Monday, December 1, 2008

98. முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வி!


'அடியார் பலர் இங்குளரே' என்று பாடுவார் பாரதியார்.

'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார்.

'மத் சித்த மத் கத ப்ராண போதயந்த பரஸ்பரம் கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச - என் மேல் முழுமனத்தையும் வைத்து என்னிடம் தரப்பட்ட வாழ்க்கையுடன் ஒருவருக்கொருவர் என் பெருமைகளைக் கூறிக் கொண்டு என்றைக்கும் மகிழுங்கள்; பரமானந்தத்தை அனுபவியுங்கள்' என்பான் கீதாசாரியன்.

'விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர்' என்பார் அபிராமி பட்டர்.

இந்த முறைகளில் எல்லாம் அன்னையின் பெருமைகளைப் போற்றிப் பணிந்து பாடும் அடியவர்கள் குழுமிய இக்குழுப்பதிவு தொடங்கிய சிறிது காலத்திலேயே நூறாவது இடுகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இறைவனின் மூவிரல் தடவுதல் என்னும் இன்பம் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காமலேயே 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று பயன் எண்ணாமல் கடமையைச் செய்த அணில்களாக இங்கே அடியவர்கள். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிற்குப் பாடல்களை இட்டார்கள். நூறாவது இடுகை என்னும் ஒரு குறியீட்டினை நெருங்குகின்றது அணில்களின் இன்பப் பயணம். இப்பயணம் இந்த நூறாவது இடுகையைத் தாண்டித் தொடர்ந்து நடக்கும். இந்த அணில்கள் இவ்வரங்கை விட்டு நீங்கிய பின்னரும் புதிய அணில்களால் தொடர்ந்து நடத்தப் பெறும்.

நூறு என்ற குறியீட்டினை நெருங்கும் முகமாக இந்த இடுகையில் அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னையின் புகழைப் போற்றப் போகிறோம். இதோ அக்கை அணில் எல்லா அணில்களையும் கூட்டிவைத்துப் பாடும் பாடல் இங்கே.



அன்னையே உன்னையே
அனுதினம் எண்ணியே
ஆனந்த மயமாகினோம்!

கன்னியே உன்னையே
கருத்திலே பின்னியே
கள்ளுண்ட களிறாகினோம்!

மண்ணிலே பிறந்தாலும்
மானிடப் பிறவியின்
மகிமையை உணர்ந்துகொண்டோம்!

கண்ணிலே உனைவைத்து
கணந்தோறும் உந்தன்புகழ்
பாடிடும் பேறுபெற்றோம்!


வீணைஇரு கரமேந்தி
வெள்ளைமலர் மீதினிலே
வீற்றிருக்கும் பேரெழிலே!

நான்முகனின் நாவினிலே
நயமுடனே உறைபவளே
மறைபோற்றும் கலைமகளே!

மாலவனின் மணிமார்பில்
தானமர்ந்து ஆளுகின்ற
வாரிதியின் வளர்மகளே!

மனமுவந்து மன்னுயிரை
இன்னுயிராய்க் காக்கின்ற
அருளூற்றே அலைமகளே!

திரிசூல ஈசனுடன்
திருமேனி பகிர்ந்தவளே
திரிபுரத்தின் நாயகியே!

கருகமணி விழிகளிலே
பரிவுமிகக் கொண்டவளே
பரிமளையே மலைமகளே!

பரிபூசனம் செய்து
பாவையுனைப் பணிகின்றோம்
பதமிரண்டைப் பற்றிக் கொண்டோம்!

சதமென்று உனைநம்பி
சந்ததமும் பாடுகின்றோம்
சங்கரியே சியாமளையே!

கைப்பிடித்துக் கரையேற்ற
கருணைகொண்டு வரவேணும்
காருண்ய தேவதையே!

ஆழிமழை போல்அன்பால்
அரவணைக்க வரவேணும்
அம்பிகையே ஈஸ்வரியே!

இனி தம்பி அணிலின் முறை. இந்த அணில் பாடப் போவதில்லை. பாடலில் ஆழப் போகிறது.

