Tuesday, May 10, 2011

சஞ்சலம் அகற்றிடுவாய்!


சஞ்சல மகற்றிடுவாய் - அம்மா
அஞ்சலென் றணைத்திடுவாய்
அஞ்சன விழி உமையே - சிவன்
கொஞ்சு கின்ற சிவையே

தஞ்சமென் றுனை அடைந்தேன் - எழில்
அஞ்சுகமே அருள்வாய்
கஞ்சமலர்ப் பதங்கள் - என்றன்
நெஞ்சினிலே பதிப்பாய்

துஞ்சிடும் பொழுதினிலும் - அம்மா
என்னுடனே இருப்பாய்
விஞ்சிடும் அன்புடனே - என்னை
இருகரத் தாலணைப்பாய்


--கவிநயா

சுப்பு தாத்தா அடானா ராகத்தில் பாடுகிறார். மிக்க நன்றி தாத்தா!



படத்துக்கு நன்றி: http://jmdtutor.com/images/wallpaper/god/goddess_durga_wallpapers02.jpg

8 comments:

  1. இந்தியாவில் அம்மாவுக்கு அர்ச்சனையா-க்கா?:)

    //சிவன் கொஞ்சு கின்ற சிவையே//

    ஐ லைக் இட்!
    சிவை-ங்கிற பேர் நல்லா இருக்கு!
    அம்பாள் பெயர்களில் எனக்கு ரொம்ப பிடிச்சமானவை: சங்கரி, சிவை, கற்பகம்! அதிலும் சங்கரி ரொம்ப பிடிக்கும்! :)

    ReplyDelete
  2. //கஞ்சமலர்ப் பதங்கள்//

    கஞ்சமா?
    அம்மாவின் மலர்ப் பாதங்களைக் "கஞ்சம்"-ன்னு ஏன்-க்கா திட்டறீக? அம்மாவுக்குக் கேட்க ஆளில்லை-ன்னு நினைச்சீங்களா? பொண்ணுங்க இல்லீன்னாலும் பசங்க இருக்கோம் தெரிஞ்சிக்கோங்க! :)

    ReplyDelete
  3. வருக கண்ணா. சிவை என்கிற பெயர் எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)

    //கஞ்சமா?//

    அறிவினாவா? :) இருந்தாலும் சொல்றேன். கஞ்சம்னா தாமரை :) 'கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ" அப்படிம்பாரே பட்டர்...

    ReplyDelete
  4. கவிநயா,

    நீ சொன்ன பொருளும் [தாமரை],கே ஆர் எஸ் சொன்ன பொருளும்[stingy]

    அடங்கிய அம்பாள் பற்றிய ஸ்லேடைக் கவிதை:



    கஞ்சி குடியாளே,கம்பஞ்சோறுண்ணாளே,

    வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே,-நெஞ்சுதனில்

    அஞ்சுதலையரவாருக் காறுதலையாவாளே,

    கஞ்சமுகக் காமாட்சி காண்!



    உங்கள் இருவருக்கும் கவிதையின் இரு பொருள் புரிந்ததா?

    ReplyDelete
  5. ஊருல இருந்து இந்த இடுகையை இட்டீங்களா இல்லை ஊருல இருந்து திரும்பி வந்தாச்சா அக்கா?

    பட்டர் உங்களுக்கு எப்பவும் கைகுடுக்கிறார் இல்லை. :-)

    ---

    அம்மா, நீங்க குடுத்துருக்கிற சிலேடைப் பாடல் அங்கங்கே புரியலை. கொஞ்சம் விளக்கமும் சொல்லுங்க அம்மா.

    ReplyDelete
  6. வந்துட்டேம்ப்பா.

    //பட்டர் உங்களுக்கு எப்பவும் கைகுடுக்கிறார் இல்லை. :-)//

    அந்தாதி எப்பவும் உள்ள ஓடறதால அதன் பாதிப்பு இல்லாம எழுத முடியாது :)

    நன்றி குமரா.

    ReplyDelete
  7. நான் எழுதிய பின்னூட்டக் கவிதை கபளீகரமாயிடுத்தே!?

    இருந்தாலும் குமரனுக்காக மீண்டும் அந்த ச்லேடைக் கவிதையும்

    அதன் இரு பொருளும் இதோ:




    கஞ்சி குடியாளே கம்பஞ்சோறுண்ணாளே

    வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே-நெஞ்சுதனில்

    அஞ்சுதலையரவாருக் காறுதலையாவாளே

    கஞ்சமுகக் காமாட்சி காண்




    1)மேலெழுந்தவாரியான பொருள் :

    அம்பாள் கஞ்சி குடிக்க மாட்டாள் ;

    கம்பைச் சோறாக்கிப் போட்டாலும் உண்ணமாட்டாள்;

    கரி,கூட்டு,அவியல் என்று வித விதமான

    உணவுகளையும்[வ்யஞ்சனங்கள்/வெஞ்சினங்கள்]

    விரும்பாதவள்;

    அஞ்சுதலைப் பாம்பாருக்கு [அரவுக்கு] மானசீக[ஆறாம்]

    தலையாகிறாள்;

    கஞ்சத்தனமாக எதுவும் சாப்பிடாத முகமுடைய காமாட்சி



    2)'மெய்ப்பொருளாகிய' அம்பாள் பற்றிய கவிதையின் மெய்ப்பொருள்:

    காஞ்சியில் குடிகொண்டிருப்பவள்;

    ஏகம்பனுக்கு[ ஏகாம்ரநாதனுக்கு] நைவேத்யமாகிற சோற்றை

    உண்ணாதவள்;[மற்ற ஈஸ்வரன் கோயில் போலல்லாமல் காமாட்சிக்குமட்டும்

    அவளுக்கென்றே தயாரித்த நைவேத்யம் தான் அர்ப்பிக்கப்படுகிறது]

    கோபம் கொள்வதில் விருப்பமற்றவள்;[காமாட்சிக்கு வ்யஞ்சனமற்ற

    'சுத்தான்னம்'மட்டுமே நிவேதிக்கவேண்டும் என்ற பொருளிலும் இதை எடுத்துக்கொள்ள

    இடமுண்டு]

    நெஞ்சில், ஐந்துமுகமுடைய அரனைப் போற்றும்

    அடியாருக்கு,பிறவிபயம் போக்கி ஆறுதலைத தருபவள்;

    தாமரை முகமுடைய காமாட்சி .

    ReplyDelete
  8. மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete