Monday, September 24, 2018

உன்னாலே...



உன்னாலே உன்னாலே எல்லாம் உன்னாலே
எந்நாளும் எந்நாளும் என் நினைவுகள் உன்மேலே
(உன்னாலே)

உந்தன் நினைவால் உள்ளம் உருகி கண்ணீர் பெருகுதம்மா
உன்னை நினையா ஒரு கணங்கூட வீணாய்ப் போகுதம்மா
(உன்னாலே)

சிறுதுளித் துளியாய் எந்தன் அன்பு உனக்காய்ப் பெருகுதம்மா
பெருமழை போலே உந்தன் அன்பு என்னை நனைக்குதம்மா
பண்ணால் உன்னைப் பாடப்பாட தமிழும் மகிழுதம்மா
கண்ணால் எம்மைக் காக்கும் உந்தன் தாள் பணிந்தோமம்மா
(உன்னாலே)


--கவிநயா

Monday, September 17, 2018

தாயே கருமாரி


அம்மா தாயே கருமாரி
அருள் புரிவாயே மகமாயி
உன்னால் தானே அபிராமி
உலகம் இயங்குது அருள்வாமி
(அம்மா)

இருவிழி கருணை கண்டதுமே
முவ்வினை பயந்தே ஓடுதம்மா
கனியிதழ் முறுவல் கண்டதுமே
கன்னித்தமிழ் கானம் பாடுதம்மா
(அம்மா)

சாந்தஸ்வரூபிணி முகம் கண்டால்
சஞ்சலம் எல்லாம் அகலுதம்மா
காந்தம் போலுன் எழில்வடிவம்
கவர்ந்தே என்னை இழுக்குதம்மா
(அம்மா)

காலிற் சிலம்புகள் ஒலித்திடவே
கணவனுடன் நடம் புரிந்திடவே
ஓதிடும் அடியவர் உயர்வுறவே
உடனே வருவாய் உமையவளே
(அம்மா)


--கவிநயா

Tuesday, September 11, 2018

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்


ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்-பராசக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கணபதிராயன் -அவனிரு 
காலைப் பிடித்திடுவோம் ;
குணமுயர்ந்திடவே -விடுதலை 
கூடி மகிழ்ந்திடவே.[ஓம்சக்தி ]

சொல்லுக்கடங்காவே -பராசக்தி 
சூரத்தனங்களெல்லாம் ;
வல்லமை தந்திடுவாள் -பராசக்தி 
வாழியென்றே துதிப்போம் [ஓம்சக்தி]

[பாரதியாரின் நினைவு நாளில் பாரதியாரின் ஆறுதுணை என்ற பாட்டிலிருந்து முதல் பகுதி]

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !

Monday, September 10, 2018

தொழுதேன் உன் பாதம்


தொழுதேன் உன் பாதம் தொழுதேன் அம்மா
அழுதேன் உனைத் தேடி அழுதேன் அம்மா
(தொழுதேன்)

சித்தத்தில் நீ இருந்தால் சுகமாகும், நீ
சித்தம் வைத்தால் அனைத்தும் நலமாகும்
(தொழுதேன்)

வாழ்வினில் பழுதில்லை, நீ தந்தது, எந்தன்
மனதில் பழுதுண்டு நான் கொண்டது
உன்னிடத்தில் அன்பு, நீ தந்தது, உந்தன்
அளவில்லா அருளை நான் என்னென்பது?
(தொழுதேன்)


--கவிநயா


Monday, September 3, 2018

சின்மய ரூபிணி



(மஹிஷாசுர மர்த்தினி விருத்தம்)

சின்மய ரூபிணி ஸ்ரீசக்ர வாசினி சிம்மத்தில் வருபவளே
தண்மலர் போலெந்தன் உள்ளத்தில் குளிர்ந்து துன்பத்தைத் தணிப்பவளே
விண்ணவர் போற்றிட வேதனை தீர்த்திட உதித்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

கருவிழி யிரண்டும் கடலெனக் கருணை பொழிந்திட அருள்பவளே
கருநிறக் கண்டன் சிவனுடன் இணைந்தே காத்திட வருபவளே
ஹரஹர வென்றே அடிதொழும் அன்பர்க்கு ஆதரவளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

ஆனை முகனுடன் அறுமுகன் தன்னையும் தந்திட்ட தாயவளே
ஊனும் உருகிடும் அன்பு நிலை தனைத் தந்திடு தூயவளே
தேனிசை மொழியால் நாயகன் உள்ளத்தைக் கவர்ந்திட்ட தேவியளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

கல்கல்கல்லெனக் காற்சிலம் பொலித்திடத் திருநடம் புரிபவளே
செல்செல்செல்லெனத் துன்பத்தை விரட்டி இன்பத்தைத் தருபவளே
ஓம்ஓம்ஓமென ஓதிடும் அன்பர்க்கு அபயம் அளிப்பவளே
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்திடு துர்க்கையளே

அம்மா என்றுனை அழைத்தால் போதும் அக்கணம் வந்திடுவாய்
சும்மா உன் பெயர் சொன்னால் கூட சுகமதைத் தந்திடுவாய்
ஒரு முறை உன்னை நினைத்தாலும் அதைப் பெரிதென் றேற்றிடுவாய்
சரணென்றுன் பதம் போற்றிப் பணிந்தோம் காத்தெமக் கருளிடுவாய்



--கவிநயா