Tuesday, February 11, 2014

அன்னைக்கொரு அந்தாதி - 2



சுப்பு தாத்தா ராகமாலிகையில் அனுபவித்துப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


காப்பு


உன்னை, உறுவினை தன்னைக் களைந்திடும் ஐங்கரனை
கன்னல் மொழிபகர் வள்ளிக் குறமகள் சண்முகனை
மன்னும் இறையொளி தன்னில் மிளிர்ந்திடும் சத்குருவை
முன்னே அடிபணிந் தன்னை மலரடி போற்றுவனே!


நூல்


உன்னும் அடியவர்க் கென்றும் அருளிடும் உத்தமியே
மன்னும் மறைபுகழ் மங்கை எனத்திகழ் மாதவியே
இன்னல் பலப்பல என்னைத் தொடரினும் ஈஸ்வரியே
உன்னை அனுதினம் உள்ளம் உருகிட ஏத்துவனே! (1)

ஏத்தும் உளந்தனில் பூத்துப் பொலிந்திடும் ஏந்திழையே
பூத்திவ் வுலகினைக் காத்துக் கரந்திடும் பூவிழியே
கூத்தன் நடமிடப் பார்த்துக் களித்திடும் பைங்கிளியே
சாத்தும் நறுமலர் ஏற்றுன் அருள்கொடு சங்கரியே! (2)

சங்கில் சுதியுடன் ஓமென் றொலித்திடும் சங்கவியே
அங்கம் பரனிடம் பங்காய் அளித்திட்ட அம்பிகையே
சிங்கந் தனிலொரு வேங்கை எனவரும் சூலினியே
மங்கா விளக்கென எங்கும் விளங்கிடும் மாலினியே! (3)

மார்பில் மணம்மிகும் மாலை துலங்கிடும் மங்கலையே
போர்வில் எனப்புரு வங்கள் விளங்கிடும் பூங்கொடியே
தார்கொள் மலர்களைச் சூழ்வண் டெனவிழி கொண்டவளே
பார்வந் தடிதொழத் தான்வந் தருளிடும் பைங்கிளியே! (4)


--கவிநயா

3 comments:

  1. மனம் கவரும் சிறப்பான அந்தாதி...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்

    ReplyDelete
  3. மிக்க நன்றி, தனபாலன் மற்றும் கைலாஷி.

    ReplyDelete