Monday, November 26, 2018

உள்ளம் என்னும் ஊரில்...



உள்ளம் என்னும் ஊரிலே
பக்தி என்னும் தேரிலே
உவகையுடன் வலம் வருவாள்
உத்தமி உமையாள், அவளை
அன்னை என்று அழைத்து விட்டால்
அருள் மழை பொழிவாள்

நெஞ்சமென்னும் வானிலே
நிலவு போல அவள் முகம்
கஞ்ச மலர்ப் பாதங்களோ
தங்க நிழல் தரும், அவளை
நினைவினிலே நிறுத்தி விட்டால்
நிம்மதி பிறக்கும்

செந்தமிழை விரும்புவாள்
சந்தங்களை அருளுவாள்
கருப் பொருளாய் அவள் வருவாள்
கவிதையைத் தருவாள், அவளை
புகழ்ந்து பணிபவர்க்கு
அருள் மழை பொழிவாள்


--கவிநயா

Monday, November 19, 2018

வருவாயா?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

தோளில் சாய்த்துக் கொள்வாயோ?
துயரம் ஏனோ என்பாயோ?
மார்பில் சேர்த்துக் கொள்வாயோ?
கூந்தல் கோதிச் சொல்வாயோ?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

என் மனதில் வளர் ஜோதி, நீ
ஆதி சிவனில் பாதி
தேடி வந்தேன் நாடி, தினம்
உந்தன் புகழ் பாடி

அம்மா நீ அருகிருந்தால் போதும், என்
பிறவித் துன்பம் ஓர்நொடியில் சாகும்

உந்தன் சிறு பிள்ளை, உன
புகழ் பாடும் கிள்ளை
        உனையே கொழு கொம்பாய்
        நினைக்கும் கொடி முல்லை

உன் முகமே நினைவலையில் நீந்தும், அதைக்
காணக் காண மகிழ்ச்சி வெள்ளம் மோதும்


--கவிநயா


Monday, November 12, 2018

அருட்பார்வை வேண்டும்



பாவங்கள் கரையவில்லையே, என்
கண்ணீரும் குறையவில்லையே
வினைகள் என்னை மறக்கவில்லையே
கருத்த வானம் வெளுக்கவில்லையே
(பாவங்கள்)

ஒன்றிருக்க ஒன்று வர
இரண்டிருக்க நான்கு வர
துன்பம் வந்து சேரச் சேரத் தாளவில்லையே
இதைத் தீர்க்கும் வழி என்னவென்று புரியவில்லையே
(பாவங்கள்)

உன்னருளை நாடி வந்தேன்
உனதடிகள் தேடி வந்தேன்
அன்னை உந்தன் அருட்பார்வை ஒன்று போதுமே, அது
பிள்ளை யெந்தன் வினை யாவும் வெந்து போகுமே
(பாவங்கள்)


--கவிநயா

Tuesday, November 6, 2018

உன்னாலே...



உன்னாலே உன்னாலே உலகம் இயங்குது
தன்னாலே தன்னாலே உள்ளம் மயங்குது
(உன்னாலே)

இன்பம் ஒன்று வந்து விட்டால் உள்ளம் துள்ளுது
துன்பம் வந்து சேர்ந்து விட்டால் உடைந்து துவளுது
(உன்னாலே)

உன்னை நினைத்துப் பாடுகிறேன் கேட்கவில்லையோ?
உன்னை அழைத்துக் கூவுகிறேன் செவிகள் இல்லையோ?
உன்னை நினைத்து வாழும் பிள்ளை நினைவில் இல்லையோ?
என்னைக் கண்ணெடுத்துப் பார்த்திடவும் நேரமில்லையோ?
(உன்னாலே)



--கவிநயா