Monday, May 25, 2009

என்று வருவாய்?


ஆத்தான்னு கூப்பிட்டாக்க
ஆசையோட வந்திடுவா
அம்மான்னு கூப்பிட்டாக்க
அன்போட அருள்புரிவா

ஆத்திரமாப் பேசினாலும்
ஆதரவாக் கேட்டுக்குவா
அழுதழுது கெஞ்சினாக்க
ஆறுதலத் தந்திடுவா

ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
ஆனந்தமா வருவாயேன்னு
ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
ஆத்தா ஒன்னக் காணலியே

தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
தெய்வமேநீ வருவாயேன்னு
தேடித் தவிச்சிருந்தேன்
தாயே ஒன்னக் காணலியே

கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
ஒத்தத்தாயி நீதானேடி
ஓடிவந்து என்னப்பாக்க
ஒருநொடியும் இல்லையோடி?


--கவிநயா

4 comments:

sury said...

// தாயே ஒன்னக் காணலியே//

உங்களை விட்டு எங்குமே போகமாட்டாள்.
தங்கள் நெஞ்சிலேயே வீற்றிருப்பாள்.
இங்கும் வந்திருப்பாள், அங்கும் வந்திருப்பாள்
எங்குமே நிறைந்து, தன்னெஞ்சில்
தங்க ஒரு இடமும் தருவாள்.

என்ன ஒரு அழகான பாடல் !

சுப்பு ரத்தினம்.
பாடல் இங்கே ஒலிக்கிறது. கேட்க எல்லோரும் வாருங்கள்.
http://menakasury.blogspot.com

கவிநயா said...

நீங்கள் சொன்னது கேட்டு ரொம்பவே சந்தோஷம். உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

பாடல் அழகா வந்திருக்கு. நீங்க கோத்திருக்கும் படங்கள் எல்லாம் மிகவும் அருமை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா எனும்
வாடி வாடும் என் வாணுதலே

என்று நம்மாழ்வார் (பராங்குச நாயகி) பாடியதைப் போல் இருக்கிறது இந்தப் பாடல்.

கவிநயா said...

ஆத்தாடி குமரா, எங்கயோ போயிட்டீக! ஆனா பாசுரத்தை நினைவுபடுத்தும்படி பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி. நன்றி குமரா.