Wednesday, March 25, 2009

லலிதா நவரத்தினமாலை 7

9. வைடூரியம்

வலை ஒத்த வினை கலை ஒத்த மனம்
மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடி வாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எப்போதோ ஒரு முறை, மிக மிக அரிதாக, மனம் குவிந்து இறையருளை எண்ணி மனம் நிறைந்து மகிழ்வும் அமைதியும் கூடி இறை தாள் வணங்கி எச்செயலும் ஈசன் செயல் எனும் மன நிலை ஓரிரு நாழிகையாவது இறையருளால் நிகழ்கிறது. பெரும்பாலான நேரங்களில் அப்படி ஒரு நிலை இருக்கிறது; அதனை அனுபவித்திருக்கிறோம்; அந்நிலையிலேயே நிலையாக நிற்பது தான் பெருநிலை என்பதே மறந்து போகின்றது. அப்படி அரிதாக கிடைக்கும் மனநிலை மாறும் படியும் அந்நிலையே மறக்கும் படியும் செய்வது என்ன என்று பார்த்தால் உலக ஆரவாரங்களால் தள்ளப்பட்டு மருண்டு நாம் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான சிறு பயனோ பயனே இல்லாததோ ஆன பல செயல்களில் ஈடுபட்டு அதில் சிக்கிக் கிடக்கிறோம் என்று தெரிகிறது. எச்செயலும் ஈசன் செயல் என்று இறையின் திருவுள உகப்பிற்கு ஏற்ற செயல்களில் அமைதியாகவும் மகிழ்வுடனும் ஈடுபடும் போது வைத்த நிதி, குடும்பம், குலம், கல்வி என்று பலவிதமான ஆரவாரங்கள் நம்மைச் சூழ்ந்து நம்மைப் பிடித்துச் செயல்களில் தள்ளுகின்றன; அவை சுயநலமான செயல்களாகையால் ஈசன் செயல் எனும்படியாக இல்லை; அதனால் அமைதியும் மகிழ்ச்சியும் தொலைந்து பதட்டமும் ஆர்ப்பாட்டமுமாகவே அச்செயல்கள் செய்யப்படுகின்றன. 'யோக க்ஷேமம் வஹாம்யஹம் - உனக்கு வேண்டியதைத் தரும் பொறுப்பையும் உன்னிடம் ஏற்கனவே இருப்பதைக் காக்கும் பொறுப்பையும் நானே ஏற்கிறேன்' என்ற இறை உறுதி மொழி அறிந்திருந்தும் செல்வம், குடும்பம் போன்றவற்றை நாமே நம் முயற்சியால் காப்பாற்ற வேண்டும்; இயலும் என்ற இறையருளின் அடிப்படையாக அமையாத செயல் ஊக்கங்களால் கட்டப்படுகிறோம்.

செயல்கள் எல்லாம் வலையைப் போல் நம்மைச் சுற்றிப் பிணைத்துக் கட்டுப்படுத்துகின்றன. வலை ஒத்த வினை.

மனமோ அவ்வலையில் அகப்படும் மானைப் போல் இருக்கின்றது. கலை ஒத்த மனம்.

அந்த மனம் எனும் மான் மருண்டு செயல்கள் என்னும் வலையில் விழும் படி ஆரவாரமான ஒலியை எழுப்பும் பறையைப் போல் இந்த உலகம். மருளப் பறை ஆர் ஒலி ஒத்த விதால்.

உன்னருளையே முன்னிட்டு எல்லாச் செயல்களையும் உன் திருவுள உகப்பிற்காகவும் திருமுக உல்லாசத்திற்காகவும் செய்யும் நன்னிலையை விட்டு நீங்கி அடியேன் வீணாகிப் போகலாமா? நிலையற்று அடியேன் முடியத் தகுமோ?

நான் என் தனி முயற்சியால் என் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்; செல்வம் சேர்க்கிறேன்; குடும்பப்பெருமையைக் காக்கிறேன் என்று தன்முனைப்புடன் அமைதியின்றி ஆரவாரத்துடன் செயல்களை ஆற்றாமல் உன்னருளையே முன்னிட்டு அச்செயல்களை எல்லாம் செய்யும் நிலை தருவாய். என் செயலால் இங்கு ஆவதொன்றில்லை; நின் செயலே என்று அறிந்தேன் - என்று சொல்லும் நிலை தருவாய். மனைவி மக்கள் செல்வம் என்ற இவற்றையெல்லாம் நான் காக்கிறேன் என்ற எண்ணமே என்னைக் கட்டிப் போடும் சங்கிலியாக இருக்கிறது. இந்தச் சங்கிலி தூள் தூளாகி மனைவி மக்கள் செல்வம் எல்லாவற்றையும் நீயே என்னை ஒரு கருவியாக இயக்கிக் காத்துக் கொள்கிறாய் என்ற எண்ணம் வரும் படி செய்வாய். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்றாற்போல இச்சங்கிலியாகிய நிகளம் தூள்தூளாகப் போகும் வரம் தருவாய். நிகளம் துகளாக வரம் தருவாய்.

நான் செய்கிறேன், இது எனது, இதனைக் காக்கவேண்டும் என்றெல்லாம் இங்குமங்கும் அலையும் நிலையை நீங்கி அசைவற்று இறையருளில் மூழ்கித் திளைக்கும் ஆனந்த அனுபவம் பெறும் அடியவர்களின் திருமுடி மேல் ஒளிரும் வைடூரியமே. அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடி வாழ் வைடூரியமே.

பொதிகை மலையைத் தன்னுடைய கொடியாகக் கொண்ட மலையத்துவச பாண்டியனின் திருமகளே மீனாட்சியே வருவாய். மலையத்துவசன் மகளே வருவாய்.

அன்னையே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி. மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

நூற்பயன்:

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அன்னையின் திருவருளுக்கு இசைவாக 'லலிதா நவரத்தினமாலை' என்னும் இத்துதி நூலை நாள்தோறும் படிப்பவர்கள் அற்புத சக்தி எல்லாம் அடைவார்கள். சிவரத்தினமாகத் திகழ்வார்கள்.

மாதா லலிதாம்பிகையே! உனக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!

(லலிதா நவரத்தினமாலை நிறைவுற்றது)

15 comments:

  1. //என் செயலால் இங்கு ஆவதொன்றில்லை; நின் செயலே என்று அறிந்தேன் //

    இது வரை எழுதினதுலேயே இந்த விளக்கம் மிக அருமை, குமரா. மிக்க நன்றி.

    அருளே உமையே வரணும் வரணும்
    குறையா அன்பை தரணும் தரணும்!

    ReplyDelete
  2. லோக மாதாவாம் லலிதாம்பிகையின் அருள் பெற்றவரே இதுபோன்ற தெய்வீக‌
    பணிகளில் நிலைத்து நிற்க இயலும்.

    எல்லாம் பெற்று நலமுடன் வாழ தேவி அருள் புரிவாள்.
    கடைசி இரு பாடல்களும் யூ ட்யூபில் வர இருக்கும் நேரம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  3. அருமையான விளக்களுடன் அற்புதமாக லலிதா நவரத்ன மாலையை கொடுத்ததற்கு நன்றி குமரன்

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

    ReplyDelete
  4. http://www.youtube.com/watch?v=uvk9Jt8oNUA
    Listen to the final stanzas in youtube.
    subbu rathinam

    ReplyDelete
  5. பாடல் நல்லா இருந்தது தாத்தா :)

    ReplyDelete
  6. //நிகளம் துகளாக வரம் தருவாய்
    அலைவற்று அசைவற்று அநுபூதி பெறும்//

    ஆசா நிகளம் துகளாயின பின்
    பேசா அநு பூதி பிறந்ததுவே!
    என்ற அருணகிரி வாசகம் தான் அடியேனுக்கு ஞாபகம் வந்துச்சி!

    உங்களுக்கு
    //போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்// - ஞாபகம் வருதா? சரி தான்! :))

    //மலையத்துவசன் மகளே வருவாய்
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே//

    அன்னை மீனாட்சியைக் கொண்டு அருமையாக நிறைந்தது லலிதையின் மாலை!
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    ReplyDelete
  7. லலிதா நவரத் தின மாலை இதை
    கதி-தா என்றே கருத்துடன் வேண்டி
    பதித்தார் குமரன் பதிவு ஏட்டினிலே
    ததி-தோம் களித்தோம் லலிதாம் பிகையே!

    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!
    மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

    ReplyDelete
  8. நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  9. விளக்கவுரையுடன் சேர்ந்து அன்னை லலிதாவை நவரத்தினங்களாலும் ஜொலிக்கச் செய்தீர்கள் குமரன்!

    நன்றி.

    ஒவ்வொரு பாடலுக்குள்ளும் பொதிந்திருக்கும் கல்லுக்கும், அந்தப் பாடலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

    அதையும் குறிப்பிடுவீர்கள் என நினைத்தேன்.

    உதாரணத்துக்கு,
    முதல் பாடல் வைரம்!

    வைரம் மண்ணுக்குள் மூடிக் கிடக்கிறது. அதைத் தேடி எடுத்துப் பட்டை தீட்டி, ஒளிரச் செய்தால்தான் அது முழுமை பெறும்.

    அதேபோல், நம் மனத்துக்குள் மூடிக் கிடக்கும் இறையைத் தேடி எடுக்க முயலாமல், காட்டில் கண்மூடித் தவம் செய்பவரை மறைமுகமாகப் பேசுகிறது இப்பாடல்!

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்கும்.

    நீங்கள் கொடுத்த விளக்கங்களை வைத்து அவரவர் தேடிக் கண்டு கொள்ளட்டும்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. பின்னூட்டத்திற்கும் பாடிக் கொடுத்ததற்கும் மிக்க நன்றி சுப்பு ரத்தினம் ஐயா.

    ReplyDelete
  11. மிக்க நன்றி கைலாஷி ஐயா.

    ReplyDelete
  12. நீங்க சொன்ன அருணகிரியாருடைய பாடலைப் படிச்சிருக்கேன் இரவி. ஆனால் கந்தரனுபூதியிலா கந்தரலங்காரத்திலா எதில் இந்த வரிகள் வருகின்றன என்று தெரியாது. கந்தரலங்காரமாகத் தான் இருக்க வேண்டும்; ஏனென்றால் கந்தரனுபூதியில் கொஞ்சம் பழக்கம் உண்டு அதனால் உடனே நினைவிற்கு வந்திருக்கும். :-)

    நன்றி இரவிசங்கர்.

    (உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும் போது பின்னணியில் 'நாராயண நாராயண' என்று கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனென்று தெரியுமா? :-) )

    ReplyDelete
  13. //லலிதா நவரத் தின மாலை இதை
    கதி-தா என்றே கருத்துடன் வேண்டி
    பதித்தார் குமரன் பதிவு ஏட்டினிலே
    ததி-தோம் களித்தோம் லலிதாம் பிகையே!//

    பாட்டு நல்லா இருக்கு இரவிசங்கர். நன்றி.

    ReplyDelete
  14. மிக்க நன்றி எஸ்.கே. ஐயா.

    ReplyDelete
  15. எஸ்.கே. ஐயா,

    நீங்கள் சொல்கின்ற பாடலுக்கும் கல்லுக்கும் உள்ள பொருத்தத்தைப் பற்றி ஒவ்வொரு பாட்டாக எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். கண்டு கொள்ள முடியாவிட்டால் கேட்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete