Monday, April 15, 2013

யாவும் நீயே!



சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் ஆனந்தமாகப் பாடியதைக் கேட்டு நீங்களும் ஆனந்தியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அண்டமாகி பிண்டமாகி
கண்டன் கொண்ட பாதியாகி
அதுவுமாகி இதுவுமாகி
நின்ற அன்னையே!

நின்றதாகி சென்றதாகி
வென்றதாகி தோற்றதாகி
யாவும் ஒன்று என்று ஆன
என்றன் அன்னையே!

கண்டதாகி விண்டதாகி
கலந்து நின்ற ஜோதியாகி
காலம் யாவும் வென்றதாகி
நின்ற அன்னையே!

தேவராகி அசுரராகி
தேடுகின்ற யாவுமாகி
தெளிந்த ஞான தீபமான
என்றன் அன்னையே!

வேதமாகி வித்தையாகி
வேண்டுவோர்க்கு அன்னையாகி
வித்துமாகி விளைவுமாகி
நின்ற அன்னையே!

சத்வமாகி தத்வமாகி
சாந்தரூப மாகஆகி
சத்தியத்தின் வடிவமான
என்றன் அன்னையே!

புத்தியாகி சித்தியாகி
பக்தியாகி முக்தியாகி
சக்தியாகி சிவமுமாகி
நின்ற அன்னையே!

கனலும் புனலும் காற்றுமாகி
முதலும் நடுவும் முடிவுமாகி
முடியில் பாதம் வைத்து ஆளும்
என்றன் அன்னையே!


--கவிநயா

('ஓம் நமோ நாராயணாய...' என்ற மெட்டில்)

6 comments:

  1. பாடிப் பார்த்தேன்... பாடல் அருமை...

    ReplyDelete
  2. BEST OF KAVINAYA!
    REMINDED OF S.BHARATHI!!

    ReplyDelete
  3. லலிதாம்மாவின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன். வேதாந்தம் பொங்கிப் பிரவகிக்கிறது. அன்னை அருள் மேலும் தங்கள் கவிதை வழியே பெருகப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. பார்வதி ஜி

    http://kavinaya.blogspot.in/2012/12/blog-post_27.html
    இந்த இணைப்பைக் க்ளிக் பண்ணி பாருங்க;உங்களையறியாமல்கால்ஜதிபோடஆரம்பிச்சுடும்;பாரதியின் புனர் ஜென்மமோ என்று தோன்றும் !

    ReplyDelete
  5. ////ங்களையறியாமல்கால்ஜதிபோடஆரம்பிச்சுடும்;பாரதியின் புனர் ஜென்மமோ என்று தோன்றும் !////

    பார்த்து விட்டேன். தாங்கள் சொன்னது யாவும் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. நன்றிகள் பல்லாயிரம் கோடி தங்களுக்கும் கவிநயா அவர்களுக்கும்.

    ReplyDelete
  6. மிகவும் நன்றி தனபாலன், லலிதாம்மா, மற்றும் பார்வதி!

    லலிதாம்மா, எனக்கே பிடித்த இன்னொரு பாடலையும் எடுத்துக் காட்டியமைக்கு நன்றி அம்மா. ஆனா, இது போல அபூர்வமாதான் எழுதறேன், அதனால பாவம் பாரதியை ஒண்ணும் சொல்ல வேண்டாம் :) உங்க அன்பால இப்படில்லாம் சொல்றீங்க போல. வணங்கிக்கிறேன் அம்மா. பொறுப்பாகச் சென்று வாசித்த பார்வதிக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete