Monday, December 22, 2008

101. அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா !



அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா
முகமூறும் நகை காட்டி குளிர்விப்பாய் அம்மா
தினந்தோறும் உன்நினைவில் திளைக்கின்றோம் அம்மா
மனந்தோறும் நீயிருந்து மகிழ்விப்பாய் அம்மா

நாள்தோறும் நாள்தோறும் உன்னருளை நாடி
வாயார மனமார உன்புகழைப் பாடி
உனைத்தேடி வருகின்ற பக்தர்பல கோடி
கருணைசெய்ய வரவேணும் நீயிங்கு ஓடி

மெல்லிதழை யொத்தசெம் மலர்ப்பதங்கள் சரணம்
தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்
தத்திநடை பழகுகின்ற தளிர்ப்பதங்கள் சரணம்
நித்தம்எமைக் காக்கின்ற பொற்பதங்கள் சரணம்

முத்துமணி நூபுரங்கள் கொஞ்சும்பதம் சரணம்
முத்தொழிலும் ஆற்றுகின்ற முதல்விபதம் சரணம்
பித்தனுடன் நடனமிடும் பிச்சிபதம் சரணம்
பக்தர்களைப் பேணுகின்ற அற்புதையே சரணம்!


--கவிநயா

10 comments:

  1. வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்கு, கவிநயாக்கா!

    ReplyDelete
  2. http://uk.youtube.com/watch?v=n6m4ZtNGnfI
    OR
    http://ceebrospark.blogspot.com

    Listen to this song in
    Raag punnaga varali.

    Subbu rathinam.

    ReplyDelete
  3. அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீங்கள் இடவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். :-)

    ReplyDelete
  4. //வேண்டுதல், தேடல், சரணடைதல் - என்று நன்றாக இருக்கு, கவிநயாக்கா!//

    இயல்பாகவே அமைஞ்சிட்டது ஜீவா :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. //Listen to this song in
    Raag punnaga varali.//

    அருமையிலும் அருமை சுப்பு தாத்தா. ரொம்பவே பிடிச்சிட்டது. முதலில் சரணம் பாடி, "கருணைசெய்ய நீயிங்கு வரவேணும் ஓடி"ல முடிச்சிருப்பதும் அழகா இருக்கு. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //அருமையான பனுவல் அக்கா. 101வது இடுகையை இன்னும் நீங்கள் இடவில்லையே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். :-)//

    நீங்க நினைச்சது எனக்கு கேட்டிருச்சு :) முதல்லயே எழுதிட்டேன்... வேற யாரும் போடறீங்களான்னு பார்த்துட்டு பிறகு போட்டேன்... நினைச்சுக்கிட்டதுக்கும் வருகைக்கும் நன்றி குமரா.

    ReplyDelete
  7. //தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்//

    பதங்களால் அன்னை தீம், தீம், தரிகிட தீம்-ன்னு ஆடுறது போலவே இருக்கு-க்கா! :)

    சீக்கிரமா இருநூறை எட்டிப்பிடிக்கவும் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  8. //பதங்களால் அன்னை தீம், தீம், தரிகிட தீம்-ன்னு ஆடுறது போலவே இருக்கு-க்கா! :)//

    பந்தல் பிசிலயும் இங்கே வந்து எட்டிப் பார்த்ததுக்கு நன்றி கண்ணா :)

    //சீக்கிரமா இருநூறை எட்டிப்பிடிக்கவும் வாழ்த்துக்கள்! :)//

    அதென்ன எனக்குச் சொல்றீங்க! கூடித்தான் தேர் இழுக்கணும்! :)

    ReplyDelete
  9. பக்தி பரவசமூட்டும் பதிவுகள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாருங்கள் வண்ணத்துப்பூச்சியாரே! முதல் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete