Monday, July 27, 2009

மறவாத வரம் வேண்டும்!


நின்றாலும் உன்நினைவு
நடந்தாலும் உன்நினைவு
நொடிதோறும் உன்நினைவே
வேண்டும் அம்மா

இருந்தாலும் உன்நினைவு
கிடந்தாலும் உன்நினைவு
எப்போதும் உன்நினைவே
வேண்டும் அம்மா

(நின்றாலும்)

இழுத்துவிடும் மூச்சில்
உன்பெயர் ஒலிக்க வேண்டும்
இதயத்தின் துடிப்பில்அது
இசையாகி இனிக்க வேண்டும்

ஓடும் உதிரத்திலே
ஒன்றாகிக் கலக்க வேண்டும்
ஒவ்வொரு அசைவினிலும்
நீஉடன் இருக்க வேண்டும்

(நின்றாலும்)

கண்ணிமையின் ஓரத்திலே
கண்ணீரின் ஈரத்திலே
கற் பகமே உந்தன்
கருணைநான் உணர வேண்டும்

பிறவிகள் எடுத்தாலும்
பிறவாமல் போனாலும்
உன்னை மறவாத வரம்
ஒன்றுமட்டும் எனக்கு வேண்டும்

(நின்றாலும்)


--கவிநயா

8 comments:

  1. நல்ல வரம் கேட்டீர்கள் அக்கா.

    ReplyDelete
  2. விளையாட்டில் ஆசைவரும் விளையாடித்தான் பாரேன்
    விளையாட்டு மறந்ததென்றால் பிறவாத நிலை சேரும்!
    விளையாடச் சொல்லுபவள் அன்னைதான் என்கையிலே
    விளையாட்டை மறுப்பது யார் மறப்பதும் யார் சொல்லேன்!
    நினைவே தவமாகும் நிலை சேர்க்கும் வரமாகும்
    மறவாத வரமென்றால் பிறவாத நிலைதானே?

    ReplyDelete
  3. வருக குமரா. ஊர் திரும்பியாச்சா? உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்னையின் அருள் நிறையட்டும்.

    ReplyDelete
  4. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்.

    //விளையாடச் சொல்லுபவள் அன்னைதான் என்கையிலே //

    நீங்க சொல்ற மாதிரி அவள் மனசு வச்சாதான் விளையாட்டை மறக்க முடியும்.

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=jUf84MV8HsY
    //கண்ணிமையின் ஓரத்திலே
    கண்ணீரின் ஈரத்திலே
    கற் பகமே உந்தன்
    கருணைநான் உணர வேண்டும்//
    உளம் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

    'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் " எனும் பிரபலமான பாடல் கேட்டிருப்பீர்களென் நினைக்கிறேன்.
    வலஜி அல்லது வலசி என்னும் ராகம். அந்த மெட்டில் பாட யத்தனித்திருக்கிறேன்.

    பொறுமையுடன் நீங்கள் கேட்பீர்கள் தெரியும். ஆனால், . திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேட்கவேண்டுமே !

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  6. சுப்புரத்தினம் சார் சொன்னபடி, கேட்பதற்கு எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், சாஸ்த்ரீய இசை ஞானம் சுத்தமாக இல்லாதவன் நான். அதைக் கண்டுபிடித்ததாலோ என்னவோ, உங்களுக்கு என்னுடைய பொறுமையைப் பற்றி சரியாகக் கணிக்க முடிந்திருக்கிறது:-)

    ReplyDelete
  7. வாங்க சுப்பு தாத்தா. எனக்கு பிடிச்ச வரிகளை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி :)

    நீங்க அனுப்பின சுட்டி login, password-லாம் கேட்குதே! சரி பார்த்து அனுப்பறீங்களா? நன்றி தாத்தா.

    ReplyDelete
  8. //சாஸ்த்ரீய இசை ஞானம் சுத்தமாக இல்லாதவன் நான்.//

    நானும் அப்படித்தான் :) என் காதுக்கு இனிமையாய் இருந்தால் ரசிப்பேன், அவ்வளவுதான்.

    ReplyDelete