Tuesday, December 30, 2008

102. மாசில்லா மனம் வேண்டும்!





மாசில்லா மனம் வேண்டும்
ஆசைகள் அற வேண்டும்
பாசங்கள் விட வேண்டும்
நேசம்உன் னிடம் வேண்டும்

ஆணவ மே அற்ற
அன்பு மனம் வேண்டும்
மாயை எனும் மயக்கம்
மருண்டோ டிட வேண்டும்

அல்லும் பகலும் உன்னை
நினைந்திட வே வேண்டும்
உள்ளும் புறமும் நீயே
நிறைந்திட வே வேண்டும்

பற்றெலாம் விட்டு உன்னை
மட்டும்பற்றிக் கொள்ள வேண்டும்
பெற்றவளே உன்னை விட்டு
பிரியா திருக்க வேண்டும்!


--கவிநயா


Monday, December 22, 2008

101. அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா !



அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா
முகமூறும் நகை காட்டி குளிர்விப்பாய் அம்மா
தினந்தோறும் உன்நினைவில் திளைக்கின்றோம் அம்மா
மனந்தோறும் நீயிருந்து மகிழ்விப்பாய் அம்மா

நாள்தோறும் நாள்தோறும் உன்னருளை நாடி
வாயார மனமார உன்புகழைப் பாடி
உனைத்தேடி வருகின்ற பக்தர்பல கோடி
கருணைசெய்ய வரவேணும் நீயிங்கு ஓடி

மெல்லிதழை யொத்தசெம் மலர்ப்பதங்கள் சரணம்
தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்
தத்திநடை பழகுகின்ற தளிர்ப்பதங்கள் சரணம்
நித்தம்எமைக் காக்கின்ற பொற்பதங்கள் சரணம்

முத்துமணி நூபுரங்கள் கொஞ்சும்பதம் சரணம்
முத்தொழிலும் ஆற்றுகின்ற முதல்விபதம் சரணம்
பித்தனுடன் நடனமிடும் பிச்சிபதம் சரணம்
பக்தர்களைப் பேணுகின்ற அற்புதையே சரணம்!


--கவிநயா

Wednesday, December 10, 2008

100ஆம் பதிவு: ஜனனி,ஜனனி - தமிழ் நீ,தமிழ் நீ!

திருக் கார்த்திகை தீபத் திருநாளிலே, அம்மன் பாட்டு வலைப்பூ, 100ஆம் அகல் விளக்கை ஏற்றி மகிழ்கிறது! இந்த அகல் விளக்கு அகலா விளக்காய் விளங்க, அனைவரும் வாழ்த்து கூறுங்கள்! இருள் - அகல் விளக்கு! அருள் - அகலா விளக்கு!

இனிய தீபத் திருநாளில் நூறாம் பதிவு அமைந்ததும் அன்னை பராசக்தியின் திருமுக ஒளியே!
இந்தச் சிறப்பு இடுகையில், ராஜாவின் ஜனனி ஜனனி ஸ்டைலில், ஒரு பாட்டு இடம் பெறப் போகிறது! அம்மன் பாட்டின் முதலமைச்சர், நம்ம கவிநயா அக்காவைப் பதிவை நடத்தித் தரும்படி அழைக்கிறேன்! வாங்க-க்கா! Over to கவிநயா!


"அம்மா" என்ற சொல் தான் எத்துணை அழகு! அகிலத்து அன்பெல்லாம் ஓர் சொல்லாய் ஆனது போல் உள்ளத்தில் உவகை பெருக்கும் சொல். உச்சரிக்கையிலேயே மனதில் குழைவையும், நெஞ்சில் நெகிழ்வையும் தந்து விடுகின்ற சொல்.
தாயன்பை நாடாதவர் எவருண்டு? அவள் அன்பிற்கு ஏங்காதவர் தாம் யாருண்டு? நம்முடைய ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாய் அறிந்தவள் நம் தாயே அன்றோ?
உலகத் தாய்மார்களே இப்படியென்றால், உலகத்துக்கெல்லாம் தாயான அவளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

சந்தோஷமோ, சஞ்சலமோ, கோபமோ, வருத்தமோ, எதுவாக இருந்தாலும், "அம்மா" என்றழைத்து அவள் கால்களை இறுகக் கட்டிக் கொண்டால் போதும், மனம் சமன்பட்டுவிடும்.
அவளிடம் நம் எண்ணங்களையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும், வேண்டுதல்களையும், போற்றுதல்களையும், இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத்தான் எத்தனை எத்தனை பாடல்கள்!

அதுவும் நம் தாய்மொழியிலேயே அவற்றை அவளிடம் சொல்கையில் அதனால் ஏற்படும் இன்பத்திற்கும், கிடைக்கும் ஆறுதலுக்கும், இணையே இல்லை. அப்பேர்பட்ட அன்புருவான அன்னைக்கான பாடல் வரிகளைப் பகிர்ந்து கொள்ளவென்றே, அன்னை சக்தியின் வேல் தாங்கியோனின் பெயர் தாங்கிய குமரன், இந்த வலைப் பூவைத் தொடங்கினார். அது இன்று வளர்ந்து, 100-வது பாடலைத் தொட்டிருக்கிறது!

சக்தி இல்லாமல் எதுவுமில்லை. சக்தியை மனதில் இருத்திப் புறப்பட்டால், சூலம் தாங்கிய சிவனும் கூடவே துணையாக வருவான் என்பார், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அவளை நம் அனைவருக்கும் உடனிருந்து வழி நடத்த வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, "அம்மன் பாட்டு" குழுவினரின் சார்பில், இந்த நூறாவது இடுகைக்கு உங்கள் அனைவரையும், "வருக, வந்து அன்னையின் அருள் பெறுக", என அன்போடு வரவேற்கிறேன்!
சரி, இந்த 100-வது இடுகையின் சிறப்பு என்ன என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
"ஜனனீ ஜனனீ" என்ற இளையராஜா அவர்களின் பாடலை கேளாதவர், கேட்டு உருகாதவர், இருக்க முடியாது.

அந்தப் பாடலின் மெட்டிலேயே நம் கேஆரெஸ், இனிக்கும் செந்தமிழில், (கண்) பனிக்கும் அருமையான பாடலொன்றை இயற்றித் தந்திருக்கிறார்.
ஜனனி ஜனனி என்ற சாகா வரம் பெற்ற பாடல்!
அதே மெட்டில், தமிழ் நீ தமிழ் நீ, தரணீ தமிழ் நீ!
மீனாக்ஷி என்ற (ஒரு பதிவரின்) நண்பரும், பதிவர் SK ஐயாவும் பாடுகின்றனர்! கேளுங்கள்!


மீனாக்ஷி அவர்களின் குரலில்: (கேட்டுக்கிட்டே படிங்க...)
Thamizh nee (Janan...

SK ஐயாவின் குரலில்:
Tamizhnee.mp3
கவிநயாவின் குரலில்:
thamizhNee-kavinay...


எடுப்பு:

தமிழ்-நீ தமிழ்-நீ! தரணீ தமிழ்-நீ!
தமிழ்ப் பால் தர-நீ, வருவாய் உமை-நீ!


தொடுப்பு:

தனியாய் ஒருசேய், தவித்தே அழவும்,
கனிவாய் வரும்தாய், முலைப்பால் தரவும்,
இனிதாய்த் தமிழில், சிவனார் சமயம்,
நனிதாய் வளர, வனிதாய் வருவாய்!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************
முடிப்பு-1:

குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்,
நளிர்நள் இரவில், நயமாய் எறிந்தாய்,
தளிர்வெண் நிலவாய், தமிழ்ப்பா நிலவாய்!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************

முடிப்பு-2:

புவனேஸ்வரி நீ! பரமேஸ்வரி நீ!
ஜகதீஸ்வரி நீ! ஜோதீஸ்வரி நீ!
கமலேஸ்வரி நீ! விமலேஸ்வரி நீ!
அமலேஸ்வரி நீ! நிமலேஸ்வரி நீ!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)

பார் ஆட்சியும் நீ! நீர் ஆட்சியும் நீ!
சீர் ஆட்சியும் நீ! தேர் ஆட்சியும் நீ!
கா மாட்சியும் நீ! மீ னாட்சியும் நீ!
மா மாட்சியும் நீ! மா காட்சியும் நீ!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************

முடிப்பு-3:

மூகாம்பிகை நீ! நாகாம்பிகை நீ!
ஏகாம்பர னின் பாகாம்பிகை நீ!
ராஜாம்பிகை நீ! பீஜாம்பிகை நீ!
லலிதாம்பிகை நீ! ஜகதாம்பிகை நீ!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ! )

சிவ மோகினி நீ! சிவ பாகினி நீ!
சிம்ம வாகினி நீ! சிந்தை வாகினி நீ!
சிவ சங்கரி நீ! சக்தி சங்கரி நீ!
சக்தி சங்கரி நீ! சிவ சங்கரி நீ!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)

(அம்மாவின் பாத கமலங்களில், குழந்தை(இரவி)சங்கரனின் மழலைச் சொல்)



பாடலைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?

முதல் வரியிலேயே அன்னையையும் தமிழையும் ஒரு சேரப் போற்றி, அவளும் தமிழும் ஒன்றே எனக் கூறி அரிதாக ஆரம்பித்திருக்கிறார். தமிழுக்கு அன்னை செய்தது என்ன?

* பிள்ளை தவித்து அழுவதைக் காண விரும்பும் தாயும் உண்டோ? படித்துறையில் சம்பந்தப் பிள்ளை தனிமையில் அழ, அதனைப் பொறுக்க மாட்டாமல், அப்பனுடன் ஓடோடி வந்து அவருக்கு ஞானப்பால் ஊட்டுகிறாள் அம்மை.
* அமாவாசையில் நிலவைக் கண்டதாகச் சொல்லி விடும் பக்தனைக் காக்கும் பொருட்டு, தன் காதணியை எறிந்து, முழு நிலவை அமைத்துத் தரும் அன்னை அபிராமியின் கருணைக்குத் தான் அளவேது?

இந்த செய்திகளைத் தனக்கே உரிய தனித்தமிழில், பாடலின் தொடக்கத்தில் எடுத்து இயம்புகிறார், கேஆரெஸ். “நனிதாய் வளர வனிதையே வருவாய்” என்று கனிவாய் அழைக்கிறார்.

குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்

என்ன அழகான வரிகள். கையில் காதணியோடு காட்சி தரும் அன்னையின் பூமுகப் புன்னகையின் எழில் அப்படியே கண்முன் விரிகிறது.

அதற்குப் பின் வரும் வரிகளில், அவளுடைய பற்பல வடிவங்களையும், சிறப்புகளையும், பெருமைகளையும், பெயர்களையும் அடுக்கிக் கொண்டே போகிறார்.
அரி சோதரி நீ எனை ஆதரி நீ
எனக்குப் பிடித்த வரிகள். அவள் ஆதரவு இல்லாவிட்டால் அணுவும் அசையாதல்லவா.

எத்தனை பெயர்கள், எத்தனை வடிவங்கள், எப்படி அழைத்தாலும், நம் மனதின் நிலைக்கேற்ப, ஒருவளே, பலவிதமாகத் தோற்றம் தரும் அன்னையின் அன்பிற்குத் தான் ஈடேது, இணையேது!
இதனைத் தன் பாடல் வரிகளில் அருமையாக அறியச் செய்திருக்கிறார் கேஆரெஸ்.
இவ்விதம் அவளின் பல நாமங்களையும் சிறப்புகளையும் ஒரே பாடலில் போற்றுவதாலேயே, இந்தப் பாடல் 100-வது பதிவுக்கு வெகு பொருத்தமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் சொன்னால் பின்னும் நீண்டு விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, இந்த இடுகையின் பிற சிறப்புகளைச் சொல்ல வருமாறு கேஆரெஸ்ஸை வேண்டுகிறேன்… Over to KRS!



நன்றிக்கா!
சக்தியிடம் வேல் வாங்கிய முருகனாய்...கவிநயா அக்காவிடம் பதிவு வாங்கிய கேஆரெஸ்ஸாய் துவங்கறேன்! :)

முதலில் பாசஞ்சர் ரயில் போல் ஓடிக் கொண்டிருந்த இந்த அம்மன் பாட்டு ரயிலை, எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு மாற்றிய பெருமை கவி-க்காவையும், SK ஐயாவையும் தான் சாரும்! இங்கு அவிங்க போட்ட பதிவுகளின் எண்ணிக்கையை நீங்களே எண்ணிக்கோங்க! :)

அடுத்து...இந்தப் பாட்டை ரொம்ப அருமையாப் பாடிக் கொடுத்த மீனாக்ஷி!
அன்னை அவள் காரியங்களை அவளே நடத்திக் கொள்வாள் என்பதற்கு இதை விடச் சான்று வேண்டுமா?
மதுரை இவிங்க சொந்த ஊர்! மதுரை மீனாக்ஷியே நூறாம் இடுகைக்கு பாடிக் கொடுக்கணும்-ன்னு இருக்கு போல!

இவர்கள் வளர்ந்தது சென்னை. இருப்பது அமெரிக்கா. கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம்.
இவிங்க தீவிர முருக பக்தை. திருப்புகழ் பாடுவதிலும் கற்றுத் தருவதிலும் விருப்பமும் கூட. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 பேர் இவரிடம் திருப்புகழ் கற்று வருகிறார்கள். பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் இசையமைத்துப் பாடுவதில் ஆர்வம் உடையவர்.

SK ஐயா பற்றி அடியேன் என்ன சொல்லிட முடியும்!
அம்மன் பாட்டில் அவர் இட்ட இடுகைகளுக்கு மகுடம் சென்ற 99ஆம் இடுகை! அம்பாளை அழகு தமிழில், மந்திரப் பூர்வமாக, நூறாம் இடுகைக்காகவே எழுந்தருளப் பண்ணியிருந்தார்!

திருப்-புகழ் பாடுவோர் இந்த இரண்டு பேரும், இன்று திரு-வின் புகழைப் பாடி இருக்கிறார்கள்! இருவருக்கும் அடியோங்கள் நன்றி! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! பாட்டுக் குழுவில் கீதம் இசைக்கும் என் நன்-நண்பர் குமரன் மற்றும் பதிவர் அன்புத்தோழிக்கும் நன்றி!

ஜனனி என்றால் ஜனிக்கச் செய்பவள் = அம்மா!
இந்த அம்மா என்பது மந்திரமில்லாத மந்திரச் சொல்!

இந்த மந்திரத்தை ஆலயத்தில் மட்டுமல்லாது, அடி மனதில் அனைவரும் உச்சாடனம் செய்து கொண்டு தான் இருக்காங்க!
நல்லவன்/தீயவன், ஏழை/பணக்காரன், ஆத்திகன்/நாத்திகன், ஞானி/சம்சாரி, அறிவாளி/முட்டாள், உயர்திணை/அஃறிணை, ஆண்/பெண்/திருநங்கை என்று எத்தனை எத்தனை பேதங்கள் கண்ணுக்குத் தெரிந்தாலும்...

உலகில் அத்தனைக்கும் பொதுவான மந்திரம் "அம்மா"!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!

மிகவும் கொடூர குணம் கொண்ட பெண்கள் இருக்கலாம்! தன் குழந்தைகளையே தவிக்க விட்ட தாய்கள் இருக்கலாம்! இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தாய் இருக்கலாம்! பெற்ற மகவைத் தொட்டியில் வீசும் தாய் இருக்கலாம்! ஆனால்...தாய் வேறு! தாய்மை வேறு!
தாய்கள் தவறலாம்! ஆனால் தாய்மை என்றுமே தவறுவதில்லை!

தாய்மைக்கு ஆண்/பெண் உருவம் இல்லை! அதனால் தான் இறைவனைத் "தாயும்-ஆனவன்" என்றார்கள்! "அரங்கத்து-அம்மா" பள்ளி எழுந்தருளாயே என்று அந்த அரங்கனையும் "அம்மா" என்றே பாடுகிறார்கள்!
ஓடும் நதியும் அம்மா! நாடும் நாடும் அம்மா!
பேசும் தமிழும் அம்மா! பேசாத் தமிழும் அம்மா!


இந்த அம்மன் பாட்டு-100 இல், உலக அன்னையை (ஜகன் மாதாவை), அறம் வளர்த்த நாயகியை (தர்ம சம்வர்த்தினியை) தமிழ்த் தாயாகப் போற்றி வழிபடுவோம்! உலக அன்னையின் ஆதரவை மட்டுமே பெற்று, தன் பெற்றோர் ஆதரவு இன்றி வாழும் பல குழந்தைகளின் நலனை இன்று நினைத்துக் கொள்வோம்! சொல்லிலும் செயலிலும் இருத்துவோம்!

துளசி டீச்சர், கீதாம்மா, வல்லியம்மா, புதுகைத் தென்றல் அக்கா, ராமலக்ஷ்மி, ஷைலஜாக்கா, கெபி அக்கா, இன்னும் பல பேரு...மகளிர் சக்தி கொண்ட இந்த அம்மன் பாட்டு வலைப்பூ!
சக்தி தாசர்களான மெளலி அண்ணா, கணேசன், கைலாஷி ஐயா இன்னும் பலர்...வாசகர் வட்டம் கொண்ட இந்த வலைப்பூ...

பா மாலைகளையும், பூ மாலைகளையும் தொடர்ந்து அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும், அன்னைக்குச் சூட்ட வாழ்த்துங்கள் மக்களே!
ஜனனி, ஜனனி - தமிழ் நீ, தமிழ் நீ!
அரி சோதரி நீ - எமை ஆதரி நீ!
மண்ணளக்கும் தாயே! மகமாயி திருவடிகளே சரணம்!

Thursday, December 4, 2008

99. "அன்னையை ஆராதிப்போம்!"

"அன்னையை ஆராதிப்போம்!"
[அழகு தமிழில் தேவி பூஜை!]


அருள் தரும் அன்னையை ஆராதித்து நூறாவது பதிவு வரப்போகிறது! இரண்டு அணில்களும், ஒரு சிங்கமும் ரொம்பவே முனைப்பாக அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்! அதற்கு முந்தைய பதிவு இது! என்ன செய்யலாம் என யோசித்தேன்! அன்னை வரப் போகிறாள்! அவளை வரவேற்று எளிய தமிழில் ஒரு ஆராதனை செய்தவுடன் அடுத்த கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதினேன்! கணபதி காப்பு, [ஸௌந்தர்ய லஹரியை ஒட்டி]அன்னையின் எழில் வண்ணம், அதைத் தொடர்ந்து அவளுக்கு எல்லா உபசாரங்களும் கூடிய ஒரு ஆராதனை செய்து, நைவேத்தியம், கற்பூரம் எல்லாம் காட்டி, அவளை வேண்டி வணங்குவதாக இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. கொஞ்சம் நீளமான பதிவு.... தவிர்க்கமுடியவில்லை! இதனை அன்றாட ஆராதனைக்கும் பயன்படுத்தலாம்! அன்னை மகிழ்ந்து எல்லா நலனும் அருள்வாள்! ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!
*********************************************

"அன்னையை ஆராதிப்போம்!"
செங்கமலப் பொற்பாதம் திருவடிகள் தாங்கிவரும்
அங்கயற்கண்ணியின் அருட்பூஜை யான் செய்திட
பங்கமொன்றும் வாரமால் பாங்குடனே காத்திடவே
மங்கள விநாயகனே முன்வந்து காத்திடுவாய்!


'அன்னையின் அருள்வடிவச் சிறப்பு!'
தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!

கார்மேகம் போலிங்கே கூந்தலதை விரித்திருப்பாள்!
கார்குழலாள் சடைவிரிக்க சகலமுமே அதிலடங்கும்!

கற்றையொன்று புரளுகின்ற நெற்றியதில் சுட்டி மின்னும்!
வெற்றியதைச் சொல்லிவந்து வாழ்வளித்துத் தந்துவிடும்!

முன்நுதலில் துலங்கிவரும் குங்குமத்தைப் பார்த்திருந்தால்
முன்வந்த தீமையெலாம் பின்னொழிந்து ஓடிவிடும்!

வில்போலும் புருவமது வேல்விழியைக் காட்டிவிடும்!
சேல்போலத் துள்ளுகின்ற விழியிரண்டும் பூத்து நிற்கும்!

கண்ணழகைச் சொல்லிடவோ காலமிங்கு போதாது!
விண்ணவரும் தவித்திடுவார் சின்னவன் யான் என் சொல்வேன்!

எடுப்பாக வளைந்திருக்கும் நாசியிலே ஒளிவீசும்
மூக்குத்திச் சிவப்பினிலே முன்வினைகள் பறந்தோடும்!

இளம்பஞ்சு போலவிங்கு மெலிதாகச் சிவந்திருக்கும்
மென்பட்டுக் கன்னங்கள் மெய்ம்மறக்கச் செய்திருக்கும்!

தாம்பூலச் சிவப்பழகா தன்மூக்குச் சிவப்பழகா எனத்
தத்தைகளும் அன்னையிவள் செவ்விதழை ஆழ்ந்திருக்கும்!

முத்துப்பல் மோஹனமே! முத்துநகைச் சித்திரமே!
மொழிபேசும் கோமளமே! முகத்தழகை என் சொல்வேன்!

குழலங்கு மூடிவரும் காதுமடல் குண்டலங்கள்
வழிவழியாய் வந்திருக்கும் தீதெல்லாம் அசைத்துவிடும்!

வெண்சங்குக் கழுத்தழகு கமுகொன்றைக் காட்டிவிடும்
முன்மார்பில் தவழ்ந்திருக்கும் முலையிரண்டும் முந்திவரும்!

அமுதக் கலசமென அசைந்திருக்கும் மென்முலைகள்
தமிழமுதம் தந்துவிடத் தவித்திருக்கும் மார்பினிலே!

செவ்வல்லிக் கையிரண்டும் சேர்த்தணைத்து முத்தி தரும்!
செவ்விரல்கள் குழைத்திருக்கும் செம்பவளம் தோற்றுவிடும்!

இல்லையென்று சொல்லிவிடும் இடையங்கு தேடிவிட
இல்லையெனப் போய்விடுமே இருந்திட்ட பாவமெல்லாம்!

நாபிச் சுழலினிலே நற்கதியும் கிட்டிவிடும்
ஆவிக்கும் இதமளிக்கும் அற்புதமும் தெரியவரும்!

நீள்துடைகள் நெஞ்சமதில் நர்த்தனங்கள் ஆடிவரும்
கால்விரல்கள் நடந்துவரும் அழகினிலே எனைமறப்பேன்!

நற்கலவை தோய்த்திருக்கும் நறுமணமும் கூந்தலிலே!
சொற்கவிகள் பிறந்திருக்கும் சுந்தரியாள் கண்களிலே!

சந்திரனும் சூரியனும் கண்ணிரண்டில் துலங்கிடவே
செந்தாமரைப் பதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

செவ்விதழ்கள் சிந்திவரும் புன்னகைக்கோர் விலையில்லை
செங்கழுத்தில் சிறந்திருக்கும் பொன்மாலை அசைந்திருக்கும்!

பத்துவிரல் மோதிரமும் எத்தனை பிரகாசமது
கொத்துமலர்ப் பூங்குழலில் கோடி வரும் வாசமது!

மூக்குத்தி புல்லாக்கு முகத்தழகைக் கூட்டிவிடும்
பூக்குத்தி நின்றிருக்கும் சூடாமணி ஒளிவீசும்!

ரத்தினப் பதக்கமும் மோஹன மாலையழகும்
சுத்தமான செவிகளிலே செங்கமலம் சிரித்திருக்கும்!

கையிரண்டில் கங்கணங்கள் மார்பணையும் மாணிக்கப் பதக்கம்
இடுப்பினிலே ஒட்டியாணம் காலிரண்டில் தண்டை கொஞ்சும்!

மெட்டியொலி ஓசையிலே மேதினியும் உயர்ந்துவிடும்
கச்சிதமாய் உடலணைக்கும் காஞ்சிப்பட்டு காத்துவிடும்!

இடையணியும் மேகலையும் இடரனைத்தும் தள்ளிவிடும்
நடையழகைக் கண்டிருந்தால் நல்லனவும் பிறந்துவிடும்!

பொன்கொலுசு ஒலியெழுப்ப புத்தொளியும் சேர்ந்துவிடும்
மின்னலிடை நெளிவினிலே மயக்கங்கள் தெளிந்துவிடும்!

மருதாணிச் சிவப்பிருக்கும் மலர்கைகள் ஆட்டிவர
செம்பஞ்சுப் பாதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

என்னவளே என் தாயே! ஏற்புடைய ஏந்திழையே!
அன்னநடை நீ நடந்து என்முன்னே வருவாயடி!

அன்புடனே நினையழைத்து ஆராதனை யான் செய்ய
அன்புருவாய் வருவாயடி! ஆதிசிவன் தேவியளே!


[இத்தனை அழகுடன் அருள்செய வரும் அன்னையை முறைப்படி அழைத்து ஆராதனை செய்வோம்!]

'அழைப்பு '

அந்தமும் ஆதியில்லா அருட்பெரும் ஜோதிமாயே!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!


"இருக்கை"

வந்தனை வந்தனை நீ வரதே! வான்முகிலே அம்மா!
சிந்தனை களித்து இங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய்!


"சந்தனம் அளித்தல்"

பந்தனை அறுத்து எம்மை பவக்கடல் தாண்டச் செய்ய
சந்தனம் ஏற்பாய் அம்மா! சண்டிகா! சந்த்ரரூபி!


"குங்குமம் இடல்"

அங்கயற்கண்ணி மாயே! அடியாரைக் காக்க நீயே
குங்குமம் ஏற்பாய் அம்மா! குமரியே! அமரவாழ்வே!


"அக்ஷதை தூவல்"

பக்ஷமும் கொண்டு எங்கள் பவவினை பறந்து ஓட
அக்ஷதை ஏற்றுக் கொண்டு அருள்புரி அமரதேவி!

"தாம்பூலம் அளித்தல்"

வேம்பாகும் உலக வாழ்க்கை வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்றுக் கொண்டு தயவுடன் அருள்வாய் அம்மா!


"கனிகள் அளித்தல்"

பனி ரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரம் எல்லாம்
கனியிதை ஏற்றுக் கொண்டு கடைக்கண்ணால் பார்த்திடாயோ!


"தூபம்"

பாபங்கள் விலகிச் சித்தம் பரிசுத்தமாகவென்று
தூபமும் ஏற்றுக்கொண்டு துயர் கெட அருள்வாய் அம்மா!


"தீபம் காட்டல்"

தாபமாம் பிறப்பிறப்பு தனித்துயர் முக்தி மேவ
தீபமும் ஒளிர ஏற்று திகம்பரி அருள்வாய் அம்மா!


"அன்னையின் 108 போற்றி"

ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!
சொல்லிலும் சக்தி! செயலிலும் சக்தி!
சொல்லினும் சக்தி! செய்யினும் சக்தி!
பண்ணிலும் சக்தி! பண்ணினும் சக்தி!

மண்ணிலும் சக்தி! விண்ணிலும் சக்தி!
கையிலும் சக்தி! கருத்திலும் சக்தி!
தையலும் சக்தி! தருபவள் சக்தி!
எங்கினும் சக்தி! எதனிலும் சக்தி!
தங்கிடும் சக்தி! தாங்கிடும் சக்தி!


வாக்கிலும் சக்தி! வடிவிலும் சக்தி!
நாக்கிலும் சக்தி! நாடிடும் சக்தி!
ஓங்கிடும் சக்தி! உலவிடும் சக்தி!
நோக்கிடும் சக்தி! நினைவிலும் சக்தி!
கண்களில் சக்தி! கொண்டவள் சக்தி!
அன்பெனும் சக்தி! அவளிறை சக்தி!
நம்பிடும் சக்தி! நடப்பதும் சக்தி!
தெம்பெனும் சக்தி! தொடர்பவள் சக்தி!
வாழ்வெனும் சக்தி! தந்தவள் சக்தி!
தாழ்விலாள் சக்தி! தளர்விலாள் சக்தி!

உணர்வெனும் சக்தி! உயிரெலாம் சக்தி!
கொணர்பவள் சக்தி! கொண்டவள் சக்தி!
தானெனும் சக்தி! தனதெனும் சக்தி!
ஆணெனும் சக்தி ஆள்பவள் சக்தி!
அளிப்பவள் சக்தி! அழிப்பவள் சக்தி!
களிப்பவள் சக்தி! களைப்பிலாள் சக்தி!
படைப்பவள் சக்தி! காப்பவள் சக்தி!
துடைப்பவள் சக்தி! துயரிலாள் சக்தி!
என்னவள் சக்தி! என்னிலுள் சக்தி!
அன்னவள் சக்தி! துணையவள் சக்தி!

இசைபவள் சக்தி! இசைப்பவள் சக்தி!
அசைபவள் சக்தி! அசைப்பவள் சக்தி!
அணுவவள் சக்தி! அண்டமும் சக்தி!
கணுவிலும் சக்தி! கரும்பவள் சக்தி!
கொடுப்பவள் சக்தி! கொடையவள் சக்தி!
எடுப்பவள் சக்தி! எதிர்ப்பவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! அகிலமும் சக்தி!
வினைப்பயன் சக்தி! விதைப்பவள் சக்தி!
உயிர்ப்பவள் சக்தி! உயர்ந்தவள் சக்தி!
மெய்ப்பொருள் சக்தி! பொய்யிலாள் சக்தி!

நிலமானவள் சக்தி! நீரானவள் சக்தி!
நெருப்பானவள் சக்தி! காற்றானவள் சக்தி!
வானானவள் சக்தி! வளமானவள் சக்தி!
நானானவள் சக்தி! 'நான்' அழித்தவள் சக்தி!
நிலவானவள் சக்தி! ஒளியானவள் சக்தி!
எழுஞாயிறு சக்தி! தீயானவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! தணிப்பவள் சக்தி!
இணைப்பவள் சக்தி! இருப்பவள் சக்தி!
ஏற்றமும் சக்தி! போற்றலும் சக்தி!
மாற்றமும் சக்தி! சீற்றமும் சக்தி!

அருள்பவள் சக்தி! பொழிபவள் சக்தி!
தருபவள் சக்தி! தாழ்விலாள் சக்தி!
சக்தியெனும் சக்தி! தந்தவள் சக்தி!
அருளெலாம் சக்தி! அவள் பதம் பணிவோம்![108]
ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!


'நிவேதனம்'

ஐவேதனைப் புலன்கள் அடங்கிடத் தாயே இந்த
நைவேத்தியம் ஏற்றுக் கொள்வாய் நாயகி! லோக மாதா!


'கர்ப்பூரம் காட்டுதல்'

அற்பமாம் ஜகத்துமாயை அழிந்தருள் ஞானம் மேவ
கர்ப்பூர ஜோதி ஏற்று கனிவுடன் அருள்வாய் அம்மா!


'வேண்டல் வாழ்த்து '

அம்மையே! அருளே! போற்றி! ஆதித்ய ரூபி! போற்றி!
எம்மையே ஆதரித்து இருள்கெட அருள்வாய்! போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம் முற்றிட விதிப்பாய்! போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய்! போற்றி!


'குற்றம் பொறுக்க வேண்டல்'

அறியாமை இருளில் சிக்கி ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவியே! பொறுப்பாய் அம்மா!

மந்திரம் சடங்கு வேள்வி மதிப்புறு உபசாரங்கள்
வந்தனை துதிகள் நியாஸம் வழுத்தின ஜபமும் தியானம்

இந்தவாறு செய்தபூஜை இருந்திடும் பிழைகள் எல்லாம்
சிந்தையில் கொள்ளாது ஏற்று சீர் பெற அருள்வாய் அம்மா!

கனி மலர் தூப தீபம் கர்ப்பூர நைவேத்தியங்கள்
நனியிலாச் சிறிதானாலும் நாயகீ நிறைவாய்க் கொள்வாய்!


'உபசாரம் செய்து அனுப்பி வைத்து மீண்டும் வரவேண்டல்'

வந்தமனை வாழுமம்மா! இருந்தமனை ஈடேறும்!
சொந்தமுடன் யான் செய்த பூஜையினை நீ ஏற்று

சிந்தை களிப்புடனே எமை வாழ்த்த வேண்டுமம்மா!
இந்தமுறை நீ சென்று இன்பமுடன் வருவாயம்மா!

அந்தமிலா ஆதிசக்தி! நின் பொன்னடியே சரணமம்மா!
பந்தமுடன் நீயென்றும் எமைக் காக்க வேண்டுமம்மா!

சிரிப்புடனே நீ சென்று நூறுகாண வருவாயம்மா!
சிறப்புடனே யாம்வாழ நின்னருளைத் தருவாயம்மா!

வந்தனம்! வந்தனம்! வந்தனம்! வந்தனம் சொன்னேனம்மா!
தந்தனம்! தந்தனம்! தந்தனம்! என்றே தயவுடன் நீ அருள்வாயம்மா!
******************************************************************
ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!

Monday, December 1, 2008

98. முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வி!


'அடியார் பலர் இங்குளரே' என்று பாடுவார் பாரதியார்.

'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார்.

'மத் சித்த மத் கத ப்ராண போதயந்த பரஸ்பரம் கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச - என் மேல் முழுமனத்தையும் வைத்து என்னிடம் தரப்பட்ட வாழ்க்கையுடன் ஒருவருக்கொருவர் என் பெருமைகளைக் கூறிக் கொண்டு என்றைக்கும் மகிழுங்கள்; பரமானந்தத்தை அனுபவியுங்கள்' என்பான் கீதாசாரியன்.

'விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர்' என்பார் அபிராமி பட்டர்.

இந்த முறைகளில் எல்லாம் அன்னையின் பெருமைகளைப் போற்றிப் பணிந்து பாடும் அடியவர்கள் குழுமிய இக்குழுப்பதிவு தொடங்கிய சிறிது காலத்திலேயே நூறாவது இடுகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இறைவனின் மூவிரல் தடவுதல் என்னும் இன்பம் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காமலேயே 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று பயன் எண்ணாமல் கடமையைச் செய்த அணில்களாக இங்கே அடியவர்கள். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிற்குப் பாடல்களை இட்டார்கள். நூறாவது இடுகை என்னும் ஒரு குறியீட்டினை நெருங்குகின்றது அணில்களின் இன்பப் பயணம். இப்பயணம் இந்த நூறாவது இடுகையைத் தாண்டித் தொடர்ந்து நடக்கும். இந்த அணில்கள் இவ்வரங்கை விட்டு நீங்கிய பின்னரும் புதிய அணில்களால் தொடர்ந்து நடத்தப் பெறும்.

நூறு என்ற குறியீட்டினை நெருங்கும் முகமாக இந்த இடுகையில் அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னையின் புகழைப் போற்றப் போகிறோம். இதோ அக்கை அணில் எல்லா அணில்களையும் கூட்டிவைத்துப் பாடும் பாடல் இங்கே.



அன்னையே உன்னையே
அனுதினம் எண்ணியே
ஆனந்த மயமாகினோம்!

கன்னியே உன்னையே
கருத்திலே பின்னியே
கள்ளுண்ட களிறாகினோம்!

மண்ணிலே பிறந்தாலும்
மானிடப் பிறவியின்
மகிமையை உணர்ந்துகொண்டோம்!

கண்ணிலே உனைவைத்து
கணந்தோறும் உந்தன்புகழ்
பாடிடும் பேறுபெற்றோம்!


வீணைஇரு கரமேந்தி
வெள்ளைமலர் மீதினிலே
வீற்றிருக்கும் பேரெழிலே!

நான்முகனின் நாவினிலே
நயமுடனே உறைபவளே
மறைபோற்றும் கலைமகளே!

மாலவனின் மணிமார்பில்
தானமர்ந்து ஆளுகின்ற
வாரிதியின் வளர்மகளே!

மனமுவந்து மன்னுயிரை
இன்னுயிராய்க் காக்கின்ற
அருளூற்றே அலைமகளே!

திரிசூல ஈசனுடன்
திருமேனி பகிர்ந்தவளே
திரிபுரத்தின் நாயகியே!

கருகமணி விழிகளிலே
பரிவுமிகக் கொண்டவளே
பரிமளையே மலைமகளே!

பரிபூசனம் செய்து
பாவையுனைப் பணிகின்றோம்
பதமிரண்டைப் பற்றிக் கொண்டோம்!

சதமென்று உனைநம்பி
சந்ததமும் பாடுகின்றோம்
சங்கரியே சியாமளையே!

கைப்பிடித்துக் கரையேற்ற
கருணைகொண்டு வரவேணும்
காருண்ய தேவதையே!

ஆழிமழை போல்அன்பால்
அரவணைக்க வரவேணும்
அம்பிகையே ஈஸ்வரியே!

இனி தம்பி அணிலின் முறை. இந்த அணில் பாடப் போவதில்லை. பாடலில் ஆழப் போகிறது.

'அரிது அரிது மானிடராதல் அரிது' என்றாள் தமிழ் மூதாட்டி. மண் மீது மானிடப் பிறவி என்பது பெறற்கரியது என்பது பெரியோர் துணிபு. நுண்ணியிரில் தொடங்கி பிரம்மன் வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் மானிடப்பிறவிக்கு ஒரு தனித் தன்மை உண்டு. அஃறிணை உயிர்களுடன் ஒப்பிட மானிடப் பிறவியின் உயர்வு உள்ளங்கைக் கனி. உயர்திணை உயிர்களிலும் அப்படியே என்பது பெரியோர் சொல்வது. செய்த நல்வினைகளுக்கு ஏற்ப தெய்வப் பிறவி கிடைத்தாலும் வினைப்பயன்களை எல்லாம் துறந்து வினைகள் ஒன்றும் இன்றி பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட தேவர்களும் மானிடர்களாகப் பிறக்க வேண்டும் என்பர் முன்னோர். முக்தி நிலை மட்டுமின்றி இறையின் அன்பிலும் அருளிலும் முழுவதும் திளைத்து ஆறாத இன்ப நிலை அடையவும் மானிடப்பிறவி ஒன்றினால் மட்டுமே இயலும் என்பது முன்னோர் வாக்கு. இதனை மிக அழகாக இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளில் சொன்னார் அக்கையார்.

அகரத்தை போன்றவள் அவள் என்ற திருக்குறளின் முதல் குறளின் கருத்திற்கேற்ப அகரத்தில் இந்தப் பாடல் தொடங்கியது. உலகு என்ற மங்கலச் சொல்லுடன் இலக்கியங்களில் பல தொடங்குவதைப் போல் உலகங்களை எல்லாம் ஈன்ற அன்னையே என்று தொடங்கி அந்த மங்கலச் சொல்லையும் மறைவாக வைத்தது இந்தப் பாடல்.

உலகில் எண்ணுதற்கு எத்தனையோ பொருளிருக்க அவற்றில் எல்லாம் சுவையின்றி அவள் மீது மட்டும் சுவை கொண்டு அவளை மட்டுமே அனுதினம் எண்ணுகின்றோம் என்பதை 'அன்னையே உன்னையே' என்று ஏகாரத்தால் உரைத்தது இந்தப் பாடல். 'நாராயணனே நமக்கே' என்று இரு ஏகாரத்தால் கோதை நாச்சியார் சொன்னதைப் போல.

ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்ற பின்னரும் கன்னியென நிற்கிறாள் இவள் என்று வியப்பார் அபிராமி பட்டர். அதனை நினைவூட்டுகின்றது இந்தப் பாடலும் - முதல் வரியில் அன்னையே என்று தொடங்கிவிட்டு அடுத்த வரியில் கன்னியே என்கிறது.

'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றனர் அருளாளர். 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்றாள் நாச்சியார். மற்றைப் பொருட்களில் சுவை மாறி அவற்றைத் தொடர்ந்து செல்லும் நிலை மாறி கணந்தோறும் அன்னையே என்று பாடும் நிலை அவள் அருளாலேயே அமைந்தது என்பதால் அதனைப் 'பேறு' என்று போற்றுகிறது இந்தப் பாடல்.

அவளை இப்படி அனுதினமும் எண்ணிப் போற்றிப் பாடும் பேற்றினைச் சொல்லிவிட்டு அன்னை மூன்று வடிவங்களில் நின்று மன்னுயிரைக் காப்பதைப் போற்றுகிறது இந்தப் பாடல்.

'வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருள் ஆக விளங்குகிறாள் தெள்ளுத் தமிழ் கலை வாணி' என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அவன் சொன்னதை வழிமொழிவதைப் போல் இருக்கின்றன கலைமகளைப் போற்றும் வரிகள்.

கலைமகளாக வீணை இரு கரம் ஏந்தி இசைத்தமிழை வழங்குகிறாள். பேரெழில் கொண்டு வெண்தாமரையில் வீற்றிருந்து நாடகத் தமிழ் அருளுகின்றாள். நான்முகன் நாவினிலே நயமுடன் உறைந்து மறைகள் என்னும் இயற்றமிழைப் பொழிகின்றாள்.

அவளே அலைமகளாக உருக்கொண்டு மன்னுயிரைக் காக்க மாலவன் மண்ணுலகில் தோன்றும் போதும் 'அகலகில்லேன் இறையும் என்று' அவன் திருமார்பில் நிலையாய் அமர்ந்து கருணை மழை பொழிகின்றாள்.

அவளே திரிபுரசுந்தரியாக அருள் புரிபவள். ஈசனின் திருமேனியில் இடப்புறம் கொண்டு திரிபுர அசுரர்களைச் சிரித்தெரி கொளுத்தியவள். 'இடது கண் சந்திரன்; வலது கண் சூரியன்' என்று சிவவாக்கியர் சொல்லியதற்கேற்ப ஈசனின் பாகமான வலக்கண்ணால் கதிரவனைப் போல் பகைவர்களைக் கொளுத்திவிட்டு அன்னை தனது பாகமான இடக்கண்ணால் சந்திரனைப் போல் அன்பர்களிடம் பரிவு மிகக் கொள்வதையும் இப்பாடல் சுட்டுகிறது.

Get this widget | Track details | eSnips Social DNA


முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வியை மீண்டும் மீண்டும் போற்றும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடலை பனுவலாகப் போற்றிப் பாடுவோம்.

Thursday, November 27, 2008

97. குணா - பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க!

மும்பை இன்னுயிர்கள் அனைத்தும் அமைதி பெற வேண்டிக் கொண்டு, அம்மன் பாட்டு-97 தொடர்வோம்! இந்த இடுகையை நேற்றே இட எண்ணியிருந்தது! ஆனால் மும்பையில் நடைபெற்ற பித்து பிடித்த ஆட்டத்தின் முன், குணா படத்தில் வரும் பித்து ஒன்றுமே இல்லை என்றாகி, இடாமல் இருந்து விட்டேன்! இறந்தவர்கள் மனக்கேதம் தீரும் மோட்ச தீபத்தை மற்ற பதிவுகளில் ஏற்றிவிட்டு, இடுகையை அப்படியே விட்டு விட்டேன்!

என் வங்கியின் சிறு பகுதி ஒன்று மும்பையில் உள்ளது. அதில் ஒருவரை மட்டும் தொடர்பு கொள்ளவே முடியாமல் போக, பலரும் பதபதைப்புக்கு உள்ளாகி விட்டோம்! கடைசியில் Fort Station-இல் இருந்து தப்பித்து, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தவரைத் தொடர்பு கொண்ட பின் தான் நிம்மதியானோம்!
உம்...உலகில் தான் எத்தனை எத்தனை பித்து! பித்தினால் ஆடும் ஆட்டங்கள்! பித்தலாட்டங்கள்!

வெறியில் ஊறிய பித்து, நச்சு ஆகிறது!
அன்பில் ஊறிய பித்து, முத்து ஆகிறது!


பித்தா பிறைசூடி இறைவா பெம்மானே! - பித்தா என்று பாடலைத் துவங்கினார் சுந்தர மூர்த்தி நாயனார்! ஏன்? இறைவன் பித்தனா? எதற்கு அப்படிப் பாடணும்? சொல்லுங்க பார்ப்போம்!
அம்மன் பாட்டு இன்னும் சில நாட்களில் 100ஐத் தொடும் நல்வேளையில், சில நல்ல பாடல்கள் உங்களிடையே உலா வரப் போகின்றன! இன்று குணா படத்தில் இருந்து ஒரு அற்புதமான "பித்துப்" பாடல்!

இசைஞானி இளையராஜாவின் அருமையான பின்னணி இசையில், பாவனி என்னும் காணக்கிடைக்காத ராகத்தில், யேசுதாஸ் பாடுகிறார்!
அம்பாளின் அலங்கார வர்ணனையாக, அபிராமி அந்தாதி பாடல்கள், திரை இசையுடன் இணைகிறது!




*** பாடலின் துவக்கத்தில் வரும் காட்சிகளையும் கொடுத்துள்ளேன்! தன்னைச் சிவன் என்று கருதிக் கொள்ளும் "பித்தன்" குணா! அபிராமி என்ற அம்பாளின் உருவத்தை எப்படித் தன் நெஞ்சில் இறக்கிக் கொள்கிறான் என்பதற்கு, அந்த ஜனகராஜ்-கமல் வசனக் காட்சி மிகவும் முக்கியம்! பாடலின் முடிவில் சிவதாண்டவக் காட்சியும் வரும்! இந்த வீடியோவில் இல்லை! யாரிடமேனும் இருந்தால் சொல்லுங்கள்!

*** பாடலின் ராகம் = பாவனி
ஏங்கி ஏங்கித் தேடும் மூடில் பாடும் ராகம்! பல இசைக் கலைஞர்கள் கூட இந்த ராகத்தை அதிகம் பாடியது கிடையாது! இதில் ஏதாச்சும் கீர்த்தனை இருக்கா-ன்னு கூடத் தெரியாது! அதை இளையராஜா வெளிக் கொணர்ந்துள்ளார். அதுவும் சரணம், சரணம் என்று வரும் கட்டத்தில், ராகம் அப்படியே ஜிவ்வுனு உடம்புக்குள் ஏறும்!

எம்.எஸ்.வி, ரஹ்மான் என்று மற்ற சிறந்த இசையமைப்பாளர்கள் கூட, அழகான ராகங்களைத் தந்துள்ளார்கள்! ஆனால் இது போன்ற Mystic Search செய்து, ராகங்களுக்கு சினிமாவில் Vintage Look கொடுத்த பெருமை இளையராஜாவையே சேரும்! (இப்படிச் சொல்வதால் இதையும் சொல்லி விடுகிறேன்: "பதிவர் ஜிரா-என்னை மன்னிக்கவும்" :))

ராஜாவின் ராசியோ என்னமோ, அவர் தரும் வின்டேஜ் ராகங்கள், பாடலின் காட்சியமைப்பிலும் ஒன்றி விடுவதால், ஆழமாகப் பதிந்து விடுகிறது! (எம்.எஸ்.வி தந்த பாலமுரளியின் மஹதி ராகத்துக்கு, பாடல் காட்சிகள் எல்லாம் அப்படி அமையவில்லை என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்)

*** தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற பாட்டின் ராகம், கிட்டத்தட்ட இதற்கு க்ளோசாக வருகிறது! தியாகராஜ கீர்த்தனை - இந்த ராகமும் சற்று க்ளோஸ் தான்! (கொத்ஸ், ஜீவா - சரி தானே?)
தியாகராஜர் கூடவா பாவனியில் ஒன்றும் எழுதவில்லை? ஹூம்! ஆச்சரியம் தான்!


நாயகி நான்முகி நாராயணி கை-நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம்
(அரண் நமக்கே)
சரணம் சரணம் சரணம்!
சரணம் சரணம் சரணம்!!

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே!
மதி வருக, வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே!

(பார்த்தவிழி)

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி, இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படம்கொண்ட அல்குல் பனி மொழி, வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

(பார்த்தவிழி)



இப்போ பொருளுக்கு வருவோம்!
நாயகி நான்முகி நாராயணி = உலகத் தலைவி, நான்முகச் சக்தியின் ரூபமே, நாரணச் சக்தியின் ரூபமே!

கை-நளின பஞ்ச சாயகி = உன் நளினமான கைகளில், ஐந்து மலர் அம்புகள்! (விரல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த என்ற திருப்புகழை நினைவு கூருங்கள்)
கரும்பு வில்லுடன் மொத்தம் ஐந்து மலர்க் கணைகள்! தாமரைக் கணை, மாம்பழ மலர்க் கணை, அசோக மலர்க் கணை, முல்லைக் கணை, நீலோற்பல மலர்க் கணை!

சாம்பவி சங்கரி சாமளை = சிவச்சக்தியே (சாம்பு), இன்பம் தரும் சங்கரி, கரும்பச்சைக் கருப்பி (சியாமளை)

சாதி நச்சு வாயகி = கொடும் விஷத்தை வாயில் கொண்ட பாம்பை அணிந்தவளே!

மாலினி வாராகி சூலினி மாதங்கி = மாலைகள் சூடும் மாலினி, உலகம் காக்கும் நாரண-வராகச் சக்தீ, சூலம் ஏந்திய சூலினி, மதங்க முனிவரின் மகளான மாதங்கி!

என்று ஆய கியாதி உடையாள் சரணம் (அரண் நமக்கே) = இப்படி பல புகழ் உடையவளே, சரணம் உன் சரணத்துக்கே!
ஆய கியாதி = பல புகழ்!
ஆயகி்+ஆதி உடையாள் என்றும் சிலர் பிரிக்கப் பார்த்துள்ளேன்! இத்தனையும் உடையவளே, (அகிலத்துக்கு) ஆதியாய் இருப்பவளே, அகிலாண்டேஸ்வரி என்றும் பொருள் கொள்ளலாம்!

****

(தமிழே பிடிக்காத நண்பர்கள் கூட, எனக்கு ட்ரீட் வாங்கிக் கொடுத்து, உக்கார வச்சி, பொறுமையா, சொல்லு கேஆரெஸ், சொல்லு கேஆரெஸ்-ன்னு பொருள் கேட்டது இந்தப் பாட்டுக்கு மட்டுமே :)))

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி = ஒரே இடத்தில் இருந்து, நினைத்தவுடன் வந்த விம்மிதத்தால் விம்ம, உன்னித்து எழ, அதற்கு இணையாக ஒன்றோடு இன்னொன்றும் இறுக்கமாகி...

இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு = மனத்தால் இளகி உருக, முத்து வடங்கள் வந்து மேலாடும் மலைகள், அந்தத் திருக் கொங்கைகளால் (திரு மார்பகங்களால்)

இறைவர் வலிய நெஞ்சை = ஈசனின் தியான-மோன வலிய நெஞ்சத்தையும்

நடங்கொண்ட கொள்கை, நலம் கொண்ட நாயகி = அசைத்துப் பார்க்க வல்லவளே!
அப்படி அசைவில்லாத "அசை"வனையும் சைவனாக்கும் கொள்கை நலம் கொண்ட தாயே

நல் அரவின் படம்கொண்ட அல்குல் = நல்ல பாம்பு ஒன்று படமெடுத்தாற் போல் உள்ள அல்குலை (பிட்டம்) உடையவளே!

பனி மொழி = பனி போன்று குளிர் மொழி கொண்டவளே!

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே! = வேத ஓசையினைக் காற் சிலம்பில் எழுப்புபவளே!

(இந்தப் பாடல், அண்மையில் மகவைப் பெற்றெடுத்த ஒரு அன்னை, பாலூட்டும் போது, அவளுக்கு என்னென்ன உடல் மாறுதல்கள் நிகழும் என்பதாகவும் ஒரு விளக்கம் இருக்கு! அன்னை சிவஞானப் பாலை அன்பருக்கு ஊட்டும் போது உண்டான காட்சி! முத்து வடங்கொண்ட கொங்கை மலை என்பதில் இருந்து நீங்களே யூகித்துச் சொல்லுங்கள்! தேவைப்பட்டால், பிறகு சொல்கிறேன்!)


மதி வருக,
வழி நெடுக
ஒளி நிறைக
வாழ்விலே!

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க - அம்மன் பாட்டு-100 ஐ நோக்கி...

Monday, November 17, 2008

96. ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம் !

அம்மாவுக்கு என் சொந்தக் கவிதைகளைக் கேட்டு அலுத்துப் போகுதோ இல்லையோ, படிக்கிறவங்களுக்கு அலுத்திருக்குமோன்னு ஒரு எண்ணம் :) அதனால இந்த முறை நிறையப் பேருக்குப் பிடிச்ச, சுசீலாம்மா பாடின பாடல்கள்ல ஒண்ணைப் பார்க்கலாமா? "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா" இசைத் தட்டுல வருகிற இந்த அருமையான பாடல்களை எல்லாம் எழுதியவர் யாருன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...



ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்

(ஆயிரம்)

ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு

(ஆயிரம்)

நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்

(ஆயிரம்)

ஒலி வடிவம்

Monday, November 10, 2008

அவளின்றி ஓரணுவும் அசையாது !



அவளின்றி ஓரணுவும் அசையாது
அவள்அன்பின்றி ஓருயிரும் தரியாது
பகலிரவும் அவளின்றி மாறாது
புவியிதுவும் அவள்சொன்னால் சுற்றாது

அன்பாலே ஆனஎன் அன்னை அவள்
அன்புக்கு எல்லையென்றே எதுவும் இல்லை
சரணென்று பணிந்தோரை ஏற்பாள் அவரை
கண்ணுக்குள் மணிபோலே கணந்தோறும் காப்பாள்

தாயாக மகளாக வருவாள் அவள்
தடையேதும் சொல்லாமல் அன்பள்ளித் தருவாள்
அன்புமிகு சோதரியும் ஆவாள் அவள்
என்றுமெனைப் பிரியாத ப்ரியசகியும் ஆவாள்

எல்லாமே அவளென்று ஆனாள் அவளை
சொல்லெடுத்துப் பாடிடவே தமிழெனக்குத் தந்தாள்
என்னவளை என்றென்றும் மறவேன் அவளின்
புகழ்பாடி துதிபாடி மகிழ்ந்தென்னை மறப்பேன்!


--கவிநயா

Monday, November 3, 2008

இருப்பது போலே இருக்கின்றாய்...



இருப்பது போலே இருக்கின்றாய் - அம்மா
ஆனால் உன்னைக் காணவில்லை
எங்கும் எதிலும் இருக்கின்றாய் எனக்கேன்
உன்னிருப்பிடம் தெரியவில்லை?

வாழ்க்கைக் கடலில் தள்ளி விட்டாய் - அம்மா
நீந்துதல் எவ்விதம் சொல்லவில்லை
கண்ணீர்க் கடலில் மிதக்க விட்டாய் - அம்மா
கரைகா ணும்வழி காட்டவில்லை

புயலில் மழையில் நான் அலைந்தேன் - அம்மா
அலைகளில் சிக்கி அலைக்கழிந்தேன்
பாவக் கடலில் மூழ்கி விட்டேன் - அம்மா
போக்கிடம் இன்றி தத்தளித்தேன்

உன்னை அல்லால் யாரெனக்கு - அம்மா
உலகில் எனக்கெதும் உதவி இல்லை
உன்னை இறுகப் பற்றிக் கொண்டேன் - உன்
அடியே என்கதி நம்பி விட்டேன்

கணந்தோறும் உன்னைப் பணிகின்றேன் - அம்மா
கடைக் கண்ணாலே காத்திடுவாய் - உன்
திருவடியில் மனம் உருகிநின்றேன் - அம்மா
உள்ளம் இரங்கி உதவிடுவாய்


--கவிநயா

Sunday, October 26, 2008

அனைத்துக்கும் அன்னை நீயே !



ஆங்கார காளி நீ
ஸம்ஹார சூலி நீ
கரு நீல சியாமளையும் நீ!

கருவிலே திருவாகி
கண்ணனின் சோதரியாய்
உதித்திட்ட மாயையும் நீ!

அன்னை நீ அன்பும் நீ
அறிவும் நீ செறிவும் நீ
அறிவுக் கெட்டாப் பொருளும் நீ!

விண்ணையும் மண்ணையும்
விரிந்த அண் டங்களையும்
படைத்திட்ட விந்தையும் நீ!

வித்தும் நீ விளைவும் நீ
விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ!

மலையும் நீ கடலும் நீ
மாதவர் போற்றிடும்
மங்கையர்க் கரசியும் நீ!

சொந்தம் நீ சுற்றம் நீ
பந்தம் நீ பற்றும் நீ
நிலையான ஆனந்தம் நீ!

சொத்தும் நீ சுகமும் நீ
கற்பனைக் கெட்டாத
கற்பக விருட்சமும் நீ!

காற்றுக்குள் அசைவு நீ
கடலுக்குள் உவர்ப்பு நீ
காட்டுக்குள் அடர்த்தியும் நீ!

அசைகின்ற உயிர்கள் நீ
அசையாத யாவும் நீ
அனைத்துக்கும் அன்னை நீயே!!


அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!!


அன்புடன்
கவிநயா

Monday, October 20, 2008

கண்ணுக்குள்ள ஒன்னுருவம் கலையாம நிக்குதடி!



கண்ணுக்குள்ள ஒன்னுருவம்
கலையாம நிக்குதடி
நெஞ்சுக்குள்ள ஒன் நெனப்பு
நீங்காம சுத்துதடி

சொல்லச் சொல்ல ஒம்பேரு
சக்கரையா ருசிக்குதடி
மெல்ல மெல்ல ஒன்னழகில்
எம் மனசு சொக்குதடி

கைவளயல் கலகலத்து
கானம்பாடிக் களிக்குதடி
கால்கொலுசு சலசலத்து
சங்கீதமா ஒலிக்குதடி

சின்னஇதழ்ச் சிரிப்பினிலே
சிந்தையெல்லாம் மயங்குதடி
தந்தனத்தாந் தமிழ்ப்பாட்டு
தானாகப் பொறக்குதடி

--கவிநயா

Monday, October 13, 2008

எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள் !




ஒன்றும் அறியாத உன்பிள்ளை தானம்மா
உன்னை அறிந்து கொண்டேன்
உள்ளம்கொள்ளை கொள்ளும் உந்தன் புன்னகையில்
என்னை இழந்து விட்டேன்

அண்டங்கள் யாவையும் அன்போடு ஆள்கின்ற
ஆதிமூலம் நீயே
மூன்று தொழில்களும் முறையாய் நடத்திடும்
மும்மூர்த்தியும் நீயே

எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்
என்னிலு மிருப்பவளே
கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி
என்னை இழுப்பவளே

தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்
நிலவை அமைத்தவளே
மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி
மாய்த்துச் சிரித்தவளே

கடலும் இனிப்பாகும் கரும்பும் உவர்ப்பாகும்
எல்லாம் உந்தன் ஜாலமே
பகலும் இரவாகும் இரவும் பகலாகும்
பணியும் உன்னை ஞாலமே

உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்
உந்த னடி சரணம்
எந்தன் குரல் கேட்டு கருணை கொஞ்சம் வைத்து
அம்மா நீயும் வரணும்!


--கவிநயா

Friday, October 10, 2008

"தேவி திருக்கதை" -- 10

"தேவி திருக்கதை" -- 10
"கதை சொல்லும் கதை"
முடிந்தால் முந்தைய இரு பதிவுகளையும் படித்துவிட்டு இங்கு வந்து படியுங்கள்!"

இதென்ன புதுக்கதை?

ஏதோ ஒரு கதையைச் சொன்னீங்க .. சரி!
அதுக்குள்ளே சில செய்திகள் இருக்குன்னு சொன்னீங்க.. அதுவும் சரி!
இப்ப தோத்திர வரிகளே மந்திரங்கள்னு சொல்றீங்களே!
அது எப்படீன்னு கேக்கறீங்கதானே!


இது நான் சொல்வதல்ல!
இதை நன்கு கற்றுணர்ந்து, பயின்று, அனுபவித்த ஆன்றோர்கள் சொன்னதைத்தான் இங்கே தொகுத்தளிக்கிறேன் என முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.
அதைத்தான் இங்கு உங்களுக்கும் சொல்கிறேன்.

தேவி மஹாத்மியம் என்னும்புனித நூலின் ஒவ்வொரு ஸ்லோகமுமே மந்திர அர்த்தங்கள் நிறைந்த ஒன்று.

மாதிரிக்கு ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் காட்டுகிறேன்.
ஆனால், இது உங்களில் யாரையாவது உலுக்கினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேர்ந்த சக்தி உபாசகரை நாடி, அக்கறையுடனும், ஆர்வத்துடனும் கேட்டுத் தெரிந்து கொள்ளணும்.


வெறும் புத்தக அறிவுக்காக மட்டும் இதைத் தேடவோ, நாடவோ வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு தொடர்கிறேன்.

தேவி மஹாத்மியத்தின் முதல் ஸ்லோகம் இப்படி வருகிறது.

Markandeya Uvacha:
Savarni Surya thanayo yo Manu Kadyatheshtama,
Nisamaya Thad uthpathim vistharath gadatho mama., 1


Makandeya told: - Please hear from me about the origin of Savarni who is the son of Sun god and the eighth Manu in detail. (There were fourteen Manus who ruled the world. The seven before Savarni were Swayambhuva, Swarochisha, Uthama, Thapasa, Raivatha, Chakshusha and Vaiwaswatha. Markandeya was the son of Sage Mrukandu and was telling this story to another sage called Bagoori. Some versions have two additional slokas regarding the announcement of Sage Sootha that Jaimini the disciple of Vyasa approached Sage Markandeya and requested him to tell the story of Devi Mahatmya)

மார்க்கண்டேய உவாச:

ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம:
நிசாமய ததுத்பத்திம் விஸ்தராத் கததோ மம


இதன் நேரடிப் பொருள் பின்வருமாறு:


"மார்க்கண்டேயர் சொன்னார்:
சூரியக் கடவுளின் புத்திரனும், எட்டாவது மனுவுமாகிய ஸாவர்ணி என்கிறவரின் வரலாறை நான் விவரமாகச் சொல்லுவதைக் கேள்."


இப்போது இதன் மந்திர விளக்கத்தைப் பார்ப்போம்!

சூரியன் என்பது ஒரு நெருப்புக் கோளம்.
'ஸூர்ய தனயன்' என்றால் சூரியனின் மகன் அல்லது சூரியனிலிருந்து பிறந்தது எனப் பொருள்.

சூரியனில் இருந்து என்ன பிறக்கிறது?
'ர' என்னும் விதை, பீஜம் அக்னியில் இருந்து பிறக்கிறது.

தந்திர சாஸ்த்திரங்களின் கருத்துப்படி, 'ராம்' என்ற சொல் அக்னியின் பீஜ மந்திரம்.

'ஸா வர்ணி' என்பதில், 'வர்ணி' என்றால் ஒரு கொக்கி.
இப்போது 'ராம்' எனும் பீஜமந்திரத்தில் ஒரு கொக்கி சேர்ப்போம்.
'ராம்' இப்போது 'ரீம்' ஆகிறது.

'யோ மனு: கத்யதே அஷ்டம:' = எட்டாவது எழுத்து.
எதனுடைய எட்டாவது எழுத்து?
'மனு' என்பது ஒரு வடமொழிச் சொல் [ஸம்ஸ்கிருதச் சொல்]
ஸம்ஸ்கிருதத்தில் எட்டு எழுத்துகள் எவை?
'ய, ர, ல, வ, ஸ்ய, ஷ, ஸ, ஹ'
இதில் எட்டாவது எழுத்து?
'ஹ'

இப்போது இந்த வரி இதுவரை சொன்னது என்ன?
'ஹ' ''ராம்' என்னும் இரு எழுத்துகளுடன் தலா ஒரு கொக்கி போட்டுக்கொள் என்!
'ஹ', ''ராம்''+ கொக்கி= 'ஹ்ரீம்' என ஆகிறது!

'நிசாமய ததுத்பத்திம்'= இதன் பெருமையைக் கேள்!

'விஸ்தராத் கததோ மம' = விவரமாக நான் உரைப்பதை

'ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம: நிசாமய ததுத்பத்திம்' = 'ஹ்ரீம்' என்னும் சொல்லின் பெருமையை நான் விவரமாக இப்போது சொல்வதைக் கேள்!

'ஹ்ரீம்' என்பது தேவியின் பீஜம்.

மேலெழுந்தவாரியாக வேறு பொருள் சொன்னாலும், இந்த ஸ்லோகம் சொல்லும் மந்திரப் பொருள் இதுதான்!

இது போலவே அனைத்து மந்திரங்களும் ஒவ்வொரு மறைபொருளைச் சொல்கிறது என கற்றுணர்ந்த ஆன்றோர் சொல்லுவர்.

ஒவ்வொரு செயலுக்கும் தேவையான மந்திரங்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து பயன் பெற்றவர் அநேகம்.

எந்தவொரு மனவேதனையின் போதும், அல்லது நாட்டு நடப்புகள் மனம் வருத்தச் செய்யும் போதும் இதனைப் பாராயணம் செய்வது பலனளிக்கும் என்பது அறிந்தவர் சொல்லும் உண்மை!

இந்த உண்மைகளை உள்வாங்கி உலகம் உய்ய நாமும் உய்ய வேண்டும் என இடைவிடாது இந்த புண்ணிய நூலைப் பாராயணம் செய்து அனைத்துயிரும் உய்ய அன்னையை வேண்டி, இந்த விளக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் தவறே எனச் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் தேவி நலம் சூழ்க எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.


"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

Thursday, October 9, 2008

"தேவி திருக்கதை" -- 9

"தேவி திருக்கதை" -- 9


"கதை சொல்லும் கதை" -- [தொடர்ச்சி]
முடிந்தால் முந்தையப் பதிவையும் சேர்த்துப் படியுங்கள்!

மூன்றாம் நிலை:

அனைத்துக்கும் உயரிய சக்தியான, அறிவுக்கடவுள் மஹா சரஸ்வதி வந்துதான் நல்லறிவு என்னும் பேரொளியால், இந்த அறியாமை என்னும் மாயையை வெல்லவேண்டும்.


அவளை வேண்டித் துதிக்க வேண்டும்!
அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமும் அல்ல.
முதலில் சொன்ன இரு வழிகளையும்.... விடாமுயற்சி, உபாசனை.... விடாமல் இன்னும் தீவிரமாகப் பயின்று அவளைத் தேட வேண்டும்.
தேடினால் கிடைப்பாள்!



இந்தத் தேடலுக்கும், முதல் இருநிலைத் தேடல்களுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது!


முதல் இரு நிலைகளில் [தமஸ், ரஜஸ்] சாதகன் தனக்காகத்தான் தேடி நின்றான்.
இப்போது ஸத்வ குணம் உள்ளோங்கி நிற்கும் வேளையில், தான் இதில் தனியன் அல்லன்; தன்னுடன் இந்தப் பிரபஞ்சமே இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்த சாதகன் இப்போது அகில உலக நலனுக்காகவும் இதைத் தேடுகிறான்!



எப்படி ஒரே நூலால் இழைக்கப்பட்ட ஆடை இருக்கிறதோ அது போல நாம் எல்லாருமே ஒரே நூலால் பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணரும் சாதகன், தன் அடையாளத்தைத் துறக்கிறான்.



அதனால்தான் யோகிகள் இந்த உலகத்தையே தமதெனக் கருதி அன்பு செலுத்துகிறார்கள்!


இறையை எதிரில் காணும் சாதகன் அந்த இறையில் இந்த அண்டத்தையே பார்க்கிறான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனம் இதுதான்!



இறை என்பவன் எங்கோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து நின்று அருள் செய்கிறான் என்னும் மாயை அகன்று, அவன் எங்கும், எல்லா உயிர்களிலும், இடங்களிலும் வியாபித்து நிறைகிறான்; அவன் இல்லாத இடமே இல்லை என்னும் பேருண்மை இப்போது அவனுக்குப் புலப்படுகிறது!



வெல்வது... விடுதலை பெறுவது எளிதாகிறது!



தன் அனைத்து சக்திகளையும் வெளிக் கொணர்ந்து 8 மாத்ரிகையர் துணையுடன் நிசும்பனை வென்ற அன்னை, பிறகு, அதே சக்திகளை தனக்குள்ளே இழுத்துக் கொண்டு தனியளாய் சும்பனை வெல்கிறாள்!


சாதகனும் இதை உணரத் தொடங்கி, தன் சக்திகள் மூலம், சில காட்சிகளை, நிகழ்வுகளை நிகழ்த்தி, பிறகு அத்தனை சக்திகளையும் தனக்குள் உள்வாங்கி, தன்னையே வெல்கிறான்!
இனி, இவன் செய்யும் அனைத்துச் செயல்களும் இறைக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன.
இதுதான் சும்ப- நிசும்ப வதம்!!! …

யோகவழியில் இதனை உணரும் சாதகன், தனது தமஸ், ரஜஸ், ஸத்வம் என்னும் மூன்று குணங்களையும் துறந்து இறையை உணர்ந்து அண்டத்துடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதே தேவி மஹாத்மியம் சொல்லும் கருத்து!



அநேகமாக எல்லாப் புராணங்களுமே இந்த அடிப்படைத் தத்துவத்தை ஒட்டியே அமைகின்றன என்றால் மிகையில்லை.


தன்னை உணர்ந்தவன், நிகழும் எல்லாச் செயல்களிலும் இறையைக் காண்கிறான்.
எந்தவொரு அற்பச் செயலும் அற்பமில்லை; ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது எனும் உண்மையைப் புரிந்து கொள்கிறான்.
தடை எனப் பொதுவாக நாம் எல்லாரும் கருதும் நிகழ்வுகள் அவனை வருத்துவதில்லை.
மாறாக அதையும் இறையின் ஒரு லீலையாகவே கொண்டு அவற்றைக் கண்டு அஞ்சாது முன்னோக்கி நடக்கிறான்.



வழிப்பயணம் செல்கையில் பாதை தவறிய பயணி, 'அடடா! தொலைந்து விட்டோமே!' என அஞ்சுவது போல் இவன் அஞ்சுவதில்லை.
தலையை உயர்த்திப் பார்க்கிறான்.
மேலே தெரியும் ஆகாயமும், சூரியனும், வீசும் காற்றும் இவனுக்கு நாம் இங்கு தொலையவில்லை; நாம் தனியாள் இல்லை எனப் புரிய, ஒரு புதுத் தெம்புடன் முன்னோக்கிச் செல்கிறான்.
இயற்கை என்னும் இறைசக்தியிடம் இருந்து தான் பிரியாமல் இணைந்தே இருக்கிறோம் என்னும் உண்மை அளித்த பலத்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.



மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களை வணங்கி, வழிபட்டு, இவர்கள் மூலம் ஆதி சக்தியுடன் தான் ஒன்றுவதை உணரும் பயிற்சியே ஒவ்வொரு சாதகனும் செய்ய முயல்வது.
முதல் நிலையில், தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்கிறான். தன்னிடம் இருக்கும் மலங்களை அகற்ற கடினமான பயிற்சிமுறைகளைச் செய்கிறான்.
மஹா காளி உபாசனை மூலம், தன்னைப் பிணைத்திருக்கும் தடைகளை உடைத்தெறிகிறான்.



இதன் மூலம் ஒரு நல்வாழ்வு தனக்கு வருவதை உணர்கிறான். எல்லா சக்திகளையும் அடக்கித் தன் கைக்குள் கொண்டு வந்து, தனக்கு வேண்டிய எதையும் பெறக்கூடிய சக்திகளை அடைகிறான்.


மலங்களின் ஆளுமையால், தான் ஒரு கைதியாகவும், பலமற்றவனாகவும் உணர்ந்த இவன், இப்போது அந்த 'தமஸ்' என்னும் சோம்பலை வெற்றி கொண்டு பெருமை பெறுகிறான்.



ஒரு சொடக்கில் தான் விரும்பும் அனைத்தையும் பெறக் கூடிய வல்லமை மஹா லக்ஷ்மியின் அருளால் இவனுக்குக் கிட்டுகிறது.
முதல் நிலையில் நரகமெனத் தெரிந்த உலகம் இப்போட்து சொர்க்கமாகத் தெரியத் தொடங்குகிறது இவனுக்கு!
இதனை கொஞ்ச காலம் அனுபவித்த இவனுக்கு, சொர்க்கம் அல்ல தான் வேண்டுவது எனப் புரியத் துவங்குகிறது!
'பேருண்மை' என்னும் உயரிய நிலை தனக்குக் கைவர வேண்டும் எனப் புரிகிறது... தொடர்ந்து பயிற்சி செய்பவனுக்கு!



ஆம்! உண்மையில், சில சாதகர்கள் இரண்டாம் நிலையிலேயே தமது தேடலை நிறுத்திவிட்டு, இயல் வாழ்க்கையில் பயணம் செய்யும் காட்சியும் நாம் இங்கு பார்க்கிறோம்!
ஆனால், உண்மையான சாதகன் தன் இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தை விடாது தொடர்கிறான்.



பேருண்மை புலப்பட மாயை அகல வேண்டும் எனத் தெளிகிறான்.
மஹா சரஸ்வதியைத் தேடி அலைந்து, அவளைத் துதித்து இந்தத் தடையையும் அகற்றி, உண்மையான விடுதலை என்பது என்ன எனப் புரிகிறான்.
நிகழும் அனைத்தையும் அப்படியே பார்க்கக் கற்றுக் கொள்கிறான்.
இன்பம், துன்பம், வளமை, செல்வம் என ஒன்றும் இல்லை என்பதை நன்கு உணர்கிறான்.
எல்லாம் இழந்த அநுபூதி நிலையில், இந்த உண்மையுடன் தான் எப்போதுமே பிணைக்கப்பட்டிருந்தோம்; பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புரிந்த 'தன்நிலை' அறிகிறான்.



இந்த உண்மையைச் சொல்வதுதான் மந்திரங்களை உள்ளடக்கிய தேவி மஹாத்மியம் விழைபவர்க்குச் சொல்வது! !!


இதென்ன புதுக்கதை?
**************

[நாளை நிறைவுறும்!]

Wednesday, October 8, 2008

"தேவி திருக்கதை" -- 8

"தேவி திருக்கதை" -- 8


முதல் கதையின் கருத்து:

மது-கைடப வதம்:

திருமாலின் காது அழுக்கிலிருந்து மது, கைடபர் என்னும் அரக்கர் தோன்றியதாகக் கதை சொல்லுகிறது.

நம்மில் இருக்கும் அழுக்குகளிலேயே மோசமான மலங்கள் காமம், குரோதம் லோபம் என்னும் மும்மலங்களே!

ஆசை, கோபம், சிறுமை இவை மூன்றும் ரஜஸ் என்னும் குணத்தின் வெளிப்பாடுகள். தவறுகள் செய்யத் தூண்டி நம்மைப் பாவக்குழிக்கு அழைத்துச் செல்லும் இவை மூன்றும்!

இந்த மூன்றும் ஆத்மா என்னும் ஒரு மெல்லிய கண்ணாடியின் மேல் பலமாக தங்களைத் தீட்டிக் கொண்டு விடுகின்றன.

தானறிந்த பரம்பொருளை மீண்டும் காணமுடியா வண்ணம் இவற்றால் இப்போது ஆன்மா மறைக்கப் பட்டு விடுகிறது.
இதை அகற்றுவதே சாதகன் செய்ய வேண்டிய முதல் வேலை.
கடினமான பயிற்சி தேவை இதற்கு. இடையில் நிகழும் பல கடுமையான சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிவரும்.
திட மனதுடன் முயன்றால் குருவருளால் இது சித்திக்கும்.

நம்மிடம் இருக்கும் சோம்பலைத் துறந்து,'எழுமின்; விழிமின்' என விவேகனந்தர் சொன்ன மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தல் விஷ்ணுமாயை அருள் செய்து நம்மை இந்த மது-கைடபர்களை அழிக்கத் துணை புரிவாள்.

இரண்டாம் கதை:

மஹிஸாஸுர, சண்ட முண்ட, ரக்த பீஜ வதம்:

மேலே சொன்ன மூன்று மலங்களையாவது நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனல், கண்ணுக்குத் தெரியாமல் நம்மிடம் இருக்கும் மலங்கள் தாம் மிகவும் மோசமானவை!

சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பான், ஆசை காட்டி மோசம் செய்பவன், வலிக்காமல் அடிப்பவன், வணங்கிக் கொண்டே கத்தியால் [ இந்தக் காலத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு] குத்துபவன் என இப்படி எத்தனையோ விதங்களில் இது வெளிப்படும். கிட்டத்தட்ட இப்போது நிகழ்கின்ற தீவிரவாதத்துடன் ஒப்பிடலாம்.

தம் நிறங்களையும் குணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள்!
யாரெனத் தெரிந்தால் தானே அழிக்க முடியும்?
தன்னிடம் இதெல்லாம் இருப்பதையே உணராமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும்.

மகிஷனும் இதைத்தான் செய்கிறான்!

எருமை வடிவில் வருவான்; திடீரென யானை வடிவில்; தேவி அவனை அழிக்க முற்படுகையில், உருமாறி ஒரு காளை வடிவில் என!

இப்படித்தான் நமகு கண்ணுக்குத் தெரியாதா ஆசைகளும் நம்மை அலைக்கழிக்கின்றன.

இதை விக்ஷேப சக்தி எனச் சொல்வர்கள். அலைக்கழிக்கும் ஆசைகள் எனப் பொருள் சொல்லலாம்.

சண்ட முண்டாசுரர்கள் கதையும் இது போலவே!
இடையில் வரும் எண்ணற்ற ஆசைகளின் வடிவங்கள்!

ரக்தபீஜன் நிலை இன்னும் மோசம்!
இவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான ரக்தபீஜர்கள் தோன்றுவார்கள்!

இப்படித்தான், ஒரு ஆசையில் இருந்து பலவித தீய எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி முடிவே இல்லாமல் நம்மை இங்கும் அங்குமாய்ப் புரட்டி அடிக்கும். இதன் சுழலில் ஆட்பட்டு, சாதகன் திணறும் நிலை!

இதையெல்லாம் வெல்ல என்ன வழி!?

நம்மால் மட்டுமே முடியக் கூடிய செயல் அல்ல இது!

நீயே கதி என அன்னையின் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறுவதுதான் ஒரே வழி!

அம்மா! என்னைக் காப்பாற்று என அலற வேண்டும்!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கணும்!
'உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோர்' எனக் கத்தணும்!
நின்னைச் சரணடைந்தேன் என அழணும்!

அபயக்குரல் கேட்டு, அன்னை ஓடி வருவாள்!
அண்டியவரைக் காப்பாள்!

கர்ம யோகத்தினால் மட்டுமே மும்மலங்களையும் அழித்த நாம் இப்போது பக்தி யோகத்தின் மூலம் அவளைச் சரணடைந்து அவளை உபாசனை செய்தால், இந்தத் தீய எண்ணங்களும் நம்மை விட்டு அகலும்.
தமஸை அழித்து, ரஜஸைக் கொன்று அடுத்த நிலைக்குச் செல்லமுடியும் சாதகனால்!

மூன்றாம் நிலை:
சும்ப-நிசும்ப வதம்


தமஸ்,[ஆணவம்] ரஜஸ் [கன்மம்] என்னும் இரு குணங்களையும்,[மலங்களையும்] கர்மயோகம், பக்தி யோகத்தின் மூலம் முறியடித்த சாதகன் இப்போது அமைதியாக ஸத்வ குணத்தில் திளைக்கிறான்.
மூன்று குணங்களிலுமே, இது ஒரு உயரிய நிலை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு.

ஆனால், இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது!

ஆன்மா என்னும் கண்ணாடியை மறைத்த மலங்களையெல்லாம் தன்னுடைய சாதனையாலும், தெய்வ அருளாலும் விலக்கிய சாதகன் இப்போது ஒரு தெளிந்த கண்ணாடியாகத் திகழ்கிறான்.

தனக்கு எதிரே தெரிகின்ற பரம்பொருளின் வெளிச்சத்தைக் கூடப் பார்க்க முடிகிறது இவனால்!

ஆனால், என்ன பிரயோஜனம்?

இவன் இந்தப் பக்கத்தில் அன்றோ நிற்கிறான்.
கண்ணுக்கு எதிரே ஒரு நல்ல மாம்பழம் தெரிகிறது; அதை ஒரு கண்ணாடி மறைக்கிறது!
மாம்பழத்தைப் பெற இவன் இப்போது இந்தக் க்ண்ணாடியையும் உடைக்க வேண்டும்!

இத்தனை தடைகளைத் தாண்டி வந்து விட்டோமே என்னும் பெருமிதம் உள்ளில் எழ, எதிரில் தெரியும் பரம்பொருளைக் கண்ட திருப்தியில், இடையில் ஒரு கண்ணாடி தடுக்கிறது என்பதை அறியவிடாமல் மாயை தடுக்கும் இப்போது!

அண்ட சராசரத்தையும் அடக்கிவிட்டோம் என்கிற பெருமிதமும், தன்னை ஆட்கொள்ள அன்னையே எதிரில் நிற்கிறாள் எனப் புரியாமல் அவளையே சண்டைக்கு அழைக்கின்ற அறியாமையும் மாயை வடிவில் மறைத்த கதைதான் சும்ப நிசும்பர் கதை!

இந்த மாயையை எங்ஙனம் வெல்வது?
கல்விக் கடவுள் மஹா சரஸ்வதி இப்போது உதவிக்கு வருகிறாள்!
*****************************************************************************************
[தொடரும்]

Tuesday, October 7, 2008

மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள்?

சரஸ்வதி-ன்னா என்னாங்க பொருள்? ஏன் அவள் கல்விக் கடவுள்? தேவி நவராத்திரி-ன்னு பொதுவாச் சொன்னாலும், பார்வதி பூஜை, இலக்குமி பூஜை என்றெல்லாம் சொல்லாது, அது என்ன இவளுக்கு மட்டும் தனியாகச் சரஸ்வதி பூஜை?

அதற்கு முன்பு, அனைத்து அன்பர்களுக்கும் இனிய சரஸ்வதி பூசை, விஜயதசமி, நவராத்திரி வாழ்த்துக்கள்.
சுசீல்லாம்மா குரலே ஒரு மோகன ராகம். அவங்களே மோகன ராகத்தில் பாடினால்? அந்தப் பாட்டில் இருந்து தொடங்குவோம்.

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி அருமையான வீணை இசைப்பாடல்! கலைமாமணி K.சோமு எழுதி, இசையமைத்து, சுசீலாம்மா பாடியது!
அருள்வாய் நீ, இசை தர வா நீ, வா நீ, வாணீ, கலை வாணி என்று நல்ல சொற்கள் அருவி போல் வந்து விழும் சுகம்.
இதோ கேட்டு மகிழுங்கள்!



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

நா மணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூ மணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

(மாணிக்க)

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளம் இல்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே

வாணி சரஸ்வதி மாதவி பார்கவி
வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கு இனிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி


அருள்வாய் நீ
இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ
லயம் தரும் வேணி - அம்மா
(மாணிக்க)

வீணை இசையில் மாணிக்க வீணை:


மாணிக்க வீணையேந்தும் கலைவாணிக்கு என்னென்ன பெயர்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன? பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :)

"தேவி திருக்கதை" -- 7

"தேவி திருக்கதை" -- 7



"கதை சொல்லும் கதை"


இதுவரையில் மேலெழுந்தவாரியாக "தேவி மஹாத்மியம்" என்னும் அரிய நூல் சொன்ன கதையைப் பார்த்தோம். இதை இப்படியே படிப்பதும் கேட்டதும் மட்டுமே கூட அநேக விசேஷ பலன்களைக் கொடுக்க வல்லது.
இருந்தாலும் இக்கதையின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் பொருள் என்ன?

எதைச் சொல்லவென இக்கதை சொல்லப்பட்டது?


வெறும் சிலா அசுரர்களை தேவி எப்படி அழித்துக் கொன்றாள் என்பதையா?

இதையெல்லாம் அறிய, கற்றுத் தேர்ந்த பெரியவர்கள் சொல்லுவது போல, ஒரு தகுந்த குருவின் வழிகாட்டலுடனானத் தேடலும், பயிற்சியும் செய்ய வேண்டும்.

இந்த அற்புதமான கதை சொல்லும் உட்பொருளைப் பெரியவர்கள் சொன்ன வண்ணம் இங்கே அளிக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஆன்றோர், அறிந்தோர் சொல்லிச் சென்றது. என் பணி தொகுத்து அளிப்பது மட்டுமே! அவர்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லி உரைநடையாகவே இதனைத் தொடங்குகிறேன்!


"மனித வாழ்வின் நோக்கமே ஒரு தேடலை நோக்கித்தான்! சில சமயங்களில் அது அன்றாடத் தேவைகளுக்காகவும், கிட்டாத எட்டாப் பொருள்களுக்காகவும், இருந்தாலும், இவையேல்லாம் கூட ஒரு விடுதலையை நோக்கித்தான் எனப் புரியும். இன்றையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை, நாளையத் தேவைகளை அடைய விரும்பும் விடுதலை என இதை வகைப் படுத்தலாம்.

இந்த விடுதலை வேட்கை என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் புலப்படும் உண்மை இதுதான்..... இது ஆத்மாவின் தேடல்!

ஆச்சரியமாக இருக்கலாம் இந்த உண்மை!

ஆத்மாவுக்கு பிறப்பிலிருந்து விடுதலை எனத்தானே படித்திருக்கிறோம். அது ஏன் இதையெல்லாம் விரும்புகிறது என!

ஆனால், கற்றுத் தெளிந்தவர் சொல்வது என்னவென்றால், இது போன்ற எளிய ஆசாபாசங்களினால் அலைக்கழிக்கப்பட்டு, தன்னிலை மறந்த ஆத்மா, இந்த 'விடுதலை' என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, எதிலிருந்து விடுதலை என்னும் பொருளை மறந்து போய்விடுவதாலேயே இது நிகழ்கிறதாம்!

இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, இப்போது 'தேவி மஹாத்மியம்' சொல்வது என்னவெனப் பார்க்கலாம்!

"தன்னிலை மறந்த ஆத்மா, தன் தேடலை மட்டும் விடாமல் நிகழ்த்திக் கொண்டு, படிப்படியாகத் தன்னிடம் இருக்கும் அழுக்குகளைக் களைந்து "உண்மையான விடுதலை" எது என்பதை அறிய நடத்தும் போராட்டமே ஒரு ஒன்பது நாட்களுக்குள் நிகழ்வதாகச் சொல்லப் பட்டிருக்கும் கதையே தேவி மஹாத்மியம்!"

இந்தப் போராட்டம் ஒன்றும் ஒரு அலுப்புத் தட்டக்கூடிய போராட்டமல்ல! ஒரு உன்னதமான விடுதலைப் போரை இது ஒக்கும். இதைப் படிக்கின்ற சாதகனுக்கு ஒரு தெளிவைத் தந்து, அவரது எழுச்சியை அதிகப்படுத்தி, அடைய வேண்டிய 'விடுதலையை' விரைவாக்கும் உன்னதமே தேவியின் திருக்கதை நமக்கெல்லாம் காட்டுவது!

பதின்மூன்று அத்தியாயங்களைக் கொண்ட தேவி மஹாத்மியம் ஒரு மூன்று கதை வடிவில் பிரிக்கப்பட்டுத் தொகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. பகவத் கீதை, திருக்குறள் போன்ற உண்மை நூல்களும் இதே வகையில் என்பதை உணர்ந்த பெரியோர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

ஆத்மாவின் விடுதலைத் தேடலுக்கான பயணம் மூன்று முக்கிய நிலைகளைத் தண்டிச் செல்லுகிறது. இடையில் இன்னும் பல சின்னச் சின்னத் தடைகள்! இவை அனைத்தையும் முறியடித்து, உண்மைப் பொருளை எப்படி அடைகிறது ஆத்மா என்பதே இதன் மையக் கருத்து எனச் சொல்லலாம்.

மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களின் உதவி, ஆளுமை மூலம் என்னவெல்லாம் ஒரு சாதகனுக்குள் நிகழ்கிறது என்பதை விழைபவர்க்குப் புரிய வைப்பதே இதன் நோக்கம்!

தான், தனக்கு என வாழும் ஒரு மனிதன் எப்படி தனது உறவுகளைப் புரிந்து, அவர்களுடன் கூடியிருந்து, குலாவி, பின் ஒவ்வொன்றாய் எப்படி அவர்களும் நிலை அல்லர் எனப் புரிந்து அவற்றினின்று விடுபட்டு, திடீரென, தான் இப்போது எவருக்கும் உறவல்ல; ஆனால், அதே சமயத்தில் இந்த மொத்த உலகமே தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்னும் பேருண்மையை அறிந்து தானே ஒன்றாகவும், பலவாகவும் இருக்கும் அதிசய அனுபவத்தில் திளைத்து, ஆன்மாவை விடுவிக்கிறான் எனச் சொல்ல வருவதே இதன் மையப் பொருள்!

இதன் முதல் நிலை, ஆதிசக்தியான விஷ்ணுமாயா திருமாலை ஆழ்துயிலில் இருந்து எழுப்பி மது-கைடபர்களை அழிப்பதைச் சொல்கிறது.

இரண்டாம் நிலையில்,இதே சக்தி தன்னை மஹாலக்ஷ்மியாக மாற்றிக் கொண்டு மகிஷாஸுர வதம் செய்ய விரைகிறது. கூடவே, சண்ட, முண்ட வதம், ரக்தபீஜ வதம் எனச் சில நிகழ்வுகளும்!

மூன்றாம் நிலையில், மஹா சரஸ்வதி சும்ப-நிசும்ப வதம் நிகழ்த்துகிறாள்!

மூன்று, மூன்று தினங்களாக இது இந்த ஒன்பது நாட்களிலும் கொண்டாடப் படுகிறது.

இறுதி வெற்றியாக விஜயதசமி, பத்தாம் நாளன்று!

இயற்கையின் சக்திகளை முறியடித்த சாதகன், தன் விடுதலையை வெற்றிக்கனியாக அடைகின்ற நாள்.

எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும். அப்படி எல்லாவற்றையும் அடக்கியபின், பத்தாவதாக வெற்றிதானே!

**********************************************************************
[தொடரும்]

Monday, October 6, 2008

"தேவி திருக்கதை!" -- 6

"கதை முடிந்த கதை!"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


தேவிதிருக்கதையைத் தீர்க்கமுடன் சொல்லிவந்த சுமேதசரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பிவைத்தார்


திருக்கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணுமாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி


கண்மூடித் தியானித்து பலகாலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றிநின்று,


அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:


"என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்


அவர்வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக, பரலோக இன்பமெல்லாம் யானளித்து நற்கதியும் நான் தருவேன் !"

என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !


துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இதுவரையில் பாடிவந்தேன்.


படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!

**************************************************
[தொடரும்]

Sunday, October 5, 2008

"தேவி திருக்கதை" -- 5

"தேவி திருக்கதை" -- 5



முந்தைய பதிவு


"மூன்றாம் கதை"
"சும்ப-நிசும்ப வதம்"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


மூன்றாம் முறையாக அன்னையிவள் செய்திட்ட
அற்புதத்தைப் பாடிடுவோம் அவள் பெருமை கூறிடுவோம்

சண்ட முண்டன் எனுமரக்கர் பூதலத்தில் வாழ்ந்திருந்து
கொடுஞ்செயல்கள் செய்துவந்து விண்ணவரை வருத்தினரே

அவர்கொடுமை தாங்காது அலறிட்ட வானவரும்
உமையன்னை பதம் நாடி மலையெங்கும் தேடினரே

இமயத்துமலைகளிலே அலைந்திருந்த உமையன்னை
இவர்பாட்டைக் கேட்டதுமே அடக்கவொண்ணா சீற்றமுற்றாள்

குண்டலினியின் கண்ணினின்று புறப்பட்ட அன்னைசக்தி
காளியென்னும் கோரவுரு கொண்டங்கு வெளிவந்து

சண்ட முண்ட அரக்கர்களை அடியோடு சாய்த்துவிட்டு
அசுரர்களின் சிரம்கொய்து பீறிட்ட உதிரம் குடித்து,

சண்ட முண்ட அரக்கர்களின் தலைகொண்டு தேவியவள்
காலடியில் சமர்ப்பித்து சாமுண்டா எனும் பெயர் பெற்றாள்

இத்தோடு நில்லாது தொடர்ந்திருந்த போரினிலே
ரக்தபீஜன் எனுமரக்கன் மூர்க்கமாகச் சண்டையிட்டான்

இவன்பெற்ற பெருவரமோ எவரையுமே வியப்பிலாழ்த்தும்
தன்னுதிரம் ஒரு துளியும் பூமியிலே விழுமாயின்

அவற்றினின்று மற்றுமொரு ரக்தபீஜன் தோன்றிடுவான்
எனும்வரத்தைப் பெற்றதனால் தனைவெல்ல யாருமில்லை

என்கின்ற தலைக்கனத்தில் தாறுமாறாய்ச் சண்டையிட்டான்
கொடுமையான அரக்கனிவனை வெல்லும்வழி யாதெனவே

தேவியவள் சிந்தித்தாள் காளியெனச் சண்டையிட்டாள்
அகலமான வாயினிலே தொங்குகின்ற நாக்குடனே

அசுரனிவன் மார்பிளந்து உதிரமொரு துளியேனும்
நிலத்தடியில் வீழாமல் நாவெடுத்துக் குடித்திட்டாள்

பிறவரக்கர் தோன்றுவதை தன்மதியால் தடுத்திட்டாள்
ரக்தபீஜ அரக்கனவன் கொடுஞ்செயலை முறித்திட்டாள்

இவருக்கெல்லாம் அரசனான அண்ணன்தம்பி இருவருண்டு
சும்பன் எனும் ஒருவரக்கன் நிசும்பன் எனும் அவன் தம்பி

இருவருமே இப்போது அன்னையெதிர் தோன்றிட்டார்
நீண்டதொரு போர் நிகழ்த்த அன்னையவள் உளம் கொண்டாள்

தன்சக்தி அனைத்தையுமே பலமடங்காய்ப் பெருக்கியவள்
தனக்குதவி செய்யவென எட்டு சக்தி படைத்திட்டார்

நாராஷ்மி,வைஷ்ணவி,குமாரி, ப்ராஹ்மி, வராஹி, ஐந்த்ரீ
சாமுண்டா எனும் காளி, அம்பிகா
என்பதுவே அவர் பெயராம்

மாத்ரிகையர் எண்மருடன் தேவியவள் புடைசூழ
போர்க்களத்தில் நிசும்பனுடன் கோரமான போர்புரிய


பலகாலம் போர்புரிந்து நிசும்பனுமே மாண்டொழிந்தான்
எஞ்சிநிற்கும் சும்பனுடன் போர்புரியும் ஆற்றலுக்காய்

தான் படைத்த எண்மரையும் மீண்டும் உள்ளே சேர்த்திருந்தாள்
தனியளாக தேவியவள் சும்பனுடன் போர் செய்தாள்

கண்டவர்கள் அதிசயிக்க விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க
துர்க்கையவள் செய்த போரில் சும்பவதம் நிகழலாச்சு

கொடுமரக்கன் மாண்டுபட்டான் தேவி சிரம் கொய்திருந்தாள்
விண்ணவரும் மறையவரும் மண்ணவரும் வாழ்த்திநின்றார்

மூன்றாம் கதையிதுவே! முடிந்தவரை சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
*********************************************************

[தொடரும் ]

அடுத்த பதிவு

"தேவி திருக்கதை" -- 4

"தேவி திருக்கதை" -- 4


முந்தைய பதிவு

"இரண்டாம் கதை"

"மஹிஷாஸுர வதம்"


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!



மஹிஷன் என்னும் ஓர் அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான்

தனக்கெனவே பல உருவம் கொண்டுவந்து பாழ்செய்தான்


அனைத்திலும் முதன்மையானது அவன்கொண்ட எருமைவடிவம்

அனைவரும் நடுங்கிடும் கொடியதோர் பேருருவம்


மனிதரையும் தேவரையும் தனதடிமையாய்க் கொண்டான்

தனை எதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கிவிட்டான்


இந்திரனும் பயந்தொளிந்தான் தேவருமே மயங்கி நின்றார்

அண்டபகி ரண்டமெலாம் நடுங்கிடவே அவன் நடந்தான்


இதுவரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை

எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் வாழ்ந்தான்


முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார்

அடைக்கலமே நீயென்று அவரடியில் தாள் பணிந்தார்


அசுர உடல் எருமைத்தலை குத்திவிடும் கொம்பிரண்டு

எவராலும் வெல்லவொண்ணா வரம்பெற்ற இறுமாப்பு


அதிகாரம் தலைக்கேற புரிந்திட்டான் அட்டகாசம்

மஹிஷன் பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்


தனிவரத்தின் மகிமையதால் மஹிஷனுமே பலம் பெற்றான்

இவ்வரத்தை அழித்திடவே தம்மால் முடியாதனவே


தம்முடைய சக்தியெலாம் ஒன்றாகச் சேர்த்தளித்துப்
பிரமன், திருமால் ஆதிசிவன் மூவருமே பணிந்திட்டார்


அன்னையவள் அடிபணிந்து அவரிடமே சமர்ப்பித்தார்

தானளித்த சக்தியெலாம் மீண்டுமங்கே தான்கொண்டு


சக்தியவள் கிளர்ந்தெழுந்தாள் தீதழிக்க மனம்கொண்டாள்

மஹிஷாசுர மர்த்தினியாக அவதாரம் செய்திட்டாள்


சிங்கத்தை வாகனமாய் சக்தியவள் கொண்டிருந்து

மஹிஷனுடன் போரிடவே பல கைகள் தான் சுமந்தாள்


போரினிலே வேகமதாய் பகைவனையே அழிக்கையிலே

மஹிஷனையும் கொன்றழித்து மனிதகுலம் காத்திட்டாள்


எருமைக்கிடா தலைவீழ எழுந்ததொரு தீயசக்தி

தன்பலத்தால் அதையுமழித்து தரணியதை வாழ்வித்தாள்


எருமையதன் உருத்தரித்த அசுரனையும் வதைத்திட்ட

அன்னையிவள் பெருங்கருணை சொல்லிடவும் எளிதாமோ!


'ரஜஸ்'என்னும் துர்க்குணத்தை அன்னையிவள் அழித்திட்டாள்

அனைத்துலகும் வாழ்ந்திடவே அன்னையிவள் அருள் செய்தாள்!


துர்க்கையிவள் மஹிஷாஸுர மர்த்தினியாய் வந்திட்ட

பெருமையினைப் போற்றிடுவோம்! ஜெயெஜெயெவெனப் பாடிடுவோம்!


இரண்டாம் கதையிதுவே! இன்பமுடன் சொல்லிவந்தேன்

உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


இரண்டாம் கதை முற்றிற்று.
*********************************
[தொடரும்]

அடுத்த பதிவு