Thursday, December 4, 2008

99. "அன்னையை ஆராதிப்போம்!"

"அன்னையை ஆராதிப்போம்!"
[அழகு தமிழில் தேவி பூஜை!]


அருள் தரும் அன்னையை ஆராதித்து நூறாவது பதிவு வரப்போகிறது! இரண்டு அணில்களும், ஒரு சிங்கமும் ரொம்பவே முனைப்பாக அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்! அதற்கு முந்தைய பதிவு இது! என்ன செய்யலாம் என யோசித்தேன்! அன்னை வரப் போகிறாள்! அவளை வரவேற்று எளிய தமிழில் ஒரு ஆராதனை செய்தவுடன் அடுத்த கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதினேன்! கணபதி காப்பு, [ஸௌந்தர்ய லஹரியை ஒட்டி]அன்னையின் எழில் வண்ணம், அதைத் தொடர்ந்து அவளுக்கு எல்லா உபசாரங்களும் கூடிய ஒரு ஆராதனை செய்து, நைவேத்தியம், கற்பூரம் எல்லாம் காட்டி, அவளை வேண்டி வணங்குவதாக இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. கொஞ்சம் நீளமான பதிவு.... தவிர்க்கமுடியவில்லை! இதனை அன்றாட ஆராதனைக்கும் பயன்படுத்தலாம்! அன்னை மகிழ்ந்து எல்லா நலனும் அருள்வாள்! ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!
*********************************************

"அன்னையை ஆராதிப்போம்!"
செங்கமலப் பொற்பாதம் திருவடிகள் தாங்கிவரும்
அங்கயற்கண்ணியின் அருட்பூஜை யான் செய்திட
பங்கமொன்றும் வாரமால் பாங்குடனே காத்திடவே
மங்கள விநாயகனே முன்வந்து காத்திடுவாய்!


'அன்னையின் அருள்வடிவச் சிறப்பு!'
தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!

கார்மேகம் போலிங்கே கூந்தலதை விரித்திருப்பாள்!
கார்குழலாள் சடைவிரிக்க சகலமுமே அதிலடங்கும்!

கற்றையொன்று புரளுகின்ற நெற்றியதில் சுட்டி மின்னும்!
வெற்றியதைச் சொல்லிவந்து வாழ்வளித்துத் தந்துவிடும்!

முன்நுதலில் துலங்கிவரும் குங்குமத்தைப் பார்த்திருந்தால்
முன்வந்த தீமையெலாம் பின்னொழிந்து ஓடிவிடும்!

வில்போலும் புருவமது வேல்விழியைக் காட்டிவிடும்!
சேல்போலத் துள்ளுகின்ற விழியிரண்டும் பூத்து நிற்கும்!

கண்ணழகைச் சொல்லிடவோ காலமிங்கு போதாது!
விண்ணவரும் தவித்திடுவார் சின்னவன் யான் என் சொல்வேன்!

எடுப்பாக வளைந்திருக்கும் நாசியிலே ஒளிவீசும்
மூக்குத்திச் சிவப்பினிலே முன்வினைகள் பறந்தோடும்!

இளம்பஞ்சு போலவிங்கு மெலிதாகச் சிவந்திருக்கும்
மென்பட்டுக் கன்னங்கள் மெய்ம்மறக்கச் செய்திருக்கும்!

தாம்பூலச் சிவப்பழகா தன்மூக்குச் சிவப்பழகா எனத்
தத்தைகளும் அன்னையிவள் செவ்விதழை ஆழ்ந்திருக்கும்!

முத்துப்பல் மோஹனமே! முத்துநகைச் சித்திரமே!
மொழிபேசும் கோமளமே! முகத்தழகை என் சொல்வேன்!

குழலங்கு மூடிவரும் காதுமடல் குண்டலங்கள்
வழிவழியாய் வந்திருக்கும் தீதெல்லாம் அசைத்துவிடும்!

வெண்சங்குக் கழுத்தழகு கமுகொன்றைக் காட்டிவிடும்
முன்மார்பில் தவழ்ந்திருக்கும் முலையிரண்டும் முந்திவரும்!

அமுதக் கலசமென அசைந்திருக்கும் மென்முலைகள்
தமிழமுதம் தந்துவிடத் தவித்திருக்கும் மார்பினிலே!

