Wednesday, October 27, 2021

சரஸ்வதி அம்மா - நவராத்திரி பாடல்

 

வெள்ளைப் பட்டாடை உடுத்தி

வெள்ளன்னம் மீதமர்ந்து

நான்முகன் நாயகி வலம் வருவாள் - அவள்

பூ மலர் விழி மலர்ந்து அருள் புரிவாள்

 

வெள்ளை மலர் அவள் மேடை

வெள்ளை உள்ளம் அவள் வீடு

கள்ளமில்லா உள்ளந்தனில் குடி புகுவாள் – அவள்

கொள்ளை இன்பங்கள் தந்து அருள் புரிவாள்

 

வீணைதனை மடியேந்தி

ஜப மாலை கரமேந்தி

ஞானத்தின் வடிவாக வீற்றிருப்பாள் – அவள்

அஞ்ஞானந் தன்னை வெல்ல அருள் புரிவாள்

 

ஆயகலை அனைத்துக்கும்

அரசியென ஆனாலும்

தாயெனவே பரிந்துவந்து அன்பு செய்வாள் – அவள்

தயவுடனே நமக்கு அருள் புரிவாள்

 

நான்முகனின் நாவில் இருப்பாள்

நான்மறையின் பொருளில் இருப்பாள்

நா ஒலிக்கும் தமிழிலும் அவள் இருப்பாள் – அவள்

நாத வடிவாக எங்கும் நிறைந்திருப்பாள்

 

 

--கவிநயா




No comments:

Post a Comment