Monday, December 31, 2012

அவளை மட்டும் நம்பு!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வரும் வருடம் வசந்தமாய் அமைய, அம்மா அருளட்டும்!




சுப்பு தாத்தா நாட்டுப்புறப் பாடல் மெட்டில் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



வண்ணப் பாவாடை கட்டிக் கொண்டு அவள்
 வாசல் தோறுமே வந்திடுவாள்
கன்னஞ் சிவந்திட முத்தமிட்டால் அந்த
 அன்பில் கனிந்தவள் கரைந்திடுவாள்
செல்லக் கண்மணியாய்ச் சீராட்ட கள்ளம்
 இல்லா உள்ளமெல்லாம் பாராட்ட
வெல்லம் போலவே இனித்திடுவாள் நம்
 இல்ல மெல்லாம் வந்து நிறைந்திடுவாள்!
                             
பக்தி செய்தாலவள் மகிழ்ந்திடுவாள் நம்
 பக்கம் வந்தவள் அமர்ந்திடுவாள்
பித்தனுட னவள் வீற்றிருப்பாள் எழில்
 பிச்சியா யவள் கொலுவிருப்பாள்
சித்தத்தி னுள்நின்று சிரித்திடுவாள் நல்ல
 தித்திக்கும் தேனென இனித்திடுவாள்
வித்துக்குள் மரமொன்று இருப்பதுபோல் நம்
 பக்திக் குள்ளே யவள் குடியிருப்பாள்!

 சந்தத மும்துதி செய்து வந்தால் நெஞ்சில்
 சந்தனம் போலவே மணத்திடுவாள்
முந்தைய வினை யெல்லாம் விரட்டிடவே
 கந்தனைத் தந்தவள் அருளிடுவாள்
விந்தையாம் அவளது பேரன்பு தன்னைச்
 சொந்தமாய்த் தருவது அவள் பண்பு
கந்தையாய்த் துயரங்கள் கிழித்தாலும் என்றும்
 பந்தமாய் அவளை மட்டும் நம்பு!  


--கவிநயா

No comments:

Post a Comment