Thursday, October 15, 2015

செய்யக் கமலத்தின் மீதினில்...


செய்யக் கமலத்தின் மீதினிலே
ஒரு சித்திரம் போலிருப்பாள், அவள்
செய்யப் பட்டுடுத்தி செல்வங்கள் யாவையும்
தந்திடக் காத்திருப்பாள்!

வெள்ளைப் பாற்கடலின் உள்ளிருந்து
எழில் ஓவியமாக வந்தாள், அந்த
வெள்ளைச் சந்திரனின்  சோதரியாம் அவள்
விஷ்ணுவை மாலையிட்டாள்!

பச்சை நிறத்தொரு மேனியனாம் பரந்
தாமனின் மார்பு றைவாள், அவள்
இச்சை மிகக் கொண்டதாலே அவன் பக்கம்
தக்ஷணமும் பிரியாள்!

பிச்சை ஆண்டி கையின் பிரம்ம கபாலத்தை
விட்டுப் பிரித்தவளாம், அவள்
பிச்சை யிட்ட ஒரு நெல்லிக் கனிக்காக
பொன்னைப் பொழிந்தவளாம்!

எட்டு வடிவாக ஆனவளாம் பக்திக்
கெட்டும் தாயவளாம், தன்னைப்
பற்றிக் கொண்டவர்க்குப் பார பட்சமின்றிக்
கொட்டிக் கொடுப்பவளாம்!


--கவிநயா


2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்.

      Delete