செவ்வல்லிக் கையிரண்டும் சேர்த்தணைத்து முத்தி தரும்!
செவ்விரல்கள் குழைத்திருக்கும் செம்பவளம் தோற்றுவிடும்!

இல்லையென்று சொல்லிவிடும் இடையங்கு தேடிவிட
இல்லையெனப் போய்விடுமே இருந்திட்ட பாவமெல்லாம்!

நாபிச் சுழலினிலே நற்கதியும் கிட்டிவிடும்
ஆவிக்கும் இதமளிக்கும் அற்புதமும் தெரியவரும்!

நீள்துடைகள் நெஞ்சமதில் நர்த்தனங்கள் ஆடிவரும்
கால்விரல்கள் நடந்துவரும் அழகினிலே எனைமறப்பேன்!

நற்கலவை தோய்த்திருக்கும் நறுமணமும் கூந்தலிலே!
சொற்கவிகள் பிறந்திருக்கும் சுந்தரியாள் கண்களிலே!

சந்திரனும் சூரியனும் கண்ணிரண்டில் துலங்கிடவே
செந்தாமரைப் பதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

செவ்விதழ்கள் சிந்திவரும் புன்னகைக்கோர் விலையில்லை
செங்கழுத்தில் சிறந்திருக்கும் பொன்மாலை அசைந்திருக்கும்!

பத்துவிரல் மோதிரமும் எத்தனை பிரகாசமது
கொத்துமலர்ப் பூங்குழலில் கோடி வரும் வாசமது!

மூக்குத்தி புல்லாக்கு முகத்தழகைக் கூட்டிவிடும்
பூக்குத்தி நின்றிருக்கும் சூடாமணி ஒளிவீசும்!

ரத்தினப் பதக்கமும் மோஹன மாலையழகும்
சுத்தமான செவிகளிலே செங்கமலம் சிரித்திருக்கும்!

கையிரண்டில் கங்கணங்கள் மார்பணையும் மாணிக்கப் பதக்கம்
இடுப்பினிலே ஒட்டியாணம் காலிரண்டில் தண்டை கொஞ்சும்!

மெட்டியொலி ஓசையிலே மேதினியும் உயர்ந்துவிடும்
கச்சிதமாய் உடலணைக்கும் காஞ்சிப்பட்டு காத்துவிடும்!

இடையணியும் மேகலையும் இடரனைத்தும் தள்ளிவிடும்
நடையழகைக் கண்டிருந்தால் நல்லனவும் பிறந்துவிடும்!

பொன்கொலுசு ஒலியெழுப்ப புத்தொளியும் சேர்ந்துவிடும்
மின்னலிடை நெளிவினிலே மயக்கங்கள் தெளிந்துவிடும்!

மருதாணிச் சிவப்பிருக்கும் மலர்கைகள் ஆட்டிவர
செம்பஞ்சுப் பாதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

என்னவளே என் தாயே! ஏற்புடைய ஏந்திழையே!
அன்னநடை நீ நடந்து என்முன்னே வருவாயடி!

அன்புடனே நினையழைத்து ஆராதனை யான் செய்ய
அன்புருவாய் வருவாயடி! ஆதிசிவன் தேவியளே!


[இத்தனை அழகுடன் அருள்செய வரும் அன்னையை முறைப்படி அழைத்து ஆராதனை செய்வோம்!]

'அழைப்பு '

அந்தமும் ஆதியில்லா அருட்பெரும் ஜோதிமாயே!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!


"இருக்கை"

வந்தனை வந்தனை நீ வரதே! வான்முகிலே அம்மா!
சிந்தனை களித்து இங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய்!


"சந்தனம் அளித்தல்"

பந்தனை அறுத்து எம்மை பவக்கடல் தாண்டச் செய்ய
சந்தனம் ஏற்பாய் அம்மா! சண்டிகா! சந்த்ரரூபி!


"குங்குமம் இடல்"

அங்கயற்கண்ணி மாயே! அடியாரைக் காக்க நீயே
குங்குமம் ஏற்பாய் அம்மா! குமரியே! அமரவாழ்வே!


