Friday, August 7, 2009

ஆடிவெள்ளிக் கிழமையிலே...



ஆடிவெள்ளிக் கிழமையிலே
தேவிஉன்னைத் துதிக்க வந்தேன்
தேடிமலர் பறித்து வந்தேன்
தேர்ந்தெடுத்து தொடுத்து வந்தேன்

சின்னஇதழ் சிரித்திருக்க
சேல்விழிகள் சிவந்திருக்க
வண்ணமலர் அலங்கரிக்க
வஞ்சிநீயும் மகிழ்ந்திருக்க

சிற்றாடை இடையினிலே
சித்திரம்போல் தழுவிநிற்க
பொற்றாமரை இதழ்போல்
பூம்பதங்கள் பொலிந்திருக்க

சர்க்கரைப் பொங்கலுடன்
சந்தனமும் மணத்திருக்க
நாதஸ்வரம் மேளங்களும்
நாற்றிசையும் ஒலித்திருக்க

கற்பூர ஜோதியிலே
கற்பகமே உன்னைக் கண்டேன்
பொற்பதங்கள் பற்றிக் கொண்டேன்
பூவுலகை மறந்து நின்றேன்!


--கவிநயா

(படம் மௌலிகிட்ட இருந்து சுட்டுட்டேன்! நன்றி மௌலி :)

10 comments:

  1. அம்மனின் அகம் குளிர்ந்திருக்கும் கவிநயா, இந்த கவிமலரால்

    ReplyDelete
  2. படம் நான் ஒன்றும் வலையேற்றல்லை...கூகிளார் உபயம் தான். வலையேற்றியவருக்கு நானும் ஒரு நன்றியைச் சொல்லிக்கறேன் :-)

    //சேல்விழிகள்// சேல் அப்படின்னா என்னக்கா?

    ReplyDelete
  3. //அம்மனின் அகம் குளிர்ந்திருக்கும் கவிநயா, இந்த கவிமலரால்//

    மிக்க நன்றி பூங்குழலி :)

    ReplyDelete
  4. //படம் நான் ஒன்றும் வலையேற்றல்லை//

    ஆனா எனக்கு தேடற வேலையை மிச்சப்படுத்தினீங்களே :)

    //சேல் அப்படின்னா என்னக்கா?//

    சேல்விழி - மீன்விழி. சேல் அப்படின்னா கெண்டைமீன்னு பொருள்.

    ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்றி :)

    ReplyDelete
  5. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  6. http://www.youtube.com/watch?v=zAVOJdmJPZ0
    காமாக்ஷியின் மேல் பாடல் அல்லவா ?
    உடல் நலம் சரியில்லை என்று
    வாளா விருக்கலாமோ !
    விசுக்கென்று எழுந்தேன்.
    மூச்சு முட்ட
    மோஹனத்தில் பாடியிருக்கிறேன்.
    கேட்கவும்.
    //பொற்பதங்கள் பற்றிக் கொண்டேன்
    பூவுலகை மறந்து நின்றேன்!//


    கடை வரி இரண்டினையும்
    காலமெல்லாம் படிக்கலாம்.
    இன்புறலாம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. //செய்திவளையம் குழுவிநர்//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. வாங்க தாத்தா. பாவம், உடம்பு சரியில்லாததோட பாடினதுக்கு மிக்க நன்றி. அது மட்டுமில்லாம அருமையாகவும் பாடியிருக்கீங்க! இப்போ உடல் நலம் பரவாயில்லையா?

    //கடை வரி இரண்டினையும்
    காலமெல்லாம் படிக்கலாம்.//

    ஆம் தாத்தா. அதற்கு அவள் அருளவும் வேணும்.

    ReplyDelete
  9. //நல்லதொரு பதிவு.//

    முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றிங்க ராஜா.

    ReplyDelete