Monday, January 30, 2012

திக் விஜயம்


திக்குகள் எட்டும் நடுநடுங்க
திசைகள் யாவும் கிடுகிடுங்க
தேவதை யொருத்தி தேரில் ஏறி
திக் விஜயம் செய்யப் போகின்றாள்!

தகதக வென்றே ஜொலிக்கின்றாள்
பகலவ னைத்தோற் கடிக்கின்றாள்!
மாநில மெல்லாம் மதுரை ஆக்க
மதுரா புரியாள் துடிக்கின்றாள்!

மன்னவ ரெல்லாம் மண்டியிட்டார்
தென்னவள் மீனாள் காலடியில்!
சரணம் சரணம் எனப் பணிந்தார்
கருணைக் கடலின் காலடியில்!

வீரத்தின் தாகம் தணியவில்லை;
வெற்றிகள் பெற்றது பற்றவில்லை!
பற்றிய வாளைச் சுழற்றிக் கொண்டு
சிற்றிடை மீனாள் செல்கின்றாள்!

நான்முகன் நங்கையைப் பணிந்து விட்டான்!
நாரணன் தங்கையை வணங்கி விட்டான்!
கயிலை மலைக்கு வலையை வீசிட
மயிலன்ன மாதங்கி போகின்றாள்!

நற்சிவ கணங்கள் தோற்றோட
நந்தியும் களைத்தே பின்வாங்க
பொற்சிலம் பொலிக்க சிற்சபை ஆடும்
பொன்னம் பலத்தான் வந்து விட்டான்!

உலகில் அழகன் இவன் தானோ
உமையவள் மயங்கும் சிவன் தானோ!
இதயம் தொலைத்த மீனாளும்
இமைக்க மறந்து பார்த்து நின்றாள்!

உடலே வேறாய் ஆனதுவோ
உயிரே அவனிடம் போனதுவோ!
உள்ளம் இரண்டும் இடம் மாற
உறைந்தாள் மீனாள் அக்கணத்தில்!

போரை மறந்தாள் வாள் மறந்தாள்
தொடுத்த அம்பினை விடுக்க மறந்தாள்!
காதல் கனிய கசிந்து நின்றாள்
காதலனும் நிலை புரிந்து கொண்டான்!

சக்தியும் சிவமும் சேர்ந்திடவே
சகல உலகமும் மகிழ்ந்திடவே
மதுரை வருவேன் மணப்பேன் என்றே
மதுர மொழிகள் கூறினனே!




--கவிநயா

படம் இங்கே இருந்து: http://maduraiyampathi.blogspot.com/2010_04_01_archive.html. நன்றி மௌலி.

Thursday, January 26, 2012

அம்மா!அம்மா!


சுப்பு சார் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மா!அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

தாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா!
பெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா!
மெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா!
புன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா !

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

இதமான சுகநாதம் அம்மா,அம்மா!
இதயத்தின் சங்கீதம் அம்மா,அம்மா!
முதலான மதலைச்சொல் அம்மா,அம்மா!
நிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

அன்பகமே!செண்பகமே!அம்மா,அம்மா!
அஞ்சுகமே!எனக்கபயம் !அம்மா,அம்மா!
நின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா!
நின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

Monday, January 23, 2012

எங்கும் எதிலும் உன்றன் மாயே!



அம்மா நீயே என்றன் தாயே!
எங்கும் எதிலும் உன்றன் மாயே!

மாயை மயக்கம் நீக்குவாயே!
தாயே கலக்கம் போக்குவாயே!
சேயே என்று அணைத்தென் தாயே!
காயம் யாவும் ஆற்றுவாயே!

பொன்னார் மேனி பகிர்ந்த தாயே!
மின்னார் மெலிந்த இடை கொண்டாயே!
பண்ணால் உன்னைப் பாடும் பெண்ணை
கண்ணால் காத்து அருள் செய்வாயே!!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/10/menakshi-as-ardhanariswarar.html#.Tx4QMYF0pGM

Monday, January 16, 2012

இன்றென்ன செய்தாய் என் மனமே?


சுப்பு தாத்தா சஹானாவில் பாடித் தந்திருக்கிறார். மிகவும் நன்றி தாத்தா!

இன்றும் சூரியன் மறைந்து விட்டது;
இன்னொரு நாளும் முடிந்து விட்டது...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

பொழுதும் போகுது புவியும் சுற்றுது;
பிறவியும் நீளுது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

காலம் கடக்குது நேரம் பறக்குது;
கொடுவினை சேருது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!

நாளும் கோளும் உனக்காக
காத்திருக்காது எப்போதும்...
வேளை வந்துன்னைச் சேரும் முன்னே
விரைந்தே பற்றிடு அவள் பதமே!


--கவிநயா

Monday, January 9, 2012

சாரமெல்லாம் நீயே!


சுப்பு தாத்தா சுகமாகப் பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!

பாரமெல்லாம் இறக்கி வைக்க பாதங்களைத் தேடி வந்தேன்
சாரமெல்லாம் நீயே யென்று சத்தியமாய் கண்டு கொண்டேன்

சின்னஞ்சிறு மருங்கினிலே செய்யப்பட்டு அணிந்தவளே
கன்னங்கருங் கூந்தலிலே கார்முகிலைக் கொண்டவளே
பென்னம்பெரும் விழிகளினால் பேரருளைப் பொழிபவளே
மின்னலெழிற் புன்னகையால் உள்ளங்களைக் கவர்பவளே

தாமரைப்பூப் பாதங்கள் தரணியெல்லாம் காக்கும்
வந்தவரை வணங்குவரை வாஞ்சையுடன் வாழவைக்கும்
அம்மாவென் றழுதுநின்றால் ஆதரவாய் அணைக்கும்
அன்பாகத் தொழுதுநின்றால் அஞ்சலென்றே உரைக்கும்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: https://picasaweb.google.com/lh/photo/TkGO9ypT4gpeACkZhet5UA

Monday, January 2, 2012

ஸ்ரீ சாரதா புஜங்கம்


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!

முன்பு ஒரு முறை மௌலி ஸ்ரீ சாரதா புஜங்கத்தின் பொருளை எழுதியிருந்தார். அதை வைத்து எழுதிய பாடல் இங்கே... நன்றி மௌலி.





காருண்ய தேவதையே
சாந்தம்மிகு சாரதையே
அன்புடனே பதம் பணிந்தோமே - உந்தன்
அருளினையே வேண்டி நின்றோமே!
பொன்கலசம் போல்முலையாள்
தண்கருணை யால்அருள்வாள்
அமிர்தத்தை கரத்தினில் கொண்டாள் - அன்னை
பதம்துதித்தோர் மனதினில் உறைவாள்!


முழுநிலவைப் போல்ஒளிர்வாள்
எழில்மிகுந்த நகைபுரிவாள்
கருணையுடன் காத்திடுவாளே - அன்னை
சாரதையின் பதம்பணிவோமே!


கடைக்கண்ணின் கருணையினால்
கண்ணிமைபோல் காத்திடுவாள்
கலைகளுக்கு நாயகியாவாள் - அன்னை
அழகுக்கெல்லாம் அரசியுமாவாள்!
 

அணிகலன்கள் அணிந்திருப்பாள்
தங்கம்போல ஜொலித்திருப்பாள்
துங்கைநதிக் கரையோரத்தில் -  ஞான
முத்ரையுடன் அருளிடுவாளே!


நெற்றியிலே சுட்டியுடன்
கரத்தில்அக்ஷ மாலையுடன்
அணிகளுடன் ஒளிர்ந்திடுவாளே - அன்னை
அன்புடனே அரவணைப்பாளே!
பண்படிக்க மகிழ்ந்திடுவாள்
பக்தர்களை காத்திடுவாள்
எழில்மிகுந்த எங்கள் சாரதை - அவளின்
அடிபணிந்து வணங்கிடுவோமே!


உச்சிவகிடு மின்னிடவே
நீண்டபின்னல் துலங்கிடவே
குஞ்சலங்கள் அணிந்திருப்பாளே - அன்னை
அலையழகாய் கூந்தல்கொண்டாளே!


மான்போல மருள்விழியாள்
தேன்போல கிளிமொழியாள்
இந்திராதி தேவர் பணிந்திட - அன்னை
காந்திமிகத் திகழ்ந்திடுவாளே!


அழகுக்கு ஒருவருமே
ஒவ்வாத எழிலுடையாள்
மின்கொடிபோல் மேனியைக்கொண்டாள் - அன்னை
அனைத்துக்கும் முதலாய்நின்றாள்!


நிர்மலமாம் குணமுடையாள்
தவமுனிவர் தொழும்படியாய்
உலகெங்கும் அவளாய்நின்றாள் - அன்னை
அவளேதான் உலகாய்நின்றாள்!


பலப்பலவாம் வாகனத்தில்
சுபநவமி காலங்களில்
எழுந்தருளி அருள்புரிவாளே - அன்னை
சாரதையை வணங்கிடுவோமே!


அனல்ரூப மானவளாம்
அனைத்துலகும் ஆள்பவளாம்
இதயமெனும் தாமரைமலரில் - அன்னை
வண்டெனவே ரீங்கரிப்பாளாம்!


நடன,நாத தோத்திரத்தின்
அடிநாதம் ஆனவளாம்
அன்பிற்கே இலக்கணமாவாள் - அன்னை
சாரதையின் அடிபணிவோமே!

முக்கண்ணன் மாதவனும்
முனிவர்களும் தேவர்களும்
நான்முகனும் வணங்கிடுவாரே - சாரதையை
அன்புடனே பணிந்திடுவாரே!


இருசெவியில் குண்டலங்கள்
எழிலுடனே அசைந்திருக்க
ஒளிவீசும் நகைபுரிவாளே - அன்னை
சாரதையை வணங்கிடுவோமே!


--கவிநயா