Monday, April 27, 2015

சிலையென நில்லாதே அம்மா!



பலமுறை உனைப் பணிந்தேன் பார்வதியே

சிலையென நில்லாமல் பார் உமையே!

(பலமுறை)



விலங்கெனும் மனம் கொண்டு உழலுகிறேன்

விளக்கென ஒளி தந்து காவாயோ?

(பலமுறை)



வழியும் கண்ணீர் துடைக்க வர வேண்டும்

தொழுதென்றும் உனைப் பணியும் வரம் வேண்டும்

மழுவினை ஏந்துகின்ற மன்னனுடன் வந்து

மழையென உன்னருளைத் தர வேண்டும்!

(பலமுறை)


--கவிநயா 


Monday, April 20, 2015

மங்கலத் திருத்தாயே!

மங்கலத் திருத்தாயே மனமகிழ்ந்தருள்வாயே
செங்கமலத் தாள்கள் சென்னியில் பதிப்பாயே
(மங்கலத்)

சித்தி விநாயகனைப் பெற்றவளே தாயே
செந்தில்வடி வேலன்கையில் சக்திவே லானாய் நீயே
(மங்கலத்)

ஆதியந்தம் இல்லா வேதத்தின் விழுப்பொருளே
சோதிப் பிழம்பானவனாம் சுந்தரனின் துணையே
வெள்ளைப்பனி மலையில் வீற்றிருக்கும் அமுதே
பிள்ளை உள்ளந் தனிலும் குடியிருப்பாய் இனிதே
(மங்கலத்)


--கவிநயா

Monday, April 13, 2015

அடைக்கலம் தருவது உன்பதமே!

அம்மா உன்பதம் தேடுகிறேன்
அன்பாலே உனை நாடுகிறேன்
பண்ணால் உன்புகழ் பாடுகிறேன்
கண்ணாய் உனைதினம் போற்றுகிறேன்
(அம்மா)

அங்குச பாசம் அங்கையிலே
பொங்கிடும் அருளுந்தன் கண்களிலே
கங்கையை அணிந்தவன் மேனியிலே
பங்கொன்று கொண்ட என் பார்வதியே
(அம்மா)

வெம்மையைத் தணிப்பது உன்நிழலே
வேதனை தீர்ப்பது உன்னருளே
அன்பினைப் பொழிவது உன்விழியே
அடைக்கலம் தருவது உன்பதமே!
(அம்மா)


--கவிநயா 
 

Thursday, April 9, 2015

சின்னச் சின்ன ஆசை !


சின்னச்  சின்ன ஆசை !


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !


புல்லாயினும் உந்தன் பூம்பதம் படும் புல்லாய் 
        கதம்பவனந்தனிலே  முளைத்திட ஆசை !


புள்ளாயினும்  உந்தன் வேயுறு தோளமரும்
      பேறுபெற்ற  கிள்ளையாய்க் கீச்சிட ஆசை !


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !


கல்லாயினும் உந்தன் சிலையாக உருமாறும்
    நல்வரம் பெற்றச்  சிற்பக்கல்லாக ஆசை!


சொல்லாயின் உன் துதியின் கவிநயச்சொல்லாகி
  சொல்லொணாச் சுகங்காண ஆசையோ ஆசை!


எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே!
உன்னை  மறவாப்பிறவி எடுத்திட ஆசை  !
















Monday, April 6, 2015

பாராயோ? வாராயோ?


சுப்பு தாத்தா தேன் போலப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



தேனினிய திருநாமம், செப்புகிறேன் தினந்தோறும்

மீனனைய விழியாளே, மீனாளே பாராயோ?



உன்நினைவே சுவாசமென, வாழுகிறேன் தினந்தோறும்

உத்தமியே உமையாளே, உன்மகளைப் பாராயோ?



பனிமலை மீதினிலே, பரம சிவன்அருகே

பதவிசாய் வீற்றிருக்கும், பார்வதியே பாராயோ?



கனியிதழ் முறுவலுடன், காசினியைக் காத்திருக்கும்

காஞ்சிநகர்க் காமாக்ஷி, என்திசையில் பாராயோ?



சிதம்பர நாதனவன், சிலம்பொலியில் லயிக்கும்

சிற்றிடையாள் சிவகாமி, சற்று என்னைப் பாராயோ?



காசிவிஸ்வ நாதனுடன், பக்தர்தமைக் கடைத்தேற்றும்

கோலஎழில் விசாலாக்ஷி, கொஞ்சமிங்கு பாராயோ?



ஊருக்கொரு பெயருடனே, உலகெல்லாம் ஆளுகின்ற

என்தாயே மனமிரங்கி, பிள்ளையினைப் பாராயோ?



விழிகளில் நீர்வழிய, வேண்டுகிறேன் உனைநானும்

வேதனைகள் தீர்த்திடவே, விரைந்திங்கு வாராயோ?


--கவிநயா