
காரமர் மேனியன் கற்பக கணபதி
கனிவுடன் காருமய்யா
வானவர் வினைகளை விரட்டவே உதித்திட்ட
வேலவா வாருமய்யா
காமனைக் கண்ணினால் எரித்திட்ட பரமனே
கண்கொண்டு பாருமய்யா
அறியாத பிள்ளைக்கு வழிகாட்டும் சத்குரு
உன்னருள் தாருமய்யா!
அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்ட நாயகியை
அனுதினமும் பாட வேண்டும்
அகத்திலே பொங்கிவரும் அளவிலா அன்பதனை
அவள்பாதம் சேர்க்க வேண்டும்
இகத்திலும் பரத்திலும் அவள்நாமம் ஒன்றேதான்
இன்பமாய் இருக்க வேண்டும்
சுகத்திலும் குறையாத சோகத்திலும் அவளை
சிக்கெனப் பிடிக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!
சிந்தையில் அவள்நினைவே கல்பதித்த சிற்பம்போல்
கலையாமல் இருக்க வேண்டும்
மந்தையென வருகின்ற எண்ணங் களைவிரட்டி
மங்கைதனை துதிக்க வேண்டும்
கந்தையென துயரங்கள் பிழிகின்ற போதினிலும்
கலங்கா திருக்க வேண்டும்
விந்தையெனும் இவ்வுலகில் உழலாமல் உறுதியுடன்
விரைந்தவளைப் பற்ற வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!
காணும்பொருள் யாவிலும் கன்னிஉன் திருமுகமே
கணந்தோறும் காண வேண்டும்
வானம்நிலம் மாந்தரும் வஞ்சிஉன் இன்னருளால்
வளம்பெற்று வாழ வேண்டும்
கோள்வென்று குறைதீர்க்க நாளெல்லாம் நலமாக
நாயகியே அருள வேண்டும்
வீணென்று இப்பிறவி ஆகாமல் எப்போதும்
உன்நினைவாய் இருக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!
நின்றாலும் நடந்தாலும் கிடந்தாலும் உன்நினைவே
என்துணையாய் ஆக வேண்டும்
சென்றாலும் இருந்தாலும் வென்றாலும் தோற்றாலும்
என்றும்உடன் இருக்க வேண்டும்
ஒன்றான ஓர்பொருளாய் என்நெஞ்சில் நீயேதான்
பொன்றா திருக்க வேண்டும்
குன்றாத ஒளியாக குறையாத நிதியாக
இறைவிநீ அருள வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!
காலனைக் கால்கொண்டு கடிந்தவர்க்கு ஒருபாகம்
தந்தவளே போற்றி போற்றி!
வேலனவன் வென்றிடவே வேல்தந்து வரமளித்த
வேல்விழியாள் அடிகள் போற்றி!
மலையரசன் மகளாக வந்துதித்த மாமணியின்
மலர்ப்பதங்கள் போற்றி போற்றி!
நிலையான அன்பதனை உன்மீது பொழியும்வரம்
தரவேண்டும் தேவி போற்றி!
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!
--கவிநயா
அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!