ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கு. அவற்றுக்குமே மூலம் பெங்காலியா இருக்கும்னு நினைக்கிறேன். அதில் ஒரு பாடல்தான் இது. "Who is this Woman yonder who lights the field of battle?", என்று தொடங்கும்.

யாரிந்தப் பெண்?
இருள் சூழ்ந்த போர்க் களத்தில்
கதிரவன்போல் திரிகின்றாள்!
கருமேக நிறம் விஞ்சும்
பளபளக்கும் கருமேனி
கண்கூசச் செய்கின்ற
மின்னல்போல் பல்வரிசை
அலைகின்ற வேகத்தில்
கலைகின்ற கருங்கூந்தலுடன்
ஆங்காரச் சிரிப்புடனே
அசுரர்களை வதைக்கின்றாள்!
அச்சமூட்டும் போர்நடுவே
அயராமல் இருக்கின்றாள்!
முத்துமுத்தாய் வியர்வையவள்
புருவங்கள் மேல்துளிர்க்க
கொத்துமலர் இவள் கூந்தலென
தேனீக்கள் மொய்த்திருக்க
முழுமதியும் இவள் அழகைக்
கண்டுநாணி ஒளிந்துகொள்ள
அதிசயங்களுக் கெல்லாம் அதிசயமாய்
திகழ்கின்ற இந்தத் தேவதை யாரோ?
கண்டவர் மயங்குகின்ற
இந்த அதிரூப சுந்தரி யாரோ?
சிவன்கூட பிணம்போல
அவள் காலடியில் கிடக்கின்றானே!
பிடியதனின் கம்பீரத்துடன்
போர்க்களத்தில் திரிகின்ற இவள்...
யாரென்று நான் கண்டு கொண்டேன்!
இவள்தான் காளி!
அண்டங்களனைத்தையும் ஈன்ற என் அன்னை!!
--கவிநயா

8 comments:
பாரதியாரின் இந்தக் கவிதை வரிகளில், காளி எப்படி வேகமும், கருணையும் நிரம்பியவள் என்பதைப்பார்க்கலாம்!
"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!
ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! "
//யாரென்று நான் கண்டு கொண்டேன்!
இவள்தான் காளி!
அண்டங்களனைத்தையும் ஈன்ற என் அன்னை!!//
கோர ரூபம் கொண்டாலும் அவள் அன்னையே.
அற்புதம் கவிநயா! இராமகிருஷ்ணரின் இஷ்ட தெய்வம் காளியின் மேல் அவர் பாடிய பாடலும் தங்கள் பொழிபெயர்ப்பும் அருமை.
பாரதிக்கு இணை யாரு? அன்னையின் மீதான அவனுடைய எழில் வரிகளை தந்தமைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்!
//கோர ரூபம் கொண்டாலும் அவள் அன்னையே.//
உண்மைதான், கைலாஷி. இதில் இருக்கும் எல்லாப் பாடல்களும் குருஜியின் சொந்தப் பாடல்கள் இல்லை. சில எழுதியவர் யாருன்னே தெரியாமல் இருக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி.
காளிய பார்த்த எனக்கு மயக்கம் வரும். அது இந்த பாட்டுல சொல்ற மாதிரி அவ அதி ரூப சுந்தரியா இருக்கறதுனால இல்ல. பயத்துல வர்ற மயக்கம். :-) பின்னர் ஒரு நாள் (பாரிமுனை) காளிகாம்பாள் கோயிலுக்கு போயிட்டு வந்த பின்னாடி காளி மேல இருந்த பயம் போச்சு. :-)
Gospel-ல் காணப்படும் பெரும்பான்மையான பெங்காலி காளி பாடல்கள் ராம் பிரசாத் என்பவரின் பாடல்கள்.
பயம் போயிடுச்சில்ல? :) அந்த வரை நல்லது.
//Gospel-ல் காணப்படும் பெரும்பான்மையான பெங்காலி காளி பாடல்கள் ராம் பிரசாத் என்பவரின் பாடல்கள்.//
ஆமாம், சட்டுன்னு நினைவுக்கு வரலை. நன்றி ராதா! இந்த பாடலின் ஆசிரியர் பேரு 'கமலாகாந்த்' போல இருக்கு.
அருமையாக இருக்கிறது
//அருமையாக இருக்கிறது//
வாங்க திகழ். மிக்க நன்றி.
Post a Comment