Monday, March 29, 2010

கவின்மலராய் பூத்தவளே!


கல்லான என்மனதில்
கவின்மலராய் பூத்தவளே!
முள்ளாலே நிறைந்திடினும்
மகிழ்ந்ததிலே முகிழ்த்தவளே!

இல்லடையாய் வந்தவரை
இரக்கமுடன் ஏற்பவளே!
அல்லல்எல்லாம் தீர்த்(து)அவரை
அருமையுடன் காப்பவளே!

துன்பமென்று ஏதுமுண்டோ
உன்னடிகள் பணிந்தபின்னே!
இன்பமொன்றே தரும்உந்தன்
பார்வைமேலே பட்டபின்னே!

சொல்லாலே உன்னன்பை
சொல்லுவதும் சாத்தியமோ!
புல்லறிவால் உன்பெருமை
புகன்றிடவும் இயன்றிடுமோ!


--கவிநயா

Monday, March 22, 2010

வா...வா...!


கண்மணியே கவிதைசொல்வேன் வாவா - உன்
பொன்மனதை போற்றிதினம், வாவா
விண்மதியே மண்ணிறங்கி வாவா - இந்த
பெண்மனதில் குடியிருக்க வாவா

உயிர்உருக உனையழைத்தேன் வாவா - இரு
விழிகசிய கவிபடித்தேன் வாவா
நினைவிலுன்னை நிறுத்திவைத்தேன் வாவா - என்
வினைகளெல்லாம் விரட்டிடவே வாவா

ததியெனவே உழலுகிறேன் வாவா - என்
மதிமயக்கம் நீக்கிடவே வாவா
கதியெனவே உனையடைந்தேன் வாவா - முழு
மதியழகே மலரெழிலே வாவா!


-கவிநயா

Monday, March 15, 2010

அவள் அன்பிற்கு ஈடென எதுவுமில்லை!


அன்னையை போல்இங்கு எவருமில்லை
அவள்அன்பிற்கு ஈடென எதுவுமில்லை

கன்னியாய் அன்னையாய் அவளிருப்பாள் - தன்னை
எண்ணிய பேருக்கு அருள்சுரப்பாள்
சென்னியில் பூம்பதம் பதித்திடுவாள் - நம்மை
கண்ணிமை போலவே காத்திடுவாள்

கனவிலும் நினைவிலும் கலந்திருப்பாள் - எந்தன்
மனதினில் மலரென மலர்ந்திருப்பாள்
ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருப்பாள் - எந்தன்
உயிரினில் உவந்தவள் ஒளிர்ந்திருப்பாள்

பஞ்சினும் மெல்லிய பாதம்ஒன்று - அது
அஞ்சிடும் நெஞ்சிற்கு அபயம்என்று
நஞ்சையும் அமுதென ஆக்கித்தரும் - அது
கொஞ்சிடும் அன்பினில் குழைந்துவரும்

-கவிநயா

படத்துக்கு நன்றி: http://gallery.spiritualindia.org/photos/kali/Hindu-Goddess-Devi-Kali-Maa-Photo-0018.jpg.html

Monday, March 8, 2010

வாணீ நீ வா நீ

சித்ரா என்பவர் எழுதி அனுப்பிய பாடல்...




வாணீ நீ வா நீ

வா வா என்று உனை நான் அழைப்பேன் .
.வரும் வழி விழி வைத்து காத்து இருப்பேன்...
.வாடிய பயிராய் நான் தவிப்பேன் ..
வஞ்சம் இல்லாதொரு வழி வகுப்பாய் ..

பண்ணெடு பாடிடும் வண்டிணமே .
.பை யங் கிளியே சென்று நீ ஒதாய் ...
.நின்னொடு நான் கொண்ட பக்தி யினை ..
நிலை தவறாமல் நீ கூவிடுவாய் ...

. மகரந்த வாசனை உ ன் மேலும்
மரகத மாமணி உமையாளும் .
.மகிழ மனம் போல் பாத மலர் தூவி .
.மங்கை நீ பொங்க நலம் அருள் வாய் ..

. வாணீ நீ வரம் தர நீ வருவாய் .
..மணியாரம் சூட்டி மகிழ் ந்திருப்பாய் .
.மாணிக்க கரும்பின் விழி பாவாய் ..
மாட்சி எல்லாம் தந்து எமை காப்பாய் ..

சித்ரம் ..

Monday, March 1, 2010

போபோ என்று சொல்லி விடாதே!


வாவா அம்மா என்றழைத்தேன்
வருந்தி உன்னைத் தானழைத்தேன்
போபோ என்று சொல்லி விடாதே
பிள்ளையென்னை நீயும் தள்ளி விடாதே

(வாவா)

அலையில் அகப்பட்டு மலையில் மிதிப்பட்டு
உலையில் வதைப்பட்டு வந்தேனம்மா
அலையில் படகாக மலையில் துணையாக
உலையில் பனியாக வருவாயம்மா

(வாவா)

பிறவி பலகொண்டு விதியின் கையில்வெந்து
மதியும் மயங்கிடத் துவண்டேனம்மா
விதியை அழிவித்து மதியைத் தெளிவித்து
பிறவி தன்னைவிட அருள்வாயம்மா

பிழைகள் பலசெய்து வினைகள் தமைக்கொய்து
உளமும் வெதும்பிட வீழ்ந்தேனம்மா
களைகள் எடுத்திட்டு வினைகள் அறுத்திட்டு
மனதில்உன்னை நெய்ய அருள்வாயம்மா

(வாவா)


--கவிநயா