என்னும் மணியை மார்பினில் அணிந்த மாயன்
மதுவென்னும் அரக்கன் தன்னை வதைத்தவன் மகிழும் வண்ணம்
மரகத மேனியின் மேலே மற்றொரு மாலை போலே
இந்திர நீல ஜாலம் காட்டிடும் உன்றன் பார்வை
கொஞ்சமே கொஞ்சம் என்மேல் கனிவுடன் பட்டால் கூட
கற்பனைக் கெட்டா பேறால் களிப்பேன்நான் கமலத் தாயே!



5.
காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:



கைடப அரக்கன் தலையைக் கொய்தசக் ராயுத பாணி
சாமள வண்ணப் பரந் தாமனின் மார்பின் மேலே
கருத்திட்ட மேகத் திரளில் தெறித்திட்ட மின்னல் போலே
ஒளிர்ந் திட்டாய் பிருகு வம்சம் பிறந்திட்ட அன்புத் தாயே
அகிலத்தின் அன்னை உன்றன் எழில்விழி என்மேல் பட்டால்
இகபரச் சுகங்கள் யாவும் இன்றேநான் கொள்வேன் தாயே!


6.
ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:


போர்க்கணை தொடுத்த அரக்கனைப் புறமிடச்செய் தோன்மீது
மலர்க்கணை தொடுத்து எளிதாய் மாரனும் வென்றது உன்றன்
நிகரில்லாக் காதல் பொங்கும் நீள்விழி துணையால் அன்றோ
நேயத்தால் நெகிழ்ந்து நோக்கும் நங்கையுன் விழிகள் தம்மின்
கடைவிழிப் பார்வை யேனும் கடையன்மேல் பட்டால் போதும்
அளவிலாச் செல்வம் பெற்று அவனியில் உய்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, March 12, 2012

கனக தாரை

மு.கு.: சென்ற நவராத்திரியின் போது "நினைவின் விளிம்பில்" எழுதிய கனகதாராவின் தமிழ் ஆக்கம், அடுத்த சில வாரங்களுக்கு இங்கே...

ஓம் கம் கணபதயே நம:


கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில்...


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் அற்புதமாகப் பாடியிருப்பதை இங்கே கேட்கலாம்! மிகவும் நன்றி தாத்தா.

1.
அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:


ஆனந்தத் தேவி நீயே அணியாக மார்பில் மின்ன
அதனாலே அங்கம் எல்லாம் இன்பத்தில் பொங்கித் ததும்பும்
தமால மலரை யொத்த மாலவன் மேனி தன்னை
மையலால் மகிழ்ந்து நோக்கும் பொன்வண்டை யொத்த விழிகள்
சற்றே திசைமாறி என்மேல் தொட்டுச்சென் றாலும்கூட
செல்வங்கள் யாவும் பெற்று சகத்திலே உய்வேன் தாயே!

2.
முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய


நீலத்தா மரையின் மேலே பாகொக்கும் தேனைப் பருக
தரிகெட்டு அலைந்து திரியும் தேனீக்கள் போலே தாமும்
நாணத்தால் தயங்கிப் பின்னர் நெஞ்சத்தின் காதல் மீற
முராரி முகத்தின் எழிலைப் பருகும்உன் விழியிரண்டும்
நேயத்தால் சற்றே என்மேல் நிலைத்திடு மாயின் நானும்
பாக்கியம் செய்தே னாவேன் பாற்கடல் பிறந்த தாயே!

3.
ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:


பாதியாய் மூடித் திறந்த விழிகளால் தலைவன் தன்னை
பார்த்தும்பா ராதது போலே பார்க்கின்ற பத்தினிப் பெண்போல்
பிரியமும் ஆசையும் கூட நாணமும் அதனுடன் சேர
பாம்பணை மீதில் துயிலும் முகுந்தனை நோக்கும் விழியை
சாடையாய் என்றன் மேலே சற்றேவைத் தாலும்கூட
பொழிகின்ற செல்வத்தாலே பொலிவுற்று வாழ்வேன் தாயே!


--கவிநயா

(தொடரும்)

Monday, March 5, 2012

ஆடகத் தாமரையே!


சுப்பு தாத்தா பொருத்தமாக அடானாவில் பாடியிருப்பதை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிகவும் நன்றி தாத்தா!


ஆடகத் தாமரையே ஆரணங்கே அழகே!
பாடகப் பொற்பதங்கள் வணங்குகின்றோம் மயிலே!
சூடகக் கரத்தழகே சுந்தர முகத்தழகே!
நாடகப் பூவுலகை நடத்திடும் பேரழகே!

பாற்கடலில் துயிலும் பரமனின் சோதரியே!
நாற்றிசையும் புகழும் நங்கையே நாயகியே!
கூற்றுவனை உதைத்த கூத்தனின் காதலியே!
மாற்றெதுவும் இல்லா மங்கையே மாதவியே!

கனவிலும் நினைவிலும் கனிந்தஎன் கண்மணியே!
புனைவிலும் புகுந்தன்பால் பொலிந்திடும் பூவிழியே!
துணையென நீயிருந்தால் துயரங்கள் ஒருதூசே!
பிணையெனச் சொன்னாலும் பிறவியும் பெரும்பரிசே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://pattamangalanaadu.blogspot.com/2010/09/blog-post_8273.html

Friday, March 2, 2012

கண்டேன் அன்னையை !

சிலமாதங்கள் முன்  எனது "சர்வம் நீயே "வலையில் பதிவிட்ட அன்னை
பாட்டு  அம்மன் பாட்டு அன்பர்களுக்காக கீழே:



கண்டேன் அன்னையை !

தாயே அபிராமி!உன்னிரு
தாளினைப் பூஜை செய்ய ,
தேனிறை வண்ணமலர் தேடி
தோட்ட மெங்குந்திரிந்தேன்.

பொன்னிற சாமந்திப்பூ பறிக்க
எண்ணி நெருங்கிய நான்
அன்னையே!உன் வதனம் அதிலே
கண்டு  மயங்கி  நின்றேன்!


கண்ணைக் கவர்ந்திழுக்கும் இளஞ்
செந்நிற ரோஜாவிலும்
உன்னதரம் காட்டிக்குறும்புப்
புன்னகை புரிந்து நின்றாய்!


மலயத்வஜன் மகளே!மீனாட்சி!
மனோரஞ்சிதத்திலுமுன்
மேனியின் நிறம் காட்டி என்னை
மெய்சிலிர்க்க வைத்தாய்!


தேனருந்தத் தவிக்கும் வண்டினம்
தங்கிடுந்தாமரையில்
தேவி! நின்னருள் தவழும் நயனம்
தோன்றத் தொழுது நின்றேன் !


பூவிலுனைக்காட்டி அனைத்துப்
படைப்பிலும் உனைக்காணல்
'பக்குவ நிலை' என்ற தத்துவப்
பாடம் புரிய வைத்தாய்!


பன்னிற மலர்களில் நீ ! இளஞ்சிசு
சிந்திடும் மழலையில் நீ!
சந்திர ஒளியிலும் நீ! ஓதிடும்
மந்திர ஒலியிலும் நீ!


நின்னருள் நீர் பாய்ச்சிச் செழித்த
என்மனப் பூம்பொழிலில்
மலர்ந்த இப்பாமலரால் உந்தன்
மலரடி பூஜிக்கிறேன்!