Thursday, May 31, 2012


ஏன் ஏங்க வைக்கிறாய் ?

சுப்பு சார் சுருட்டி ராகத்தில் பாடித் தந்ததை இங்கே கேட்டு மகிழுங்கள்! நன்றி சார்!
 
கோடிக்கதிரவர்கள் கூடியே உதித்தாலும்
ஈடாமோ தாயே !உன் முக ஒளிக்கு?
தாரகைகளெல்லாமே இணைந்தாலும் இணையாமோ
காரிகையுந்தன் அருளொளிர் விழிக்கு?
உன்னையுள்ளந்தன்னில் உணர்ந்தபின்னர் பொன்னும்
மண்ணாய் ,மரத்துகளாய்த் தோணுதம்மா!
மரகதம் ,மாணிக்கம் ,முத்து,வைரமெல்லாம்
கருங்கல்லாய் ,கரித்துண்டாய்க் காணுதம்மா!
பிறைநிலவைத் தரித்தென்னுள் தண்ணொளி வீசுகின்றாய்!
கரும்புக் கரங்காட்டிப் பேசாமல் பேசுகின்றாய்!
அன்பெனுமின்ப மலரம்பாலே தைக்கின்றாய்!
கண்முன்னே வாராமல் ஏன் ஏங்க வைக்கின்றாய்?

Monday, May 28, 2012

எங்கும் எதிலும் நீ!




சுப்பு தாத்தா கானடா ராகத்தில் இனிமையாக அமைத்திருப்பதைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


எண்ணியெண்ணிப் பார்க்கையிலே எண்ணமெல்லாம் நீயிருப்பாய்!
பண்ணெடுத்துப் பாடுகையில் பாட்டுக்குள்ளே நீயிருப்பாய்!
கண்ணுக்குள்ளே பார்க்கையிலே கண்மணியாய் நீயிருப்பாய்!
விண்ணையெட்டிப் பார்க்கையிலே வெண்ணிலவாய் நீயிருப்பாய்!

சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே செம்பொருளாய் நீயிருப்பாய்!
கல்லுக்குள்ளே ஈரமென கண்மணியே நீயிருப்பாய்!
புல்லுக்குள்ளும் பூவுக்குள்ளும் பூவிழியே நீயிருப்பாய்!
முள்நடுவே மலரெனவே மனசுக்குள் நீயிருப்பாய்!

செய்யுகின்ற செயலிலெல்லாம் சக்திவடி வாயிருப்பாய்!
பெய்யுகின்ற மழை முகிலில் பேரருளாய் நீயிருப்பாய்!
உள்ளங்கையில் ரேகையைப்போல் உள்ளத்திலே நீயிருப்பாய்!
வெள்ளமெனப் பொழியும் அன்பில் வேதனைகள் தீர்த்திருப்பாய்!!

--கவிநயா 

Monday, May 21, 2012

பிரமனின் தோல்வி!



சுப்பு தாத்தா வலஜி ராகத்தில் இனிமை ததும்பப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


இருவிழி போறாது கருவிழி சோராது
அம்மா உன் எழில் வடிவம் காண்பதற்கே!
பிறவிகள் போறாது மொழிகளும் சோராது
அம்மா உன் திருப்புகழைப் பாடுதற்கே!

நாரணி உன்றன் ஆணையினாலே
நான்முகன் உலகினைப் படைத்தான்!
வேதத்தின் வடிவாம் வேதஜனனீ உன்றன்
பாதங்கள் சிந்தையில் பதித்தான்!

கால் தொட்டுப் புரளும் கேசத்தைக் கண்டான்
கார் முகில்களை அவன் படைத்தான்!
பாலென ஒளிரும் திருமுகம் கண்டான்,
பால் நிலவினை அவன் படைத்தான்!

உன்நிறம் கண்டான் அருணனைப் படைத்தான்!
கண்ணொளி கண்டான் கதிரவன் படைத்தான்!
மெல்லிடை கண்டான் மின்னலைப் படைத்தான்!
கருணையைக் கண்டான் பெருமழை படைத்தான்!

உன் குரல் அழகால் குயிலினம் படைத்தான்!
உன் அசை வழகால் மயில்களைப் படைத்தான்!
உன் நடை அழகால் அன்னத்தைப் படைத்தான்!
உன்றன் வடிவாய் மங்கையர் படைத்தான்!

திருவடி அழகினைக் கண்டதி னாலே
தாமரை மலர்களைப் படைத்தான்
எத்தனை படைத்தும் திருப்தி கொள்ளாமல்
வித வித மலர்களைப் படைத்தான்

பலவித அழகுகள் படைத்த பின்னாலும்
படு தோல்வியையே கண்டான் – பிரமன்
படு தோல்வியையே கண்டான்!


--கவிநயா

Monday, May 14, 2012

நீயே வேண்டும்!






சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


காற்றும் நுழைய இடமின்றி
கண்மணி நெஞ்சில் நீ வேண்டும்
திருவடி நிழலே தஞ்சம் எனநான்
உருகிக் கிடக்கும் நிலை வேண்டும்

பார்க்கும் பொருளில் எல்லாமே
பாவை உன்திரு முகம் வேண்டும்
கேட்கும் ஒலிகள் எல்லாமே
உன்றன் திருப் புகழாய் வேண்டும்

காற் சிலம்பொலிக்க வர வேண்டும்
கற்பகமே அருள் தர வேண்டும்
நாற் றிசையும் மனம் ஓடாமல்
நாயகியே நீ அதில் வேண்டும்!


--கவிநயா

Monday, May 7, 2012

தாயே!தாள் பதிப்பாய்!


( ' சர்வம் நீயே 'வலையில் சிலமாதங்கள் முன் நான் எழுதி
 கலா பாடிய அன்னை பாட்டு இன்று அம்மன் பாட்டு அன்பர்களுக்காக இங்கே : )

தாயே!தாள் பதிப்பாய்!

(subbusir  sings :
http://www.youtube.com/watch?v=1NtBs_ne5D8&feature=email )

 மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்
கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,
கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!
உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!

விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே
இடப்பாகம் அபகரணம் செய்தவளே!
மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்
மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!


அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!
தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!
சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;
பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!


அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே
விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!
இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்
எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!

----------------------------------------------------------------------------------------------------

                      பரமாச்சாரியாரின் 'அம்பிகை அருளும் தீக்ஷைகள்'
                      என்ற கட்டுரையின் சாரம்:

ஒவ்வொரு ரூபத்தில் அம்பாள் மூன்றுவித தீக்ஷைகள்
அருள்கிறாள்:(1) ஸ்பர்ச தீக்ஷை அல்லது''குக்குட[கோழி]தீக்ஷை"
2)நயன தீக்ஷை அல்லது ''மத்ஸ்ய [மீன்]தீக்ஷை''
3)மானஸ தீக்ஷை அல்லது ''கமட[ஆமை]தீக்ஷை''

               முட்டையின் கருவை ஓடு மறைப்பதுபோல் அஞான ஓடு
ஞானத்தை மறைக்கிறது;தாய்,முட்டையைக் குஞ்சு பொரிப்பதில் மூன்றுவகை :
முதலாவது: தாய்க்கோழி முட்டைமேல் உட்கார்ந்து அடைகாத்து
குஞ்சு பொரிக்கும்; ஸ்பர்ச தீக்ஷை இந்த வகை!காமாட்சிதான்
பக்தனின் தலையில்தாள் பதித்து [அபிராமபட்டர்போல்]
ஸ்பர்ச/கோழி தீக்ஷை அருளி அஞ்ஞான
ஓட்டை உடைக்கஉதுவுகிறாள் !

இரண்டாவது: முட்டையிட்ட தாய்மீன், நீரில் சஞ்சரித்தபடி
இருந்தாலும் முட்டையைத் தன் கண்ணால் தீக்ஷண்யமாகப் பார்க்குமாம்;அந்தப் பார்வையின் சக்தியால் ஓடுடைந்து
குஞ்சு வெளியில் வருமாம்;நயன தீக்ஷை இந்த வகை!
மீனாட்சிதான் தன் கடாக்ஷத்தாலேயே
நயன/மீன் தீக்ஷை அளிப்பவள் !

மூன்றாவது: நீரிலுள்ள தாய் ஆமை கரையில் வந்து
முட்டையிட்டு விட்டு நீருக்குத் திரும்பிப் போய்விடுமாம்;
தாய் ஓரிடம் முட்டை ஓரிடம் ஆனாலும்,தாயாமை முட்டை
நல்லபடிப் பொரிந்து குஞ்சு நலமாய் இருக்கணும் என்று
நினைத்தபடி இருக்குமாம் ;அதன் தீவிர நினைப்பின்
சக்தியிலேயே கரையிலுள்ள முட்டை வெடித்து குஞ்சு
நல்லபடி வெளிவருமாம்!மானஸதீக்ஷை இந்த வகை!
காசிவிசாலக்ஷி பக்தர்களை தன் அனுக்ரஹ சிந்தையோடு
மனசால் நினைத்தே கமட/ஆமை தீக்ஷை அளிப்பவள்!

      நான் மேலே அளித்துள்ள பாடல் காமாட்சி அன்னையின்
குக்குட தீக்ஷை பற்றிப் படித்ததும் என் மனத்தில் பொங்கிப்
பெருகிய ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்த பாடல்.


Tuesday, May 1, 2012

தரிசனம்

(என் "சர்வம் நீயே" வலையில் ஓராண்டு முன் பதிவிட்ட
       காமாட்சி துதி  அம்மன் பாட்டு அன்பர்களுக்காக கீழே!  ) 

            

                       தரிசனம்
(subbu sir sings:
  http://www.youtube.com/watch?v=2WNSoFe2FWU&feature=email  )


அம்பா காமாட்சி!உன் குமிழ்வாயில் குறுநகை!
                                                       தரிசனம் கனவுதானோ?
செம்பவழக் குவியலில் முத்தும் முகிழ்ந்ததோ?
                                      விந்தையோ?உண்மைதானோ?
குங்குமப்பூங்கொத்தில்  தும்பையும் பூத்ததோ?
                                           கற்பனைக்கோலந்தானோ?
மங்களச் செவ்வாயில் திங்கள் உதித்ததோ?
                                                மந்திரஜாலந்தானோ?

நின்கரம் ஒன்றிலே  கரும்பேந்தி இனிமையைக்
                                       கரும்பிலே கூட்டிவைத்தாய்!
மென்கரம் ஒன்றிலே மலரேந்தி மென்மையை
                                        மலர்களில் ஏற்றிவைத்தாய்!
உன்சிரம் தாங்கிடும் வெண்ணிலாதன்னிலுன்
                                  தண்ணொளி தேக்கிவைத்தாய்!
என்மனப் பிதற்றலுன் பொற்பதம் தொட்டதும்
                                          பாடலாய் ஆக்கிவைத்தாய்!