Monday, December 26, 2011

வாழிய வாழிய வாழியவே!


மீனாட்சி அம்மை குழந்தைப் பருவம். 

'ஆடுக ஊஞ்சல் ஆடுகவே' மெட்டில்...



வாழிய மீனாள் வாழியவே
வானவர் தானவர் போற்றிடவே!
வாழிய மீனாள் வாழியவே
வையகம் போற்றிட வாழியவே! (1)


(காப்பு)
கணபதி கந்தனும் காத்திடவே
மால் நான் முகனும் வாழ்த்திடவே
அம்மையும் அப்பனும் அருளிடவே
அன்னையும் உதித்தாள் அவனியிலே! (2)

மலயத்துவசன் மனம் மகிழ
மதுரை நகரே மண மணக்க
தழலின் நடுவே தாமரை போல்
தங்கத் தாயவள் உதித்தனளே! (3)

மும்முலை கொண்ட மகள் கண்டு
மன்னவனும் மதி மயங்கினனே
கைத்தலம் பற்றுவன் கண்டவுடன்
மறைந்திடும் எனும் செய்தி கேட்டனனே! (4)

காஞ்சன மாலை மடியினிலே
களிப்புடன் தவழ்ந்தாள் குழந்தையென
கண்டவர் மனங்கள் கனிந்திடவே
‘களுக்’கென்று சிரித்தாள் கன்னங் குழிய! (5)


(செங்கீரை)
வெள்ளித் தண்டைக் கால் நீட்டி
கொள்ளை எழில்மதி முகம் உயர்த்தி
செல்லம் போலே மீனாளும்
செங்கீரை போலே ஆடினளே! (6)


(தால)
உலகிதன் உயிர்களை பிள்ளையென
உதரத்தில் காத்திடும் உமையவளும்
தானே தளிரென பிள்ளையைப் போல்
தாயவள் தாலாட்டில் உறங்கினளே! (7)


(சப்பாணி)
அபயம் அளிக்கும் கரங்களினை
அழகாய்ச் சேர்த்து அன்னையவள்
சகல உயிர்களும் சந்தோஷம் கொள்ள
சப்பாணி கொட்டி மகிழ்ந்தனளே! (8)


(முத்தம்)
பவழம் ஒத்த செவ்வாயில்
பாகை ஒக்கும் தேனொழுக
பக்கம் வந்து பெற்றவர்க்கு
பரிசாய் முத்தங்கள் தந்தனளே! (9)

(வாரானை)
வாவா வென்று தாயழைக்க
வாஞ்சை மீற தந்தை யழைக்க
அகிலத்தை நடத்தும் அங்கயற்கண்ணி
தளிர்ப் பதம் பதித்து நடந்தனளே! (10)


(அம்புலி)
வானில் அம்புலி கண்டனளாம்
விளையாட ஆசை கொண்டனளாம்
சின்னஞ் சிறிய கரம் உயர்த்தி
அவனை அருகினில் அழைத்தனளே! (11)


(சிற்றில்)
வைகை ஆற்றின் கரையினிலே
வாகாய் மணலைக் குவித்தெடுத்து
அதிலே கொஞ்சம் நீர் தெளித்து
அழகாய்ச் சிற்றில் செய்தனளே! (12)


(கழங்காடல்)
கல்லாங் காய்கள் எடுத்து வந்து
கருத்துடன் அவற்றைச் சேர்த்து வந்து
களிப்புடன் அன்னை மீனாளும்
கழங்காடி மிக மகிழ்ந்தனளே! (13)


(அம்மானை)
பந்தார் விரலி பந்தெடுத்து
அதற்குத் துணையாய்ப் பாட்டெடுத்து
புவியினர் எல்லாம் வியந்திடவே
பாங்குடன் அம்மானை ஆடினளே! (14)


(ஊசல்)
மாயை என்னும் ஊஞ்சலிலே
மாந்தரை ஆட்டிடும் மங்கையவள்
மரகத ஊஞ்சல் தனிலமர்ந்து
மதுரை மகிழ ஆடினளே! (15)


வாழிய மீனாள் வாழியவே
வானகம் வையகம் வாழ்த்திடவே
வாழிய மீனாள் வாழியவே
வணங்குவர் உள்ளத்தில் வாழியவே! (16)




--கவிநயா

Monday, December 19, 2011

தேவதையே அருள்வாயோ?


சுப்பு தாத்தா
நீலாம்பரியில் பாடித் தந்திருப்பதை ரசித்துக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!

அன்பாலே பாடுகிறேன்
அம்மா உனக்கு பாடல் ஒன்று
என்பாலே அன்புகொண்டு
நீயும் வர வேண்டுமென்று...

கண் ணசையக் காத்திருக்கேன்
கண்ணெடுத்துப் பாராயோ
விண்ணவருக் கிரங்கினையே
உன்மகளுக் கிரங்காயோ?

உன்நினைவே என்மனதுக்
குணவாக ஆச்சுதடி
உன்பெயரே என்சுவாசக்
காற்றாக வீசுதடி!

காணுகின்ற பொருளிலெல்லாம்
கன்னி முகமேதோணுதடி
ஓடிவரும் ஒலியிலெல்லாம்
கொலுசொலியே ஒலிக்குதடி

பாடிப்பாடி அழைக்கின்றேன்
ஓடோடிநீ வருவாயோ
தேடித்தேடித் தவிக்கின்றேன்
தேவதையே அருள்வாயோ?


--கவிநயா

Monday, December 12, 2011

எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டும்!


எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டுமே – அம்மா
தப்பாமல் உன்பெயர்உச் சரிக்க வேண்டுமே
முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டுமே - ஒரு
கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டுமே

பிச்சையென ஒருவரம்நீ கொடுக்க வேண்டுமே – எந்தன்
இச்சையெல்லாம் நீயாக இருக்க வேண்டுமே
துச்சமென இவ்வுலகை நினைக்க வேண்டுமே – அம்மா
மெச்சியுந்தன் புகழைதினம் படிக்க வேண்டுமே

இன்பதுன்பம் இரண்டுமொன்றாய் கொள்ள வேண்டுமே - அம்மா
உண்மைஇன்பம் நீயெனவே உணர வேண்டுமே
பக்திகொண்டு சக்திதன்னை பாட வேண்டுமே – அம்மா
சக்திமீது பித்துகொண்டு வாழ வேண்டுமே!


--கவிநயா

Monday, December 5, 2011

என் தொழில்!



உன்பதம் போற்றுவதே என் தொழிலாகும்
பொன்பதம் போற்றுதலில் என் னுயிர்வாழும்

திருப்பதந் தனைப் பணிந்தால் தீவினை தீரும்
விருப்புடன் உனைத் தொழுதால் வேதனை மாறும்

மலர்ப்பதம் தனைச்சூட மணமெங்கும் சூழும்
சிலிர்த்துசெந் தமிழ்ப்பாவும் சுனையென ஊறும்
களித்துன்றன் செவியந்த இசையினை மாந்தும்
சிரித்துன்றன் சதங்கைகள் அதற்கிசைந் தாடும்!


--கவிநயா

Monday, November 28, 2011

ஏனிந்த மௌனமடி?


யாரிடம் சொல்லி அழ – எவர்
மடியினில் சென்று விழ?
தேம்பி யழ வேணும் – அதற்கு
தாயுன்றன் மடி வேணும்

பாரமும் மிகவாச்சு – போகும்
பாதையும் முரடாச்சு
தேகமும் களைச்சாச்சு – உன்னை
தேடி நான் சலிச்சாச்சு

ஏனிந்த மௌனமடி – ஏனோ
எனக்கிந்த துயரமடி
அடைக்கலம் தந்திடவே – உனக்கு
ஏனிந்த தயக்கமடி?


--கவிநயா

Friday, November 25, 2011

தாயே!தயைபுரிவாய்!

(ஓராண்டுமுன்  'சர்வம் நீயே' வலையில் பதிவிட்ட என் பாடலை
 'அம்மன் பாட்டு' அன்பர்களுக்காக இங்கு அளிக்கிறேன்)

1 ) இடர்நீக்கும் ஏகதந்தன் தாயே ! அபிராமி!
விடமுண்டகண்டனில் பாதியே சிவகாமி!
அடைக்கலம் நீயே அம்மா ! ஆதரி காமாட்சி!
மடமதியர் ஆனாலும் மனமிரங்கு மீனாக்ஷி!


2 ) குருகுகனின் தாயே! மலைமகளே ! மாயே!
கருவையும் காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகையே !
திருமால் சகோதரி ! மகேசன்மனோகரி!
அருள்புரிவாயம்மா! அகிலாண்டேஸ்வரி!


3 ) எள்ளி நகைத்திருந்தோம் இளமையின் இறுமாப்பில்;
துள்ளித்திரிந்தோமே உளத்திலுன்நினைப்பின்றி;
பள்ளத்திலே விழுந்தோம் பணம் தந்த போதையிலே;
தள்ளாமை தாக்கிடவும் தவிக்கிறோம் உனைத்தேடி!


4 ) "முற்போக்கர்" எனும்பேரில் தற்பெருமைபேசும்
அற்பர்களைத்திருத்தி அறவழி காட்டிடம்மா!
நிற்பதும் ,கற்பதும் ,சர்வமும் உன்னால் எனும்
சமர்ப்பணபுத்தி தந்து அருள்புரிவாயம்மா!


5 ) விஞ்ஞானம் எனும்பேரில் நாத்தீகத்தைப்பரப்பும்
அஞ்ஞானியர் அகந்தை அழிந்திடவேண்டுமம்மா!
மெய் ஞானம் அளித்தெம்மை ஆட்கொள்ளவேண்டுமம்மா!
இஞ்ஞாலம் எங்குமின்பம் பொங்கிடவேண்டுமம்மா!


6 )பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!
பழையபடிமாறாமல் தடுத்தருள வேண்டுமம்மா!
அழைக்குமுன் எம்முள்ளே எழுந்தருள வேண்டுமம்மா!
நுழைவாசல் எமன் வரினும் உன்நினைப்பே வேண்டுமம்மா!


7 )சாரதே! சாமளே!சாகம்பரி! சிவானி!
பாரதி!பார்வதி! பரமேஸ்வரி! பவானி!
நாராயணி! நவகாளி! காத்யாயினி!
பூரணி! பவபயஹாரிணி!ஜகத்ஜனனி !


8 )கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வரி!
சொற்பதங்கள் கடந்த சுந்தரி!சங்கரி!
கற்பனைக்கெட்டாத அத்புதரூபிணி! உன்
பொற்பதமன்றி புகலேது புவனேஸ்வரி ?


9 )சுத்தசித்தத்தினால் நித்தம் உனைநினைக்கும்
உத்தமபக்தருக்கு முக்திதரும் உமையே!
பித்தரில்பாதியே!சத்தியஜோதியே !
நித்யகல்யாணி !நின்பாதம் சரணமம்மா!

Monday, November 21, 2011

நீயே கதி!


பலமுறை உனைப் பணிந்தேன்
பதமலர் தனில் விழுந்தேன்
கதியென உனைப் பிடித்தேன் அம்மா
நதியென எனை நனைப்பாய் அம்மா!

பண்ணில் உனைத் தினம்
பாடி அழைக்கின்றேன்
காதில் விழ வில்லையோ?

மண்ணின் மாந்தரெல்லாம்
போற்றும் அன்னைக்கிந்தப்
பிள்ளையொரு தொல்லையோ?

விண்ணின் தேவருக்கு
அருள இரங்கிவந்தாய்
எனக்கு என்று அருள்வாய்?

கண்ணின் மணியுன்னைப்
போற்றித் துதிக்கின்றேன்
காக்க ஓடி வருவாய்

கல்லும் கரையுமிந்தப்
பெண்ணின் கவிகேட்டுன்
உள்ளம் கரைய வில்லையோ?

முள்ளை மலராக்கும்
தீயைப் பனியாக்கும்
பார்வை எனக் கில்லையோ?

உன்னை அன்றி ஒரு
நினைவு எனக்கில்லை
என்றன் அன்பை அறிவாய்

கண்ணில் வழிந்தோடும்
நீரைத் துடைத்திடவே
அன்னை நீயே வருவாய்!


--கவிநயா

Monday, November 14, 2011

அம்மா, அருள்வாய்!



அம்மா அருள்வாயே
மன அமைதி தருவாயே
சஞ்சலங்கள் ஏதுமின்றி
சந்ததமும் உன்னைப் பாட

(அம்மா)

அன்னை உனையே நாட வேண்டும்
கன்னல் தமிழால் பாட வேண்டும்
முன்னால் பின்னால் மிரட்டும் வினைகள்
தன்னால் பயந்து ஓட வேண்டும்

(அம்மா)

குற்றங் குறைகள் நிறைந்த பிள்ளை
குறுகி உன்னைப் பணியும் வேளை
கற்றை அன்பை நீதான் பொழிந்து
சற்றே மடியில் ஏந்த வேண்டும்

(அம்மா)

கனவிலேனும் உன்னைக் காண
காலடியில் கண்ணீர் வார்க்க
விழியில் வழியும் அன்பைப் பருக
வழியில் நிறைந்த முட்கள் தொலைய

(அம்மா)


--கவிநயா

Monday, November 7, 2011

கடை விழியாலே காத்தருள்வாய்!



சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் மிகப் பொருத்தமாக அமைத்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! 
மிக்க நன்றி தாத்தா!

கடை விழியாலே காத்தருள்வாய்
கடலினை விஞ்சிடும் கருணை பொங்கும் உன்றன்
கடை விழியாலே காத்தருள்வாய்

சுடலைப் பொடி பூசும் சிவனுடனே
மடல் அவிழ்ந்த மலர் போல் மகிழ்பவளே
(கடை)

விடை தனிலே வருவாய் பதியுடனே
முடி தனிலே ஒளிரும் மதியுடனே
சடை முடியோ னுடன் அருளிடவே
மடை யென அன்பு வெள்ளம் பெருகிடவே
(கடை)


--கவிநயா

Monday, October 31, 2011

மதுரை நகர் தேவியே!

இன்றைக்கு திவாகர்ஜியின் நேயர் விருப்பம் :)


மதுரைநகர் தேவியே மண்ணாளும் ராணியே
மனதினிலும் குடிபுகுந்து எமைஆள் மீனாக்ஷியே

(மதுரை)

மோகனமாய்ச் சிரிப்பவளே மோகமெல்லாம் எரிப்பவளே
சோகமெல்லாம் தீர்ப்பவளே சுவர்க்கமென இனிப்பவளே
திக்கெட்டும் ஜெயித்தவளே திகம்பரனை மணந்தவளே
சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே

(மதுரை)

கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்
சிறுபிள்ளை போலஉன்னைச் சுற்றிச்சுற்றி வந்திடணும்
விழிக்குள்ளே உன்னைவைத்து வாழ்த்திதினம் போற்றிடணும்
வழித்தொல்லை வாராமல்நீ வாஞ்சையுடன் காத்திடணும்

(மதுரை)


--கவிநயா

Monday, October 24, 2011

பாதம் பணிவோம்!



 சுப்பு தாத்தா அழகுற அமைத்துத் தந்த பாடலை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!



ஆதி சக்தியவள்
அழகுப் பாதங்களை
அன்புடனே பணிவோம்

வேத நாயகியை
விஸ்வ ரூபிணியை
விநயமுடன் பணிவோம்

கோதகன்ற வெள்ளை
உள்ளம் உறைகின்ற
உமையவளைப் பணிவோம்

பேதமின்றி எங்கும்
அருளைப் பொழிகின்ற
பொன்மகளைப் பணிவோம்

நாத வடிவான
நங்கை நல்லாளை
நலமுடனே பணிவோம்

ஞான வடிவாக
ஞாலம் காப்பவளை
நேயம்மிகத் தொழுவோம்


--கவிநயா

Thursday, October 20, 2011

விடமாட்டேன்!

                                 விடமாட்டேன்!

                 


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!


                             அலைந்தாடும் மனத்துக்குன்

                              நினைப்பொன்றே நங்கூரம்;

                              புகல்வேண்டும் பக்தர்க்குன்

                              பதமலரே ஆதாரம்.


                            மலைமன்னன் கண்மணியே!
                            முக்கண்ணன் பத்தினியே!
                             
                            குற்றங்கள்  கொஞ்சமில்லை ;
                            பிழைகளுக்கும்  பஞ்சமில்லை;
                            பெற்ற தாயே! உன்முன்னே
                            ஒப்புக்கொள்ள   அச்சமில்லை.


                               மலைமன்னன் கண்மணியே!
                               முக்கண்ணன் பத்தினியே!


                              களங்கமுள்ள நிலவதனைத்            
                              தலையில் தரிப்பவளே  !என்
                              மலம்படிந்த  மனக்கலத்தை
                              துலக்க உதவு  தூயவளே!


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!
                            
                               வற்றா அருட்சுனையே!உன்
                               பொற்றாமரைப் பதங்கள்
                               பற்றினேன்;விடமாட்டேன்,
                              சற்றே மனமிளகும்வரை!


                             மலைமன்னன் கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!


                             காலைப்பிடித்த என்னைக்

                             காப்பாற்றிக்  கரைசேர்க்க 

                              காலமின்னுங் கடத்தாமல்

                              கற்பகமே ! கரம்  நீட்டு !


                             மலைமன்னன்  கண்மணியே!
                             முக்கண்ணன் பத்தினியே!
                            


Monday, October 17, 2011

அன்பைத் தருவாய்!

படம்: கைலாஷி அவர்களின் வலையிலிருந்து... மிக்க நன்றி, கைலாஷி!

சுப்பு தாத்தா மோகனம் ராகத்தில் பாடியிருப்பதை கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


அன்பைத் தருவாய் - அம்மா
அன்பைத் தருவாய் - நெஞ்சில்
அன்பைத் தருவாய் - உன்மேல்
அன்பைத் தருவாய்!

வாயுமைந்தன் நீலவண்ண
ராமன்மேலே வைத்ததுபோல்
வாடாத அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!

காட்டுக்குள்ளே கண்ணப்பர்தம்
சுவாமிமேலே வைத்ததுபோல்
கள்ளமில்லா அன்பை உன்மேல்
வைக்கத் தருவாய்!

ப்ரகலாதன் தந்தை சொல்லை
மீறித்திரு மாலின்மேலே
வைத்ததுபோல் பக்தி உன்மேல்
வைக்கத் தருவாய்!

அவனடியே கதியென்ற
சிவனடியான் மார்க்கண்டேயன்
போலே உன்னைச் சரணடைய
சொல்லித் தருவாய்!

சூடித்தந்த சுடர்க்கொடியாள்
கண்ணன் மேலே வைத்ததுபோல்
கரையில் லாதஅன்பை
உன்மேல் தருவாய்!

ஸ்ரீராம கிருஷ்ணரைப் போல்
அபிராமி பட்டரைப் போல்
அசையாத அன்பை உன்மேல்
அள்ளித் தருவாய்!


--கவிநயா

Monday, October 10, 2011

அவள் அடியே இன்பம்!


அன்னையின் பதமலரை
அன்புடன் பற்றிக் கொள்வாய்
அவள் அடியே இன்பம்
அறிந்து நீ அமைதி கொள்வாய்

அவள் அடி பற்றிக் கொண்டால்
அல்லல்களும் அல்ல லுறும்
சொந்தமென அவளைக் கொண்டால்
சோதனைகள் ஓடி விடும்

அவள் நாமம் சொல்லச் சொல்ல
நெஞ்சம் செந்தா மரையாய் மலரும்
ஆசையுடன் அவள் வந்து
குடியிருக்கும் கோவில் ஆகும்

அவளைச் சரண் அடைந்தால்
அடைக் கலம் தந்திடுவாள்
பிறவிப் பிணி களைவாள்
பேரின்பம் நல்கிடுவாள்


--கவிநயா

Thursday, October 6, 2011

          பராசக்திக்குப் பாமாலை



வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

போரில் அன்னை அசுரர்தன்னை
வென்று கொன்ற  நாளிதே!
பஞ்சபாணி  வெற்றிவாகை 
சூடி நின்ற நாளிதே! 


வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

தீயவற்றைத் தூய்மை   வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!
வஞ்சகத்தை வாய்மை வெல்லும்
என்றுணர்த்தும் நாளிதே!

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம்.

அன்னை பராசக்திக்கு நாம்
தமிழ்ப்பாமாலை சூட்டுவோம்!
அன்பே உருவான தாயின்
அடிபணிந்து போற்றுவோம் !

வெற்றி !வெற்றி !வெற்றியென்று
வெற்றிகீதம் பாடுவோம் !
தீயரைத்துணித்த தாயின்
தசமியைக் கொண்டாடுவோம

Tuesday, October 4, 2011

நான்முகனின் நாயகி!


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!


வெள்ளைஉள்ளத் தாமரையில் வீணையுடன் வீற்றிருப்பாள்
சொல்லும்மொழி யாவையிலும் சுந்தரமாய் கொலுவிருப்பாள்

பள்ளந்தனைத் தேடிவரும் வெள்ளமதைப் போலவளும்
உள்ளம்நிறை அன்பு செய்தால் உவந்துடனே அருள்வாள்

நானிலத்தை ஆக்குகின்ற நான்முகனின் நாயகியாம்
நான்மறைக ளும்வணங்கும் ஞானவடி வானவளாம்
வானவரும் தானவரும் போற்றுகின்ற தேவியளாம்
காணவரும் அடியவரைப் பேணுகின்ற தாயவளாம்


--கவிநயா

அம்பா நவமணிமாலை

அம்பா நவமணிமாலை

 1) வாணீம்  ஜிதசுகவாணீமளிகுல
     வேணீம் பவாம்புதித்ரோணீம் /
    வீணாசுகசிசு பாணீ ம்
   நதகீர்வாணீம் நமாமிசர்வாணீம் //

மறையவளே!கிளியை வெல்லும் மொழியாளே!வண்டன்னக் 
கருங்குழலாளே!பிறவிக்கடல்கடக்கப் படகாவாளே!
வீணைக்கரத்தாளே!கிளியமருந்தோளாளே!வாணியும்   
பணிந்திடும் பூங்கழலாளே! பவானியே!சரணமம்மா!

2) குவலயதளநீலாங்கீம்
    குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் /
    லோசனவிஜிதகுரங்கீம்
    மாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //

நீலக்கமல மேனியளே!தரணி காக்க 
உறுதிபூண்டொளிரும்   ஓரக்கண்ணாளே!
மானைப்பழிக்கும்  எழில்விழியாளே!
மாதங்கி! சரணம்,சங்கரனின்  பங்கிணியே!

3)கமலாகமலஜகாந்தாகரசாரச
தத்தகாந்தகரகமலாம் /
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்கசூட சகலகலாம் //

கமலையும் கலைமகளும் கமலக்கரமேந்தும்  
கமலமன்ன   மென்கரங்களிரண்டிலும்  
கமலமலர்கள்  தாங்குந் தூயவளே!
சசிதரனின்  சகலகலைகளின் வடிவே !

4)சுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
  முகுந்தநிதிஸதனாம் /
கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுசலாயா
 சுரேஷு க்ருதகதனாம் //

எழில்மதிமுகத்தாளே!முல்லைப்பூப்பல்லழகி!
அரும்பொருளின் உறைவிடமே!
கருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி!
சுரரைக்காக்க அசுரரை அழித்தவளே!

5) துங்கஸ்தனஜிதகும்பாம்  க்ருதபரிரம்பாம்
    சிவேன குஹடிம்பாம் /
    தாரிதசும்பநிசும்பாம் நர்த்திதரம்பாம்
    புரோ  விகததம்பாம் //

தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே!
சேயாய் சிவகுகனை உடையவளே!
சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!
தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே!

6)அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
   கமனவிஜிதகாதம்பாம் /
  பாலிதசுஜனகதம்பாம் ப்ருதுல
  நிதம்பாம் பஜே சஹேரம்பாம் //

கொவ்வைச்செவ்விதழாளே!பாராளும் பேரருளே!
அன்னத்தைவெல்லும் மென்னடையாளே!
தன்னடியார் நன்னலம் காப்பவளே!பூரித்த
பின்னழகி!ஐங்கரனோடருள்பவளே!சரணம்!

7)சரணாகதஜனபரணாம்  கருணா
  வருணாலயாம் நவாவரணாம் /
  மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
 போஜாதசேவகோத்தரணாம் //

"கதி நீயே!"என்போரைக்காக்குங்  கருணைக்கடலே!
மதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும்  மாதரசி!
மணிநிறைப்புனிதஅணி  பூண்டவளே! நின்கமலப்
பதம்பணியுமடியாரை உய்விக்கும் உமையாளே!

8)நதஜனரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
பிரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் /
வாஹீக்ருதஹர்யக்ஷாம்
க்ஷபிதவிபக்ஷாம் சுரேஷு க்ருதரக்ஷாம்//

தாள்பணிவோர் நலங்காக்கும்   நல்லவளே!வல்லவளே!
காட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே!
வாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி!
தானவரை வதம்செய்து தேவர்குலங்காத்தவளே!

9)தன்யாம் சுரவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் /
விஹ்ருதசுரத்ருமவன்யாம் வேத்மி
வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //

பொருள்வளமருள்பவளே!சுரருந்தொழுஞ் சிவையே!
கிரியரசன் பொன்மகளே!மூவுலக நாயகியே!
தெய்வீகத்தருக்கள் நிறை  பூம்பொழிலில் நடைபழகும்
தூயவளே!உனையன்றி வேறுதெய்வம் நானறியேன்!

                                பலஸ்ருதி

ஏதாம் நவமணிமாலாம் படந்தி
பக்த்யேஹ யே பராசக்த்யா :/
தேஷாம் வதனே சதனே ந்ருத்யதி
வாணி ரமா ச பரமமுதா //

நவமணிமாலையிதை ஓதி அம்பிகையைப்பணிவோர்
நாவினிலே நான்முகனின் நாயகியாம் நாமகளும்,
இல்லத்திலே செல்வத்தினை அள்ளித்தரும் திருமகளும்
உள்ளமெல்லாம் மகிழ்ந்து   புரிந்திடுவர் களிநடனம்!
                                -------------------------------------------------

பாதய வா பாதாளே ஸ்தாபய வா
சகலபுவனஸாம்ராஜ்யே  /
மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
முஞ்சாமி நைவ முஞ்சாமி //

அன்னையே!நீ என்னைப் பாதாளத்தில் தள்ளிடினும்,
மன்னவனாய் அகிலத்தையே ஆளும்பதவி தந்திடினும்
என்னிருகை பற்றிவிட்ட உன்னிரு பூம்பாதங்களைப்
பொன்னெனவே போற்றிடுவேன்;ஒருபோதும் விடமாட்டேன்!
 http://www.esnips.com/doc/10cc5139-3aae-4dfb-afe1-43c5d2a18016/navamanimalai-kala

Friday, September 30, 2011

பாராளும் பேரழகி !

         பாராளும் பேரழகி !  
(அன்னையின் கழல் முதல் குழல்வரை பொங்கும் அழகின் அலைகள்)


[kamakshi.jpg]

சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே   கொலுவிருக்கும் அஞ்சுகமே
அம்மா!அபிராமி!உந்தன்  கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி  பாதமலர்  பணிகின்றோம்.

                        [1]        உந்தன் திருப்பாதங்களாம் 
                                    செங்கமலமலர்களினை
                                    மொய்க்கும் கருவண்டுகளாய்த்
                                    தெரிவதெங்கள் தலைகளன்றோ!

                          [2]       வாழைத்தண்டொத்த உந்தன்
                                     கால்களினழகைப்போற்றி
                                     பாடிஉன்னைப் பணிகின்றோம்
                                    தாயே!நீ அருள் புரிவாய்.

                          [3]       பூரித்த பின்னழகை,
                                     இல்லாத இடையழகை
                                     பாடியுன்னைப் பணிகின்றோம்
                                     பேரருளைப் பொழிந்திடுவாய்.

                           [4]     தாய்மை எனும் தனியழகுன்  
                                    மேனியிலே  பொங்குதம்மா!
                                    ஜகத்ஜனனி!மங்களமெங்கும்
                                   பொங்கிடவே அருள் புரிவாய்.
                                    
                            [5]  பூங்கணைகளைத்தாங்கும்
                                  பூங்கரத்தின் பேரழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  தூயவளே!அருள்புரிவாய்.

                            [6]     உந்தன் செந்தளிர்விறல்கள்
                                     'அபயம்' காட்டும் அழகை
                                     பாடியுன்னைப் பணிகின்றோம்
                                     அம்பிகையே!அருள்புரிவாய்.

                            [7]     குஞ்சுக்கிளியும்,கரும்புமுன்
                                     வேயுறு தோள்களிலே
                                     கொஞ்சுகின்ற அழகுதனைப்
                                      பாடியுன்னைப் பணிகின்றோம்.
                                              
                           [8]     திருத்தாலி நெளிந்திடுமுன்
                                    சங்குக்கழுத்தழகை
                                    பாடியுன்னைப் பணிகின்றோம்
                                   அன்னையே!அருள்புரிவாய்.

                          [9]      தண்ணொளி தவழுமுந்தன்
                                    பொன்வதனம் கண்ட நிலா
                                     முட்டாக்கு போட்டொளிய
                                     முகில் தேடி ஓடுதம்மா!

                         [10]     குங்குமப்பூவிதழில்
                                    புன்னகை கண்டதாலே     
                                    உண்டான போதையிலே
                                   உருண்டு பூமி சுழல்கிறதோ?  

                         [11]    முல்லைப்பூச்சரம்போலே
                                   ஒளிர்ந்திடுமுன் பல்லழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  ஜகதம்பா!அருள்புரிவாய்.

                          [12]    நட்சத்திரமாய் மினுக்கும்
                                    மூக்குத்தி அணிந்த உந்தன்
                                   மூக்கழகைத்துதிபாடி
                                    பணிகின்றோம்.அருள்புரிவாய்

                        [13]     காதளவு நீண்ட உந்தன்
                                   கயற்கண்களில் பெருகும்
                                   கருணையின் பேரழகை
                                    பாடியுன்னைப் பணிகின்றோம்.

                      [14]       காமன் கை வில்போலே
                                   வளையமுந்தன் புருவங்களின்
                                    பேரழகைப் பாடுகின்றோம்
                                   சாம்பவியே!அருள்புரிவாய்.

                      [15]      பனையோலைத்   தாடங்கம்
                                  அணிந்த உன் செவியழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  சுந்தரியே!அருள் புரிவாய்.

                      [16]      மதிநுதலில் ஒளிரும் உன்
                                  'நெற்றிப்பொட்டு'அழகுதனை
                                 பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  சங்கரியே!அருள் புரிவாய்

                       [17]   உந்தன் கருங்குழல் கண்டு
                                மழைமுகில் என்றே மயங்கி
                                வண்ணத்தோகை விரித்து மயில்
                                வட்டமிட்டு  ஆடுதம்மா!

                        [18]   முகிலிடை மின்னலென உன்
                                 முடியிடையே வகிடுதனில்
                                சிந்தூர  அழகு எங்கள்
                                 சிந்தை கொள்ளை கொண்டதம்மா

சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே கொலுவிருக்கும் அஞ்சுகமே!
அம்மா!அபிராமி!உந்தன் கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்