Monday, November 26, 2012

பச்சை வண்ணப் பைங்கிளியே!









பச்சை வண்ணப் பைங்கிளியே – மனக்
கச்சைக்குள் உனை வைத்தேனே!
(பச்சை)

திக்கு விஜயம் செய்தவளே – என்
திக்கில் விஜயம் செய்யாயோ?
சொக்கன் பக்கம் அமர்ந்தவளே – என்
பக்கம் கொஞ்சம் வாராயோ?
(பச்சை)

மதுராபுரியை ஆள்பவளே  - என்
மனமாபுரியை ஆளாயோ?
கனிவாய்ச் சுந்தர(ர்) மொழியாளே – எனைக்
கனிவாய்க் கொஞ்சம் பாராயோ?
(பச்சை)


--கவிநயா

 

Monday, November 19, 2012

தாயே!





சுப்பு தாத்தா மிக இனிமையாகப் பாடித் தந்ததை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


சின்ன இதழ்களில் மின்னல் போலவே
தோணுதடி புன் சிரிப்பு
வண்ண மலரொன்று பூத்தது போலவே
தோணுதடி உன் சிரிப்பு!

விண்ணவரைக் காக்க கண்ணெனவே பேண
செந்நெருப்பில் பிறந் தாயே
பண்டாசுரன் வதம் செய்த பின்னே நீயும்
பங்கயம்போல் மலர்ந் தாயே!

கண்ணனுக்குத் தங்கை கந்தனுக்கு அன்னை
எங்களுக்கும் தாய் நீயே
கண்ணுக்குள்ளே வந்து நெஞ்சுக்குள்ளே நின்று
காவல்தந்து காப் பாயே!

மண்ணுலகைக் காக்க மாந்தர் தமைப் பேண
அன்னையென வந் தாயே
பண்ணெடுத்துப் பாட அன்னை உன்னைப் போற்ற
பைந்தமிழைத் தந் தாயே!


--கவிநயா

Monday, November 12, 2012

தீபம் நீயே!

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் ஆனந்தமாகப் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
 

தீபம் ஆகி எங்கள் நெஞ்சில் திகழ்ந்திடுவாய் அம்மே!
தாபம் நீக்கி தாயாய் எங்களைத் தேற்றிடுவாய் அம்மே!
கோபம் இன்றிக் குழந்தையாகக் குழைந்திடுவாய் அம்மே!
பாபம் போக்கி பதங்களில் எம்மைச் சேர்த்துக்கொள்வாய் அம்மே!

தீபம் ஆகி எம் இல்லங்களில் திகழ்ந்திடுவாய் அம்மே!
தீய இருளை விரட்டி நல்லொளி தந்திடுவாய் அம்மே!
தீயாய் வந்து தீமை யாவும் பொசுக்கிடுவாய் அம்மே!
தீண்டும் துன்பம் எல்லாம் நீக்கி சுகந்தருவாய் அம்மே!

தீபம் ஆகி உலகெங்கிலும் ஒளி யூட்டிடுவாய் அம்மே!
நீபம் அடர்ந்த வனத்தி னுள்ளே குடியிருக்கும் அம்மே!
இடபம் ஏறி பதியுட னிங்கே வந்திடுவாய் அம்மே!
இன்பம் எல்லாம் நீயேயாக அருளிடுவாய் அம்மே!


--கவிநயா

Monday, November 5, 2012

அருள்வாயோ அம்மா!




சுப்பு தாத்தா ஆரபியில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
 

உன்னடிகள் பற்றிக் கொள்ள
உன்நினைவே நெஞ்சை அள்ள
கள்ளமில்லா உள்ளம் நிறைய
வெள்ளமென அன்பைப் பொழிய

அருள்வாயோ அம்மா நீயும்
மறுகாதுன் அன்பில் தோயும்
சுகந்தன்னைத் தாராயம்மா
மகளென்னைப் பாராயம்மா!

கறுப்பெல்லாம் வெளுப்பாய் மாற
இருளில்லா ஒளியில் தோய
வெறுப்பேதும் இல்லா வாழ்வில்
விருப்பெல்லாம் நீயே யாக

அருள்வாயோ அம்மா நீயும்
மறுகாதுன் அன்பில் தோயும்
சுகந்தன்னைத் தாராயம்மா
மகளென்னைப் பாராயம்மா!

--கவிநயா