Monday, February 23, 2009

புன்னகைப்பாள் புவனேஸ்வரி!



அழகு முகப் புன்னகையை
ஆனந்த மாய்ப் பார்த்திருப்பேன்
அம்மாஎன் எழில் ஈஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

இதழ்க் கடையின் புன்னகையை
இன்ப முடன் பார்த்திருப்பேன்
உல காளும் ஜகதீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

கனிவு மிகு புன்னகையை
கால மெல்லாம் பார்த்திருப்பேன்
கருணை மிகு காளீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

கண் மலரும் புன்னகையை
களிப் புடனே பார்த்திருப்பேன்
விண் ணுறையும் வைத்தீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

பொன் னொளிரும் புன்னகையை
பரவச மாய்ப் பார்த்திருப்பேன்
புவி யாளும் பரமேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

மனங் கவரும் புன்னகையை
எனை மறந்து பார்த்திருப்பேன்
மா தரசி மாதேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

தினம் உந்தன் புன்னகையை
திகட் டாமல் பார்த்திருப்பேன்
திகம் பரனின் பாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

தே சொளிரும் புன்னகையை
தேடி வந்து பார்த்திருப்பேன்
மாச கற்றும் மல்லீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

வீசு தென்றல் புன்னகையை
வில காமல் பார்த்திருப்பேன்
வினை தீர்க்கும் வாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சுக மளிக்கும் புன்னகையை
சொக்கிச் சொக்கிப் பார்த்திருப்பேன்
சுந்தரியே ஸ்வர்ணேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சக்தி உந்தன் புன்னகையை
பக்தி யுடன் பார்த்திருப்பேன்
முக்தி தரும் சர்வேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சாந்தி தரும் புன்னைகையின்
காந்தி யினைப் பார்த்திருப்பேன்
எழி லரசி ராஜேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!!

--கவிநயா

Tuesday, February 17, 2009

லலிதா நவரத்தினமாலை 5

5. மாணிக்கம்:

காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


தாய், தந்தை, நண்பர், சுற்றம், பிள்ளைகள், வைத்த நிதி என்று பலவற்றை நேரே காணும் கதியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றையே நிலையாக எண்ணிக் கொண்டு பொழுதனைத்தையும் அவற்றைப் பேணுவதற்கே செலவழிக்கிறோம். ஓரிரு நாட்கள் மகிழ்ச்சி தரும் சிற்றின்பங்களாம் குடி, கூத்து போன்றவற்றை நோக்கும் போது வாழ்க்கை முழுவதும் அவையும் நாமும் இருக்கும் வரையில் மகிழ்ச்சி தரக்கூடிய இவற்றைப் பேணுவதில் தவறில்லை. ஆனால் இவையும் இவ்வுலக வாழ்க்கையைத் தாண்டி வருவதில்லை. என்றும் நிலையான பேறு என்னும் போது இவற்றையெல்லாம் தாண்டிய ஒன்று ஒவ்வொரு பிறவியிலும் நமக்குத் துணையாக வரும் ஒன்றையே குறிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று எது? எங்கும் தேடியும் காணக் கிடைக்காத கதி எது? விலை மதிக்க முடியாத அந்த பொக்கிஷம் எது? ஈரேழு உலகங்களுக்கும் அன்னையாக நிற்கும் அவளே நமக்கும் எக்காலத்திலும் நிலையான பேறாகவும் காணக்கிடையாக் கதியாகவும் நிற்கிறாள். காணக் கிடையாக் கதியானவளே.

என்றும் நிலையான கதியாக இருக்கும் அன்னையின் பெருமைகளையும் அவளது உண்மை உருவையும் நினைத்துப் பார்த்து அறிந்து கொள்ளுவது மிகவும் கடினம். அனைத்து உலகங்களையும் பெற்று வளர்த்துக் காத்து அருளும் அவளே அன்னைக்கே உரிய குணத்துடன் நமக்கு மிகவும் நெருங்கியவளாக நம் இதயத்தில் என்றும் நிலைத்து வசிக்கிறாள். எவ்வளவு பெரியவள் அவள் என்பதை அவளது நீர்மையைக் காணும் போது நினைக்க முடிவதில்லை. எவ்வளவு எளியவள் அவள் என்பதை அவளது பெருமையைக் காணும் போது நினைக்க முடிவதில்லை. இப்படி அணுவிற்கு அணுவாகவும் அப்பாலுக்கு அப்பாலாகவும் நிற்கும் அன்னை எண்ணி முடியாத ஒரு கலையைப் போல் விளங்குகின்றாள். கருதக் கிடையாக் கலையானவளே.

எந்த வித அணிகலன்களும் இல்லாமலேயே சிலர் மிக்க அழகாக இருப்பார்கள். அந்த அழகிற்கு அழ்கு சேர்ப்பது போல் மேலும் அணிகலன்கள் பூண்டால் அவர்களின் அழகு இன்னும் பன்மடங்கு பெருகி நிற்கும். அப்படிப்பட்ட அழகெல்லாம் சாதாரண அழகு. அன்னையின் அழகோ அணிகலன்களால் உயர்வுபடுத்த முடியா அழகு. அவளது அழகு அவ்வளவு பேரழகாக இருப்பதால் அணிகலன்கள் அணிந்த பின்னரும் ஒரு வித வேறுபாடும் காணமுடியாது. பூணக் கிடையாப் பொலிவானவளே.

என்றும் உள்ளவள் நம் அன்னை. பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் இருப்பவள் அவள். நம் கற்பனைக்கும் எட்டாதவள். எவ்வளவு உயர்வாக நாம் கற்பனை செய்தாலும் அந்தக் கற்பனையையும் விஞ்சி நிற்கும் புதுமையாக நிற்பவள் அவள். புனையக் கிடையாப் புதுமைத்தவளே.

இவ்வாறு காணக்கிடையாக் கதியாகவும் கருதக் கிடையாக் கலையாகவும் பூணக் கிடையாப் பொலிவாகவும் புனையக் கிடையாப் புதுமையாகவும் அன்னை இருப்பதை உணர்ந்து அவளை முழுமையாக அறிந்து கொள்வதென்பது நம்மால் ஆவதொன்றில்லை என்று நாணி அவளது திருநாமங்களையும் அவளது துதிகளையும் சொல்பவர்களை அவள் நாடி அருள் புரிகிறாள். அவ்வாறின்றி அவளது பெருமைகளை நான் முழுக்கத் தெரிந்து கொள்வேன் என்று தன் முயற்சியால் அது கைகூடும் என்று நினைத்து முயலுபவர்களை 'அவ்வாறே முயன்று எப்போது இயலுகிறதோ அப்போது தெரிந்து கொள்ளுங்கள்' என்று விட்டுவிடுகிறாள் அன்னை. 'அறியேன் என்று சொன்னவனே அறிந்தவன். அறிந்தேன் என்று சொன்னவனே அறியாதவன்' என்று வேதம் முறையிடுகின்றது. அதனை உணர்ந்து நம் இயலாமையை எண்ணி நாணி அவள் திருநாமங்களையும் துதிகளையும் சொல்வோம். நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே.

மாணிக்கத்தின் ஒளியைப் போல் செம்மையான நிறத்தை உடையவளே அன்னையே நீ வருவாய். மாதா லலிதாம்பிகையே உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாணிக்க ஒளிக்கதிரே வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.


6. மரகதம்:

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதிலயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்று அடியவர் குழும
அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே ச்ரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம் பச்சை நிறம். அதிலும் மரகதப்பச்சை மிக மிக இனிமையானது. செம்மை நிற மாணிக்க ஒளிக்கதிராக விளங்கும் அன்னை அதே நேரத்தில் மரகத வடிவிலும் திகழ்கின்றாள். மரகத வடிவே சரணம் சரணம்.

என்றைக்கும் நிலையான வாழ்வைத் தருவன அவளது திருவடிகள். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசுவண்டறை பொய்கையும் போன்றதே தேன் பொழியும் அத்தாமரைத் திருவடிகள். மதுரித பதமே சரணம் சரணம்.

இப்பிரம்மாண்டத்தில் நல்லதும் தீயதுமாக பல இயற்கைச் சக்திகள் இருக்கின்றன. நல்ல சக்திகள் சுரர்களாகப் போற்றப்படுகின்றனர். அவர்களின் தலைவன் சுரபதி. அந்த சுரபதி போற்றும் திருவடிகளைக் கொண்டவள் அன்னை. சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்.

இவ்வுலகங்களை எல்லாம் ஈன்றவள் அன்னை. அவள் இசை வடிவானவள். முதல் ஒலியான ஓம்கார வடிவானவள். இந்த இசை சுதி, ஜதி, லயம் என்ற பாகங்களைக் கொண்டது. அந்த பாகங்களின் வடிவாக விளங்குகிறாள் அன்னை. சுதி ஜதி லயமே இசையே சரணம்.

ஹரஹரோஹரா என்று அடியவர்கள் ஒன்று கூடி வணங்கும் போது அவர்கள் இறையருளைப் பெறுவதற்கு அருள் புரிபவள் அன்னை. அவள் அருள் செய்தால் தானே அடியவர்கள் அவன் தாள் வணங்குதல் இயலும். ஹர ஹர சிவ என்று அடியவர் குழும அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்.

உலகத்தில் இருக்கும் எல்லாவித செல்வங்களும் அருளுபவள் அன்னை. அச்செல்வங்களின் வடிவாக விளங்குபவள் அன்னை. வர நவநிதியே சரணம் சரணம்.

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

Monday, February 16, 2009

உலகாளும் அன்னை போற்றி !



மீன்போன்ற விழியாலே மேதினியை ஆள்கின்ற
மங்கை மீனாட்சி போற்றி!

காசியிலே வீற்றிருந்து காசினியைக் காக்கின்ற
காசி விசாலாட்சி போற்றி!

அமுதீசன் ஒருபாகம் அமர்ந்துஅர சோச்சுகின்ற
அன்னை அபிராமி போற்றி!

பூலோகம் முதலான ஈரே ழுலகாளும்
புவனேஸ் வரி போற்றி!

துஷ்டர்தமைத் தொலைத்துத் துயரங்களைத் தூசாக்கும்
துர்க்கையின் அடிகள் போற்றி!

மலைபோன்ற துன்பங்களைச் மடுவாக்கிக் காக்கின்ற
மங்கையர்க் கரசி போற்றி!

அம்மாவென் றழைத்தவுடன் அமுதாக வந்துநிற்கும்
அன்னையவள் அன்பு போற்றி!

தாயேஎன் றழைத்தவுடன் தவறாமல் அருளும்அவள்
தங்கமணித் தாள்கள் போற்றி!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://flickr.com/photos/8190822@N02/2274782243

Thursday, February 12, 2009

துர்கை சித்தரின் 'துக்க நிவாரண அஷ்டகம்'



மங்கல ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கணபாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

காணுறு மலரெனக் கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

தணதண தந்தண தவிலொலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்ச நல்பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேழனை கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தி எனும் மாயே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

எண்ணிய படி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதை தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
(ஜெய ஜெய சங்கரி)

Tuesday, February 10, 2009

செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!





ஆறைப் போல ஓடுதம்மா - மனம்
திசைகள் எல்லாம் அலையுதம்மா
கடலாம் உன்னைச் சேர மறந்து
பாதை தவறிப் போகுதம்மா

ஆற்றின் பாதை வகுத்திடுவாய் - அதன்
அறிவை உன்மேல் திருப்பிடுவாய்
போற்றி உன்னைப் பணிகின்றேன் - என்னை
ஏற்று அபயம் அளித்திடுவாய்

காற்றாய் என்னில் கலந்திடுவாய் - நெஞ்சில்
கனலாய் நின்று கனன்றிடுவாய்
ஊற்றாம் உந்தன் கருணையில் ஒருதுளி
என்மேல் தெறித்திடச் செய்திடுவாய்

நாற்றாய் உன்னை நட்டு விட்டேன் - நீ
கதிராய் வளர்ந்து நலம் தருவாய்
சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!

--கவிநயா

Monday, February 2, 2009

முத்து மாரியம்மா...!


முத்து முத்தாக் கண்ணீர் விட்டேன்
முத்து மாரி யம்மா - நா
முன்ன செஞ்ச வெனையெல்லாம்
முழுக வெப்பா யம்மா

கொத்துக் கொத்தாக் கண்ணீர் விட்டேன்
கோட்டை மாரி யம்மா - நா
கொண்டு வந்த வெனையெல்லாம்
கருக வெப்பா யம்மா

சித்தங் கலங்குதடி
சமயபுரத் தம்மா - நீ
சித்த வந்து கண்ணு தொறக்க
வேணுமடி யம்மா

பித்துப் புடிக்குதடி
பாளையத்து அம்மா - நீ
பெத்த புள்ள கலங்குறத
பார்ப்பதென்னடி சும்மா?


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://www.virudhunagar.in/