Wednesday, October 27, 2021

சரஸ்வதி அம்மா - நவராத்திரி பாடல்

 

வெள்ளைப் பட்டாடை உடுத்தி

வெள்ளன்னம் மீதமர்ந்து

நான்முகன் நாயகி வலம் வருவாள் - அவள்

பூ மலர் விழி மலர்ந்து அருள் புரிவாள்

 

வெள்ளை மலர் அவள் மேடை

வெள்ளை உள்ளம் அவள் வீடு

கள்ளமில்லா உள்ளந்தனில் குடி புகுவாள் – அவள்

கொள்ளை இன்பங்கள் தந்து அருள் புரிவாள்

 

வீணைதனை மடியேந்தி

ஜப மாலை கரமேந்தி

ஞானத்தின் வடிவாக வீற்றிருப்பாள் – அவள்

அஞ்ஞானந் தன்னை வெல்ல அருள் புரிவாள்

 

ஆயகலை அனைத்துக்கும்

அரசியென ஆனாலும்

தாயெனவே பரிந்துவந்து அன்பு செய்வாள் – அவள்

தயவுடனே நமக்கு அருள் புரிவாள்

 

நான்முகனின் நாவில் இருப்பாள்

நான்மறையின் பொருளில் இருப்பாள்

நா ஒலிக்கும் தமிழிலும் அவள் இருப்பாள் – அவள்

நாத வடிவாக எங்கும் நிறைந்திருப்பாள்

 

 

--கவிநயா




Wednesday, October 20, 2021

லக்ஷ்மி அம்மா - நவராத்திரி பாடல்

செக்கச் சிவந்திருக்கும் கமலத்திலே

செந்தாமரையின் வடிவத்திலே

ஸ்ரீலக்ஷ்மி தாயார் வீற்றிருப்பாள்

என்றன் சிந்தையிலும் அவள் கொலுவிருப்பாள்

 

மாலவனின் மார்பில் மணியாவாள்

கோல எழில் தேவி ஒளியாவாள்

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியாவாள்

பணிந்திடும் பக்தருக்குப் பெருநிதி அவளாவாள்

 

ஆதிலக்ஷ்மியும் கஜலக்ஷ்மியும் தனலக்ஷ்மியும் அவளாவாள்

தான்ய தைர்ய சந்தான விஜய வித்யா லக்ஷ்மியும் அவளாவாள்

அஷ்ட லக்ஷ்மிகளும் அவளாவாள்

மஹாலக்ஷ்மியும் அவளாவாள்

இஷ்ட லக்ஷ்மியும் அவளாவாள்

கஷ்டம் நீக்கிடும் தாயாவாள்

 

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி

ஜெய ஜெய லக்ஷ்மி ஸ்ரீஜெய லக்ஷ்மி


--கவிநயா



 

Monday, October 11, 2021

துர்க்கை அம்மா - நவராத்திரி பாடல்

மீனாட்சி அம்மை பாடல் நவராத்திரி முடிந்த பிறகு தொடரும்...


துர்க்கை உன்றன் பேரைச் சொன்னால்

    துன்பம் எல்லாம் தீரும்

தூரப் போகும் வினைக ளெல்லாம்

    இன்பம் வந்து சேரும்

சூலம் கொண்ட கோலம் கண்டால்

    கண்களிலே நீரும்

வழியுதடி துர்க்கை அம்மா

    தேடி வந்தேன் பாதம்

 

அசுர்ர்களை அழிக்கையிலே

    ஆங்காரத் தோற்றம்

அன்புடனே காக்கையிலே

    அன்னையென மாற்றம்

உன் நிழலில் தங்கிடவே

    எனக்கு என்றும் ஏக்கம்

உன் கமலத் திருப்பதமே

    எம்மை என்றும் காக்கும்

 

சங்குடனே சக்கரம் உன்

    சோதரனைப் போலே

சந்திரனைச் சூடிடுவாய்

    காதலனைப் போலே

தீயவற்றைக் கண்டு விட்டால்

    தீயதனைப் போலே

வேகங் கொண்டு வந்திடுவாய்

    சிம்மமதன் மேலே

 

பதினெட்டுக் கரங்களிலே

    ஆயுதங்கள் சொண்டாய்

ஈரெட்டுத் திசைகளிலும்

    அசுரர்களை வென்றாய்

ஆயிரமாம் கண்களினால்

    அன்பர்களைக் காப்பாய்

அண்டி வரும் அடியவரைத்

    திருவடியில் சேர்ப்பாய்

 

 

--கவிநயா


Sunday, October 3, 2021

அன்னை மீனாட்சி உமையே - 3

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

நேரான கூர் நாசி ஓரத்திலே முத்து

மூக்குத்தி ஒளி வீசிட

 

புல்லாக்கிலே தொங்கும் சிவப்புக்கல் உதட்டோடு

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட

 

பவழத்தை யொத்த இதழ் மலர் போலவே விரிந்து

குறு நகைக்கு எழில் கூட்டிட

 

கன்னக் கதுப்பு சிவன் காதலுடன் முகம் பார்க்கும்

கண்ணாடியாய் மின்னிட

 

பல கோடிப் பிள்ளைகளைக் கடைக் கண்ணால் காக்கின்ற

பங்கயக் கண்ணரசியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்



--கவிநயா