Monday, December 27, 2010

பார்வதி பஞ்சகம்


காரமர் மேனியன் கற்பக கணபதி
கனிவுடன் காருமய்யா
வானவர் வினைகளை விரட்டவே உதித்திட்ட
வேலவா வாருமய்யா
காமனைக் கண்ணினால் எரித்திட்ட பரமனே
கண்கொண்டு பாருமய்யா
அறியாத பிள்ளைக்கு வழிகாட்டும் சத்குரு
உன்னருள் தாருமய்யா!

அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்ட நாயகியை
அனுதினமும் பாட வேண்டும்
அகத்திலே பொங்கிவரும் அளவிலா அன்பதனை
அவள்பாதம் சேர்க்க வேண்டும்
இகத்திலும் பரத்திலும் அவள்நாமம் ஒன்றேதான்
இன்பமாய் இருக்க வேண்டும்
சுகத்திலும் குறையாத சோகத்திலும் அவளை
சிக்கெனப் பிடிக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

சிந்தையில் அவள்நினைவே கல்பதித்த சிற்பம்போல்
கலையாமல் இருக்க வேண்டும்
மந்தையென வருகின்ற எண்ணங் களைவிரட்டி
மங்கைதனை துதிக்க வேண்டும்
கந்தையென துயரங்கள் பிழிகின்ற போதினிலும்
கலங்கா திருக்க வேண்டும்
விந்தையெனும் இவ்வுலகில் உழலாமல் உறுதியுடன்
விரைந்தவளைப் பற்ற வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காணும்பொருள் யாவிலும் கன்னிஉன் திருமுகமே
கணந்தோறும் காண வேண்டும்
வானம்நிலம் மாந்தரும் வஞ்சிஉன் இன்னருளால்
வளம்பெற்று வாழ வேண்டும்
கோள்வென்று குறைதீர்க்க நாளெல்லாம் நலமாக
நாயகியே அருள வேண்டும்
வீணென்று இப்பிறவி ஆகாமல் எப்போதும்
உன்நினைவாய் இருக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

நின்றாலும் நடந்தாலும் கிடந்தாலும் உன்நினைவே
என்துணையாய் ஆக வேண்டும்
சென்றாலும் இருந்தாலும் வென்றாலும் தோற்றாலும்
என்றும்உடன் இருக்க வேண்டும்
ஒன்றான ஓர்பொருளாய் என்நெஞ்சில் நீயேதான்
பொன்றா திருக்க வேண்டும்
குன்றாத ஒளியாக குறையாத நிதியாக
இறைவிநீ அருள வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காலனைக் கால்கொண்டு கடிந்தவர்க்கு ஒருபாகம்
தந்தவளே போற்றி போற்றி!
வேலனவன் வென்றிடவே வேல்தந்து வரமளித்த
வேல்விழியாள் அடிகள் போற்றி!
மலையரசன் மகளாக வந்துதித்த மாமணியின்
மலர்ப்பதங்கள் போற்றி போற்றி!
நிலையான அன்பதனை உன்மீது பொழியும்வரம்
தரவேண்டும் தேவி போற்றி!
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!

Monday, December 20, 2010

நீயே என் நினைவுக்குள் நிலையானவள்!


நீயே என் நினைவுக்குள் நிலையானவள்
தாயே என் மனதுக்கு சுகமானவள்
மாயே என் மயக்கங்கள் களைகின்றவள்
சேயென்று எனை அள்ளி அணைக்கின்றவள்

விழியினில் விழுந் தென்னை இழுக்கின்றவள் - என்
மொழியினில் நுழைந் திசையாய் ஒலிக்கின்றவள்
ஒளிகளுக் கெலாம் ஒளியாய் ஜொலிக்கின்றவள் - அண்ட
வெளியெங்கும் தண் ணருளால் நிறைக்கின்றவள்

மலரினில் நிற மாகி சிரிக்கின்றவள் - அதன்
மகரந்தம் தா னாகி மணக்கின்றவள்
சொல்லோடு பொரு ளாகி சுவைக்கின்றவள் - அவள்
கன்றோடு பசு வாகி களிக்கின்றவள்

பல்லுயி ராய் மண்ணில் பிறக்கின்றவள் - அவள்
இன்னுயி ராய் என்னில் இருக்கின்றவள்
தன்னுயி ராய் நம்மை காக்கின்றவள் - அவள்
பொன்னடி பணி வோரை ஏற்கின்றவள்!

--கவிநயா

Monday, December 13, 2010

உன் அன்பொன்றே வேண்டும்!



மனிதரும் வலிதரும் யாதொன்றும் வேண்டாம்
அம்மாஉன் அன்பொன்றே வேண்டும்
களிதரும் கன்னியே என்னுள்ளே நீயே
என்றென்றும் ஒளிவீச வேண்டும்

பனிதரும் பிறைசூடன் இடப்பாகம் கொண்டாய்
அவனுக்குன் வலப்பாகம் தந்தாய்
ஆதியே பரமனில் பாதியாய் ஆனாய்
சோதியென ஒன்றாகி நின்றாய்

நஞ்சுண்ட சிவனையே கருநீல கண்டனாய்
ஆக்கியே காத்திட்டாய் அம்மா
வினையென்னும் உரவினை உண்டுண்டு வீழ்ந்தேன்
எனையும்நீ காக்கவே வேண்டும்

என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்
உன்னைத்தினம் பூஜிக்க வேண்டும்
பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!


--கவிநயா

Monday, December 6, 2010

உன்னையன்றி எவருமில்லை...


உன்னையன்றி எவருமில்லை
உள்ளந்தன்னில் திறனுமில்லை
முள்ளிலிட்ட சேலை போலே
நானும் ஆகினேன் – அம்மா
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
கானம் பாடினேன்

உன்னைப் பாடும் பாடல் எல்லாம்
காற்றில் கரைந்து போகுதோ?
இல்லை யுன்னைத் தேடி வந்துன்
பாத மலரில் சேருதோ?

என்றன் கண்ணின் ஈரம் என்று
உன்னை வந்து நனைக்குமோ?
உன்றன் அன்பின் ஈரம் என்று
என்னை வந்து அணைக்குமோ?

ஏதும் அறி யாத பிள்ளை
உன்மடி யைத் தேடுது
பாதம் பற்றிக் கொண்டு நீயே
சொந்தம் என்றுபாடுது!


--கவிநயா

Monday, November 29, 2010

என்று தெரிந்திடுமோ?

ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு நான் எழுதாத, ஆனா என்னுடையது போலவே இருக்கிற ஒரு பாடல் :) போன வாரம் தற்செயலாக இதைக் கேட்க நேர்ந்த போது இதை உங்களுடன் பகிர்ந்துக்கிறதுன்னு முடிவு செய்தேன்... மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மீதான பாடல்களில் ஒண்ணு. எழுதியவர் யார்னு தெரியலை; உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க. பாடியிருப்பவர் வாணி ஜெயராம்.


இந்தப் பாடலின் ஒலிச்சுட்டி.

உன்னெழில் கோலம் என்னிரு கண்ணில் என்று தெரிந்திடுமோ
உன்மலர்ப்பாதம் என்தலைமீதில் என்று பதிந்திடுமோ - அம்மா
என்று பதிந்திடுமோ?

(உன்னெழில்)

அன்னையுன் அருளால் என்னையும் மறந்து இருந்திடும் நாள்வருமோ
பொன்னையும் பொருளையும் பூமியில் வாழ்வையும் வெறுத்திடும் நாள்வருமோ - அம்மா
வெறுத்திடும் நாள்வருமோ?

ஆசையென்னும் வேதனை அகற்றி அருள்தரவருவாயா
அலைகடல் போல அலையுமென் வாழ்வினில் அமைதியைத் தருவாயா - அம்மா
அமைதியைத் தருவாயா?

(உன்னெழில்)

உலையினில் இட்ட மெழுகாய் நானும் உருகித் தவிக்கின்றேன்
உன்னருள் வேண்டி ஒவ்வொரு நாளும் பாடித் துதிக்கின்றேன் - அம்மா
பாடித் துதிக்கின்றேன்

ஊரும் பேரும் உறவும் வேண்டேன் உன்னருள் வேண்டுகின்றேன்
உலகினில் இருக்கும் காலம்வரைக்கும் உன்துணை வேண்டுகின்றேன் - அம்மா
உன்துணை வேண்டுகின்றேன்

(உன்னெழில்)

Monday, November 22, 2010

சிவன் பாதியள்


அரியாசனத்தினில் அரனுடன் அமர்ந்து
சரியாசனம் செய்யும் அம்பிகையே!
அரவாசனத்தினில் துயில் கொண்டிருக்கும்
அரியுடை அன்புச் சோதரியே!

இந்திரன் முதலாம் தேவர்கள் யாவரும்
பணிந்திடத் திகழ்ந்திடும் தாமரையே!
சந்திர னைமுடி சூடிய இறையுடன்
வந்தெமைக் காத்திடு தாரகையே!

அருமறைகளும் தினம் போற்றிடும் துதித்திடும்
நாயகியே எங்கள் நான்முகியே!
திருமுறைகளின் அருந் தலைவனை அணையும்
சாம்பவியே எழில் சங்கரியே!

பவமதை ஒழித்திடு தவமதை நல்கிடு
நாரணியே எங்கள் பூரணியே!
எமதுள்ளம் உறைந்திடு நிறைந்தங்கு ஒளிர்ந்திடு
சோதியளே சிவன் பாதியளே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.shaivam.org/siddhanta/maardh.html

Monday, November 15, 2010

வர வேண்டும்... வர வேண்டும்...


வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்
தர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி!

(வர வேண்டும்)

பரம் என்று உனை அடைந்தேன்
ஒரு வரம் தா – என்றன்
சிரம் தனில் பதம் பதித்து
திரு வரம் தா!

(வர வேண்டும்)

திருவடி நினை வொன்றே
நொடி தொறும் வேண்டும் – உன்
நினைவினில் தினம் திளைத்து
மகிழ் வரம் வேண்டும்!

மறுபடி மறுபடி
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!

(வர வேண்டும்)


--கவிநயா

படத்துக்கு நன்றி: கைலாஷி

Monday, November 8, 2010

நெஞ்சில் நிறைந்தவள் - 2

சென்ற பதிவில் இட்ட பாடலின் நிறைவுப் பகுதி இது.




பகுதி-2

இதயத்தில் இருப்பவள் இயக்கத்தை அளிப்பவள் இமயத்தில் உறைகின்ற உமையவளே
உதயத்தைப் போலவே உள்ளத்தில் ஜொலிப்பவள் ஓம்எனும் பிரணவத்தை ஆள்பவளே
சதமென பதங்களை பற்றிய பேருக்கு இதமுடன் இன்னல்கள் தீர்ப்பவளே
விதவித மாகவே துதிட்ட போதிலும் வேற்று மைகள்இன்றி காப்பவளே! (6)

வான்முதல் வளியவள் தேனினும் இனியவள் வணங்கிடும் அடியவர்க் கெளியவளே
வானவர் வணங்கிட தானவர் பணிந்திட மாதவர் போற்றிட திகழ்பவளே
கானத்தில் கரைபவள் ஞானத்தில் ஒளிர்பவள் மோனத்தில் உறைபவன் மனையவளே
நான்முகன் முதலிய மூவரும் துதித்திட ஐந்தொழில் புரிந்தெம்மை காப்பவளே! (7)

கலைகளின் தாயவள் எழில்வடி வானவள் மலையர சன்மகளும் அவளே
வலையென பின்னிடும் வினைகளை களைந்திட மலையென உடன்துணை இருப்பவளே
அலைந்திடும் மனமதை அசைவற்று நிறுத்திட அருளிடு அன்பினில் சிறந்தவளே
கலங்கிடும் அறிவினை தெளிந்திட வைத்தெம்மை அருமையுடன் தினம் காப்பவளே! (8)

சடைமுடி தரித்தவன் விடைதனில் இருப்பவன் இடமதை வரித்திட்ட உமையவளே
மடையென பெருகிடும் வினைகளை அழித்திட கொடையென பொழிந்தருள் புரிபவளே
படையென பல்திசை பயணிக்கும் புலன்களை அடக்கிட உதவிடும் அருள்மகளே
கடையவ னாயினும் கருணை மிகுந்திட கனிவுட னேவந்து காப்பவளே! (9)

நாயகியாய் நல் நவமணியாய் எழில் நான்முகியாய் திகழ் நாரணியே
காயமிதில் உயிர் காயும்முன்னே வந்து மாயங்கள் களைந்திடு மாதவியே
பாய்கின்ற நதியென ஓடிவந்து எமை பரிவுடன் காத்திடு பரிபுரையே
தாயுன்றன் அடிகளை சரண்புகுந்தோம் எமை ஆதரித் தருள்புரி திரிபுரையே! (10)

--கவிநயா

Monday, November 1, 2010

நெஞ்சில் நிறைந்தவள்!

200-வது பதிவிற்காக 'அயிகிரி நந்தினி' மெட்டில் 5 பத்திகள் கொண்ட பாடல் ஒன்று எழுதினேன்; அதிலிருந்து 2 எடுத்து பயன்படுத்தினோம். சரியாக நிறைவடையாதது போல் தோன்றியதால், 5 ஆக இருந்தது பிறகு 10 ஆகி விட்டது. அதனை இரண்டு பகுதிகளாக இடுகிறேன்...



பகுதி-1

நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே! (1)

அன்னையவள் இளங் கன்னியவள் எழு உலகையும் ஆள்கின்ற அரசியளே!
முன்னையவள் முதல் முடிவுமவள் எமை கண்ணெனக் காக்கின்ற பெண்ணவளே!
விண்ணுமவள் இந்த மண்ணுமவள் தன்னை உன்னுபவர்க் கருள் புரிபவளே!
கண்ணுமவள் கனி யமுதுமவள் இந்த மன்னுயிர் தனதென காப்பவளே! (2)

கண்ணுதலான் ஒரு பாதியவள் கறைக் கண்டனைக் காத்திட்ட தேவியளே!
விண்ணுறை தேவரும் மண்ணுறை மாந்தரும் பொன்னென போற்றிடும் பூவையளே!
கண்டென இனித்திடும் கன்னலவள் எழிற் செண்டென சிரித்திடும் செவ்வியளே!
உண்டென உணர்ந்துன்னை அண்டிய தொண்டரை அன்புடன் தாயென காப்பவளே! (3)

கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே! (4)

மலையென நின்றவன் மங்கையவள் அவன் மனதினைக் கவர்ந்திட்ட நங்கையளே!
சிலையினை அங்கையில் ஏந்தியவள் எழிற் சிலையென விளங்கிடும் மலைமகளே!
கலையினை திருமுடி சூடியவள் சிலம் பொலித்திட திருநடம் புரிபவளே!
நிலையற்ற வாழ்விதன் நிலையினை உணர்த்தி நிகரற்ற நேசத்தால் காப்பவளே! (5)

--கவிநயா

Monday, October 25, 2010

கயிலாயம் உனக்கெதற்கு?


எழில்ராணி உன்பதங்கள் போற்றுகின்றேன்
தமிழ்ப் பாமாலை தினமுனக்கு சாற்றுகின்றேன்
உனக்கெனவே ஒருகோவில் அமைத்து வைத்தேன்
அதில் உடன்வந்து குடிபுகவே உனை அழைத்தேன்

கயிலாயம் உனக்கெதற்கு, குளிர் நடுக்கும் - உன்றன்
மலர்ப்பாதம் தரைதொட்டால் மனம் பதைக்கும்;
தாமரையில் நீநின்றால் கால் கடுக்கும் - நறு
மணமலர்நீ எனமயங்கி வண்டு கடிக்கும்!

வீணைமீட்டி மீட்டிப்பிஞ்சு விரல் வலிக்கும் - சிம்மம்
ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்;
பூந்தளிரே புதுமலரே இனியேனும் நீயென் - உளக்
கோவில் வந்தமர்ந்தால் மனம் களிக்கும்!


--கவிநயா

Monday, October 18, 2010

கற்பனைக் கெட்டாத கற்பகமே!



கற்பனைக் கெட்டாத கற்பகமே
அன்புருவே அமுதே அற்புதமே

பொற்பதம் பணிதலன்றி வேறறியேன் - உன்றன்
நற்புகழ் பாடலன்றி தொழிலறியேன்

பற்பலரும் போற்ற பனிமலை வீற்றிருப்பாய்
சொற்பதங் கள்கடந்த சுந்தர னுடன்களிப்பாய்
நற்கதி அருள்பவளே நலந்தரும் உமையவளே
சிற்சபை யில்ஆடும் சிவனிடம் உறைபவளே!


--கவிநயா

Wednesday, October 13, 2010

முக்தி ப்ரதாயினி !. மனமிரங்கி அருள்வாய் நீ !

 அம்பே !அம்பிகே !  அபிராமியே  !!
 அகிலத்து நாயகியே !                                      
 ஓம் ஜெகதம்பாயை நம: !!  
அஞ்ஞான இருளகற்றும் அறிவே !
 ஆனந்தவல்லித்தாயே... 
ஓம் தமோ நாசின்யை நம;
      
  அ  உ ம் உன்னுள் ! உமையே ! ஓம்காரமே !
  அவை உச்சரிக்கும்போதெழும் நாதமும் நீயே !!     
ஓம் க்ஷராக்ஷராத்மிகாயை நம :
  ஓம் நாதரூபாயை நம:
         
 ஆனைக்காவலிலே அகிலாண்ட நாயகியே  ! 
 ஆரணி நாரணியே ! ஆனந்தரூபிணியும்  நீயே !!   
  ம் மஹேஸ்வர்யை நம:


    அம்ருத வர்ஷிணி !ஆவுடை நாயகி !

  





இடப வாகன‌ன்  ஈசன்  இடபுறம் நீ! பார்வதியே !!
இயற்கையின் கண் உயிர் ஈந்த பவானியும் நீயே !!       
  ஓம் பவான்யை நம:
  உமையே ! உண்ணாமுலையாளே !
  வையம தோன்றுமுன்னே நிஜமாய் நின்றவளே !    
   ஓம் அஜாயை நம: 




 விஸ்வ ஜனனி நீ ! விஸ்வ காரணியும் நீ ! 
 எமை எல்லாம் ஈன்ற பின்னே எம் பசி ஆற்றுபவள் நீ. !  

   கௌரி கல்யாணி காயத்ரி  காம வர்தினி 
   சுஹாசினி சுவாசினி சுகந்தினி சுக ப்ரதாயினி 
    தருணி  தத்வமயி தாரித்ரிய த்வம்சினி தேவி 
    பத்மினி புஷ்டி நீ பிரசன்ன புவனேஸ்வரி
kamakshi
 
  கரும வினை தொலைத்திடவே
  காஞ்சி நகர் வருவார்தம்
  காம க்ரோத மதமழிக்கும்
  காமாட்சியே ! காமேஸ்வரி தாயே !  
  ம் ப்ரபன்ன துக்க ஹாரிண்யை நம: 
     
    சங்கரி  சந்திர வதனி சாம்பவி சரஸ்வதி
    சத்ய ஸ்வரூபிணி சதுர்வேத நிவாசினி
    சியாமளி சின்மயி சர்வ சித்தி ப்ரதாயினி 
    சிவமயி சூலினி சாவித்ரி ஸ்ரீசக்ர நிவாசினி 





 கசியும் விழியுடனே காசி அடைந்தோர்க்கு
 காலபயம் நீங்க  கங்கை நீர் தருபவளே !
முக்தி அளிப்பவளே !! முந்தைவினை அழிப்பவளே !!
நற்கதி விண்ட‌ருள்வாய்  ! விசாலாட்சி தாயே நீ !!  
ம் அபவர்கப்ரதாயை நம:
  வைகை நகர் ஆளும்
  சொக்கனின் சுந்தரியே !! அவன்
  கைபிடித்து மணம் புரிய
  மாமதுரை வந்தனையோ  !!
  மீன்விழியாளே ! மீனாட்சி தாயே !!             
   ஓம் ஸித்தி ரூபாயை நம:
Devi Karpagambikai
  மயிலை நகரிலே ஒயிலாக வலம் வந்து
  கயிலை மலை வாசன்  கபாலியும் கண்டு மகிழ
 அறுபத்து மூவர் போற்றும் அன்னையே
 கற்பக அம்பிகையே ! எமை
 ரக்ஷிப்பதுன்னதருளே !!                
  ஓம் சங்கர்யை  நம:
மந்திரமே மருந்தாய் ஈசன்   வைத்தீச்வரன் அருகில்
சுந்தரியாய்  வீற்றிருக்கும்  பாலா அம்பிகையும் நீயே
தான்  (ஐ)அறுப்பவளே தையல் நாயகியே !!
தருமத்தைக் காப்பவளே ! தர்மசம்வர்த்தினியே !!     
ஓம் அபய ப்ரதாயை நம:
Neelayadakshi
  கருந்தடங் கண்ணி என சுந்தரவிடங்கருடன்
  அரும்பதிகமது புனையும் விரி கேட்டனையோ !!
   நீலக்கடலோரம் நாகைத் தலத்தினிலே
   நீலாய தாட்சி நீ  உடன் வந்து எனை ரட்சி.        
   ஓம் சிவாயை நம:

குடம் நிறை பாலும் தேனும் அம்மா உனக்கபிஷேகம்.
 ஞ்சள் நீராட்டிய பின்,மலர்  மாலை ஆபரணம்
 க்த வர்ண சேலை கட்டி குங்குமத்திலகமிட்டு
(உ)ன்னை நான் பூசிப்பேன் வண்ண வண்ண மலரெடுத்து.

 கேட்கும் ஒலியெல்லாம் துர்கே !! நின் ஓம்காரம்
   ஆர்ப்பரிக்கும் அலை  மனதில்,  நிர்மலே ! நீ நங்கூரம்
   எஸ்ஸ்ருதி எவ்வேதம்  ஸரஸ்வதி  நீ ஸானித்யம்
   ஞ்சினி விமலி  சங்கரி   நிதர்சனம் நின்  சத்தியம் ..
  
                         ஓம் பிரம்மா விஷ்ணு சிவாத்மிகாயை நம:

    ஓம் தயாகர்யை நம:

ரும்பு வில்லாளே கடைக்கண் பார்வையுந்தன் 
விழுந்தாலும் போதும் விமோசனம் யான் பெற்றிடுவேன்.
 ற்சங்கம் நாடி,   நிர்மோக  நிலை அடைவேன். 
 யாதுமான நின் ஒளியில் இரு வினையும் தொலைத்திடுவேன்.
    
    ஓம் தஹராகாச ரூபிண்யை நம: 



ற்பூர நாயகி கமனீயகாந்தி கஸ்தூரி திலக கதம்பவனவாசினி  
விண்ணோரும் வந்திக்கும் வாக்தேவி வைசாலி விஸ்வேஸ்வரி
வராத்ரி நாயகி நவரத்ன பூஷணி  நான்முகனின் தேவி நமோ நம:  .
 யாண்டும் யாவர்க்கும் யாதுமானாய். நின் தாள்  போற்றி போற்றி.
ஓம் சர்வ மங்களாயை நம:
Devi RajaRajeswari
 
 மாயே !  மாதே ! மாதங்கி !   மஹாசக்தி  !
மோகினி ! மஹேஸ்வரி ! மாங்கல்ய தாயினி ! மஞ்சு பாஷிணி !  
முக்தி ப்ரதாயினி !.   மனமிரங்கி அருள்வாய் நீ !
வேதவல்லியே ! வித்யே ! வந்திப்போம் யாம் உனையே !
 ஓம் ராஜ ராஜேச்வர்யை நம: 

Please Click here to listen to Aarthi
                                                           (courtesy: Sri Kumaran )
நவராத்திரி நாட்களில் , திருலோக நாயகியை திருவரங்க நாயகியை  மஹா லக்ஷ்மியை வந்தித்து எழுத அழைப்பு வந்ததும் அவளது அருளே.
ல்லோருக்கும்து ராத்திரி வாழ்த்துக்ள்.
தேவியின் சில நாமாக்களுடன் அதற்கேற்ற பாடல்கள் ஆங்காங்கே இணைக்கப்பட்டு உள்ளன. கிளிக்கினால் கேட்கலாம்.

எழுதியது: சுப்பு ரத்தினம் ( சூரி ) 







Sunday, October 10, 2010

"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


"ஸ்ரீ லலிதா நவமணி மாலை"


காப்பு

எல்லாம் தருவான் எதையும் தருவான்
அல்லாதன வெல்லாம் அகற்றிட வருவான்
நல்லோர் புகழும் லலிதையின் தோத்திரம்
சொல்லா லிசைத்திட கணபதி காப்பான்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********

நவமணி மாலை.

அன்பின் திருவாய் அகமெலாம் திறந்திட
ஆயிரங்கையுடன் நீயெதிர் வந்தாய்
துன்பம் நீங்கிடத் தயவுட னணைத்தே
தாயென நின்னிரு தாளெனக் கீந்தாய்
நின்பத மொன்றே கதியென வேண்டிடும்
அடியவர் நெஞ்சினில் அமைந்துநீ இருப்பாய்
மன்புகழ் வயிரப் படைவாள் கொண்டயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

கோலம் இட்டுனைக் கூடத்துள் அழைத்தேன்
கோணம் நடுவினில் நீவந் தமர்ந்தாய்
மாலைகள் சூட்டியே பாக்களும் படித்தேன்
மங்கலமாய் நின் திருமுகம் கண்டேன்
சோலைத் தருவே சுந்தர வடிவே
சோகம் அகற்றியென் வாழ்வினில் மலர்வாய்
நீலக் கடலனை நித்தில மேயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தத்தும் மழலையின் தளிர்நடை கண்டே
தாயவள் மகிழும் பாங்கினை யொத்தாய்
கத்துங் கிளியின் கவினுறு வெழிலாய்
பாயும் ஒளியாய்ப் பரவசம் தந்தாய்
வித்தகியே நவ ராத்ரியின் நாயகி
தோயும் அன்பினைத் தினந்தினம் தருவாய்
முத்தே ரனையமென் முறுவலைப் பூக்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

முந்தையென் வினைகள் யாவும் நீங்கிட
எந்தாய் நினையே சரண மடைந்தேன்
சிந்தையில் நினைந்தே தினம்நான் துதித்தேன்
வாராதிரு ந்திட மனமோ அம்மா
தந்திடும் வரங்கள் சொல்லிடத் தகுமோ
தாயே எனக்குநின் பதமலர் தருவாய்
வந்தே நிரம்ப வளம்நீ தருவாயென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

காணி நிலமும் கழஞ்சும் வேண்டேன்
கருதும் எதுவும் இனியான் வேண்டேன்
ஆணிப் பொன்னும் ஐஸ்வர்யம் வேண்டேன்
விரும்பும் எவையும் எனக்கென வேண்டேன்
நாணிக் கோணி நீநகர்ந்து செல்லாதுன்
தாளிணை சுகமே எனக்கினி வேண்டும்
மாணிக்கப் பரல் தண்டைகள் குலுங்குமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

வரமிதை அளிப்பாய் வாழ்வுடைத் தாயே
வந்தென் தாபத்தைத் தீர்த்தெனை யணைப்பாய்
பரகதி தந்தென் வாழ்வினை நிறைப்பாய்
பிறவியிலாதொரு நிலையினைத் தருவாய்
சுரமிசை பாடியென் உள்ளத்து ளழைத்தேன்
சுவைதரும் படையலும் உனக்கென வைத்தேன்
மரகதப் பதக்கம் மின்னிடும் தேவியென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

மாமேரு வினில்நடு நாயகி நீயே
துர்கா லக்ஷ்மி சரஸ்வதி நீயே
பாமேல் வந்திடும் பாலகி நீயே
பணிபவர் நெஞ்சினுள் உறைபவள் நீயே
பூமே லமர்ந்திடும் தாயவள் நீயே
புனித நவராத்ரி நாயகி நீயே
கோமே தகமே குணவதியே யென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

உதித்திடு முச்சித் திலகமும் நீயே
உண்மையின் வடிவமாம் உமையவள் நீயே
துதித்திடு மன்பரின் துணைநலன் நீயே
தொல்லைகள் நீக்கிடும் துர்க்கையும் நீயே
மதியொளி மகுடம் தாங்கிடும் தேவியே
கதியென வுன்னிரு பதமலர் அருளே
பதும ராகமணி மாலைகள் புனையுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

தடுத்தெனை யாண்டிடத் தாயே வருவாய்
தயவுகள் புரிந்துன் சேயெனைக் காப்பாய்
அடுத்திடும் கவலைகள் அணுகிடா வண்ணம்
அன்புருவே யெனை அனுதினம் காப்பாய்
கொடுத்திடும் குருவாய்க் குழந்தையாய் வந்தென்
வினைத்துய ரகற்றியே முத்தியைத் தருவாய்
வைடூரிய நவ மாலை யணியுமென்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
********
நவநா யகியரின் தாயினைப் போற்றும்
நவமணிமாலையில் வாழ்ந்திடும் தேவி
நவநவ பாக்கியம் அனைத்தையும் தந்தே
நலமுடன் காப்பாள் தாயே சரணம்!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
******************************************

"அன்னையருள் அருகிருக்கும்!"
"அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!"

Thursday, October 7, 2010

ஓம்சக்தி ஓம்!

அனைவருக்கும் மனம் கனிந்த நவராத்திரி நல்வாழ்த்துகள்!



மூவாறு கரங்களுடன்
முகம்பொழியும் கருணையுடன்
மூவுலகும் காக்க வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சேலாடும் விழிகளுடன்
நூலாடும் இடையினுடன்
எண்திசையும் வெல்ல வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வேல்விழிகள் பளபளக்க
கோபத்திலே ஜொலிஜொலிக்க
வேகம்மிகக் கொண்டு வந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீரமகள் வந்தணைக்க
வெற்றிமகள் சேர்ந்திருக்க
மகிஷன்சிரம் அறுத் தெறிந்தாய்
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

காளியென நீலியென
கனிவுமிகும் அன்னையென
காப்பாற்ற வந்தவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

சண்டியென சூலியென
சடுதியிலே வந்துஎங்கள்
சங்கடங்கள் தீர்ப்பவளே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

ஓமென்று உன்நாமம்
ஓயாமல் உரைத்திருந்தால்
ஓடோடி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!

வீணென்று இப்பிறவி
ஆகாமல் இக்கணமே
விரைந்தேகி வருவாயே
ஓம்சக்தி ஓம்! ஓம்சக்தி ஓம்!


--கவிநயா

Tuesday, October 5, 2010

உயிரினில் இனிப்பவள்!



நினைவினில் நின்றவளே - நிலவின்
கலைதனைக் கொண்டவளே
மலையென நின்றவனை - குலையா
காதலால் வென்றவளே

கருத்தினில் உறைபவளே - குறைகளை
பொறுத்தருள் புரிபவளே
கருத்திட்ட கண்டனுக்கு - ஒருபுறம்
கொடுத்திட்ட உமையவளே

விதியினை அறுப்பவளே - எனக்கு
கதியென இருப்பவளே
ஸ்ருதியுடன் லயமெனவே - எந்தன்
உயிரினில் இனிப்பவளே!

--கவிநயா

Tuesday, September 28, 2010

கருமாரி அம்மா


கருமாரி .அம்மா ... நின்
கருணைவிழி அருள்  வேண்டி
காலடியில்
காத்திருப்பேன்..       கருமாரி. அம்மா,,,

அருள் மாரி பொழிவாய் நீ
அகிலமெல்லாம் காத்திடுவாய் !
ஆயிரம் கண் உடையாய் எங்கள்
அவலங்கள் தொலைத்திடுவாய்  = கருமாரி  அம்மா

இருள் இடர் இன்னல் இங்கே
இனி இல்லை எனச் சொல்வாய் !
ஈரேழு உலகத்தாரும் 
மீண்டுவரும் வழி சொல்வாய்  = கருமாரி  அம்மா

உள்ளத்திலே குடிபுகுந்து-=என்
உள்ளத்திலே குடி புகுந்து, அருள்
வெள்ளத்தி  லதையமிழ்த்தி   

உண்மையெது ? உணரச்செய்வாய் !
*மெய்யதனைச் சுட்டெரித்து
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி அம்மா

எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான்
ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி.அம்மா

ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி அம்மா

ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம . வழி காட்டும். ...கருமாரி.அம்மா

அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ...  கருமாரி .அம்மா

*மெய்  = உடல்    
கருமாரி அம்மன் கோவிலுக்குச் சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
நன்றி: தினமலர் நாள் இதழ் .
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்கள் அறிய  இங்கே கிளிக்கவும்.
அம்மன் சன்னதியில் மனம் உருகி பாடும் பாடல்களைக் கேட்க விருப்பமா ?
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா பாடுவதை கேட்க   பொறுமை தேவை.  விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டும்:
இங்கே

எழுதியது

சுப்பு ரத்தினம்










Monday, September 20, 2010

தஞ்சமென்று உனைஅடைந்தேன்...



தஞ்சமென்று உனைஅடைந்தேன் தாரகையே – என்றன்
நெஞ்சந்தனில் குடியிருக்க வாஉமையே

அஞ்சுகின்ற நெஞ்சமுடன் உன்னைஅடைந்தேன்
அஞ்சுகமே தஞ்சமென்று கண்டுதெளிந்தேன்

அஞ்சுமலர் அங்கையிலே ஏந்தியிருப்பாய்
அஞ்சேலென்று அன்புடனே அரவணைப்பாய்
பிஞ்சுமலர்ப் பதங்களையென் சென்னிபதிப்பாய்
பஞ்சிலிட்ட தீயாய்என்றன் வினையெரிப்பாய்!


--கவிநயா

Monday, September 13, 2010

அம்மா வருவாயோ?


அம்மா வருவாயோ - வந்தென்
அல்லல் களைவாயோ
அன்பைத் தருவாயோ - தந்தெனை
அணைத்துக் கொள்வாயோ

ஒன்றும் அறியாத பெண்ணாய்
என்னைப் படைத்தாயே
எல்லாம் அறிந்த அம்மா என்னை
அலைக் கழித்தாயே

முன்னம் வினையெல்லாம் அம்மா
முறித்து அருள்வாயே
கண்ணால் காப்பவளே கொஞ்சம்
கருணை செய்வாயே!


--கவிநயா


Tuesday, September 7, 2010

விழியழகி!



வெள்ளைப் பாற்கடலில் துள்ளுகின்ற மீனினமோ
கள்ளைக் கடிமலரில் தேடுகின்ற வண்டினமோ

முள்ளை மலராக்கி மாயம்செய்யும் மந்திரமோ
கல்லைக் கனியாக்கும் கனிவுமதன் தந்திரமோ

வில்லைக் கையேந்தும் மன்மதனின் அம்புகளோ
தில்லைச் சுந்தரனை துரத்திவரும் வம்புகளோ

காலைக் கதிரவனும் கடன்வாங்கும் சூரியரோ
மாலை முழுமதியும் மயங்குகின்ற சந்திரரோ

பால முருகன்கையில் வேலெனவே வந்தனவோ
கோல மயில்எழிலாய் அவனுடனே சென்றனவோ

நீல மயில்தோகை இமைகளென ஆனதுவோ
நீல கண்டனுக்கு விரித்திருக்கும் வலையதுவோ

கருணை பொழியவென்றே கருத்திருக்கும் முகிலதுவோ
மருளை நீக்கவென்றே காத்திருக்கும் ஒளியதுவோ

கருக மணியழகோ மருண்டுஓடும் மானழகோ
விரையும் எதிரியையும் வெல்லுகின்ற வாளழகோ

பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ
இறைவியுன் விழியழகை பாடுவதும் சாத்தியமோ!


--கவிநயா

Tuesday, August 31, 2010

நீ ஒன்றே ஆதாரம்!



அன்னை உன்னை எந்தன் நெஞ்சில்
ஏற்றி வைத்தேன் - பொங்கும்
அன்பி னாலே உன்னை தினம்
போற்றி வைத்தேன்

நீ ஒன்றே ஆதாரம்
கண்டு கொண்டேன் - உன்
நினைவை எந்தன் ஆகாரம்
ஆக்கிக் கொண்டேன்

முழுமதி போல் முகத் தழகி
வர வேணும் - வந்து
இருள் நீக்கி ஒளி யமுதம்
தர வேணும்

கா தணிகள் அசைந் தாட
வர வேணும் - வந்துன்
கடைக் கண்ணின் பார்வை கொஞ்சம்
தர வேணும்

வளை குலுங்க வஞ்சி இங்கு
வர வேணும் - வந்து
வளைக்கும் வினை களைந்து அருள்
தர வேணும்

காற் சதங்கை கிணு கிணுக்க
வர வேணும் - கண்ணில்
நீர் பெருக நிறைந்த அன்பு
தர வேணும்


--கவிநயா

Tuesday, August 24, 2010

நீ இருந்தால் போதும்!



அம்மா உன்னை நினைத்தாலே
ஆறுதலாய் இருக்குதடி
சும்மா உன்பேர் சொன்னாலும்
சுமையெல்லாம் இறங்குதடி

கற்பனையில் கண்டாலும்
கனிந்துமனம் மலருதடி
பொற்பதங்கள் பணிந்தபின்னே
பாரமெல்லாம் கரையுதடி

செய்யும்செயல் பலனெல்லாம்
உன்னிடத்தில் தந்துவிட்டேன்
உய்யும்உடல் உயிர்பொருளை
உனதென்று அளித்துவிட்டேன்

உனக்கென்று தருவதற்கு
வேறெதுவும் இல்லையடி
எனக்கென்று இன்றும்என்றும்
நீஇருந்தால் போதுமடி!


--கவிநயா

Monday, August 16, 2010

சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே!



சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
முந்தைவினை ஓய அபிராமியே

(சிந்தையில்)

பரிபுரை பனிமொழி திரிபுரை தீங்கனி
எரிபுரை மேனியற்கு ஒருபுறம் அருள்சகி

(சிந்தையில்)

புவனங்கள் யாவையும் பூத்திட்ட பயிரவி
சலனங்கள் தீர்த்தெம்மை காத்திடும் சாம்பவி
ஜகமெல்லாம் நகக்கண்ணில் அடக்கிய மாலினி
உளமெல்லாம் புளகிக்க பணிந்திட்டோம் வாழிநீ

(சிந்தையில்)


--கவிநயா

Wednesday, August 11, 2010

மலயத்துவசன் மகள்

அனைவருக்கும் ஆடிப் பூரத் திருநாள் வாழ்த்துகள்!



பார்க்கும் திசையி லெல்லாம் பைங்கிளி உன்முகமே
கேட்கும் ஒலியிலெல்லாம் கோகிலம் உன்பெயரே
காக்கும் கரங்களெல்லாம் மரகத வளைக்கரமே
மீட்கும் கடலினின்றும் மீனாள்உன் கடைவிழியே!

காஞ்சன மாலைக்கென கனியமுதாய் உதித்தாய்
மாமதுரை மன்னன் மடியினிலே சிரித்தாய்
சேயெனவே வந்து சுவர்க்கசுகம் தந்தாய்
வையகம் போற்றிடவே ஆயகலை களில்தேர்ந்தாய்!

வீரத்தின் விளைநிலமே வேதங்களின் மறைபொருளே
நான்மாடக் கூடல்தன்னில் நலம்பல அருள்பவளே
திக்விஜயம் செய்து திசையெல்லாம் வென்றவளே
சுந்தரனைக் கண்டபின்னே சொக்கியங்கே நின்றவளே!

மதுரைநகர் ஆளவந்த மீனாக்ஷிதேவி போற்றி!
மாந்தர்தமைக் காக்கவந்த மங்கையர்க்கரசி போற்றி!
பச்சைக்கிளி ஏந்துகின்ற பசுங்கிளியின் தாள்கள் போற்றி!
பொற்றாமரைப் பூவேயுன்றன் பொற்பதங்கள் போற்றிபோற்றி!!


--கவிநயா

Thursday, August 5, 2010

அம்மன் பாட்டு 200! வருக! அவள் அருள் பெறுக!



அம்மா.


அன்பின் திருவுருவம். கருணையின் முழுவடிவம்.
அன்போடு எப்போது அழைத்தாலும் அவள் நிச்சயம் வருவாள்.
அதுவும் ஆடி மாதம் அழைத்தால்! உடனடியாக ஓடோடியும் வந்து விடுவாள்! இந்த சிறப்புப் பதிவிற்காக அவளை ஆடி வெள்ளியில் அழைப்பது இன்னும் சிறப்பல்லவா!

அவளுக்கு எல்லாமே பிடிக்கும்…
நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், முந்திரி மின்னும் வெண் பொங்கல், காரசாரமான புளியோதரை, பால்வெள்ளை தயிரமுது, விதவிதமான பாயசங்கள், சுவைமிகுந்த சுண்டல்கள்,… இவை மட்டுமின்றி, ஏழைக்கேற்ற கூழும், அச்சு வெல்லப் பானகமும் கூட அவளுக்கு பிடிக்கும்.

அவளுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை; எவ்வளவு அன்போடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

இதோ, இந்த அம்மன் பாடல்கள் வலைப்பூவில் இன்றோடு 200 பூக்கள் பூத்து விட்டன. என்றும் வாடாத பக்திப் பாடல் பூக்கள்.
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வடிவம்; ஒவ்வொரு நிறம்; ஒவ்வொரு மணம். அவள் ஒருவளே வித விதமான தோற்றங்களில் அருள் பாலிப்பதைப் போல.

ஆனால் எல்லாப் பூக்களையுமே அன்பென்ற நாரால்தான் தொடுத்திருக்கிறது. இப்போதும், எத்தனை பூக்கள் தொடுத்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு அன்போடு தொடுத்தோம் என்பதே முக்கியம், என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.



இந்த 200-வது சிறப்புப் பதிவிற்கென, அவளுக்காக ஒரே மாலையை அம்மன் பாடல் குழுவினர் அனைவரும் சேர்ந்து தொடுத்திருக்கிறோம்.

அதாவது, இங்கே தருகின்ற பாடலை இரண்டிரண்டு பத்திகளாக, VSK என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சங்கர் குமார் அண்ணாவும், மாதவிப் பந்தல் கேயாரெஸும், கூடல் குமரனும், மற்றும் கவிநயாவாகிய நானும், எழுதி இருக்கிறோம். யார் யார் எந்த எந்த பத்திகள் எழுதினோம் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம் :)

நம்முடைய ஆஸ்தானப் பாடகி மீனா சங்கரன் அவர்கள் மனமுவந்து பாடித் தந்திருக்கிறார்.

இந்த நல்ல நாளில், அன்னையின் மீதான அன்பும் பக்தியும் அவள் பிள்ளைகளுக்கு பல்கிப் பெருகவும், அவள் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தைகளாக அவர்கள் இருக்கவும், அவளை மனமுருகப் பிரார்த்திக்கிறோம்.





நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே!.....(1)

கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே!.....(2)

பம்பை யொலித்திட சங்கம் முழங்கிட தண்டை குலுங்கிட வருபவளே!
உம்பர்கள் நாடிட உலகமே தேடிட எங்குமிலா தோடி மறைபவளே!
வம்பர்கள் வாடிட அன்பர்கள் ஆடிட ஆனந்த தரிசனம் தருபவளே!
அம்பரம் நடுவினில் பம்பரமாய் நின்று எங்களை யென்றும் காப்பவளே!.....(3)

சங்கரன் பாதியில் தங்கமாய்க் கலந்து கங்கையைக் கூடவே அணைத்தவளே!
சங்கரன் சுதனை மங்கலமாய்த் தந்து அடியவர் வினைகளைக் களைந்தவளே!
சங்கரன் புதல்வனாம் சண்முக நாதனைச் சரவணப் பொய்கையில் சேர்த்தவளே!
சங்கரன் குமரன் சந்ததம் கும்பிடும் அம்பிகையே எமைக் காப்பவளே!.....(4)

மங்கலம் பொங்கிடும் செங்கலசம் என எங்குமே இன்பமே அருள்பவளே
மங்கலக் கமலச் செல்வியாய் மாலவன் மார்பினில் பொலிந்திடும் திருமகளே
செங்கையில் நூலினை ஏந்தியே வேதங்கள் சீர்பெற யாழினில் இசைப்பவளே
மங்கையே நான்முகன் நாவினில் நிலைத்திடும் நாமகளே எமைக் காப்பவளே!.....(5)

இடமென வலமென இருபுறம் இறைவனை என்றுமே இருத்திடும் இளையவளே
இடமென அவனது மேனியில் அமர்ந்து இமையவர் போற்றிட இசைந்தவளே
படர்பொருள் யாவுமாய் பரிதியில் தோன்றி பார்மிசை ஒளியென விளைந்தவளே
உடல்மிசை உயிரென கரங்தெங்கும் பரந்துமே உலகையும் எம்மையும் காப்பவளே!....(6)

அயிகிரி நந்தினி, அகிலம் மகிழ்ந்து இனி, அடியவர்க்கு இனிமை சேர்ப்பவளே!
கிரிவர விந்திய, மலை தனில் வாசினி, வெற்றியின் முரசை ஆர்ப்பவளே!
பகவதி, போது மணிச் சடை நாயகி, மகிஷ மனம் தனில் வேர்ப்பவளே!
வெற்றி உனக்கென, வெற்றி உனக்கென, வேல்தரும் அன்னையே! காப்பவளே!....(7)

மாதொரு பாகனின், பாதி மதி நதி, பாயும் முகம் தனைக் கொண்டவளே!
தீதொரு பாகனாம், எந்தன் பிழை களை, வீயும் அகம் தனைக் கொண்டவளே!
கோகில வாணி, குழல் மொழி பாணி, நூபுரத்தில் மறை நூற்பவளே!
தந்திடு திருவடி, தந்திடு திருவடி, தாயவளே என்னைக் காப்பவளே!.....(8)

காப்பவளே! கதி சேர்ப்பவளே! விதி மாய்ப்பவளே! பதி வாய்ப்பவளே!
தீர்ப்பவளே! துயர் தீர்ப்பவளே! அகம் ஆர்ப்பவளே! முகம் பார்ப்பவளே!
நோற்பவளே! நுதல் வேர்ப்பவளே! சீர் சேர்ப்பவளே! சேய் மீட்பவளே!
ஏற்பவளே! எனை ஏற்பவளே! என் தாயவளே! என் தாய் இவளே!.....(9)

இத்துடன் சங்கர, குமரனும், மீனாள்,
இராகவ சேகரன் இயம்பித் துதித்திடு
இமைய வரம்பியின் இருநூறாம் துதி
அம்மன் பாட்டில் அமைந்தேலோ ரெம்பாவாய்!

***
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!

Thursday, July 22, 2010

ஆடி வெள்ளி 1: இது பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??

அம்மன் பாட்டு-ன்னாலே, அதுவும் ஆத்தா, மகமாயீ-ன்னு ஹை பிட்ச் பாட்டெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களுக்கே சொந்தம்!
மென்மையா, மெலடி பாடும் இசையரசி பி.சுசீலா போன்றவர்கள், இது போல மாரியம்மன் பாட்டு எல்லாம் பாடினா எடுபடுமா?
கீழே பாடுறது ஈஸ்வரியா? சுசீலாம்மா-வான்னு, கேட்டுட்டு சொல்லுங்க பார்ப்போம்!


இன்று முதல் ஆடி வெள்ளி! ஆடி முதல் வெள்ளி!
அம்மன் பாட்டு அடுத்த இடுகையில் 200-ஐத் தொட்டுவிடும்!
கவிநயா அக்கா - எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க!

ஆன்மீக குழு வலைப்பூக்களில், 200-ஐத் தொட்ட முதல் வலைப்பூ, அவள் பாட்டு தான்! அம்மன் பாட்டு தான்!
ஆடிக் கொண்டாட்டங்களில் ஆடிக்கிட்டே கலந்துக்குங்க!

இதோ, பி.சுசீலா-வா? எல்.ஆர்.ஈஸ்வரியா??



ஆயி மகமாயி...ஆயிரம் கண்ணுடையாள்...
நீலி திரிசூலி...நீங்காத பொட்டுடையாள்...
சமய புரத்தாளே...சாம்பிராணி வாசகியே...
சமயபுரத்தை விட்டுச் சடுதியில வாருமம்மா..


மாயி மகமாயி மணி மந்திர சேகரியே! - எங்க
ஆயி உமையானவளே ஆத்தா என் மாரிமுத்தே!
(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா சிவகங்கைச் சாலையிலே!
பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சன்னிதியில்!
உடுக்கை பிறந்ததம்மா உருத்ராட்ச பூமியிலே!
பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்!
(மாயி)

பரிகாசம் செய்தவரை, பதைபதைக்க வெட்டிடுவே!
பரிகாரம் கேட்டு விட்டா, பக்கத்துணை நீ இருப்பே!
மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை
நீபார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்!

(மாயி)

குழந்தை வருந்துவது கோயிலுக்குக் கேட்கலையோ?
மைந்தன் வருந்துவது மாளிகைக்குக் கேட்கலையோ?
ஏழைக் குழந்தையம்மா எடுத்தார்க்குப் பாலனம்மா!
உன் தாளைப் பணிந்து விட்டால் தயவுடனே காருமம்மா!

கத்தி போல் வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவராம்!
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்!
வேப்பிலையின் உள்ளிருக்கும்
விந்தைதனை யார் அறிவார்!


ஆயா மனமிரங்கு! - என்
ஆத்தா மனமிரங்கு!
அன்னையே நீ இரங்கு! - என்
அம்மையே நீ இறங்கு!!

குரல்: பி.சுசீலா
படம்: ஆதி பராசக்தி
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
(மாரியம்மன் தாலாட்டு என்ற நாட்டுப்புறப் பெரும்பாடலை ஒட்டி திரைப்படத்துக்காக எழுதியது)

சமயபுரம் மாரியம்மன்

பாட்டைக் கொஞ்சம் கவனிச்சா, இன்னும் சுவை தெரியும்!
வடமொழிச் சொற்களுக்கு எல்லாம் கூட நாட்டுப்புறத்தில் அழகாத் தமிழாக்கி வச்சிருக்காங்க நம்ம கிராமத்து மக்கள்! நகரத்து மக்கள் தான் நந்தமிழை ஒரு வழி பண்ணி இருக்காக போல! :)
நீங்காத பொட்டுடையாள் = நித்ய சுமங்கலி!
காப்பாத்து என்பதைக் காரும் அம்மா என்று நாட்டுத் திரிபு!

அன்னையே நீ இ"ர"ங்கு! அம்மையே நீ இ"ற"ங்கு என்று எழுதுகிறார் கண்ணதாசன்!
அன்னை மனம் இ"ர"ங்க வேணுமாம்! = அதனால் இடையின "ர"!
அம்மை (நோய்) இ"ற"ங்க வேணுமாம்! ஆணை! = அதனால் வல்லின "ற"!

அன்னை இரங்கு! அம்மை இறங்கு!
அன்னை-அம்மை/இரங்கு-இறங்கு-ன்னு சினிமாத் தமிழிலும் விளையாட வல்ல ஒரு அரசர், அது நம் கவி அரசரே!

படத்தில் வெள்ளைக்கார துரை என்ன தப்பு செஞ்சாரு? யாரு அவரு? இது சமயபுரத்து தல வரலாறா என்பதைச் சினிமா பார்த்த மக்கள், கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க! :)

ஆடிப் பதிவுகள் தொடரும்...அடுத்து 200!

Friday, July 16, 2010

அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5 (நிறைவு)

உபசாரம் - பாகம் 5
(முன்பு மெளலி அண்ணாவின் செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)
முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!
நான்காம் பகுதி இங்கே!


பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.

Annaikku_64_Upacha...


41. சாமரம்

சரதிந்து மரீசி கெளர வர்ணைர்
மணிமுத்து விலஸத் ஸுவர்ண தண்டை: !
ஜகதம்ப விசித்ர சாமரை ஸ்த்வம்
அஹமா நந்த பரேண விஜயாமி !!

சந்திரன் போன்ற வெண்மை நிறங்கொண்டதும், மணிமுத்துக்கள் விளங்கும் பொன் தண்டமுள்ளதுமாகிய அற்புத சாமரங்களை உமக்கு ஆனந்தத்தோடு அளிக்கிறேன்.

சந்திரனின் கதிரெடுத்து இந்திரவில் லாய்வளைத்து
மயிற்பீலி தனையெடுத்து கருத்துடனே கோர்த்துவிட்டு
தங்கத்தில் பிடியமைத்து செய்துவைத்த சாமரத்தால்
தென்காற்றாய் வீசிவிட தேவதையே மகிழ்ந்திடுவாய்! (41)

42. கண்ணாடி

மார்த்தாண்ட மண்டலநிபோ ஜகதம்ப யோயம்
பக்த்யா மயாமணிமயோ முகிரோர் பிதஸ்தே !
பூர்ணேந்து பிம்ப ருசிரம் வதனம் ஸ்வகீபமஸ்மின்

விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!

சஞ்சலமான கண்கள் உடையவளே! நான், உனக்கு சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த கண்ணாடியைத் தருகிறேன். நீ, உன்னுடைய சந்திரன் போன்ற முகத்தை அதில் பார்ப்பாயாக.

பூப்போல திருமுகத்தில் பொன்போன்ற புன்னகையாம்
தேன்போல மொழியழகாம் தென்றல்போல் நடையழகாம்
அகிலத்தின் அழகெல்லாம் உன்னிடத்தில் ஒளிர்ந்திருக்க
கதிரவன்போல் கண்ணாடியில் கமலமுகம் பார்த்தருள்வாய்! (42)

43. நீராஜனம்

இந்த்ராதயோ நதிநதைர் மகுடப்ரதீயை
நீராஜயந்தி ஸததம் தவபாத பீடம் !
தஸ்மாதஹம்தவ ஸமஸ்த சரீர மேதந்
நீராஜயாமி ஜகதம்ப ஸஹஸ்ர தீபை: !!

இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் போது, தங்களுடைய கிரீடமென்னும் தீபங்களால் உமக்கு நீராஜனம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு ஆயிரம் தீபங்களால் நீராஜனம் செய்கிறேனம்மா.

பட்டாடை சிவந்திருக்க பட்டுப்போல் தழுவிநிற்க
சிற்றாடைப் பெண்ணைபோல் சிரித்துநீயும் மகிழ்ந்திருக்க
எடுப்பான உன்தோற்றம் எழிலாகத் தெரிந்திடவே
அடுக்கடுக்காய் காட்டுகின்றோம் ஆயிரமாம் தீபங்கள்! (43)

44. குதிரைகள்

ப்ரியகதி ரதிதுங்கோ ரத்ன பல்யாண யுக்த
கனகமய விபூஷ ஸ்திக்த கம்பீர கோஷ: !
பகவதி கலிதோயம் வாஹனார்த்தம் மயாதே
துரக சத ஸமேத: வாயு வேகஸ் துரங்க: !!

ரத்ன சேணமும், பொன் ஆபரணங்களும் பூட்டி, கம்பீரமாய் கனைக்கின்ற, வாயுவேகமாகச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான குதிரைகளை உமக்கு வாகனமாக கல்பித்து அளிக்கிறேன்.

45. யானை

மதுகர வ்ருத கும்பந்யஸ்த ஸிந்தூர ரேணு:
கனக கலித கண்டா கிங்கிணீசோபி கண்ட: !
ச்ரவண யுகள சஞ்சக் சாமரோ மேகதுல்ய:
ஜனனி தவமுதேஸ்யான் மத்தமாதங்க ஏஷ !!

வண்டுகள் சூழ்ந்த மத்தகத்தில், சிந்தூரத் துளிகள் உள்ள, மேகம் போன்ற மதயானையை உமது பிரியத்துக்காக உம்மிடம் அளிக்கிறேன்.
46. ரதம்

த்ருததர துரகைர் விராஜமாநம்
மணிமய சக்ர சதுஷ்டயேன யுக்தம் !
கனகமய மும்விதான வந்தம்
பகவதி தே ஹிதரம் ஸமர்ப்பயாமி !!

வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

குதிரை, யானை மற்றும் ரதங்கள் ஆகிய மூன்று உபசாரங்களுக்கான தமிழ் பாடல் கீழே!

ஆபரணங்கள் அலங்கரிக்கும் சேணமிட்ட குதிரைகளும் (44)
கருமேக நிறங்கொண்ட கம்பீர யானைகளும் (45)
காற்றைப்போல் புரவிகளைப் பூட்டிவிட்ட இரதங்களும் (46)
களிப்புடனே தருகின்றோம் கருணையுடன் ஏற்றருள்வாய்!

47. சதுரங்க சேனைகள்

ஹயகஜ ரதபத்தி சோப மானம்
திசிதிசி துந்துபி மேகநாத யுக்தம் !
அதிபஹு சதுரங்க ஸைன்ய மேதம்
பகவதி பக்தி பரேண தேர்ப்பயாமி !!

ரத, கஜ, துரக, பதாதிகளுடன், ஒவ்வொரு திக்கிலும் துந்துபி நாதம் முழங்க, நால்வகைப் படைகளையும் மிகுந்த பக்தியுடன் உமக்கு அளிக்கிறேன்.

48. கோட்டை

பரிகீ க்ருத ஸப்த ஸாகரம்
பஹுஸம்பத் ஸஹிதம் மயாம்பதே விபுலம் !
ப்ரபலம் தரணி தலாபிதம்
த்ருடதுர்க்கம் நிகிலம் ஸமர்ப்பயாமி !!

ஏழுகடல்களால் எழிலாய் சூழப்பட்டதும், மிகுந்த செல்வம் கொண்டதும், பரந்த பரப்பளவுள்ளதுமான பூமி என்னும் பெயருள்ள கோட்டையை உமக்கு அளிக்கிறேன்.
சதுரங்க சேனை, கோட்டை ஆகியவற்றுக்கான தமிழ் பாடல் கீழே!

சர்வலோக அரசியுனக்கு சதுரங்க சேனைகளும் (47)
கடல்சூழ்ந்த புவியிதுவும் புவிதாங்கும் செல்வங்களும்
கோட்டையென உன்குடைக்கீழ் நீயாள வேண்டுமென
பதம்பணிந்து கேட்கின்றோம் பரமேசீ கொண்டருள்வாய்! (48)

49. விசிறி

சதபத்ர யுதை: ஸ்வபாவ சிதை
அது ஸெரளப்ய யுதை: யராக: பீதை: !
ப்ரமரீ முகரீ கிருதை ரநந்தை:
வ்யஜனை ஸ்த்வாம் ஜகதம்ப விஜயாமி !!

குளிர்ச்சியுடையதும், நறுமணமுள்ளதும், புஷ்ப தூளிகளால் சிவந்ததும், வண்டுகள் ரீங்காரமிடுவதுமான விசிறியால் உங்களுக்கு வீசுகிறேன்.

50. நாட்டியம்

ப்ரமர லுலித லோல குந்தலாலீ
விகளித மால்ய விகீர்ண ரங்கபூமீ: !
இயமதி ருசிராநடீ நடந்தீ
தவஹ்ருதயே முதமாதநோது மாத: !!

வண்டுகள் மொய்ப்பதால் சஞ்சலமான குந்தளத்திலிருந்து விழுந்த புஷ்பங்கள் இறைந்து கிடக்கும் இடமே நாட்ய பூமி, அங்கு நடனமிடும் நடீ உனக்கு சந்தோஷம் அளிக்கட்டும்.

குளுமைதரும் மலர்களுடன் மணம்பரப்பும் விசிறிகொண்டு
பூந்தென்றல் போலமெல்ல வீசிடநீ மகிழ்ந்திடுவாய்! (49)
வாயுவேகம் விஞ்சுகின்ற எழில்வண்ணக் கொடிகளுடன்
இரத்தினப் பதாகைகளும் தந்திடநீ ஏற்றருள்வாய்!



திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.

Annaikku_64_Upacha...


Annaikku_64_Upacha...

51. நடனம்

முகநயன விலாஸ லோல வேணீ
விவஸித நிர்ஜித லோல ப்ருங்கமாலா !
யுவஜன ஸுககாரி சாருலீலா:
பகவதி தே புரதோ நடந்தி பாலா:

முகம், கண் இவைகளின் அபிநயத்தால் அசைகின்ற வேணியின் விலாசம், வரிசையாகச் சுற்றிவடும் வண்டுகள் வரிசையை விட அழகான இருக்கிறது. நடனக் கலையில் சிறந்த மங்கையர் உம்முன் நடனமாடுவதை சமர்ப்பிக்கிறேன்.

ப்ரம தளிகுல துல்யா லோலதம் மில்ல பாரா:
ஸ்மிதமுக கமலோத்யத் திவ்ய லாவண்ய பூரா: !
அநுபமித ஸுவேஷா வாரயோஷா நடந்தி
பரப்ருத கலகண்ட்யா: தேவிதைன்யம் துநோது: !!

அழகானவர்களும், ஒப்பற்ற வேடம் பூண்டவர்களும், குயில் போன்ற குரலினிமை கொண்டவர்களுடைய நடனம் ஏழ்மையை அகற்றட்டும்.

52. வாத்யம்

டமரு டிண்டிம ஜர்ஜர ஜல்லரீ
ம்ருதுரவத்ர கடத்ர கடாதய: !
ஜடிதி ஜாங்க்ருத ஜரங்க்ருதை:
பஹுதயம் ஹ்ருதயம் ஸுகபந்துமே!!

டமரு, டிண்டிம, ஜாஜ்ர ஜல்லரீ, த்ரகடம் ஆகிய வாத்யங்களின் சப்தம் மனதைச் சுகப்படுத்தட்டும்.
நாட்டியம், நடனம், மற்றும் வாத்யங்களுக்கான உபசார பாடல் கீழே!

நவரசமும் காட்டியுன்னை போற்றுகின்ற நாட்டியமும் (51)
ஜதிகள்சேர்த்து துரிதகதியில் ஆடுகின்ற நடனங்களும் (52)
டமரு,டிண்டிம, கச்சபிகள் முழங்குகின்ற பேரொலியும் (53)
அத்தனையும் உனக்காக, ஆனந்தமாய் மகிழ்ந்திடுவாய்!

53. கானம்

விபஞ்சீஷு ஸப்தஸ்வரான் வாத யந்த்ய:
தவத்வாரி காயந்தி கந்தர்வ கன்யா: !
க்ஷணம் ஸாவ தானேன சித்தேன மாத:
ஸமா கர்ணய த்வம் மயா ப்ரார்த்திதாஸி: !!

கந்தர்வ கன்னியர்கள் வீணையில் கானம் செய்கின்றனர். அந்த இசை இனிமையை நானும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

54. நர்த்தன அபிநயம்

அபிநய கமநீயைர் நர்த்தனைர் நர்த்தகீனாம்
க்ஷணமபி ரமயித்வா சேத ஏதத் த்வதீயம் !
ஸ்வய மஹதி சித்ரை: ந்ருத்த வாதித்ர கீதை:
பகவதி பவதீயம் மானஸம் ரஞ்ஜயாமி !!

நடன மாதர்கள் அழகான அபிநயத்தால் உங்களை மகிழ்விப்பது போல நானும் ந்ருத்த வாத்யங்களால் உங்களை மகிழ்விக்கிறேன்.

கந்தர்வர் இசைக்கின்ற இனிமையான கானங்களும் (54)
கங்காதரன்விளை யாடல்களை அபிநயிக்கும் நர்த்தனங்களும்
கொன்றைமலர் சூடுவோனின் இடமிருக்கும் கொற்றவையே
கடம்பவனப் பேரழகீ, கண்டுநீயும் களித்திடுவாய்!


55. ஸ்துதி

தவ தேவி குணானு வர்ணனே
சதுரா நோ சதுரான நாதய: !
ததிவஹை க முகோஷு ஜந்துஷு
ஸ்தவநம் கஸ்தவ கர்துமீ ச்வர: !!

நான்முகன் முதலான தேவர்களாலேயே உமது குணத்தை வர்ணிக்க முடியாதெனில், என் போன்ற ஒரு முகம் கொண்ட மனிதர்களால் எப்படி வர்ணிக்க இயலும்?

56. ப்ரதக்ஷிணம்

பதேபதேயத் பரிபுஜ கேப்ய:
ஸத்யோச்வ மேதாதி பலம் ததாதி !
தத்ஸர்வ பாப க்ஷயயேது பூதம்
ப்ரதக்ஷிணம் தே பரிதள் கரோமி !!
பிரதக்ஷிணம் செய்பவர்களது ஒவ்வொரு அடியிலும் 'அச்வ மேதப் பலம்' கிடைக்கும். எனவே பாபங்கள் தீரும் வகையில் நாற்புறமும் பிரதக்ஷிணம் செய்கிறேன்.

பிரம்மன்,விஷ்ணு, சிவனென்ற மூன்றுதிருமூர்த்திகளும்
அடிபணியும் அன்னையுன்னை அன்புடனே வணங்குகின்றோம்! (55)
எண்ணுகின்ற மனதாலும் சொல்லுகின்ற வாக்காலும்
செய்யுகின்ற செயலாலும் உன்னைவலம் வருகின்றோம்! (56)


57. நமஸ்காரம்

ரக்தோத்பலா ரக்தலதா ப்ரபாப்யாம்
த்வஜோர்த்வா லேகா குலிசாங்கிதாப்யாம் !
அசேஷ ப்ருந்தாரக வந்திதாப்யாம்
நமோ பவாநீ பதபங்கஜாப்யாம் !!

தேவர்களால் வணங்கப்படுகிற செந்தாமரை போன்ற பவாநியே உன் பாதகமலங்களில் நமஸ்கரிக்கிறேன்.

சின்னமணி நூபுரங்கள் செல்லமாக கிணுகிணுக்க
வண்ணமணி ரத்தினங்கள் வரிசையாக மினுமினுக்க
சிற்சபையில் சிலம்பொலிக்க சிவனுடனே நடனமிடும்
செந்தாமரைப் பாதங்கள் சிரம்தாழ்ந்து வணங்குகின்றோம்! (57)


58. புஷ்பாஞ்சலி

சரண நளினயுக்மம் பங்கஜை: பூஜயித்வா
கனக கமலாமாலாம் கண்ட தேசேர் பயித்வா !
சிரஸி விநிஹி தோயம் ரத்ன புஷ்பாஞ்சலிஸ்தே
ஹ்ருதய கமலமத்யே தேவி ஹர்ஷம் தநோது !!


கமலத்தால் பூஜித்து, கமலத்தை அணிவித்து, உன்னுடைய முடிமேல் நான் வைக்கும் ரத்ன புஷ்பாஞ்சலி, என்னுடைய இதயத்தில் சந்தோஷத்தை அளிக்கட்டும்.
பலநிறத்தில் மலர்பறித்து பிரியமாக சேகரித்து
சுகமளிக்கும் மலர்பறித்து வாசனையாய் சேகரித்து
முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் தொழும்தேவி
எங்களுக்கும் அருளவேண்டி அஞ்சலிகள் செய்யுகின்றோம்! (58)

59. அந்தப்புரம்


அதமணிமய மஞ்சகா பிராமே
கனகமய விதான ராஜமானே !
ப்ரஸதகரு தூபிதேஸ் மின்
பகவதி பவநேஸ்து தே நிவாஸ: !!

மணிமயமாஅன மஞ்சம்; அழகான விதானம்; அகரு, தூபம் புகை; இவையிருக்கும் அந்தப்புரம் வாருங்கள்.

வானளாவும் மாடங்கள் தாமரைத்த டாகங்கள்
துள்ளியோடும் புள்ளிமான்கள் கொஞ்சிக்கூவும் இளங்கிளிகள்
அழகழகாய் பலமணிகள் இரத்தினங்கள் இழைத்திருக்கும்
எழில்அந்தப் புரத்திற்கு வசங்கரியே எழுந்தருள்வாய்! (60)


60. கட்டில்

ஏதஸ்மின் மணிகசிதே ஸுவர்ண பீடே
த்ரைலோக்யா பயவரதெள நிதாய ஹஸ்தெள!
விஸ்தீர்ணே ம்ருதுலத ரோத்தரச் சதேஸ்மின்
பர்ங்கே கனகமயே நிஷீத மாத: !!

மூவுலகுக்கும் வரமளிப்பவளே!, விசாலமான, மேல்விரிப்புள்ள ரத்னக் கட்டிலில் வந்து அமருங்கள்.
வெண்தந்தம் இழைத்துவைத்து இரத்தினங்கள் பதித்துவைத்து
பட்டுமெத்தை விரித்துவைத்தவி சாலமான கட்டிலிலே
பெண்நிலவே பேரெழிலே சிரமபரி காரம்செய்து
கண்ணயர்ந்து ஓய்வெடுக்க கண்மணியே வந்தருள்வாய்! (60)


61. நலங்கு

தவதேவி ஸ்ரோஜ சின்னயோ:
பதயோர் நிர்ஜித பத்மராகயோ: !
அதிரக்த தரை ரலக்தை:
புனருக்தாம் ரசயாமி ரக்ததாம். !!

தாமரை அடையாளமுள்ளதும், பத்மராகம் போன்றதுமான உமது சிவந்த திருவடிகளுக்கு செம்பஞ்சுக் குழம்பினால் நலங்கிட்டு, மேலும் செம்மையாக்குகிறேன்.
செங்கமலங் களும்வணங்கும் மென்பிஞ்சுப் பதங்களுக்கு
செம்பஞ்சுக் குழம்பெடுத்து செஞ்சித்திர மாய்தீட்டி
பூந்தளிர்போல் பதங்களுக்கு பூப்போல எழில்கூட்டி
பூவைக்கு நலுங்கிடவே பூமகளே நீமகிழ்வாய்! (61)

62. வாய் கொப்புளித்தல்
அதமாத ருசீர வாஸிதம்
நிஜதாம்பூல ரஸேன ரஞ்சிதம் !
தபநீய மயேஹி பட்டகே
முககண்டூஷ ஜலம் விதியதாம் !!

வெட்டிவேர் வாசனையுடன், உமது தாம்பூல ரசத்தால் சிவந்து போன வாயிலுள்ள நீரை, இந்த பொற்கிண்ணத்தில் கொப்பளியுங்கள்.

63. சயனம்

க்ஷணமத ஜகதம்ப மஞ்சகேஸ்மின்
ம்ருதுதர தூலிகயா விராஜமானே !
அதிரஹஸி முதா சிவேன ஸார்த்தம்
ஸுகசயனம் குருதத்ர மாம் ஸ்மரந்தீ !!

மிக மென்மையான மெத்தையுடன் கூடிய கட்டிலில் சிவனாருடன் மகிழ்வுடன் படுத்துக் கொள்வீர்களாக.


வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு (63)
கட்டியமண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்
எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர
கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா! (64)


64. த்யானம்
முக்தா குந்தேந்து கெளராம் மணிமய
மகுடரம் ரத்ன தாடங்க யுக்தாம்
அக்ஷஸ்ரக் புஷ்ப ஹஸ்தாம் அபய வரகராம்
சந்த்ர சூடாம் தரிணேத்ராம் !
நானாலங்கார யுக்தாம் ஸுரமகுட
மணித்யோதித ஸவர்ண பீடாம்
ஸானந்தம் ஸுப்ரஸன்னாம் த்ரிபுவன
ஜனனீம் ஸேதஸா சிந்தயாமி !!

முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும், மணிக்கீரீடமுள்ளவளும், ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும், ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும், அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும், சந்திரனைத் தலையில் சூடியவளும், மூன்று கண்களை உடையவளும், அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும், ஆனந்தமானவளும், மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!, நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன்.

க்ஷமை வேண்டல்
ஏஷா பக்த்யா தவ விரசிதா யாமயா தேவிபூஜா
ஸ்விக்ருத்யைநாம் ஸபதி கைலான் மேப்ராதான் க்ஷமஸ்வ !
ந்யூனம் யுத்தத்தவ கருணையா பூர்ண தாமேது ஸத்ய:
ஸானந்தம் மே ஹ்ருதய கமலே தேஸ்து நித்யன் நிவாஸ : !!

தேவி, நான் பக்தியுடன் மானஸீகப் பூஜை செய்கிறேன். அதை ஏற்று, என்னுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்வாயாக. பூஜையில் ஏதேனும் குறையிருக்குமானால். அதை உனது கருணையால் பூர்த்தி செய்வாயாக. நீ எனது ஹ்ருதய கமலத்தில் என்றும் வாசம் செய்ய வேண்டும் தாயே!.

அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்
குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!
அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள்யாம்
தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!

கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!
கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று
கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்! மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!
கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்!

*******************************************************************************
ஸ்ரீ ஜகத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:

*******************************************************************************

எனது வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு உபசாரத்திற்கும் தமிழில் அழகாகப் பாடல்கள் எழுதிக் கொடுத்த சகோதரி கவிநயாவிற்கும், தானாக முன்வந்து பாடல்களைப் பாடிக் கொடுத்த திரு. கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

படித்துப் பின்னூட்டமிட்ட, மற்றும் படித்து மட்டும் சென்ற எல்லோருக்கும் எனது நன்றிகள், மற்றும் வணக்கங்கள்.
அம்பிகை ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரி பரபட்டாரிகா எல்லோருக்கும் அவரவர் மனோ-பீஷ்டங்களை அருள வேண்டிக் கொண்டு, இந்த வலைப் பூவை முடிக்கிறேன்.

சுபமஸ்து !!!