Monday, April 23, 2012

கனக தாரை - 19,20,21


19.
தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(H)ஷ
லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்


பாரெல்லாம் ஓர்குடை யின்கீழ் பரிவுடன் காக்கும் தாயே
பாற்கடல் அமுதாய் வந்து பரமனை மணந்தாய் நீயே
எண்திசை யாவும் காத்து நிற்கின்ற இபங்கள் சேர்ந்து
தங்கக் குடங்கள் தளும்ப கங்கை நீர் முகர்ந்து வந்து
வைகறைப் பொழுதில் உன்னை மங்கள நீராட்டுங்காலை
சென்னியில் பாதம் சூடி சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்!


20.
கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்
கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:
அவலோகய மாம் அகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:


செய்யக் கமலத்தின் மேலே சிரிக்கின்ற கமலம் உன்னை
கண்பார்த்த அரியும் கமலக் கண்ணனாய் ஆனான்போலும்
கடல்போலக் கருணைபொங்கும் உன்கரிய விழிகள் என்மேல்
பட வேண்டும் அம்மா சற்றே ஏழை நான் உய்வதற்கே
இரக் கின்ற பிள்ளைக்காக இரங்கிடுவாய் அம்மா நீயே
பரந்த உன்கருணைக் கென்னை பாத்திரமாய்ச் செய்வாய் தாயே!


21.
ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்
கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:
ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:


ஆகம வேதப் பொருளின் அற்புத வடிவாம் தேவி
அன்னையாய் அன்புதந்து அகிலங்கள் காக்கும் ராணி
திருமகள் அவளைப் போற்றி தோத்திரம் இதனைப் பாட
கற்பனைக் கெட்டா செல்வமும், அற்புத ஞானக் கல்வியும்
கற்றவர் போற்றும் வாழ்வும், மற்றவர் போற்றும் குணமும்
மட்டிலா இன்பமும் பெற்று மகிழ்வுடன் வாழ்வார் உண்மை!


***சுபம்***
தோஹாவில் நம்ம தக்குடு அமர்க்களமா நடத்தின நவராத்திரி உற்சவத்தில் குங்கும லக்ஷார்ச்சனைக்கு அமைஞ்ச உம்மாச்சி, இங்கே கனக தாரை பொழிஞ்சிக்கிட்டிருக்கிற சாக்ஷாத் நம்ம மஹாலக்ஷ்மி தாயாரேதான்! படத்தில் பாருங்க! கனக தாரையின் பொருளைச் சரி பார்த்து உதவினதோட இல்லாம, வெகு பொருத்தமாக இந்தப் படத்தையும் அனுப்பித் தந்த தக்குடுவிற்கு நன்றி... நன்றி... நன்றி!!!

கனகதாராவின் மொழியாக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. வருகை தந்த அனைவருக்கும் அன்னையின் பேரருள் என்கிற மழை தாரை தாரையாகப் பொழிய வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன்!

--கவிநயா

பி.கு.: திட்டம் ஏதுமின்றி தொடங்கிய போதிலும், தங்கையும் நானும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாத யாத்திரை முடிக்கும் அன்றைக்கே கனக தாரைப் பதிவுகளும் நிறைவுறுகின்றன. இதுவும் அவள் திருவுளமே. யாத்திரை நல்லபடி முடியுமென்று அவள் ஆசி கூறுவது போலத் தோன்றுகிறது. (இது scheduled post). அன்னையின் திருவடிகள் சரணம்.




4 comments:

  1. 26.04.12 அன்று சங்கர ஜெயந்தி;அவருடைய முதல் துதியான
    கனகதாராவை தமிழில் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கேட்டு
    மிகவும் அனுபவித்தேன்;இருவருக்கும் நன்றி!
    அம்மன்பாட்டு அன்பர்கள் கீழுள்ள லிங்கில் சுப்பு ஐயா இந்தப்
    பகுதியைப் பாடியிருப்பதை கேட்கலாம்:
    http://www.youtube.com/watch?v=v4oyWm6o1i8

    ReplyDelete
  2. நன்றி லலிதாம்மா. சுப்பு தாத்தா பாடியதன் சுட்டி தந்தமைக்கும்.

    ReplyDelete
  3. //good translation//

    வாங்க தி.ரா.ச ஐயா. ஆசிகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete