Wednesday, January 28, 2009

லலிதா நவரத்தினமாலை 4

3. முத்து

முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே
முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களும் முறையே நடப்பதால் தான் உலக இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்னையே. இந்த மூன்று தொழில்களையும் குறையின்றி செய்யும் வல்லமை உனக்கு உண்டு. ஆனால் அடியவர்களுக்கு அருள் கொடுப்பதே முதன்மைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்பதால் முப்பெரும் தேவர்களைப் படைத்து அவர்களிடம் இம்மூன்று தொழில்களையும் ஒப்படைத்தாய் போலும். அவர்கள் அவரவர் தொழில்களை குறையின்றி செவ்வனே செய்ய முன்னின்று அருள்கின்றாய் நீ. முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்.

பல்லாயிரம் கோடி அண்டங்கள் அனைத்திற்கும் விதையாக நின்றவளே. அவ்வித்திலிருந்து தோன்றிய அப்பல்லாயிரம் கோடி அண்டங்கள் அனைத்துமாக விளங்குபவளே. வித்தே விளைவே சரணம் சரணம்.

உன் அருளினைப் பெற நான் உன் அடி வணங்க வேண்டும். உன் அடிகளை வணங்க நான் உன் அருளினைப் பெற வேண்டும். உன் அடிகளை வணங்க உன் அருளே வித்தாக நிற்கின்றது. உன் அடிகளை வணங்கியதால் வரும் உனதருளே விளைவாக நிற்கின்றது. வித்தே விளைவே சரணம் சரணம்.

உலகத்தில் என்றும் நிலையாக நிற்கும் அறிவின் எல்லையே. அவ்வறிவின் தொகுப்பான வேதங்களின் எல்லையே. அவ்வேதங்களின் எல்லையாம் வேதாந்தங்களில் என்றும் நிலையாக வசிப்பவளே. வேதாந்த நிவாசினியே சரணம்.

உன்னையே தஞ்சம் என்று அடைந்தேன் அம்மா. வேறு தஞ்சம் எதுவும் இல்லாத நான் உன்னிடம் தத்துப்பிள்ளையாக வந்தேன் அம்மா. தத்து ஏறிய நான் தனயன்; தாய் நீ.

மீண்டும் பிறப்பு. மீண்டும் இறப்பு. மீண்டும் பிறப்பிற்காகத் தாய் வயிற்றில் வசிப்பு. இந்தச் சுழற்சியிலிருந்து நீங்கி என்றைக்கும் சாகாமல் உனதருளே சரணம் என்று வாழும் வரம் தருவாய். சாகாத வரம் தரவே வருவாய்.

மத்தில் அகப்பட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சுழலும் தயிரைப் போன்ற வாழ்வினை நான் அடைய விரும்பவில்லை. என்றும் நிலையான உன் திருவடி நிழலைத் தந்தருள்வாய். மத்து ஏறு ததிக்கு (தயிருக்கு) இணை வாழ்வடையேன்.

தாயே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


4. பவளம்

அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

சிற்றஞ்சிறுகாலையும் அந்திமாலையும் அனைவருக்கும் பிடிக்கும். அந்த அந்தி மயங்கிய பொழுதில் தெரியும் வானம் என்னும் கூரை அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. கூரையை மேடை ஆக்கும் திறன் அன்னைக்கு மட்டுமே உண்டு. அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை.

மிகுந்த வளம் பொருந்தியது இந்தப் பூமி. இந்தப் பூமியில் வாழ்பவர்களின் சிந்தைகளை எல்லாம் கொள்ளைக் கொள்ளும் அழகு பொருந்தியது. அவர்களுக்கு தேன் காடாக இருக்கும் வளமும் அழகும் பொருந்தியது. இந்தப் புவியை செய்தவள் யாரோ? சிந்தை நிரம்ப வளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ? வேறு யார்? நம் அன்னை தான்.

என் தந்தையாம் சிவபெருமானின் இடப்பாகத்திலும் அவருடைய மனத்திலும் அகலகில்லேன் சிறிது நேரமும் என்று நீங்காது நிலைத்திருப்பாள். எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்.

தன்னை எண்ணும் எண்ணம் இருப்பவர்களுக்கு எல்லாம் அருள் செய்யும் உறுதி உடையவள் நம் அன்னை. எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் மிகுந்தாள்.

மந்திரங்கள் நிறைந்துள்ள வேதங்களின் உருவாகவும் அம்மந்திரங்களின் பொருளாகவும் இருப்பவள் நம் அன்னை. மந்திர வேத மயப் பொருள் ஆவாள்.

தாயே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

Sunday, January 25, 2009

லலிதா நவரத்தினமாலை 3

1. வைரம்

வற்றாத அருள் ஊற்றே; அந்த அருள் ஊற்றில் இருந்து ஊறும் அருள் என்னும் நீரால் நிறைந்த வற்றாத சுனையே; அன்னையே. கற்பவை கற்க என்றார் குறளாசிரியர். அப்படி கற்க வேண்டியவை என்று என்ன என்ன இருக்கிறதோ அவற்றை எல்லாம் கற்ற பின்னரும் உன் அருள் நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர் இல்லையாம். அவர் கற்பவை எல்லாம் கற்றும் தெளியாராம். எத்தனை தான் கற்றாலும் 'கற்ற பின் நிற்க அதற்குத் தக' என்ற சொல்லை மறந்தால் சரியா? அதனால் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டு, நாடு நகரங்களில் கிராமங்களில் மனைவி, மக்கள், சுற்றம், வீடு, வாசல், வயல்வெளிகள் என்று வாழ்ந்து வந்தால் கற்றபடி நிற்க இயலாது; இருக்கும் பற்றெல்லாம் துறந்து கற்றபடி நிற்க வேண்டுமெனில் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி காடே கதியாய் அங்கேயே நிலையாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தவம் செய்தாலும் உன் அருள் நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர் இல்லையாம். காடே கதியாய் கண் மூடி தவம் செய்தவர்களும் தெளியார்; அதனால் அவர்கள் செய்த தவம் நெடிய கனவினைப் போல் பயனின்றிப் போனதாம்.

கற்க வேண்டியவற்றை எல்லாம் கற்றவர் நிலையும் கற்றபின் அதற்குத் தக நின்றவர் நிலையும் இப்படி என்றால் பெரும் பாவங்களும் பிழைகளும் செய்யும் தாழ்ந்தவன் என் நிலை என்ன? அடியேன் சிறிய ஞானத்தன்; அறிதல் யார்க்கும் அரியவளை அடியேன் காண்பான் அலற்றுகின்றேன்; இதனை விட எள்ளத் தக்க நிலையும் உண்டோ? நான் உன்னை அறிய வேண்டும் என்று பேசுவதும் தகுமோ? அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ?

உலகத்தில் இருக்கும் தீமைகள் எல்லாம் ஒரே உருவாகி என்னுள் வளர்கின்றன. அன்னையே. அத்தீமைகள் என்னும் பகைவர்கள் மிக்க வலிமையுடன் இருக்கிறார்கள். வயிரப்பகைவர்களாக இருக்கிறார்கள். அவர்களை என்னால் அழித்து ஒழிக்க இயலாது. உன் அருளாலேயே அது நடைபெற வேண்டும். அந்த வயிரப் பகைவர்களுக்கு எமனாக உன் திருக்கைகளில் வலிமை மிக்கப் படைக்கலங்களைத் தாங்கியவளே. பற்றும் வயிரப் படை வாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே.

வற்றாத உன் அருட் புனலால் என்னைக் காக்க வருவாய். தாயே. லலிதாம்பிகையே. உனக்கு எல்லா வெற்றிகளும் உண்டாகட்டும். வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண் மூடி நெடும் கனவான தவம்
பெற்றும் தெளியார் நிலை என்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படை வாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


2. நீலம்

உடலில் மூலாதாரம் என்னும் அடிப்படைச் சக்கரத்தில் குண்டலினி என்ற பெயரில் வாழும் கனலே சரணம். மூலக்கனலே சரணம் சரணம். எல்லாவற்றிற்கும் தாய் ஆனவளே. எல்லாவற்றையும் படைத்தவளே. யாரும் எவையும் இல்லாத காலத்தில் இருந்த முதன்முதலே. இனி எக்காலத்திலும் இருப்பவளே. யாரும் எவையும் இல்லாமல் போகும் போதும் இருப்பவளே. முடியா முதலே சரணம் சரணம். அழகிய கிளி போன்றவளே. கோலக்கிளியே சரணம் சரணம். ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்றிவைகளே இவ்வுலகத்திற்கு ஒளி தரப் போதுமானவையாக இருக்க ஓராயிரம் கோடி சூரியர்கள ஒன்று திரண்டாற் போல் ஒளி வீசும் குறையாத ஒளிக்கூட்டம் போன்றவளே. குன்றாத ஒளிக்குவையே சரணம்.

எங்கும் நிறைந்த ஆகாய வெளி நீல நிறத்துடன் இருப்பதைப் போல் எங்கும் நிறைந்த நீயும் நீலத் திருமேனியுடன் இருக்கிறாய். அந்த நீலத் திருமேனியிலேயே நினைவை நிறுத்தி வேறு எந்த நினைவும் இன்றி எளியவன் நிற்கின்றேன். நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய். பாலா திரிபுரசுந்தரி என்ற திருப்பெயருடன் சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி உன் அடியவர் நெஞ்சில் நிறைபவளே. வாலைக்குமரி வருவாய் வருவாய். தாயே. உனக்கே எல்லா வெற்றிகளும் உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

Friday, January 23, 2009

லலிதா நவரத்தின மாலை 2

ஞான கணேசனையும் ஞான ஸ்கந்தனையும் ஞான சத்குருவையும் ஞானானந்தனையும் சரணடைந்த பின்னர் இந்த லலிதா நவரத்தின மாலை என்னும் நூல் நன்கு அமைய கணநாயகனைப் பாடும் பாடல் வருகிறது. இயற்கைச் சக்திகளே கணங்கள் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அந்த இயற்கைச் சக்திகளின் தலைவனாக விநாயகர் இருப்பதால் அவருக்கு கணநாயகர் என்றும் ஒரு பெயர். அவருக்கு யானை உருவம் இருப்பதால் 'கணநாயக வாரணம்' என்றும் அழைக்கப்படுகிறார். அந்த கண நாயக வாரணம் இந்த நவரத்தின மாலையினைக் காக்கும்.

யார் மேல் இந்த நவரத்தின மாலை என்று கேட்டால் உலகங்களையெல்லாம் உடையவளான புவனேஸ்வரியின் பால் சேர்க்கப்படும் நவரத்தின மாலை இது. அவளது புன்னகை நலம் பூக்கும் புன்னகை. எல்லோருக்கும் நலத்தையே தரும் புன்னகை. அவள் ஆக்கும் தொழிலுடன் ஐந்து அறங்களையும் செய்கிறாள். ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி. அவள் பால் சேர்க்கும் நவரத்தின மாலை இது. இதனைக் காக்கும் கண நாயக வாரணமே.

ஆக்கும் தொழில் ஐந்தறன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தினமாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே


இந்த புவனேஸ்வரியே லலிதாம்பிகை. மென்மையான கொடியைப் போன்ற அகிலங்களுக்கெல்லாம் அன்னை. கொடியைப் போன்று மென்மையானவள் என்பதால் லலிதை. அனைத்து உலகங்களுக்கும் அன்னை என்பதால் லலிதாம்பிகை. அவளுக்கு வெற்றி என்றால் அனைத்துலகிற்கும் அனைத்துலக மக்களுக்கும் அனைத்துலக உயிர்களுக்கும் வெற்றி. அதனால் அன்னையின் வெற்றியை வேண்டி அவளையே வணங்குகிறோம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அடுத்த பகுதியிலிருந்து ஒவ்வொரு இரத்தினமாகவும் அன்னை எப்படி திகழ்கிறாள் என்று பார்ப்போம்.

Thursday, January 22, 2009

ஏழுலகம் ஏத்துகின்ற எங்கள் அம்மையே !




ஏழுலகம் ஏத்துகின்ற எங்கள் அம்மையே - நீயும்
காக்க வேணும் அன்புடனே வந்து எம்மையே

வினைகளெல்லாம் சேர்ந்தழுத்த உள்ளம் வெம்பியே - நாங்கள்
வந்து நின்றோம் சந்நிதியில் உன்னை நம்பியே

மீன்விழியால் காப்பவளே மாந்தர் தம்மையே - அந்த
வான்போற்றும் தேனேமீ னாக்ஷி அம்மையே

கடைவிழியால் சிரிப்பவளே கருணை பொங்கவே - காஞ்சி
மாநகரின் மணியேகா மாக்ஷி அம்மையே

காசினியில் யாவருக்கும் கருமந் தொலையவே - காசி
நாதனுடன் விளங்கும்விசா லாக்ஷி அம்மையே

ஆதிசிவன் அருகினிலே அம்பலத்திலே - அவன்
அகம்மகிழ அருளும்சிவ காமி அம்மையே

காதணியைத் தானெறிந்து நிலவு தன்னையே - அன்பு
பட்டருக்காய் அமைத்தஅபி ராமி அம்மையே

அரும்புப்பிள்ளை அழுதிருக்க அன்னையாகவே - வந்து
அமுதுஊட்டி அணைத்தசிவ சக்தி அம்மையே

எங்களையும் அரவணைப்பாய் அன்புமீறவே - நாங்கள்
செய்யும்பிழை பொறுத்தருள்வாய் தன்மையாகவே

வினைகளெல்லாம் சேர்ந்தழுத்த உள்ளம் வெம்பியே - நாங்கள்
வந்து நின்றோம் சந்நிதியில் உன்னை நம்பியே


--கவிநயா

Thursday, January 15, 2009

மனசுக்குள்ள குடிசை கட்டி...





மனசுக்குள்ள குடிசை கட்டி
மாக்கோலம் போட்டு வச்சேன்

மாவிலயத் தொங்க விட்டு
மல்லியப்பூ தொடுத்து வச்சேன்

அச்சு வெல்லந் தட்டிப் போட்டு
பச்சரிசி பொங்க வச்சேன்

அகல் வெளக்க ஏத்தி வச்சு
ஆத்தா ஒனக்கு அழப்பு வச்சேன்

மனசுவச்சு நீயும் வரணும்
மகளுக்கு ஒன் அன்பத் தரணும்

சின்னக் குடிசையின்னு நீயும்
செரமம் பாக்காம வரணும்



--கவிநயா