Sunday, September 10, 2017

பாரதியின் சக்தி துதி

Image result for BHARATHIYAR IMAGE

வையம் முழுதும் [பாரதியின் கவிதை ]

வையம் முழுதும் படைத்தளிக்கின்ற 
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம் ;
செய்யும்வினைகள் அனைத்திலுமே வெற்றி 
சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே!

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் 
புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம் ;
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை 
மேன்மையுறச்செய்தல் வேண்டுமென்றே!

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை 
மேவிடும் சக்தியை மேவுகின்றோம்;
ஏகநிலையில் இருக்கும் அமிர்தத்தை 
யாங்கள் அறிந்திட  வேண்டுமென்றே !

உயிரெனத் தோன்றி உணவுகொண்டே வளர்ந்
தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களை 
பாலித்து நித்தம் வளர்க்கவென்றே!

சித்தத்திலே  நின்று சேர்வதுணரும் 
சிவசக்தி தன்  புகழ் செப்புகின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் 
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே!

மாறுதலின்றி பராசக்தி தன் புகழ் 
வையமிசை நித்தம் பாடுகின்றோம்;
நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர் 
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே!

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்;
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார் , சுடர் 
ஓண்மை கொண்டார்  , உயிர் வண்மை கொண்டார் .
 

No comments:

Post a Comment