'அரிது அரிது மானிடராதல் அரிது' என்றாள் தமிழ் மூதாட்டி. மண் மீது மானிடப் பிறவி என்பது பெறற்கரியது என்பது பெரியோர் துணிபு. நுண்ணியிரில் தொடங்கி பிரம்மன் வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் மானிடப்பிறவிக்கு ஒரு தனித் தன்மை உண்டு. அஃறிணை உயிர்களுடன் ஒப்பிட மானிடப் பிறவியின் உயர்வு உள்ளங்கைக் கனி. உயர்திணை உயிர்களிலும் அப்படியே என்பது பெரியோர் சொல்வது. செய்த நல்வினைகளுக்கு ஏற்ப தெய்வப் பிறவி கிடைத்தாலும் வினைப்பயன்களை எல்லாம் துறந்து வினைகள் ஒன்றும் இன்றி பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட தேவர்களும் மானிடர்களாகப் பிறக்க வேண்டும் என்பர் முன்னோர். முக்தி நிலை மட்டுமின்றி இறையின் அன்பிலும் அருளிலும் முழுவதும் திளைத்து ஆறாத இன்ப நிலை அடையவும் மானிடப்பிறவி ஒன்றினால் மட்டுமே இயலும் என்பது முன்னோர் வாக்கு. இதனை மிக அழகாக இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளில் சொன்னார் அக்கையார்.

அகரத்தை போன்றவள் அவள் என்ற திருக்குறளின் முதல் குறளின் கருத்திற்கேற்ப அகரத்தில் இந்தப் பாடல் தொடங்கியது. உலகு என்ற மங்கலச் சொல்லுடன் இலக்கியங்களில் பல தொடங்குவதைப் போல் உலகங்களை எல்லாம் ஈன்ற அன்னையே என்று தொடங்கி அந்த மங்கலச் சொல்லையும் மறைவாக வைத்தது இந்தப் பாடல்.

உலகில் எண்ணுதற்கு எத்தனையோ பொருளிருக்க அவற்றில் எல்லாம் சுவையின்றி அவள் மீது மட்டும் சுவை கொண்டு அவளை மட்டுமே அனுதினம் எண்ணுகின்றோம் என்பதை 'அன்னையே உன்னையே' என்று ஏகாரத்தால் உரைத்தது இந்தப் பாடல். 'நாராயணனே நமக்கே' என்று இரு ஏகாரத்தால் கோதை நாச்சியார் சொன்னதைப் போல.

ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்ற பின்னரும் கன்னியென நிற்கிறாள் இவள் என்று வியப்பார் அபிராமி பட்டர். அதனை நினைவூட்டுகின்றது இந்தப் பாடலும் - முதல் வரியில் அன்னையே என்று தொடங்கிவிட்டு அடுத்த வரியில் கன்னியே என்கிறது.

'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றனர் அருளாளர். 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்றாள் நாச்சியார். மற்றைப் பொருட்களில் சுவை மாறி அவற்றைத் தொடர்ந்து செல்லும் நிலை மாறி கணந்தோறும் அன்னையே என்று பாடும் நிலை அவள் அருளாலேயே அமைந்தது என்பதால் அதனைப் 'பேறு' என்று போற்றுகிறது இந்தப் பாடல்.

அவளை இப்படி அனுதினமும் எண்ணிப் போற்றிப் பாடும் பேற்றினைச் சொல்லிவிட்டு அன்னை மூன்று வடிவங்களில் நின்று மன்னுயிரைக் காப்பதைப் போற்றுகிறது இந்தப் பாடல்.

'வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருள் ஆக விளங்குகிறாள் தெள்ளுத் தமிழ் கலை வாணி' என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அவன் சொன்னதை வழிமொழிவதைப் போல் இருக்கின்றன கலைமகளைப் போற்றும் வரிகள்.

கலைமகளாக வீணை இரு கரம் ஏந்தி இசைத்தமிழை வழங்குகிறாள். பேரெழில் கொண்டு வெண்தாமரையில் வீற்றிருந்து நாடகத் தமிழ் அருளுகின்றாள். நான்முகன் நாவினிலே நயமுடன் உறைந்து மறைகள் என்னும் இயற்றமிழைப் பொழிகின்றாள்.

அவளே அலைமகளாக உருக்கொண்டு மன்னுயிரைக் காக்க மாலவன் மண்ணுலகில் தோன்றும் போதும் 'அகலகில்லேன் இறையும் என்று' அவன் திருமார்பில் நிலையாய் அமர்ந்து கருணை மழை பொழிகின்றாள்.

அவளே திரிபுரசுந்தரியாக அருள் புரிபவள். ஈசனின் திருமேனியில் இடப்புறம் கொண்டு திரிபுர அசுரர்களைச் சிரித்தெரி கொளுத்தியவள். 'இடது கண் சந்திரன்; வலது கண் சூரியன்' என்று சிவவாக்கியர் சொல்லியதற்கேற்ப ஈசனின் பாகமான வலக்கண்ணால் கதிரவனைப் போல் பகைவர்களைக் கொளுத்திவிட்டு அன்னை தனது பாகமான இடக்கண்ணால் சந்திரனைப் போல் அன்பர்களிடம் பரிவு மிகக் கொள்வதையும் இப்பாடல் சுட்டுகிறது.

Get this widget | Track details | eSnips Social DNA


முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வியை மீண்டும் மீண்டும் போற்றும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடலை பனுவலாகப் போற்றிப் பாடுவோம்.

17 comments:

  1. //அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னையின் புகழைப் போற்றப் போகிறோம்//

    உடன் அடியேன் இந்தத் தம்பி அணிலும் மறுமொழிப் போற்றியைச் செய்ய ஓடி வருகிறது!

    ReplyDelete
  2. //கைப்பிடித்துக் கரையேற்ற
    கருணைகொண்டு வரவேணும்
    காருண்ய தேவதையே!//

    வரவேணும் வரவேணும் வரலட்சுமி அம்பிகையே!

    //ஆழிமழை போல்அன்பால்
    அரவணைக்க வரவேணும்
    அம்பிகையே ஈஸ்வரியே!//

    அரவணைத்து அரவணைத்து
    அமுதூட்ட ஓடிவா
    ஆதிகடவூரின் வாழ்வே!

    ReplyDelete
  3. அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் விளக்கவுரையும் மிக நன்றாக 98க்கு அழகு சேர்க்கிறது!

    மூவரடி பணிந்து முதல்வியை வேண்டிடுவோம்!... தீமை, பொறாமை, பொய், கோபம், சூது, லோபம் அனைத்தும் அகல!

    ReplyDelete
  4. //ஆழிமழை போல்அன்பால்
    அரவணைக்க வரவேணும்
    அம்பிகையே ஈஸ்வரியே!//

    அனுதினமும் அம்பிகையைத் துதித்திட அருமையான பாடல் தந்த அக்கை அணிலுக்கும் விளக்கம் உரைத்த தம்பி அணிலுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார்.//

    கோதை சொன்ன வாக்கிற்கு ஏற்ப, அழகுற அன்னையைப் போற்றி, அருமையான விளக்கம் தந்துள்ளீர், தம்பி அணிலாரே. மிகமிக நன்றி உங்களுக்கு. இப்படி மாறி மாறி அவளைப் போற்றுகையில் ஏற்படும் சுகானுபவம் இருக்கிறதே... அது அபாரம்.

    //உலகில் எண்ணுதற்கு எத்தனையோ பொருளிருக்க அவற்றில் எல்லாம் சுவையின்றி அவள் மீது மட்டும் சுவை கொண்டு அவளை மட்டுமே அனுதினம் எண்ணுகின்றோம்//

    என்றென்றும் அவ்வாறே இருக்க அவள் அருளட்டும்.

    ReplyDelete
  7. விளக்கம் சொல்லாமல் விட்ட பகுதிகளுக்கும் விளக்கம் சொன்னதற்கு நன்றி தம்பி அணிலாரே.

    ReplyDelete
  8. வாழ்த்துகளுக்கு நன்றி இராமலக்ஷ்மி.

    ReplyDelete
  9. சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-)

    அணில்கள் தம்மைத் தாமே வாழ்த்திக் கொள்கின்றன. :-)

    ReplyDelete
  10. மிக்க நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  11. //சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-) //

    ஆமாங்க குமரன் சற்று மட்டுமே வித்தியாசம்.... :-). அதாகப்பட்டது அக்காவின் கவிதைகள் இணைய சங்கப்பலகையில் இடம் கிடைத்தாற் போன்ற சிறிய வித்தியாசம்...:-) அஷ்டே.

    //அணில்கள் தம்மைத் தாமே வாழ்த்திக் கொள்கின்றன. :-)//

    நான் இந்த குழுவில் இல்லீங்களே...புதசெவி.

    ReplyDelete
  12. மறுமொழிப் போற்றி செய்ய உடனடியாய் வந்த தம்பி அணிலுக்கு நன்றி :)

    ReplyDelete
  13. //அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் விளக்கவுரையும் மிக நன்றாக 98க்கு அழகு சேர்க்கிறது!//

    மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  14. //அனுதினமும் அம்பிகையைத் துதித்திட அருமையான பாடல் தந்த அக்கை அணிலுக்கும் விளக்கம் உரைத்த தம்பி அணிலுக்கும் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  15. //சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி மௌலி.

    //அதாகப்பட்டது அக்காவின் கவிதைகள் இணைய சங்கப்பலகையில் இடம் கிடைத்தாற் போன்ற சிறிய வித்தியாசம்...:-)//

    ஹாஹா :)) எப்படிப்பா இப்படில்லாம்? :)

    ReplyDelete
  16. இன்னொரு அணிலும் இந்த இடுகையில் இணைந்திருக்கிறது. கவிநயா அக்காவின் தோழியார் இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார். அதனை இடுகையில் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete