Wednesday, October 17, 2007

நவராத்திரி பாடல் அகரமுரல எழுத்தெல்லாம்

நவராத்திரி வைபோகத்தை ஒட்டி எல்லாரும் போட்டு கலக்குகிறார்கள். நானும் என் பங்குக்கு சரஸ்வதி சபதம் படத்தில் வரும் அகர முதல எழுத்தெல்லாம் என்கிற பாட்டை போடலாம் என்றிருக்கிறேன். இந்த பாட்டில் ஒவ்வொரு வரியும் ஆரம்பிக்கும் போது உயிர் எழுத்துக்கள் வரிசையாக வரும். இந்த பாட்டு சரஸ்வதியைப் பற்றியது. ஊமையாக இருக்கும் சிவாஜிக்கு பேச வைத்தும், அறிவுத்திறணையும் கொடுத்து அவனை கவிஞன் ஆக்குகிறாள். அதற்கு நன்றி செலுத்தும் விதத்தில் சிவாஜி இப்பாடலை சரஸ்வதியின் சிலை முன் பாடுகிறார். இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே வி மகாதேவன், பாடியது டி எம். சௌதராஜன், எழுதியது கண்ணதாசன். இப்படத்தை எடுத்தவர் ஏ பி நாகராஜன். இப்படம் வெளியான வருடம் 1966.



அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி (அகர)

ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய்
தேவி (அகர முதல)

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரியவைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாயம்மா பேச வைத்தாய்
(அகர முதல)

எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தெங்கும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளியவைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும், தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் பார்த்தது
யானை சேனை படையுடன் வேந்தது

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயிலாத பிள்ளையென்று வாயில்லாத
ஊமையென்று ஆயிரங்களான கல்வி
வாய்திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன் தேவி


குறிப்பு; எங்காவது தவறாக எழுதியிருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்.

Saturday, October 13, 2007

அம்பா மனம் கனிந்து- சிவகவி- நவராத்திரிப் பாடல் 3

சிவகவி-ன்னு ஒரு படம் வந்து ஓடு ஓடு ன்னு ஓடிச்சாம். வீட்டுல பெரிய அத்தை இப்படிப் பேச்சை ஆரம்பிச்சாங்கனா, நாங்க எல்லாரும் ஒடு ஓடுன்னு ஓடுவோம் :-)
ஆனால் அந்தப் படத்தில் வரும் தமிழ்ப் பாடல்களின் சுவையும் ஆழமும் முதலில் தெரியவில்லை;
தமிழ்ப் பற்று, தமிழிசைப் பற்று வந்த பின்னால் தான் நமக்கே தெளிவாகத் தெரிகிறது.

தமிழிசைக்கு மிகவும் வேண்டிய ஒன்று, இசையுடன் கூடிய பாடல்கள். அவை இல்லாது இருந்த காலத்தில், அப்படிப் பாடல்களை எழுதிக் குவித்த பெருந்தகை பாபநாசம் சிவன்.
அவர் மேடைக் கச்சேரி பாடல்கள் மட்டும் எழுதியதோடு நிற்கவில்லை.
சினிமாவிற்கும் தமிழ் இசையைக் கொண்டு சென்று, சாதாரண மக்களுக்கும் தமிழ் இசையைச் சொந்தமாக்கினார்.


அவரைப் பற்றியும் அவரின் இசைப் பணி பற்றியும், இசை இன்பம் வலைப்பூவில் யாராச்சும் ஒருவர், தொடராகப் போடலாமே? ஜீவா, திராச, சீவீஆர் - என்ன செய்யலாம்-னு சொல்லுங்க!
இன்றைய நவராத்திரிப் பாடல்...
அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்...இதோ; கேட்டு மகிழுங்கள்!




அம்பா மனம் கனிந்து உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்

(அம்பா)

வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே - சங்கரி ஜகதம்பா
(அம்பா)

பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்


பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி
(அம்பா)


படம்: சிவகவி
குரல்: எம்.கே.தியாகராஜ பாகவதர்
வரிகள்: பாபநாசம் சிவன்
இசை: ஜி.இராமநாதன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

Friday, October 12, 2007

மதுரை அரசாளும் மீனாட்சி - நவராத்திரிப் பாடல் 2


மதுரை அரசாளும் மீனாக்ஷி
மாநகர் காஞ்சியிலே காமாக்ஷி (மதுரை)

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி? (மதுரை)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே (மதுரை)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி (மதுரை)


பாடலை இங்கே கேட்கலாம்.

Wednesday, October 10, 2007

அகத்தியர் - ஸ்ரீ சக்ர ராஜ! நவராத்திரிப் பாடல் 1

அகத்தியரைப் பற்றிப் பல கதைகளும் தொடர்புகளும் வழங்கப்பட்டாலும், அவரே தமிழ் முனி என்று பலரும் கருதுகின்றனர்! தேனினும் இனிய தமிழ் மொழியை, ஈசன் முருகனுக்கு அளித்தான்; அதை முதல் ஆசிரியராய் இருந்து, முருகனே அகத்தியருக்குக் கற்பித்தான் என்பது வழக்கு!

பின்னரே அகத்தியர், தொல்காப்பியருக்கு தமிழ் இலக்கணத்தைப் பயிற்றுவித்தார் என்றும் சொல்லுவர்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
, என்பது அருணகிரியார் வாக்கு!

அகத்தியர் சித்தர்களுக்கு எல்லாம் தலைவரும் கூட!
இன்றும் சித்தர் தத்துவங்களிலும், சித்த மருத்துவத்திலும் கொண்டாடப்படுபவர்! திருமூலர், பாபாஜி போன்றவர்களுக்கும் குரு!

தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்.
இராமாயணம், மகாபாரதம் என்று இரண்டு காவியங்களிலும் வருபவர்.
சைவ-வைணவ ஒற்றுமைக்கு இவர் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.


ஈசன் திருமணம், விந்திய மலைச் செருக்கழித்தல், காவிரி தோற்றம், பிள்ளையார் குட்டு, வாதாபியின் கதை, லோபாமுத்திரையுடன் இல்லற வாழ்வு, குற்றாலத்தில் வைணவர்களின் செருக்கழித்தல் என்று இவரைப் பற்றிய கதைகள் பலப்பல! ஜைன இலக்கியங்களிலும் குறிக்கப்படுகிறார்.

சப்தரிஷி மண்டலத்தில் தென் திசை நட்சத்திரம் இவரே! சோதிடத்திலும் இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். (நாடி ஜோதிடம், வாஸ்து முதற்கொண்டு)...
இப்படிப் பல்துறை வித்தகர்! பல்கலை அறிஞர்!

பேரகத்தியம், சிற்றகத்தியம் என்பது இவர் தமிழில் செய்த நூல்கள் என்பர். இவை தொல்காப்பியத்துக்கு முன்னோடி!
வடமொழியில் ரிக்வேத மந்திரங்கள் பலவும், லலிதா சகஸ்ரநாமம், ஆதித்ய ஹிருதயம் போன்ற நூல்களையும் செய்துள்ளார்.
இவர் மனைவியார் லோபாமுத்திரைக்கு சக்தி வழிபாட்டில் ஈடுபாடு மிகுதி. அதனால் அவருடன் சேர்ந்து, ஸ்ரீவித்யா மற்றும் ஸ்ரீ சக்ர தத்துவங்களை, அகத்தியரும் ஆய்ந்தார் என்று சொல்லுவர்.

அப்படி செய்யப்பட்டது தான் கீழ்க்கண்ட பாடல்! மிகவும் புகழ் வாய்ந்த பாடல்....ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி!(புதுக்கோட்டை அதிட்டானத்தார் தான் அகத்தியர் பெயரில், இப்பாடலை எழுதியதாகச் சொல்வோரும் சிலர் உண்டு)

இன்று நவராத்திரி முதல் நாள்! (Oct 11, 2007)
அன்னை அருள் கொலு இருக்கும் இந்த ஒன்பது நாட்களிலும், பூமாலைகளோடு, பாமாலைகளும் கேட்டு மகிழ்வோம்!
பூமாலையின் வாசம் மூக்கைத் தான் துளைக்கும்! - பாமாலையின் வாசமோ, முற்பிறப்பு அறுக்கும்!
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

பாடலை, இனிமையான இசையில் இங்கு கேட்கலாம்! அதுவும் சந்தானம் பாடுவது செவிக்கின்பம்!!
மகாராஜபுரம் சந்தானம்
பம்பாய் சகோதரிகள்
நித்ய ஸ்ரீ


Rochester-NY, ராஜராஜேஸ்வரி.
அன்னையின் திருமுகத்தில் பரங்கருணை!

(Click for an enlarged version)
(செஞ்சுருட்டி ராகம்)
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

(ஸ்ரீசக்ர)

(புன்னாகவராளி ராகம்)
பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி


(நாதநாமக்ரியை ராகம்)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி


(சிந்து பைரவி ராகம்)
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா....அகிலாண்டேஸ்வரி

(ஸ்ரீசக்ர)


நியுயார்க் மாநிலத்தில், ராச்செஸ்டர் (ரஷ்) என்னும் ஊரில், அழகான ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது! இலங்கைத் தமிழர் ஒருவரால் (அய்யா என்று விளிக்கப்படுபவர்) நடத்தப்படும் இந்த ஆலயம் மிகவும் பிரபலமான ஒன்று!
எளிமை, தூய்மையுடன், சாதி மத பேதமின்றி வழிபாடுகள் நடைபெறுகின்றன! அர்ச்சகரும் அந்தணர், அல்லாதார் என்று பேதம் கிடையாது! இதோ அவர்கள் தளம்!

ஞானவெட்டியான் ஐயா, சென்ற முறை இட்ட நவராத்திரி - முதல் நாள் பதிவு இங்கே!