Monday, December 30, 2019

மனசே, நில்லு!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! 
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!


மனசே நீ ஓரிடத்தில் நில்லு, என்
அம்மாவின் பேரை மட்டும் சொல்லு
(மனசே)

நாளும் அவள் நினைவை நெஞ்சுக்குள்ளே போற்றி வை
கோல எழில் முகத்தைத் தீபமாய் ஏற்றி வை
(மனசே)

கலக்கம் தேவையில்லை, கவலைகள் தேவையில்லை
சரணென்று பணிந்து விட்டால், அவள் வருவாளே துணை
(மனசே)

தினமும் அழைத்திருந்தால். ஒரு நாள் அவள் வருவாள்
பழவினைகளை எல்லாம் ஒருநொடியில் களைவாள்
அன்னையென்று பெயரெடுத்த பேரரசி அவளல்லவோ?
பிள்ளையென்று பிரியமுடன் பேணுகின்ற சிவையல்லவோ?
(மனசே)

--கவிநயா

Monday, December 23, 2019

அனைத்து சக்தியும் நீயே!


அன்னை சக்தி நீ! அன்பு சக்தி நீ! ஆதி சக்தி நீயே!
அகிலம் யாவையும் ஆட்டி வைக்கின்ற மாய சக்தி நீயே!

கல்விக்கதிபதி! செல்வத் திருமகள்! வீரத் தலைவி நீயே!
மூன்று வடிவாக வந்து அருளுகின்ற தேவி சக்தி நீயே!

படைக்கும் சக்தி நீ! காக்கும் சக்தி நீ! அழிக்கும் சக்தி நீயே!
அருளும் சக்தி நீ! மறைக்கும் சக்தி! ஐந்து சக்தி நீயே!

பிரம்ம மூர்த்தி நீ! விஷ்ணு மூர்த்தி நீ! ருத்ர மூர்த்தி நீயே!
உலகம் இயங்கிட மூன்று மூர்த்தியர் செய்த சக்தி நீயே!

காந்த சக்தி நீ! காளி சக்தி நீ! கால சக்தி நீயே!
வேத சக்தி நீ! நாத சக்தி நீ! மகா சக்தி நீயே!

பூமி சக்தி நீ! வருண சக்தி நீ! அக்னி சக்தி நீயே!
வாயு சக்தி நீ! வெளியின் சக்தி நீ! ஐம்பூத சக்தி நீயே!

மாய சக்தி நீயே! தேவி சக்தி நீயே! ஐந்து சக்தி நீயே!
மும்மூர்த்தி சக்தி நீயே! ஐம்பூத சக்தி நீயே! மகா சக்தி நீயே!



--கவிநயா

Tuesday, December 17, 2019

அழகு முகம்



நிலவு முகம் காண்பதற்கு விழிகள் ஏங்குதே, அதனை
நினைந்து நினைந்து செந்தமிழில் சிந்து பாடுதே
(நிலவு)

அம்மா உந்தன் அழகு முகம், கண்டால் உள்ளம் அமைதி பெறும்
என்பால் உந்தன் விழியிரண்டைச் செலுத்திடுவாயோ, உந்தன்
கண்ணால் எந்தன் கவலைகளைக் கரைத்திடுவாயோ?
(நிலவு)


அகிலம் ஆளும் மகாராணி, ஆனால் எந்தன் அன்னையும் நீ
அன்னையென்று சொல்வதில்தான் இன்பம் இருக்குது, நானுன்
பிள்ளையென்று நினைக்கையிலே துன்பம் பறக்குது
(நிலவு)


--கவிநயா

Monday, December 9, 2019

நிலவு முகம்



நிலவு முகம் கண்டேன்
நெளியும் முறுவல் கண்டேன்
கடலெனவே விரிந்திருக்கும்
கருணை அதில் கண்டேன்
(நிலவு)

அகிலமெல்லாம் ஆக்கி வைத்த ஆதிசக்தி அவளே
உயிருக்கெல்லாம் உணவளிக்கும் அன்னபூரணி அவளே
தர்மத்தினை நிலைநாட்டும் மகாராணி அவளே
அதர்மத்தை அழித்தொழிக்கும் மாகாளியும் அவளே
(நிலவு)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற வேத ரூபிணி
கண்ணைப் போல நம்மைக் காக்கும் மீன லோசனி
அண்டியோர்க்கு அஞ்சலென்று அபயம் தருபவள், தன்னை
நம்பியோர்க்கு நன்மையெல்லாம் அள்ளித் தருபவள்
(நிலவு)



--கவிநயா

Monday, December 2, 2019

ஒரு சேதி



நாளும் உனை நினைந்தேன்
பாடல் பல புனைந்தேன்
அம்மா என் குரல் கேளாயோ, கடைக்
கண்ணால் என் திசையில் பாராயோ