"அக்ஷதை தூவல்"

பக்ஷமும் கொண்டு எங்கள் பவவினை பறந்து ஓட
அக்ஷதை ஏற்றுக் கொண்டு அருள்புரி அமரதேவி!

"தாம்பூலம் அளித்தல்"

வேம்பாகும் உலக வாழ்க்கை வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்றுக் கொண்டு தயவுடன் அருள்வாய் அம்மா!


"கனிகள் அளித்தல்"

பனி ரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரம் எல்லாம்
கனியிதை ஏற்றுக் கொண்டு கடைக்கண்ணால் பார்த்திடாயோ!


"தூபம்"

பாபங்கள் விலகிச் சித்தம் பரிசுத்தமாகவென்று
தூபமும் ஏற்றுக்கொண்டு துயர் கெட அருள்வாய் அம்மா!


"தீபம் காட்டல்"

தாபமாம் பிறப்பிறப்பு தனித்துயர் முக்தி மேவ
தீபமும் ஒளிர ஏற்று திகம்பரி அருள்வாய் அம்மா!


"அன்னையின் 108 போற்றி"

ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!
சொல்லிலும் சக்தி! செயலிலும் சக்தி!
சொல்லினும் சக்தி! செய்யினும் சக்தி!
பண்ணிலும் சக்தி! பண்ணினும் சக்தி!

மண்ணிலும் சக்தி! விண்ணிலும் சக்தி!
கையிலும் சக்தி! கருத்திலும் சக்தி!
தையலும் சக்தி! தருபவள் சக்தி!
எங்கினும் சக்தி! எதனிலும் சக்தி!
தங்கிடும் சக்தி! தாங்கிடும் சக்தி!


வாக்கிலும் சக்தி! வடிவிலும் சக்தி!
நாக்கிலும் சக்தி! நாடிடும் சக்தி!
ஓங்கிடும் சக்தி! உலவிடும் சக்தி!
நோக்கிடும் சக்தி! நினைவிலும் சக்தி!
கண்களில் சக்தி! கொண்டவள் சக்தி!
அன்பெனும் சக்தி! அவளிறை சக்தி!
நம்பிடும் சக்தி! நடப்பதும் சக்தி!
தெம்பெனும் சக்தி! தொடர்பவள் சக்தி!
வாழ்வெனும் சக்தி! தந்தவள் சக்தி!
தாழ்விலாள் சக்தி! தளர்விலாள் சக்தி!

உணர்வெனும் சக்தி! உயிரெலாம் சக்தி!
கொணர்பவள் சக்தி! கொண்டவள் சக்தி!
தானெனும் சக்தி! தனதெனும் சக்தி!
ஆணெனும் சக்தி ஆள்பவள் சக்தி!
அளிப்பவள் சக்தி! அழிப்பவள் சக்தி!
களிப்பவள் சக்தி! களைப்பிலாள் சக்தி!
படைப்பவள் சக்தி! காப்பவள் சக்தி!
துடைப்பவள் சக்தி! துயரிலாள் சக்தி!
என்னவள் சக்தி! என்னிலுள் சக்தி!
அன்னவள் சக்தி! துணையவள் சக்தி!

இசைபவள் சக்தி! இசைப்பவள் சக்தி!
அசைபவள் சக்தி! அசைப்பவள் சக்தி!
அணுவவள் சக்தி! அண்டமும் சக்தி!
கணுவிலும் சக்தி! கரும்பவள் சக்தி!
கொடுப்பவள் சக்தி! கொடையவள் சக்தி!
எடுப்பவள் சக்தி! எதிர்ப்பவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! அகிலமும் சக்தி!
வினைப்பயன் சக்தி! விதைப்பவள் சக்தி!
உயிர்ப்பவள் சக்தி! உயர்ந்தவள் சக்தி!
மெய்ப்பொருள் சக்தி! பொய்யிலாள் சக்தி!

நிலமானவள் சக்தி! நீரானவள் சக்தி!
நெருப்பானவள் சக்தி! காற்றானவள் சக்தி!
வானானவள் சக்தி! வளமானவள் சக்தி!
நானானவள் சக்தி! 'நான்' அழித்தவள் சக்தி!
நிலவானவள் சக்தி! ஒளியானவள் சக்தி!
எழுஞாயிறு சக்தி! தீயானவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! தணிப்பவள் சக்தி!
இணைப்பவள் சக்தி! இருப்பவள் சக்தி!
ஏற்றமும் சக்தி! போற்றலும் சக்தி!
மாற்றமும் சக்தி! சீற்றமும் சக்தி!

அருள்பவள் சக்தி! பொழிபவள் சக்தி!
தருபவள் சக்தி! தாழ்விலாள் சக்தி!
சக்தியெனும் சக்தி! தந்தவள் சக்தி!
அருளெலாம் சக்தி! அவள் பதம் பணிவோம்![108]
ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!


'நிவேதனம்'

ஐவேதனைப் புலன்கள் அடங்கிடத் தாயே இந்த
நைவேத்தியம் ஏற்றுக் கொள்வாய் நாயகி! லோக மாதா!


'கர்ப்பூரம் காட்டுதல்'

அற்பமாம் ஜகத்துமாயை அழிந்தருள் ஞானம் மேவ
கர்ப்பூர ஜோதி ஏற்று கனிவுடன் அருள்வாய் அம்மா!


'வேண்டல் வாழ்த்து '

அம்மையே! அருளே! போற்றி! ஆதித்ய ரூபி! போற்றி!
எம்மையே ஆதரித்து இருள்கெட அருள்வாய்! போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம் முற்றிட விதிப்பாய்! போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய்! போற்றி!


'குற்றம் பொறுக்க வேண்டல்'

அறியாமை இருளில் சிக்கி ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவியே! பொறுப்பாய் அம்மா!

மந்திரம் சடங்கு வேள்வி மதிப்புறு உபசாரங்கள்
வந்தனை துதிகள் நியாஸம் வழுத்தின ஜபமும் தியானம்

இந்தவாறு செய்தபூஜை இருந்திடும் பிழைகள் எல்லாம்
சிந்தையில் கொள்ளாது ஏற்று சீர் பெற அருள்வாய் அம்மா!

கனி மலர் தூப தீபம் கர்ப்பூர நைவேத்தியங்கள்
நனியிலாச் சிறிதானாலும் நாயகீ நிறைவாய்க் கொள்வாய்!


'உபசாரம் செய்து அனுப்பி வைத்து மீண்டும் வரவேண்டல்'

வந்தமனை வாழுமம்மா! இருந்தமனை ஈடேறும்!
சொந்தமுடன் யான் செய்த பூஜையினை நீ ஏற்று

சிந்தை களிப்புடனே எமை வாழ்த்த வேண்டுமம்மா!
இந்தமுறை நீ சென்று இன்பமுடன் வருவாயம்மா!

அந்தமிலா ஆதிசக்தி! நின் பொன்னடியே சரணமம்மா!
பந்தமுடன் நீயென்றும் எமைக் காக்க வேண்டுமம்மா!

சிரிப்புடனே நீ சென்று நூறுகாண வருவாயம்மா!
சிறப்புடனே யாம்வாழ நின்னருளைத் தருவாயம்மா!

வந்தனம்! வந்தனம்! வந்தனம்! வந்தனம் சொன்னேனம்மா!
தந்தனம்! தந்தனம்! தந்தனம்! என்றே தயவுடன் நீ அருள்வாயம்மா!
******************************************************************
ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!

27 comments:

  1. மிக அருமையான இடுகை....அன்னை எல்லோருக்கும் நலமும், வளமும் அருளட்டும்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி திரு.மதுரையம்பதி!

    ReplyDelete
  3. மிக மிக அழகாக வந்திருக்கு SK ஐயா!
    சோடச உபசாரம் மிக மிக அருமை!

    //[அழகு தமிழில் தேவி பூஜை!//
    அடியேன் அபிலாஷையைக் குளிர்வித்து வைத்தீரே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  4. //முன்நுதலில் துலங்கிவரும் குங்குமத்தைப் பார்த்திருந்தால்
    முன்வந்த தீமையெலாம் பின்னொழிந்து ஓடிவிடும்!//

    ச குங்கும லேபன,
    மல்லிகா சும்பி கஸ்தூரிகாம்!
    சமந்த ஹசி தேட்சணாம்,
    ஹரி ஹராம், ராஜ ராஜேஸ்வரீம், அம்பிகானாம்!

    ReplyDelete
  5. //தாம்பூலச் சிவப்பழகா தன்மூக்குச் சிவப்பழகா எனத்
    தத்தைகளும் அன்னையிவள் செவ்விதழை ஆழ்ந்திருக்கும்//

    ஹா ஹா ஹா
    இதழுக்கும் நாசிக்கும் சிவப்புப் போட்டியா! அருமை! அருமை!

    ReplyDelete
  6. //அமுதக் கலசமென அசைந்திருக்கும் மென்முலைகள்
    தமிழமுதம் தந்துவிடத் தவித்திருக்கும் மார்பினிலே!//

    திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  7. //கச்சிதமாய் உடலணைக்கும் காஞ்சிப்பட்டு காத்துவிடும்!//

    காஞ்சிப்பட்டு-ன்னு உடனேயே அம்மா ஞாபகம் வந்துரிச்சி!

    இப்போ தான் பேசினேன்!

    இன்னிக்கி Dec-5, அவங்க பிறந்த நாளு! :)

    இந்தக் காஞ்சிப்பட்டு இடுகையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கேன்!

    ReplyDelete
  8. //சந்தனம் ஏற்பாய் அம்மா! சண்டிகா! சந்த்ரரூபி!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    //குங்குமம் ஏற்பாய் அம்மா! குமரியே! அமரவாழ்வே!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    //அக்ஷதை ஏற்றுக் கொண்டு அருள்புரி அமரதேவி!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    //தாம்பூலம் ஏற்றுக் கொண்டு தயவுடன் அருள்வாய் அம்மா!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    //பனி "ரவி" பட்டதைப் போல்//

    ஓ அடியேனும் அம்மா பக்கத்துல இருக்கேனா? :)

    //கனியிதை ஏற்றுக் கொண்டு கடைக்கண்ணால் பார்த்திடாயோ!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    ReplyDelete
  9. //நைவேத்தியம் ஏற்றுக் கொள்வாய் நாயகி! லோக மாதா!//

    ஏற்பாய் ஏற்பாய் அம்மா!

    //கர்ப்பூர ஜோதி ஏற்று கனிவுடன் அருள்வாய் அம்மா!//

    ஒட்டியான பீட நிலையாயை
    ஸ்ரீ காஞ்சி காமேஸ்வரிம்
    கர்ப்பூர நீராஞ்சனம் சமர்ப்பயாமி!
    மகா மங்கள தீபம் தரிசயாமி!

    //சிரிப்புடனே நீ சென்று நூறுகாண வருவாயம்மா!//

    ஆகா! அப்படியே அம்பாளை நூறுக்கு ஆவாகனம் செய்து வைத்து விட்டீர்கள்!

    //வந்தனம்! வந்தனம்! வந்தனம்! வந்தனம் சொன்னேனம்மா!
    தந்தனம்! தந்தனம்! தந்தனம்! என்றே தயவுடன் நீ அருள்வாயம்மா!//

    அப்படியே அருள்வாமி அபிராமியே!
    ததாஸ்து!

    ReplyDelete
  10. //வந்தனை துதிகள் நியாஸம் வழுத்தின ஜபமும் தியானம்//

    நியாஸம் என்றால் என்ன என்று அனைவருக்கும் விளக்க வேணுமாறு வேண்டுகிறேன் SK ஐயா!

    ReplyDelete
  11. அன்னையின் அருள் வடிவச் சிறப்பை மிக அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  12. எத்தனை அழகாய் பிரித்து, ஒவ்வொன்றாய் அனுபவித்து ஒரு துரித வழிபாடு செய்து விட்டீர்கள் ரவி! பொருத்தமான ஸ்லோகங்களையும் ஆங்காங்கே கொடுத்தது மிகச் சிறப்பு! நான் எழுதியதை மீண்டும் ஒருமுறை படித்த உணர்வை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்! அன்னையின் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு!
    ரவி இல்லாமல் அன்னையா?

    மிக்க நன்றி!
    அன்னையின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்
    ஒவ்வொரு மடலாகப் பிரித்து பதில் சொல்லாமைக்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
  13. //அன்னையின் அருள் வடிவச் சிறப்பை மிக அற்புதமாக வடித்திருக்கிறீர்கள். நன்றி.//

    அந்த வர்ணனையை அன்னையே எழுத வைத்தாள் திருமதி. ராமலக்ஷ்மி! அடுத்து என்ன என யோசிக்கவே விடவில்லை! நன்றி!

    ReplyDelete
  14. //நியாஸம் என்றால் என்ன என்று அனைவருக்கும் விளக்க வேணுமாறு வேண்டுகிறேன் SK ஐயா!//

    முறைப்படி ஒரு சாதகன், உபாஸகன் தான் ஏற்றுக்கொண்ட தெய்வத்துக்கு பூஜை செய்ய உட்காரும்போது, தான் உட்காரும் பூமிக்கு, பூஜை செய்யப் பயன்படும் மணி, கலசம், பூஜா திரவியங்கள் இவற்றுக்கெல்லாம் வழிபாடு செய்த பின்னர், செய்யப்படும் ஒரு முறை இந்த ந்யாஸம் என்பது.
    அங்க ந்யாஸம், கர ந்யாஸம் என இரண்டு செய்வது வழக்கம்.

    உபதேசிக்கப்பட்ட மூல மந்திரத்தை பிரித்து ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு இடமாக உடலின் சில பாகங்களை[இதயம், உச்சந்தலை, பின்சிகை, கண்கள், உள்ளங்கைகள்]தொட்டு ஒரு கட்டுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு பிறகு லகுபூஜை என்கிற வகையில், ஒவ்வொரு விரலாகத் தொட்டு ஒரு எளிய உபசார பூஜை செய்து, பின் முழு மூல மந்திரத்தையும் எத்தனை முறை சொல்ல வேண்டும் என குரு சொன்னாரோ அத்தனை முறை உச்சரித்து [ஜபம் செய்து], அதற்குப்பின் விரிவான பூஜை தொடங்குவர்.
    அதேபோல, பூஜை முடிந்த பின்னரும் இந்த ந்யாஸத்தை மீண்டும் ஒருமுறை செய்து, கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ளவேண்டும் அதன் பின்னர் மீண்டும் ஒரு லகு பூஜை செய்து வழிபாடு முடியும்.

    இதனை எல்லாருமே செய்ய வேண்டும் என்கிற நியதி இல்லை. பொதுவாக முறைப்படி தீட்சை பெற்ற உபாஸகர்களே செய்வர்.

    இது ஒரு எளிய விளக்கமே. விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர் தகுந்த குருவிடம் அறியமுடியும்.

    ReplyDelete
  15. //தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
    ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!//

    உண்மைதான். அந்த இன்பத்தை அனுபவித்துப் பருகி, பின் பகிர்ந்தும் கொண்டமைக்கு நன்றிகள் பல அண்ணா. அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

    ReplyDelete
  16. நியாசத்தின் எளிமையான விளக்கத்துக்கு நன்றி SK!
    தங்கள் ஆசிகளுக்கும் இனிய நன்றி!

    SK ஐயா குறிப்பிட்ட தகவல்களுக்கு, சற்றே மேலதிகமாக...

    அம்பாளை நம் சிந்தையில் பரிபூர்ணமாக நிலைநிறுத்தலுக்கு (ஆவாகனம்) தியானம் என்று பெயர்!

    சகஸ்ரநாமம் சொல்லும் முன்னர் இந்தத் தியானம், நியாசம் இரண்டையும் செய்வது வழக்கம்! அலைபாயும் மனம் என்பதால், பூஜையின் முடியும் வரையாவது, அம்பாளை நிலைநிறுத்த இந்தத் தியானம், நியாசம் உதவுகிறது!

    * அங்க நியாசம் = உடல் அங்கங்களுக்கு (வெளிச் சபலங்களில் இருந்து) பாதுகாப்பு!
    * கர நியாசம் = கை விரல்களுக்கு வெளிச் சபலங்களில் இருந்து) பாதுகாப்பு!
    * திக் பந்தனம் = எல்லாத் திசைகளையும் (வெளிச் சபலங்களில் இருந்து) பாதுகாக்க கட்டி வைத்தல்! உபாசகனைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம்!

    இப்படி ஒரு மையப் புள்ளிக்கு சாதகனைக் கொண்டு வந்த பின்னர், சகஸ்ரநாம பாராயணம் துவங்குகிறது!

    அஸ்ய ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர மகாமந்த்ரஸ்ய!
    வாசின்யதி வாக் தேவதா ரிஷயா!
    அனுஷ்டுப் சந்தஹ!
    ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தேவதாம்
    மூலப் பிரகருதி இதி தியானம்
    ...
    ...

    ReplyDelete
  17. சிங்கம் சிங்கிளாத் தானே வரும்? இங்கே அணில்கள், புலிகள் புடை சூழ வருதே. :-)

    ReplyDelete
  18. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எஸ்.கே.

    இது 99ஆ 100ஆன்னு நினைக்க வைக்குது.

    ReplyDelete
  19. //உண்மைதான். அந்த இன்பத்தை அனுபவித்துப் பருகி, பின் பகிர்ந்தும் கொண்டமைக்கு நன்றிகள் பல அண்ணா. அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.//

    நன்றி கவிநயா!

    ReplyDelete
  20. //SK ஐயா குறிப்பிட்ட தகவல்களுக்கு, சற்றே மேலதிகமாக...//

    ந்யாஸம் பற்றிக் கேட்டதால் அதனை மட்டும் சொன்னேன். மேல் விளக்கத்துக்கும் நன்றி ரவி!

    ReplyDelete
  21. //சிங்கம் சிங்கிளாத் தானே வரும்? இங்கே அணில்கள், புலிகள் புடை சூழ வருதே. :-)//

    இது கவிச்சிங்கம்! எப்படி வேணும்னாலும் வரும்!:))

    ReplyDelete
  22. //ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு எஸ்.கே.

    இது 99ஆ 100ஆன்னு நினைக்க வைக்குது.//

    பேட்ஸ்மன் 99லதானே ரொம்ப நேரம் நிப்பாரு 100 அடிக்கறதுக்கு முன்னாடி! அப்படித்தான் இதுவும்!:))

    ரொம்ப, ரொம்ப, ரொம்பவே நன்றி குமரன்!

    ReplyDelete
  23. //VSK said...
    //சிங்கம் சிங்கிளாத் தானே வரும்? இங்கே அணில்கள், புலிகள் புடை சூழ வருதே. :-)//

    இது கவிச்சிங்கம்! எப்படி வேணும்னாலும் வரும்!:))//

    யக்கா! கவீ-க்கா! நீங்க சிங்கமா? சொல்லவே இல்ல? :)
    கவிச்சிங்கம் கவிநயா அக்கா வாழ்க!!

    ReplyDelete
  24. அருள் நிறை அன்னையவள்
    அமர்க்களமாய் பூசையுடன்
    அவனியெல்லாம் பவனிவரும்
    அழகான பாங்கு கண்டு
    ஆனந்தம் கொண்டோமையா.

    சரணம் சரணம் சரணமம்மா
    சாந்தி நிலவட்டும் அகிலமெல்லாம்.

    ReplyDelete
  25. //அருள் நிறை அன்னையவள்
    அமர்க்களமாய் பூசையுடன்
    அவனியெல்லாம் பவனிவரும்
    அழகான பாங்கு கண்டு
    ஆனந்தம் கொண்டோமையா.

    சரணம் சரணம் சரணமம்மா
    சாந்தி நிலவட்டும் அகிலமெல்லாம்.//

    அழகுதமிழில் சரணக்கவிதை
    சரளமாக அளித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  26. //அடியேன் அபிலாஷையைக் குளிர்வித்து வைத்தீரே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!//

    நன்றி ரவி!
    மிகவும் நீளமாக இருக்குமோ, இரு பதிவாகப் பிரித்துப் போடவும் முடியாதே எனநிணைத்தபோது, அப்படியே போடுங்கன்னு சொல்லி உற்சாகம் அளித்தமைக்கும் சேர்த்தே!

    ReplyDelete
  27. சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    கவிநயா, மீனாட்சி, கேயாரஸ் - ஒரு நல்ல இன்னிசை அனுபவம் தந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete