Monday, September 8, 2014

அனைத்தும் நீ!



நம் அன்பிற்குரிய சுப்பு தாத்தா அருமையாகப் பாடியிருப்பது இங்கே... மிகவும் நன்றி தாத்தா!



ஓம்கார ரூபிணி சம்ஹார சூலினி
ஆங்கார காளிநீ காருண்ய தேவிநீ!

அண்டங்கட் கன்னைநீ ஆதிசிவ சக்திநீ
ஆகாய கங்கைநீ ஆனந்த மோகினீ!

காலத்தின் மூலம்நீ மூலத்தின் முதலும்நீ
முதலாகி முடிவாகி மேவுங்கருங் காளிநீ!

வானத்தின் நீலம்நீ தேனுக்குள் சுவையும்நீ
ஊனாகி உருவாகி உயிரான தாயும்நீ!

வேதத்தின் வேரும்நீ வேரான வித்தும்நீ
வித்தாகி விளைவாகும் விந்தைமிகு சக்திநீ!

மத்தான மோகம்நீ ததியான வாழ்வும்நீ
முத்தாகி ஒளியாகி முகிழ்க்கின்ற ஞானம்நீ!
 
கல்லாத கல்விநீ சொல்லாத பொருளும்நீ
வில்லாகி அம்பாகி விரைகின்ற அருளும்நீ!

கண்ணான கண்மணீ பொன்னான பெண்மணீ
விண்ணாகி மண்ணாகி விகசிக்கும் பூரணீ!

தாயே எந்நாளும்நீ துணையாக வேணும்நீ
மாதே என்காவல்நீ மாசக்தி தேவிநீ!


--கவிநயா

2 comments:

  1. எல்லா வரிகளுமே ரெம்ம்ப அருமை அக்கா!
    ரெம்ம்ப ரெம்ம்ப நன்றி என்னுடைய அம்மாவை இவ்வளவு அருமையஹா பாடியதற்கு.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ஷைலன் :)

    ReplyDelete