கோடானு கோடிப் பிள்ளை
பெற்றெடுத்த என் தாயே
பாடாய்ப் படும் பிள்ளை பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

ஆனைமுகன் ஒருபிள்ளை
ஆறுமுகன் ஒருபிள்ளை
நானும் உந்தன் பிள்ளைதானே மறந்தாயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

தேவர்களைக் காக்க வந்தாய்
துர்கையாகத் தோற்றம் கொண்டாய்
தேடித் தேடி வாடும் எனைப் பாராயோ, உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ

வாலைக் குமரியளே
வஞ்சி லலிதாம்பிகையே
வண்ணத் தமிழ்ப் பாடல் கேட்டு வாராயோ,உன்
கண்ணால் ஒரு சேதி கூறாயோ



--கவிநயா

Monday, November 25, 2019

எழில் முகம்



சித்தெமெல்லாம் உந்தன் முத்தெழில் முகமடி
சுற்றும் எந்தன் மனம் நித்தம் உன் திருவடி
(சித்தமெல்லாம்)

கடைவிழியின் திசை என் திசையாகாதோ
எனை விரட்டும் விதி எதிர்திசை ஓடாதோ
சிறுஇதழ் நெளிவினிலே துயரங்கள் தீராதோ
கருவிழியின் பொழிவில் மனம்தினம் நனையாதோ
(சித்தமெல்லாம்)

சடையணிந்த சிவனின் இடம் அமர்ந்த தாயே
இடம் தந்த பதியால் இடை மெலிந்தாய் நீயே
படம் எடுக்கும் நாகம் குடை பிடிக்கும் தாயே
எனைப் பிடித்த துன்ப வினை கெடுக்க வாயேன்
(சித்தமெல்லாம்)



--கவிநயா

Monday, November 18, 2019

வரம்


பலமுறை முகம் பார்த்தேன்
சிலமுறை வரம் கேட்டேன்
பதிலேதும் தாராமல் தாயே
இருப்பது ஏனோ சொல்வாய் நீயே

தவறெதும் செய்தேனோ
தாயுனை வைதேனோ
தவறுகள் மறப்பாயே தாயே
தருணத்தில் காப்பாயே நீயே

உன்மடி விழ வேண்டும்
ஒருகுரல் அழ வேண்டும்
விதியின் கைப்பாவை ஆனேன் தாயே, உன்னை
கதியெனக் கொண்டேன் காப்பாய் நீயே

ஒவ்வொரு நொடியும் 
உன் நினைவே எனை ஆள
உன் திருப்பெயரெந்தன் 
நாவினில் நடமாட
ஒருவரம் தருவாயே தாயே, அதில்
தினம் திளைத்திருப்பேன் உந்தன் சேயே


--கவிநயா

Tuesday, November 12, 2019

கடைப்பார்வை



அம்மா உன் கடைப்பார்வை கிடைத்தாலே அது போதும்
அம்மா உன் நினைவாலே உயிர் வாழ்கிறேன்
சிவனோடு எழிலான சிவையாகத் திகழ்பவளே
அதற்காகத் தானே நான் தினம் ஏங்கினேன்
(அம்மா)

பல ஊரில் பல கோவில் பல நாமம் கொண்டவளே
மனக் கோவில் குடியிருக்க வருவாயம்மா
தேவாதி தேவருக்கும் அருள் செய்ய வடிவெடுத்தாய்
உன் பேதைப் பெண்ணுக்கும் அருள்வாயம்மா
(அம்மா)

கரத்தாலே விடம் நிறுத்திக் கணவனையே காத்தவளே
எனைக் காக்க என்றைக்கு வருவாயம்மா?
கணபதிக்கு உயிர் தந்தாய் கந்தனுக்கு வேல் தந்தாய்
எனக்கென்ன தருவாயோ சொல்வாயம்மா
(அம்மா)


--கவிநயா

Tuesday, November 5, 2019

தாயே


உயிருக்குள் உணர்வான தாயே, என்
கவிதைக்குள் கருவாகி வருவாயே நீயே
அம்மா என் றழைத்தேனே தாயே, ஆனாலும்
பதிலேதும் தாராமல் இருப்பதேன் நீயே?
(உயிருக்குள்)

துன்பங்கள் மலை போல வளரும்
உன்னை என் கண்ணினின்றும் காணாமல் மறைக்கும்
கண்ணீரும் தானாக வழியும்
அது எழுகடலின் தண்ணீரைத் தான் விஞ்சி நிற்கும்
(உயிருக்குள்)

துன்பங்கள் எத்தனை வரினும்
உன்னருள் இருந்தால் ஓர் நொடியில் தூசாகும்
கண்ணோடு மணியான தாயே
உன் பின்னோடு நான்வர அருள்வாயே நீயே
(உயிருக்குள்)


--கவிநயா

Monday, October 28, 2019

விழியின் ஒளி


விழியில் ஒளியாக இருப்பவளே, என்
கவியில் கருவாக நிலைத்தவளே
(விழியில்)

பக்திக்கும் பணிவுக்கும் பரிபவள் நீயே
முக்திக்கு வித்தான என்னுயிர்த் தாயே
(விழியில்)

தித்திக்கும் செந்தமிழில் உன்னைப் பாடும் வரம் தந்தாய்
எத்திக்கும் நிறைந்தவளே என் மனதிலும் நிறைந்தாய்
முத்துச் சிரிப்பழகால் அத்தன் மனங் கவர்ந்தாய்
வித்தகியே அவன் இடப்புறத்தில் அமைந்தாய்
(விழியில்)


--கவிநயா

Tuesday, October 22, 2019

புவனேஸ்வரி


அண்டமெல்லாம் காக்கும் அன்னை புவனேஸ்வரி
ஆனந்த பைரவி, ஆதி பரமேஸ்வரி
(அண்டமெல்லாம்)

அத்தனுடன் இருப்பாள், முக்தியினைக் கொடுப்பாள்
பக்தியுடன் ஞானம், பணிந்தவர்க்(கு) அவள் அளிப்பாள்
(அண்டமெல்லாம்)

தேவரும் மூவரும் அவள் பதம் பணிய
வேதங்கள் யாவையும் அவள் திருப்புகழ் மொழிய
தேனெனும் இன்னிசை திசையெங்கிலும் பொழிய
தொழுதிடும் அடியவர் விழிகளில் நீர் வழிய
(அண்டமெல்லாம்)

--கவிநயா

Tuesday, October 15, 2019

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி



துர்கை என்பார் லக்ஷ்மி என்பார் வாணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
காளி என்பார் கமலை என்பார் வேணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
(துர்கை)

துர்கையாகத் தோற்றம் கொண்டாள் துயரங்களைத் தீர்க்க
காளியாகத் தோற்றம் கொண்டாள் அசுர்ர்களை மாய்க்க
சூலமேந்தி வந்திடுவாள் பிள்ளைகளைக் காக்க
நீலியாக மாறிடுவாள் நீசர்களைத் தீய்க்க
(துர்கை)

பாற்கடலில் பிறந்து வந்தாள் அலைமகளாக, அந்தப்
பரந்தாமைனைக் கரம் பிடித்தாள் மணமகளாக
இல்லந்தோறும் வந்தருள்வாள் திருமகளாக, அவள்
எட்டுவடிவமாகி நின்றாள் எழில்மகளாக
(துர்கை)

நான்முகனின் நாவினிலே நாமகளானாள்
ஆயகலை அனைத்துக்கும் அவள் அரசியுமானாள்
வேதங்களின் வடிவம் அவள் வேத ரூபிணி, நல்ல
ஞான ஒளி நல்கிடுவாள் ஞான ரூபிணி
(துர்கை)



--கவிநயா

Monday, October 7, 2019

தாமரை மலரே!

தாமரை மலரே தாமரை மலரே
தாயினைத் தாங்கிடும் பேறு கொண்டாய்
தாயவள் பூம்பதம் தாங்கிடத்
தாமரை மலரே நீயென்ன தவம் செய்தாய்?
(தாமரை)

தாமரை திருப்பதம் தாமரை தளிர்க்கரம்
திருமுகமும் எழில் தாமரையே
தேடிடும் என்மனம் நாடிடும் அவள்பதம்
பாடிடும் தினம் அவள் திருப்புகழே
(தாமரை)

அன்னங்கள் நாணிடும் நடையழகில்
சொர்ணமும் மயங்கிடும் அவள் எழிலில்
வீணை குழைந்திடும் அவள் கரத்தில்
வேதங்கள் கிடந்திடும் திருப்பதத்தில்

கலைகளின் ராணி கலைவாணி
காந்த விழிகொண்ட எழில்வேணி
நாளும் அவள் பாதம் போற்றிடுவோம்
ஞான ஒளி நம்மில் ஏற்றிடுவாள்
(தாமரை)


--கவிநயா

Friday, October 4, 2019

அழகு ராணி



செந்தாமரை எழில் ராணி, உந்தன்
கண் தாமரையால் அருள் பொழிந்திட வா நீ
(செந்தாமரை)

பாற்கடலில் உதித்தாய், பரந்தாமனை வரித்தாய்
எண் வடிவம் எடுத்தாய், செல்வம்பல அள்ளிக் கொடுத்தாய்
(செந்தாமரை)

மாதவன் மார்பினிலே மலர்ந்திருக்கும் கமலை
மாதவர் யாவருக்கும் மகிழ்ந்தளிப்பாள் அருளை
திருவடிச் சேவையினில் இலயித்திருக்கும் கோதை
திருவடி பணிந்து விட்டால் காட்டிடுவாள் பாதை
(செந்தாமரை)



--கவிநயா