Friday, November 25, 2011

தாயே!தயைபுரிவாய்!

(ஓராண்டுமுன்  'சர்வம் நீயே' வலையில் பதிவிட்ட என் பாடலை
 'அம்மன் பாட்டு' அன்பர்களுக்காக இங்கு அளிக்கிறேன்)

1 ) இடர்நீக்கும் ஏகதந்தன் தாயே ! அபிராமி!
விடமுண்டகண்டனில் பாதியே சிவகாமி!
அடைக்கலம் நீயே அம்மா ! ஆதரி காமாட்சி!
மடமதியர் ஆனாலும் மனமிரங்கு மீனாக்ஷி!


2 ) குருகுகனின் தாயே! மலைமகளே ! மாயே!
கருவையும் காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகையே !
திருமால் சகோதரி ! மகேசன்மனோகரி!
அருள்புரிவாயம்மா! அகிலாண்டேஸ்வரி!


3 ) எள்ளி நகைத்திருந்தோம் இளமையின் இறுமாப்பில்;
துள்ளித்திரிந்தோமே உளத்திலுன்நினைப்பின்றி;
பள்ளத்திலே விழுந்தோம் பணம் தந்த போதையிலே;
தள்ளாமை தாக்கிடவும் தவிக்கிறோம் உனைத்தேடி!


4 ) "முற்போக்கர்" எனும்பேரில் தற்பெருமைபேசும்
அற்பர்களைத்திருத்தி அறவழி காட்டிடம்மா!
நிற்பதும் ,கற்பதும் ,சர்வமும் உன்னால் எனும்
சமர்ப்பணபுத்தி தந்து அருள்புரிவாயம்மா!


5 ) விஞ்ஞானம் எனும்பேரில் நாத்தீகத்தைப்பரப்பும்
அஞ்ஞானியர் அகந்தை அழிந்திடவேண்டுமம்மா!
மெய் ஞானம் அளித்தெம்மை ஆட்கொள்ளவேண்டுமம்மா!
இஞ்ஞாலம் எங்குமின்பம் பொங்கிடவேண்டுமம்மா!


6 )பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!
பழையபடிமாறாமல் தடுத்தருள வேண்டுமம்மா!
அழைக்குமுன் எம்முள்ளே எழுந்தருள வேண்டுமம்மா!
நுழைவாசல் எமன் வரினும் உன்நினைப்பே வேண்டுமம்மா!


7 )சாரதே! சாமளே!சாகம்பரி! சிவானி!
பாரதி!பார்வதி! பரமேஸ்வரி! பவானி!
நாராயணி! நவகாளி! காத்யாயினி!
பூரணி! பவபயஹாரிணி!ஜகத்ஜனனி !


8 )கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வரி!
சொற்பதங்கள் கடந்த சுந்தரி!சங்கரி!
கற்பனைக்கெட்டாத அத்புதரூபிணி! உன்
பொற்பதமன்றி புகலேது புவனேஸ்வரி ?


9 )சுத்தசித்தத்தினால் நித்தம் உனைநினைக்கும்
உத்தமபக்தருக்கு முக்திதரும் உமையே!
பித்தரில்பாதியே!சத்தியஜோதியே !
நித்யகல்யாணி !நின்பாதம் சரணமம்மா!

2 comments:

  1. அருமையான பாடல் அம்மா.

    //கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வரி!
    சொற்பதங்கள் கடந்த சுந்தரி!சங்கரி!
    கற்பனைக்கெட்டாத அத்புதரூபிணி! உன்
    பொற்பதமன்றி புகலேது புவனேஸ்வரி ?//

    மிகவும் பிடித்த வரிகள்.

    ReplyDelete
  2. பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!
    பழையபடிமாறாமல் தடுத்தருள வேண்டுமம்மா!
    அழைக்குமுன் எம்முள்ளே எழுந்தருள வேண்டுமம்மா!
    நுழைவாசல் எமன் வரினும் உன்நினைப்பே வேண்டுமம்மா!//

    எள்ளி நகைத்திருந்தோம் இளமையின் இறுமாப்பில்;
    துள்ளித்திரிந்தோமே உளத்திலுன்நினைப்பின்றி;
    பள்ளத்திலே விழுந்தோம் பணம் தந்த போதையிலே;
    தள்ளாமை தாக்கிடவும் தவிக்கிறோம் உனைத்தேடி!//

    ம‌ன‌ம் க‌வ‌ர் வ‌ரிக‌ளில் இல‌யிக்கிற‌து சிந்தை. அபார‌ம்!

    ReplyDelete