Friday, June 28, 2013

ஆலயம் என்றால் ஆலயம் - பெரிய பாளையம்!

பெரிய பாளையம் = அன்னையின் "எளிமையான" எல்லை-ஊர்! (ஆந்திரச்-சென்னை எல்லை)
அதன் எளிமை = எங்கள் கிராமத்தை நினைவுபடுத்தும்; உணவகம் கூட இல்லாத ஊர்:)

சின்ன வயசில், அம்மா-க்கு Body Guard போல போவேன்;
அம்மா பொங்கல் வச்சிட்டு வருவாங்க! தங்கச்சி வர மாட்டா; ஒரே படிப்பு:)
சென்னைக்கு மிக அருகில்; மாநகரப் பேருந்துகள் கூட இருக்கு;
செங்குன்றம் (Red Hills) -இல் இருந்து எளிதாகச் சென்று விடலாம்!

அன்னை, பவானி என்ற பேரில் கொலு இருக்கிறாள்!
ரேணுகையும் இவளே!
கண்ணனின் அம்சங்கள் இவளிடம் தென்படுகின்றன; கையில் சங்கு சக்கரங்கள் கூட உண்டு! தீர்த்தமும் தருகிறார்கள்!

கண்ணனைக் கொல்வதாக நினைத்து, பெண்ணைக் கொல்லத் தூக்கி வீசினான் ஒருத்தன்;
அவன் கருத்தைப் பிழைப்பித்துக், கம்சன் வயிற்றில் நெருப்பென்ற நின்ற நெடுமாலே என்பது போல் பறந்தவள் பவானி!

கண்ணன் போல் அவளுக்கு விளையாடக் கொடுத்து வைக்கலியே -ன்னு,
சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா
என்று பாரதியும் கண்ணன் பாட்டின் நடுவில் இவளை வியந்தே எழுதினார்;

இவள் எளிய மக்களின் தெய்வம் = கொற்றவை!
கொற்றம் + அவ்வை
அவ்வா -ன்னா தெலுங்கில் கூட, முதுமகள் -ன்னு பொருள்!

எங்கள் வீட்டில், கன்னியாகவே காதலில் இறந்து போன பாலு (எ) பெண்;

"தாயே பூவாடைக்காரி பாலு, இவனுக்குப் பக்கத் துணை இரும்மா"
-ன்னு ஆயா, அம்மா எல்லாரும் வாய் விட்டுச் சொல்லுவாங்க! எனக்கு என்னமோ போல இருக்கும்; எதுக்கு நம்மை மட்டும் குறிப்பாச் சொல்லுறாங்க-ன்னு;

அந்த முது மகளுக்கு, காதோலை-கருகமணி எல்லாம் சூட்டி, புடைவை சுத்தி, பொங்கல் இடுவது, ரொம்ப நாள் வழக்கம்!
எந்த அம்மன் கோயிலில் பொங்கல் இட்டு, மாவிளக்கு வைச்சாலும், அது "பாலு"வை முன்னிட்டே அம்மா இடுவாங்க;


இன்று பாளையத்தில், அர்ச்சகர்கள்/ தல புராணங்கள் -ன்னு வந்து விட்டன:(
ஆனால், எளிமையான ஒரு வளையல் வியாபாரியால் கண்டெடுக்கப்பட்டு அமைந்தவள் இவள்; இன்றும் வளையல்கள் காணிக்கை உண்டு!

* எங்கள் வாழைப்பந்தல் கிராமத்து பச்சையம்மன்,
படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன்
...பத்தி முன்னமே அம்மன் பாட்டில் எழுதி இருக்கேன்; அதே போல் தான் பெரியபாளையமும்!

பொங்கல் வைக்க அம்மா கூட்டிக்கிட்டுப் போவாங்க!
பானை, விறகு, வறட்டி -ன்னு நாம தான் எடுத்துப் போகணும்; அங்கிட்டு ரொம்ப வசதியில்ல;
அதுவும் திறந்த வெளி; பார்த்துத் தான் நடக்கணும்; பலரும் தங்கிச் சமைத்து விட்டுப் போன நெருப்புக் கங்கெல்லாம் கிடக்கும்!

ஆத்துக்கு அந்தப் பக்கம் சிவன் கோயில் உண்டு; அது இன்னும் வடிவா இருக்கும்!
ஆனா, வடிவில் கொறைச்சலா இருந்தாலும், இவ கோயிலே மனசுக்குப் பிடிச்ச கோயில்! எளியோர் கோயில்!

குலம்-கோத்திரம் புரியாத அர்ச்சனையெல்லாம் எதுவுமில்லாம...
*பொங்கல் வைத்தல்,
*கோழி சுற்றி விடுதல்,
*வேப்பஞ் சேலை
-ன்னு கிராமத்து அன்பை இவ கிட்டத் தான் பாக்க முடியும்!

கடைகள் கூட அதிகம் இருக்காது;
ஆனாலும் அம்மா, நான் துணைக்கு வந்ததற்காக, எனக்குப் பிளாஸ்டிக் ஊதுகோல் (பீப்பி), கமர்கட் எல்லாம் வாங்கித் தருவாங்க:)
அதைப் பேருந்தில் ஊதிக்கிட்டே வந்தா, வீடும் வந்துரும்;
வந்து... இதுக்கெல்லாம் வராம சதா படிச்சிக்கிட்டே இருக்கும் தங்கச்சி முன்னாடி, பீப்பி ஊதி ஊதிக் காட்டுவேன்:))

ஆலயம் என்றால் ஆலயம் - அது தான் பெரிய பாளையம்!




ஆலயம் என்றால் ஆலயம்
அது தான் பெரிய பாளையம்!
காலம் வழங்கும் துன்பத்தையெல்லாம்
கனவாய் மாற்றும் ஆலயம்!
(ஆலயம் என்றால் ஆலயம்)

சாலை வழியே தனியே சென்றால்
தானும் வருவாள் பவானியே!
தாயே சரணம் என்று விழுந்தால்
தன் கை கொடுப்பாள் பவானியே!

காலையில் மஞ்சள் நீரில் முழுகி
காரிகை மார்கள் கூடுகின்றார்
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே
காளியின் பெருமை பாடுகின்றார்

காளி திரிசூலி...
நீலி ஜகன்மாதா...
தேவி பராசக்தி...
ஓங்காரி பவானி...
(ஆலயம் என்றால் ஆலயம்)

தாலியைக் காட்டி வேலியை நினைந்து
தன்னை மறந்தே ஆடுகின்றார்!
தர்மம் என்பதைக் காணாதவர்கள்
சந்நிதி முழுதும் தேடுகின்றார்!

பாளையத்தம்மா இருப்பதை மறந்து
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்!
பட்டப் பகலில் கண்களை இழந்து
பாதையை மாற்றி ஓடுகின்றார்!

தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்!
தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லித்
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்!
(ஆலயம் என்றால் ஆலயம்)

படம்: தேவி தரிசனம்
இயக்குநர்: K.சங்கர்

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்\
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி, MSV

Monday, June 24, 2013

மதி மயக்கம் தீர்த்து விடு!



சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



அம்மா என் மனதை நேராய் ஆக்கு
அன்பாய் உனை அடையும் வழியைக் காட்டு!

தனியே தவிக்கின்றேன் தத்தளித்து நடக்கின்றேன்
கனியே வந்தெனெக்குக் கைகொடுத்தால் ஆகாதோ?
கதியே என்றோடி உன்னிடத்தில் வந்து விட்டேன்
மதியே என்மதிக்கு ஒளிதந்தால் ஆகாதோ?

நாளும் கழியுதடி நானு முன்னைப் பாராமல்
உள்ளம் சோருதடி ஒரு சொல்லும் கேளாமல்
காதில் விழவில்லையோ கன்றின் குரல் கேட்கலையோ
மாதே வந்து விடு மதி மயக்கம் தீர்த்து விடு!


--கவிநயா

Friday, June 21, 2013

"பாவை விளக்கு" - நீயே கதி ஈஸ்வரி

ரொம்ப நாள் கழிச்சி..... அன்னையின் வீட்டுக்கு வந்திருக்கேன், வெள்ளிக்கிழமை அதுவுமா!

"நீயே கதி ஈஸ்வரி"
- என்ற புகழ் பெற்ற பாடல்; (சினிமாப் பாட்டு தான் - இருந்தாலும் மன்னிச்சிக்கோங்க)

இந்தப் பாடலின் youtube காணொளியில், அன்னையின் அருகே உள்ள "பாவை விளக்கு"களைச் சற்றுக் கவனிச்சிப் பாருங்க;
எங்கள் கிராமத்து வீட்டிலும் இவள் உண்டு; மிக மிக அழகு;

ஆனால் "வீட்டுக்கு ஆகாது", கோயிலில் மட்டும் தான் ஏத்தணும்-ன்னு யாரோ ஒரு கோயில் ஐயர் சொல்லக் கேட்டு.. ஏனோ அம்மா ஏற்றுவதில்லை; வீட்டில் குத்து விளக்கு மட்டுமே;
"அவளைக்" கிராமத்திலேயே "அம்போ" -ன்னு விட்டு வந்துட்டோம்:(

"சக்தி" என்ற உலக அன்னை; அவளை மீறி, வெறும் ஒரு பாவை விளக்கா, என்னை ஆகாமல் செய்து விடும்?
பாதி fuse போன electric குத்து விளக்கெல்லாம் வைக்குறாங்க; தப்பில்லை; ஆனா எழிலார் பாவை விளக்கு??:(

இப்பவும் நியுயார்க்கிலிருந்து கிராமத்துக்குப் போகும் போதெல்லாம் (அ) வீட்டில், அம்மா நோன்பு எடுக்கும் போதெல்லாம் (கேதார கெளரி நோன்பு)... இந்தப் பாவை விளக்கை ஏத்தி வைப்பேன்;
பூசையறையில் தானே வைக்கப்படாது?
புழக்கடைக் கிணற்றடியில், பூவாடைக்காரிக் கல்லு ஒன்னு இருக்கும்; அது பக்கத்துல கொண்டு போய் வச்சிருவேன்;

ஒயிலான உருவத்தைப் பளபள-ன்னு துலக்கி,
மஞ்ச பூசி, திருநீறும்-பொட்டும் வச்சி, அவ தலையில் பூ வச்சி,
அவ கையில் விளக்கேத்தினா... = என் முருகனை விட செம அழகா இருப்பா;

என் மனசுக்கு மிகவும் பிடிச்ச பாவை விளக்கு!
= அதை ஏத்தும் போது, நானே அந்தப் பாவை போல் தோனும்;
= தாயே - நான், உன் கண்ணில் "பாவை" அன்றோ?





நீயே கதி ஈஸ்வரி 
சிவ காமி தயா சாகரி - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)

மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே - எனக்கு
(நீயே கதி ஈஸ்வரி)

ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே

ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே

தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ? இது தர்மம் தானோ? - அம்பா
(நீயே கதி ஈஸ்வரி)

படம்: அன்னையின் ஆணை
வரிகள்: மருதகாசி
குரல்: பி. லீலா
இசை: SM சுப்பையா நாயுடு (சிங்கார வேலனே தேவா புகழ்..)


பொதுவா, மணமான பெண்கள், புகுந்த வீட்டுக் குறையெல்லாம், அம்மா கிட்ட சொல்லித் தான் ஏங்குவாங்க!
ஆனா... சில "லூசு" பொண்ணுங்களும் ஒலகத்தில் இருக்குதுங்க; அம்மா கிட்ட கூடச், சொல்லாம மறைச்சிருங்க;

ஏன்-ன்னா....
அவனுக்கு = "இழுக்கு" ஆயீறக் கூடாது!
முருகா, நானும் உன்னைப் பத்தி, அம்மா கிட்ட சொல்லப் போறதில்ல;

ஆனாலும்....

இந்தப் பாவை விளக்காப் பேசுறேன்:
அம்மா, உனக்கு  விளக்கேந்தி நிக்குறேனே?
என் வாழ்வுக்கும், ஒரு விளக்கேத்த மாட்டியா?
சிவ - காமி , தயா சாகரி 
எனக்கு ... நீயே... கதி ஈஸ்வரி!


subbu thaatha has sent his song rendering; link = here

Monday, June 17, 2013

அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை



லிங்காஷ்டகம் மெட்டில் எழுதினேன். சுப்பு தாத்தா முஹாரியில் அருமையாகப் பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!




அயன் அரி தேவரும் வணங்கிடும் அன்னை
அரனுடன் இடப்புறம் இருந்திடும் அன்னை
அன்பர்கள் இதயத்தில் உறைந்திடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஆனை முகத்தனை ஆக்கிய அன்னை
ஆறிரு தோளுடைக் குமரனின் அன்னை
ஆனந்தம் தந்திடும் அழகுடை அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

இமயவன் மகளவள் உமையவள் அன்னை
இமையென அடியரைக் காத்திடும் அன்னை
இம்மையில் மறுமையில் துணை வரும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஈசனின் துணையவள் மனையவள் அன்னை
ஈடெதும் இல்லா இனியவள் அன்னை
ஈரம் மிகுந்தவள் நம்முடை அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

உலகெனும் நாடகம் நடத்திடும் அன்னை
உள்ளத்தில் உவகையை நிறைத்திடும் அன்னை
உயிர்களை உயிரெனக் காத்திடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஊழ்வினை யாவையும் ஓட்டிடும் அன்னை
ஊற்றென அருளினைப் பொழிந்திடும் அன்னை
ஊழியில் நடமிடும் சிவன் சதி அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

எண்ணிலும் எழுத்திலும் இருந்திடும் அன்னை
என்னிலும் உன்னிலும் உறைந்திடும் அன்னை
எண்ணியதும் உடன் அருளிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஏழுலகோருமே போற்றிடும் அன்னை
ஏற்றிடும் அடியவர் இதயத்தில் அன்னை
ஏங்கிடும் பேருக்கு ஆறுதல் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஐந்தொழில் யாவையும் புரிந்திடும் அன்னை
ஐந்திர தேவரும் போற்றிடும் அன்னை
ஐயனின் மடியினில் விளங்கிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஒன்றென பலவென விரிந்திடும் அன்னை
ஒன்றென இரண்டினை ஆக்கிய அன்னை
ஒன்றிய மனதினில் நின்றிடும் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை

ஓதிடும் பொருளினில் உறைந்திடும் அன்னை
ஓடிடும் மனதினை நிறுத்திடும் அன்னை
ஓவிய எழில்மிகு ஒப்பிலா அன்னை
அன்புடன் நான் தினம் பணிந்திடும் அன்னை

ஔடத மென நமக் குதவிடும் அன்னை
ஔவியம் தீர்த்து அருளிடும் அன்னை
ஔதா ரியம்மிக நிறைந்தவள் அன்னை
அன்புடன் நான் தினம் வணங்கிடும் அன்னை


 அருஞ்சொற்பொருள்:

*ஔடதம் – மருந்து
*ஔவியம் – அழுக்காறு
*ஔதாரியம் – பெருந்தன்மை

--கவிநயா

Monday, June 10, 2013

அறிவு கெட்ட மனமே!




சுப்பு தாத்தா அருமையாகப் பாடியதை நீங்களும் கேளுங்கள். மிக்க நன்றி தாத்தா!


அறிவு கெட்ட மனமே!
திரும்பி வா என் னிடமே!
அழகு மலர்ப் பாதம் விட்டு
அலைவ தென்ன தினமே?

மலத்தில் அமரும் ஈயைப் போல
இருப்ப துனக்கு அழகோ?
மலரில் அமரும் தேனீ போல
இருந்தி டுவாய் மனமே!

வலையில் பட்ட மானைப் போல
மிரளுவ தேன் மனமே?
தலையைப் பாதம் வைத்து விட்டால்
மலையும் கூடக் கடுகே!

உணர்வுகளில் சிக்கிக் கொண்டு
உழல்வது மேன் மனமே?
உணர்ந்து அவளைப் பணிந்து விட்டால்
உலக வாழ்வும் சுகமே!

அர்த்தமில்லா எண்ண மெல்லாம்
எண்ணுவ தேன் மனமே?
அவளை மட்டும் நினைத் திருந்தால்
ஆனந்தம் தான் தினமே!

கடலில் அலையும் அலையைப் போல
அலைவது மேன் மனமே?
கருணைக் கடலை நினைத்து விட்டால்
கால மெல்லாம் சுகமே!


--கவிநயா

Monday, June 3, 2013

அருள் செய்யலாகாதோ?



சுப்பு தாத்தா அமெரிக்காவிலிருந்து...வந்த மறுநாளே பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!



அருள் செய்ய லாகாதோ அம்மா?
நீயே கதியென்று உருவேற்றினேன்
என் உளமார தினம்பாடி உனையேற்றினேன்

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)

மதுரை அரசியவள் வேண்டுதலை மதித்தாய்
கைலாயந் தனை விட்டு பூவுலகில் உதித்தாய்
கிளி யேந்தும் கிளியே நீ செந்நெருப்பில் முகிழ்த்தாய்
கிலி நீக்கி கலி தீர்க்க கருணையால் அவ தரித்தாய்

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)

கூடல் நகரினிலே கூத்தனுடன் ஆட
கொண்டாடும் அடியவர்கள் திருப் பதமே நாட
நாடிடும் அடியவரை நலமுடனே பேண
நானிலம் போற்றும் உன்றன் திருமுகம் நான் காண

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)


--கவிநயா