Monday, June 22, 2009

அம்மா எனக்கொரு வரம் வேணும்...



அம்மா எனக்கொரு வரம் வேணும் - மறுக்
காமல் நீ அதைத் தர வேணும் - உன்
னடியே கதி என வந்து விட்டேன்
நீதான் அடைக்கலம் தர வேணும்

கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
கருணை ஒன்றும் குறைவதில்லை
மண்ணால் உன்னைச் செய்தாலும்
மாதா உன்னருள் மறைவதில்லை

பளிங்கால் உன்னைச் செய்தாலும் - உனைப்
பற்றிய வரைக்கை விடுவதில்லை
எப்படி உன்னைச் செய்தாலும்
என்அன்னை உன்அன்பில் மாற்றமில்லை

அதுபோல் எனக்குன் பொன்னடியில்
மாறா அன்பைத் தர வேணும்
எது வந்த போதிலும் கலங்காமல்
உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில்...

14 comments:

  1. //அதுபோல் எனக்குன் பொன்னடியில்
    மாறா அன்பைத் தர வேணும்
    எது வந்த போதிலும் கலங்காமல்
    உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்//

    எப்போதும் உன் காலடியில் இருக்கும் அருளைத்தா அம்மா.

    ReplyDelete
  2. தாயே ஜக்கம்மா..
    இந்த பதிவருக்கு கேட்ட வரம் கொடும்மா!!!

    ReplyDelete
  3. உண்டென்றிருந்தாலும் இல்லையென மறுத்தாலும்
    கண்ணில் வைத்துப் பார்ப்பதுவும் நானல்லவோ?
    கண்ணில் வைத்துப் பார்ப்பதனால் கயற்கண்ணி ஆனவள் நான்
    பெண்ணே கலங்காதே மறந்தேன் என நினையாதே!

    கற்சிலையில் மட்டுமில்லை கருத்திலும் வந்திடுவேன்
    கருணைக்குப் பஞ்சமில்லை வார்த்தைக்கு உருவமில்லை
    மண்ணாய் இருப்பதும் நான் உயர் விண்ணாய் இருப்பதும் நான்
    எல்லாம் என்செயல் எனும்போது ஏங்குவதும் எதற்காக?

    ஏக்கங்கள் தவிர்த்துவிட்டு உயர் ஆக்கங்கள் உறுதிகொள்வாய்!
    ஏதுமில்லை துணைஎனக்கே என ஒருபொழுதும் எண்ணாமல்
    வேதனைக்கு இடமில்லை சோதனைகள் எதுவரினும்
    சோதியாய்த் துணையிருக்கும் தாய் நான் அருகிருக்க!

    ReplyDelete
  4. வாங்க கைலாஷி. ஆம், அவள்தான் அருள வேணும்.

    வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. // குறை ஒன்றும் இல்லை !!! said...
    தாயே ஜக்கம்மா..
    இந்த பதிவருக்கு கேட்ட வரம் கொடும்மா!!!//

    வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. வாங்க திரு.கிருஷ்ணமூர்த்தி. எவ்வ்வ்வளவு அழகா எழுதறீங்க!! உங்க கவிதைகளை எங்கேயாவது பதிந்திருக்கிறீர்களா? நீங்க எழுதியிருப்பதை படிக்கையில் உள்ளபடியே உற்சாகம் வருகிறது. எல்லாமே அவள் எனும்போது உங்க மூலமா அவளே எனக்கு பதில் சொல்வதாக கொள்றேன் :) அற்புதமான கவிதைக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  7. // கல்லால் உன்னைச் செய்தாலும் - உன்
    கருணை ஒன்றும் குறைவதில்லை //

    என்றோ ஒரு நாள் கவிஞர் வாலி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
    தங்கள் பாடலைப் படித்தபோது அது நினைவுக்கு வந்தது.

    கோவிலுக்குச் சென்றாராம். கர்ப்பக்கிருகத்திற்குள் நுழைந்தாராம்.
    கல்லைப்பார்த்து கடவுளென்பாரைக் கூட்டம் கூட்டமாய்க் கண்டாராம்
    என்ன இது ! விந்தையென நினைத்தாராம்.
    கோவத்தில் கடவுளை நோக்கி ' நீ கல் ! " என்றிரைந்தாராம்.
    கணத்திலே எதிரொலி " நீ கல் " எனக் கேட்டதாம்.

    அவ்வொரு வார்த்தையில் அவ்வுரு தோன்றிடவே
    மெய் சிலிர்க்க, உடல் வியர்க்க‌
    நாக்குழற நவின்றாராம் தம் சுற்றத்தாரிடம்.
    " நான் சொன்ன 'கல்' பெயர்ச்சொல்.
    அவன் சொன்ன ' கல்' வினைச்சொல். "

    ஆம்.
    கல்லாதவனுக்கு அவன் கல் .
    கற்றவனுக்கோ அவன் கடல்
    பாற்கடல்.

