Wednesday, April 1, 2009

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1 [பங்குனியில் ஒரு நவராத்திரி-3]

"மீனாட்சியம்மை கலிவெண்பா” -1
[பங்குனியில் ஒரு நவராத்திரி-3]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’





அருள்மிகு மீனாக்ஷி அம்மன் ஆலயக் கும்பாபிஷேகத்தை ஒட்டி பதிவுகள் எழுதலாமா எனக் குமரன் கேட்டவுடன் மிக ஆவலுடன் ஒப்புக்கொண்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன், என் இல்லத்திற்கு வருகை தந்த ஒரு பெரியவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்து இதைப் படித்து வரச் சொன்னார். தொடர்ந்து படிக்காமல் அவ்வப்போது மட்டுமே படித்து வந்தேன்.

மிகச் சிறந்த முருக பக்தரான ”திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள்” இயற்றிய இந்த “மீனாட்சியம்மை கலிவெண்பா” மிகவும் அருமையான ஒரு நூல்! மீனாட்சி அம்மனின் பக்தராக இருந்து, அன்னையின் தரிசனம் பெற்று, அவளால் தொட்டெழுப்பப்பட்டு, அவள் ஆணையின் பேரில், சுயம்பு மூர்த்தியான முருகப் பெருமானுக்கு திருப்போரூரில் ஆலயம் எழுப்பிய மகான் இவர்!




91 கண்னிகள் கொண்ட இந்தத் துதி, முதல் வரியில் தொடங்கி, 182-ம் வரியில்தான் நிறைகிறது! அற்புதமான சொல்லாடல்களும், ஆழமான கருத்துகளும் கொண்ட இந்த நூல் அன்னையின் அடியவர் அனைவராலும் படிக்கப் படவேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை! அதிகம் அறிமுகமில்லாத இந்த அரிய நூலை பதிவேற்ற வேண்டுமென்பது என் நீண்ட நாள் அவா! அவளருளால் இன்று நிறைவேறியது!


அன்னையை இவர் துதிக்கும் அழகை, நான் சொல்வதைவிட, நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு நாளைக்கு 30 கண்ணிகள் எனத் தொடர்ந்து 3 நாட்களுக்கு இது வரும்! பாடல் விளக்கம் என இல்லாமல், சில சொற்களின் பொருள் மட்டும்
இறுதியில் வரும்.
அனைவரும் படித்துத் துதித்து, அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் பெற வேண்டுகிறேன்!


"மீனாட்சியம்மை கலிவெண்பா”

‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’


“காப்பு”

அங்கையற்கும் மாற்கும் அரியபெரு மான்இடஞ்சேர்
அங்கையற்கண் ணம்மைக் கணியவே - அங்கயத்தின்
மாமுகங்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா
நாமுகந்து பாடுவோம் நன்கு.

”கலிவெண்பா”

சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே சேயிழையே
காராரும் மேனிக் கருங்குயிலே - ஆராயும்

வேதமுத லாகிநின்ற மெய்ப்பொருளே மின்னொளியே
ஆதி பராபரையே அம்பிகையே - சோதியே

அண்டரெல்லாம் போற்றும் அரும்பொருளே யாரணங்கே
எண்திசைக்குந் தாயான ஈஸ்வரியே - தெண்திரையில்

வந்தஅமு தேயென்று மாறாம லேநினைப்பார்
சிந்தைதனி லேயுறையுஞ் செல்வியே - அந்தமிலா

மாயோன் தனக்கிளைய வல்லியே மாமயிலோன்
தாயே பராபரையே சங்கரியே - தூயவொளி

மன்னுங் கயிலாச மாமயிலே மேருவெனும்
பொன்னங் கிரியுடைய பூங்கொடியே - அன்னமே

அட்டகுல வெற்பாய் அமர்ந்தவளே ஆதிஅந்தம்
எட்டெட்டுந் தானாய் இருந்தவளே - முட்டஎங்கும்

அவ்வெழுத்தாய் நின்ற அரும்பொருளே ஆரணங்கே
உவ்வெழுத்தாய் நின்றதொரு உண்மையே - எவ்வெழுத்துந்

தானாகி நின்றதொரு தற்பரையே யெவ்வுயிர்க்கும்
ஊனாகி நின்றதோர் உத்தமியே - கோனாய்ப்

படியளக்க மால்பார் பதினான்கும் ஒக்க
அடியவரை யீடேற்றும் அன்னாய் - முடிவிலா [10]

ஓங்காரத் துட்பொருளே உற்றநவ கோணத்தில்
ரீங்காரந் தன்னில் இருப்பவளே - பாங்கான

முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே மூவிரண்டாஞ்
சட்கோணத் துள்ளிருக்குஞ் சக்தியே - மிக்கபுகழ்

எண்ணிரண்டாங் கோட்டில் இருப்பவளே எவ்வுயிர்க்கும்
பண்ணிசைந்த பாட்டின் பழம்பொருளே - விண்ணுலகின்

மேற்பட்டங் கூடுருவி மேலாகி நின்றதொரு
நாற்பத்து முக்கோண நாயகியே - சீர்ப்பெற்ற

பஞ்ச கோணத்திருந்த பைங்கிளியே பார்முழுதுந்
தஞ்சமது வாகிநின்ற தையலே - செஞ்சொல்மறைச்

சொல்லே பொருளே சுவையே அறுசுவையே
எல்லாப் புவிக்கும் இறைவியே - தொல்லை

எறும்புகடை யானைதலை எண்ணில் உயிர்க்கும்
உறும் பொருளாய் அங்கங் குணர்வாய்ப் - பெறும்பயனாய்

ஆறாறு தத்துவமாய் ஐயிரண்டு வாயுவாய்க்
கூறாய்த் திசைபத்தின் கூட்டமாய்ப் - பேறான

அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
பஞ்ச வர்ணமாய்ப் பஞ்ச தேவதையாய் - வஞ்சமற்ற

ஆறாதா ரப்பொருளாய் ஐயைந்தாய் ஐம்மூன்றாய்
வீறான சக்கரத்தின் மின்னொளியாய்க் - கூறாய் [20]

கருவிகர ணாதிகளாய்க் கைகலந்து நின்ற
பெரியதொரு மாயைப் பிரிவாய் - உரியதொரு

சோத்திரத்திற் சத்தமாய்த் தொக்கிற் பரிசமாய்
நேத்திரத்திற் பேருருவாய் நீக்கமிலா - நாத்தலனின்

மெத்திரத மாய்மூக்கின் மேவுகந்த மாய்ப்பிறவாய்
மத்தபிர மத்த வயிரவியாய்ச் - சுத்த

துரியமதாய்ப் பின்னுந் துரியாதீ தத்தின்
அரிய சிலம் பொலியும் ஆர்ப்பத் - தெரிவரிதாய்

நாடுதனிற் சென்றிரந்து நற்பவுரி கொண்டுதொந்தம்
ஆடுகின்ற பார்ப்பதியே அம்பிகையே - நாடிக்

களங்கமற வேதான் கரும்புருவந் தன்னிற்
பளிங் கொளியாய் நின்ற பரமே - வளம்பெறவே

கண்ணிரண்டி னுள்ளே கருணைத் திருவடிவாய்ப்
புண்ணியமாய் நின்றருளும் பூவையே - பண்ணமைந்த

நாசி நுனிமேல் நடுவெழுந்த தீபமாய்
ஓசைவிந்து நாதாந்தத் துட்பொருளாய் - நேசமுடன்

அஞ்சு முகமாய் அகண்டபரி பூரணமாய்ப்
பஞ்சபூ தம்மான பைங்கிளியே - கஞ்சமலர்ப்

பாத மிரண்டாகிப் பச்சைநிறந் தானாகி
ஆதிமுத லாகிநின்ற அம்பரமே - தீதிலா [30]
****************************************

அருஞ்சொற்பொருள்:

காப்பு: அயன்-பிரமன்; மால்-விஷ்ணு; இடம்-இடப்பாகம்; கயல்-ஒருவகை மீன்; கயம்-யானை; கோமான் -தலைவன்; உகந்து-விரும்பி.

கலிவெண்பா- கண்ணி:

1. சீர்-அழகு,சிறப்பு; தெள்ளமுதே, சேயிழையே என்பன அம்மையை விளிக்கும் விளிகள்; கார்-கருமை.

2. ஆதி-முதன்மை வாய்ந்த; பராபரை-சிவசக்தி.

3. அண்டர்-தேவர்; அணங்கு-தெய்வமகள்; திரை-அலைகளுடன் கூடிய கடல்.

4. மாறாமல்-இடைவிடாமல்; சிந்தை-மனம்; அந்தம்-முடிவு.

5. மாயோன் -விஷ்ணு; இணையவல்லி- தங்கையான வல்லிக்கொடி போன்றவள்; மயிலோன் -முருகன்; சங்கரி-நன்மை செய்பவள்.

6. பொன் அம் கிரி- பொன் போலப் பிரகாசிக்கும் மலை.

7. அட்டம்-எட்டு; குலம்-கூட்டம்; வெற்பு-மலை; அமர்ந்தவள்-விரும்பியவள்; எட்டெட்டும்-அறுபத்து நான்கு கலைகளுமாய்; முட்ட-நிறைந்து.

8.’அ’ எழுத்தாய்- எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையான ‘அ’ போல உயிர்களுக்கெல்லாம் முதன்மையைப் பெற்று; ‘உ’ எழுத்தாய்-’உ’ என்கிற சக்தி எழுத்தாகி.
‘அ’வைச் சிவ எழுத்தென்றும், ‘உ’வைச் சக்தி எழுத்தென்றும் கூறல் மரபு. நிறை-நிலை பெற்ற; எவ்வெழுத்தும்-எல்லா மொழிகளிலுமுள்ள எல்லா எழுத்துக்களும்.

9. தற்பரை- தானாய்த் தோன்றிய தலைவி; [சுயம்பு]; ஊன் -உடல்; கோன் -தலைவன்.

10. படி-பூமி; மால்-திருமால்; பார்-உலகம்; ஈடேற்றும்-வாழ்விக்கும்; முடிவு-அழிவு.

11. ஓங்காரம்-ஓம் என்னும் பிரணவ மந்திரம்; நவகோணச் சக்கரம் என்னும் இயந்திரத்தில் ரீங்காரம் என்னும் பீஜ எழுத்தின் மந்திரப் பொருளாய் இருப்பவள் உமை.
[’ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’அபிராமி அந்தாதி]; பாங்கு-பகுதி.

12. முக்கோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருப்பவள் உமாதேவி. மூவிரண்டு- ஆறு; ஆறுகோண இயந்திரத்தில் உள்ள மந்திரத்தில் இருக்கும் மீனாட்சியம்மை.

13. எண்ணிரண்டு-பதினாறு; கோடு-இயந்திரத்தின் எல்லைக்கோடு; இருப்பவள்-அக் கோணத்துள் பொருளாயிருப்பவள்; பண்-இசை; பழம் பொருள்-பழைமையான அர்த்தமாயிருப்பவள்.

14. மேற்பட்டு-மேலாக; ஊடுருவி-கழித்துச் சென்ற. 43 கோணங்கள் அமைந்த இயந்திரத்தின் தலைவி மீனாட்சியம்மையார்.

15. பஞ்சகோணம்- ஐந்து கோண இயந்திரங்கள்.

16. மறைச்சொல்- வேத மந்திரம்; கலை-ஒன்பது வகையான மெய்ப்படு; அறு சுவை- ஆறு வகையான உணவுச் சுவைகள்.

17. தலை-முதல்; எண் இல்-கணக்கற்ற; உறும் பொருள்-பொருந்தும் உடல்; பயன் -ஆற்றல்.

18. ஆறாறு தத்துவமாய்-முப்பத்தாறு தத்துவங்களால்; ஐயிரண்டு-பத்து; கூறு-அவ்வயுப் பகுதி; கூட்டம்-தொகுதி; பேறு-சிறந்த பயன்.

19. அஞ்செழுத்து-பஞ்சாக்கரம் என்னும் ‘நமசிவய’மந்திரம்; எட்டெழுத்து-’ஓம் நமோ நாராயணாய’என்னும் மந்திரம்; ஐம்பத்தோர் அக்கரமாய்- 51 எழுத்து வடிவமாயிருப்பவள்; பஞ்சவர்ணம்-5 நிறங்கள்; பஞ்ச தேவதை-5 சக்திகள்; வஞ்சம்-கபடம்.

20. ஆறாதாரம்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள் நம் உடலில் உண்டு என யோக சாத்திரக் கூற்று.
ஐயைந்தாய்-25 தத்துவங்களாய்; ஐம்மூன்று-5+3=8 அட்டமூர்த்தி; வீறு-மிகு பலம்; சக்கரம்-யந்திரம்; மிந்பிரகாசம்.

21. கருவி-ஐம்புலன்கள்; கரணம்-பூதங்கள்; ஆதி-முதலிய பிற தத்துவங்கள்; கைகலந்து-கூடி; பிரிவாய்-சுத்த, அசுத்தம்,பிரகிருதி எனப் பிரிவுபட்டு.

22. சோத்திரம்-செவி; தொக்கு-உடம்பு; பரிசம்- ஸ்பரிசம், தொடுவுணர்வு; நேத்திரம்-புறக் கண்; நாத்தலன் -நாக்கு என்கிற இடம்.

23. இரதம்-சுவை; கந்தம்-வாசனை; மத்த-இன்பம்; பிரமத்த-வீரம் பொருந்திய; வயிரவி-அச்சம் தருபவள்.

24. துரியமதாய்-சாக்கிரம், சொப்பனம், சுமுத்திக்கு மேலான துரிய நிலையில் உள்ளவளாய்; துரியாதீதம்-முன் சொன்ன நான்கு நிலைகளுக்கும் மேற்பட்ட நிலை.

25. இரந்து-பிச்சையேற்று; பவுரி- ஒருவகைக் கூத்து; தொந்தம்-இருவரும் கலந்து; பார்ப்பதி-பார்வதி.

26. பளிங்கு-நிறமற்ற கண்ணாடி; பரம்-பராசக்தி.

27. கருணை-இரக்கம்; வடிவு-அழகிய பெண்; பூவை-நாகண வாய்ப்பறவை போன்றவள்; பந்செம்மை.

28. தீபம்-சுடர்; உள் பொருள்- உள் இருக்கும் சக்தி.

29. அஞ்சுமுகம்- ஈசானம் முதலிய 5 முகங்கள்; அகண்ட-பிரிவின்றி; பைங்கிளி- பசுமையான கிளி போன்ற உமையவள்; கஞ்ச மலர்-தாமரைப் பூ.

30. பச்சை நிறம்- மரகதம்; ஆதி முதல்-தனி முதன்மை; அம்பரமே-வானவெளி உருவாய் நின்ற தாயே.
******************************


[நாளை வரும்]

10 comments:

  1. ஆகா, வெகு அழகாக இருக்கிறது. தட்டச்சி தருவதற்கு மிகுந்த நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  2. மருதைல மீனாட்சி கும்பாபிஷேகம் வந்தாலும் வந்தது!
    ஆலயம் மட்டுமா புதுப்பிக்கறாங்க?
    கிடைக்காத நூலெல்லாம் இணையத்தில் புதுப்பிக்கப்படுதே! அன்னையின் குடமுழுக்கு இணையத்துக்கே குடமுழுக்கு-ன்னு ஆயிடுச்சி SK ஐயா! :)

    அருமையான துவக்கம்! நன்றி இதைத் தருவதற்கு!

    திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள் முறை-ன்னே சென்னை கந்தகோட்டத்தில் பார்த்து இருக்கேன்! இவரைப் பற்றிய மேலதிக தகவல் இருந்தால் கொடுங்க! ஆச்சாரிய ஹிருதயத்தில் போடலாம்!

    ReplyDelete
  3. மிக்க நன்றி, கவிநயா.

    ReplyDelete
  4. இது அழகானது மட்டுமல்ல. அபூர்வமான பல செய்திகளை உள்ளடக்கியது. ஒரு மீனாக்ஷி மஹாத்மியமே இதற்குள் இருக்கிறது, ரவி.
    இந்த நேரத்தில் இதைப் போடக் கிடைத்தது என் பாக்கியம் எனத்தான் சொல்லவேண்டும்.
    குமரனுக்கு மீண்டும் நன்றி.
    3 பதிவுகள் எனக்கு வேண்டும் எனச் சொன்னதும் மறுக்காமல் தந்ததற்கு.

    நவராத்திரி பதிவுகள் முடிந்ததும், திருப்போரூர் சுவாமிகள் வரலாறைச் சொல்கிறேனே! சரியா?:)

    ReplyDelete
  5. அவ்வெழுத்தாய் உவ்வெழுத்தாய் ஆள்கின்ற ஆதியை
    மவ்வெழுத்தேன் வணங்குகின்றேன் மகிழ்வுடனே - செவ்வியுடன்
    நீயே எம் சிந்தையில் நிறைவுடனே நின்றிடுவாய்
    தாயே நின் தாளே சரண்.

    ReplyDelete
  6. திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர ஸ்வாமிகள் இவரைப் பற்றிய மேலதிக தகவல் இருந்தால் கொடுங்க!

    ReplyDelete
  7. நன்றி...
    தேவாமிர்த பிரசாதம் போல் உள்ளம் இனிக்கும் நூல் இது....

    ReplyDelete
  8. நன்றி...
    தேவாமிர்த பிரசாதம் போல் உள்ளம் இனிக்கும் நூல் இது....

    ReplyDelete
  9. Pl.providethe balance sloksm also

    ReplyDelete