Monday, July 6, 2015

உன்னன்பால்...



உன்னன்பால் உயிர் வாழுகிறேன்

உன்னருளால் கவி பாடுகிறேன், உன்

நினைவைக் காற்றாய் சுவாசிக்கிறேன்

நீ என் முன் வர யாசிக்கிறேன்!



தேவரும் முனிவரும் போற்றிடுவார்

தேவியுன் பதம் பணிந்தேற்றிடுவார்

பேதையும் உன்னடி போற்றுகின்றேன்

புன்மொழியாயினும் ஏற்றருள்வாய்!



கரமலரினிலே கரும்பிருக்கும்

ஐம்மலர்கள் மறு கரமிருக்கும்

அங்குச பாசமும் உடனிருக்கும்

திருவடி அருள்நிழல் தந்திருக்கும்!



நிறைமதி வதனத்தில் திலகமுமே

கதிரவனெனவே ஒளிர்ந்திருக்கும்

சிறு இதழ் மலரும் புன்னகையோ

கவலை ஏன் என மொழிந்திருக்கும்!



காதணி அசைந்து ஆமென்கும்

காற்சிலம்பொலித்து ஓமென்கும்

அசையும் அசையாப் பொருள் யாவும்

அன்னையுன் அருளில் திளைத்திருக்கும்!



நான்மறை போற்றும் நாயகியே

நான்முகியே ஜகன் மோகினியே

நாராயணியே சிவ சக்தி

நம்பியவர்க் கருள் நவ சக்தி!


--கவிநயா

No comments:

Post a Comment