Friday, July 25, 2014

இரண்டாம் ஆடி வெள்ளிக்காக...



ஆடி வெள்ளி நாயகியே
அசைந்து வரும் அம்பிகையே
நாளும் உன்னைப் போற்றுகின்றோம் அம்மா, எம்மை
வாள் விழியால் காத்திடுவாய் அம்மா!

மஞ்சளிலே குளிக்க வைத்து
மல்லிகைப்பூ மாலையிட்டு
செந்தூரத் திலகமிட்டோம் அம்மா, உந்தன்
செவ்விதழ்கள் மலர்ந்திடுவாய் அம்மா!

எலுமிச்சம் பழமெடுத்து
எழிலாகத் தீபமிட்டு
உடலாலும் மனதாலும் அம்மா, நாங்கள்
உன்னை வணங்க வந்தோமே அம்மா!

பச்சரிசி ஊற வைத்து
அச்சு வெல்லம் சேர்த்திடித்து
மாவிளக்கு ஏற்றி வந்தோம் அம்மா, எங்கள்
மாதா உனைப் போற்றிடவே அம்மா!

வரவேண்டும், வந்திருந்து
தரவேண்டும் உனதருளை
கன்றாகக் கெஞ்சுகிறோம் அம்மா, உன்னை
மன்றாடி வேண்டுகிறோம் அம்மா!


--கவிநயா
 

No comments:

Post a Comment