    சுப்பு ரத்தினம்.
    பி.கு. தங்களது பாடலை ஒரு ராக மாலிகையாக, அடாணா, சஹானா, ஷண்முகப்பிரியா, தர்பார் கானடாவில்
    இணைத்து என்னால் இயன்ற வரை பாடியிருக்கிறேன்.
    சிறிது நேரத்தில் எனது வலைப்பதிவிலோ அல்லது யூ ட்யூபிலோ காணலாம். கேட்கலாம்.
    அம்மன் அருள் பெறலாம்.

    ReplyDelete
  8. நான் எழுதுவதெல்லாம் கவிதை என்று நினைப்பதில்லை, அதனால் எங்கேயும் பதிவிடத் தோன்றுவதும் இல்லை. உங்களுடைய பதிவுகளில், தொடர்ந்து ஒரு இனம் புரியாத சோகம் அல்லது ஏக்கம் வெளிப்படுவதைப் படிக்கும் அந்த நேரத்திலேயே, ஒரு மறுமொழியாக வருவது தான் அவை.

    ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது இது: தனித்து விடப்பட்டதாக உணரும் தருணங்களில் நாம் இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறோம், இந்த ஒரு செய்தியை மட்டுமே மையமாக வைத்துச் சொல்லப் பட்ட வார்த்தைகள்!

    ReplyDelete
  9. வாங்க சுப்பு தாத்தா.

    //அவ்வொரு வார்த்தையில் அவ்வுரு தோன்றிடவே
    மெய் சிலிர்க்க, உடல் வியர்க்க‌
    நாக்குழற நவின்றாராம் தம் சுற்றத்தாரிடம்.
    " நான் சொன்ன 'கல்' பெயர்ச்சொல்.
    அவன் சொன்ன ' கல்' வினைச்சொல். "

    ஆம்.
    கல்லாதவனுக்கு அவன் கல் .
    கற்றவனுக்கோ அவன் கடல்
    பாற்கடல்.//

    ஆகா, அழகான சம்பவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

    பாடலை இனிமேல்தான் கேட்கணும்.

    ReplyDelete
  10. //உங்களுடைய பதிவுகளில், தொடர்ந்து ஒரு இனம் புரியாத சோகம் அல்லது ஏக்கம் வெளிப்படுவதைப் படிக்கும் அந்த நேரத்திலேயே, ஒரு மறுமொழியாக வருவது தான் அவை.//

    அப்போ சோகமும், ஏக்கமும், நல்லதுக்குதான் :)

    நான் முன்பு எழுதிய கவிதைகளையும் இப்போது எழுதும் கவிதைகளையும் மாற்றி மாற்றி பதிந்து வருகிறேன், என்னுடைய அவ்வப்போதைய மனநிலைக்குத் தகுந்தாற் போல... முன்னைக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லைன்னு தோணுது... இருந்தாலும் தனிமையும் ஏக்கமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

    //தனித்து விடப்பட்டதாக உணரும் தருணங்களில் நாம் இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறோம்//

    அப்படின்னா சரி!

    மீள்வருகைக்கு மிக்க நன்றி திரு.கிருஷ்ணமூர்த்தி.

    ReplyDelete
  11. //ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது இது: தனித்து விடப்பட்டதாக உணரும் தருணங்களில் நாம் இறைவனுக்கு மிக அருகில் இருக்கிறோம், இந்த ஒரு செய்தியை மட்டுமே மையமாக வைத்துச் சொல்லப் பட்ட வார்த்தைகள்!//


    எல்லாக் கதவுகளும் மூடும்போது ஆண்டவன் தன் கதவுகளைத் திறக்கிறான் என் பொருள் படும் வாக்கியம்
    பைபிளிலும் உள்ளது.

    1984ல் அரவிந்த ஆசிரமத்தில் ஒரு சில நாட்கள் கழிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது திரு கிருஷ்ணமூர்த்தி
    அவர்கள் சொல்லியதை நானும் படித்தேன்.

    இறையே நம்முள் இருக்கையிலே, தனித்திருக்கையிலேதான் அவன் அருகாமையில் இருக்கிறோம் என்பது
    எவ்வாறு சரியாகும் என்று அக்கண்ணம் எனக்குத் தோன்றியது.

    சிந்தித்து பார்க்கையில், அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மனிதர்கள், அவர்கள் எதிர்பார்ப்புகள்,(demands and our responses)
    நமது செயல்களுக்கிடையே இறைவனையும் ஒரு பார்ட்னராக ஏற்றுக்கொள்ளும் ஒரு பக்குவம் இருப்பது
    அரிதே.

    நாம் தனித்துவிடப்பட்டு, துணை இன்றி தவிக்கும்பொழுதுதான் இறைவனின் தாள் நினைவுக்கு வருகிறது.

    மேடம் கவி நயாவின் கவிதை இந்தி இலக்கியத்தில் தனிச்சிறப்புடைய கவிதாயினி மஹாதேவி வர்மாவின் பாடல்களை
    நினைவூட்டுகிறது. :

    ஒரு தடாகத்து நீர் கடுமையான வெய்யிலினால் ஆவியாகி மேலே ஆகாயம் சென்று மேகமாக, தண்மை பெற்றதனால்,
    குளிர்ந்து மழையாக வருவது போல,

    இதயத்து நிற்கும் உணர்வுகளெல்லாம் (துணையில்லாத தாபத்தின்) வெப்பத்தைத் தாங்கிட இயலாத நிலையில் ஆவியாகி, மேலே
    சென்று கண்ணீர் மழையாகப் பொழிகிறதாம். இறையைப் பிரிந்து தவிக்கும் ஆன்மாவின் சோகத்தை மழை நீருக்கு
    ஒப்பிட்டுப் பேசுவார் வர்மா அவர்கள். அது கருணை மழை.

    கல்லால் ஆனாலும் கருணை மழை பொழிய வல்லவன் இறைவன்.
    இருப்பினும், இறையின் இருப்பினை, அன்பினை, அருளினை, அள்ளி அள்ளித்தரும் பண்பினை, அவனைச் சரணடைந்தவர்க்கே உணர்வது சாத்தியம்.

    //உன்
    னடியே கதி என வந்து விட்டேன்
    நீதான் அடைக்கலம் தர வேணும்//

    என அவனடியில் கதறி நிற்போர் உணர்வது சத்தியம்.

    " இறைவனிடம் கையேந்துங்கள் = அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை.
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள். அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை "

    நாகூர் அனிபாவின் கவிதை சொல்லும் செய்தியும் அதுவே.

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  12. சுப்பு தாத்தா, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லியிருக்கீங்க. ஏதோ அவள் எழுத வைக்கும் வரை வண்டி ஓடும்...

    //இறையைப் பிரிந்து தவிக்கும் ஆன்மாவின் சோகத்தை மழை நீருக்கு
    ஒப்பிட்டுப் பேசுவார் வர்மா அவர்கள். //

    கவிதாயினி மஹாதேவி வர்மா சொல்லியிருப்பது மிக அருமை.

    அந்த மாதிரி தவிப்பும் ஏக்கமும் தான் இறைவனை நமக்கு காட்டும் என்பார், ஸ்ரீராமகிருஷ்ணரும்.

    விரிவான கருத்துப் பகிர்தலுக்கு நன்றி சுப்பு தாத்தா.

    உங்கள் இசையமைப்பில் பாடல் மிக மிக அருமை! இடுகையில் இணைத்து விட்டேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  13. எது வந்த போதிலும் கலங்காமல்
    உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்

    உலகத்துக்கே மகா சக்கிரவர்த்தியான பதவி வந்தாலும் அல்லது மிக் கொடிய துன்பங்கள் வந்தாலும் கலங்காமல்
    உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும்
    இந்த நிலை வருவதற்கும் அவள் அருள்வேண்டும்.சக்கிரவர்த்தி சிவஜிக்கும் அபிராமப்ட்டருக்கும்தான் அந்த நிலை கிட்டியது.இது எனக்காக எழுதப்பட்ட வரிகள் போல் மனதிற்கு ஆறுதல் அளித்தது.

    ReplyDelete
  14. வாருங்கள் தி.ரா.ச. ஐயா.

    ////எது வந்த போதிலும் கலங்காமல்
    உனைப்பற் றிக்கொள்ளும் நிலை வேணும் //

    //இது எனக்காக எழுதப்பட்ட வரிகள் போல் மனதிற்கு ஆறுதல் அளித்தது.////

    எனக்கே சொல்லிக் கொண்டது உங்களுக்கும் ஆறுதல் அளிப்பது குறித்து மகிழ்ச்சியாய் இருக்கு. நம்மை மீறிய துயரம் வரும் போது, மனம் விட்டுப் போகும்போது, நம்பிக்கையும் சிறிதேனும் ஆட்டம் காணத்தான் செய்கிறது.

    //இந்த நிலை வருவதற்கும் அவள் அருள்வேண்டும்.//

    உண்மை.

    அவள் அருள் அனவருக்கும் நிறையட்டும்.

    வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete