Sunday, October 2, 2016

துர்க்கை அம்மா!


அனைவருக்கும் இனியா நவராத்திரி வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!




நாதநாமக்கிரியை யில் கீதாம்மா இனிமை ததும்பப் பாடியது... மிக்க நன்றி அம்மா!


துர்க்கை என்னும் நாமம் கொண்டு துக்கம் நீக்குகின்றவள்!

பட்சம் கொண்டு பக்கம் வந்து காத்து நிற்கும் தாயவள்!



அன்னையென்று சொல்லி விட்டால் மின்னல் போல வருபவள்!

சண்ட முண்டர் சிரமறுக்கச் சண்டியாகி நின்றவள்!



வீறு கொண்ட வேங்கை போல வேகங் கொண்ட மாதவள்!

பார் சிறக்கப் போர் தொடுத்து அசுரர் தம்மை மாய்த்தவள்!



கால் பிடித்த பக்தருக்குக் காவல் நிற்கும் தாயவள்!

மால் பிடித்த மதி மயக்கம் தெளிய வைக்கும் தூயவள்!



மாய மகிஷன் தன்னை வெல்லச் சூலமேந்தி வந்தவள்!

காலம் வென்று காளியாகித் தர்மம் காத்துத் தந்தவள்!



அண்டி வந்த பக்தர் தம்மை அரவணைத்துக் காப்பவள்!

சண்டியாகி நின்ற போதும் அன்பு செய்யும் தாயவள்!



சங்கரனில் பாதியவள் சங்கடங்கள் நீக்குவாள்!

சந்திரனைச் சூடியவள் சஞ்சலங்கள் போக்குவாள்!



மறைகள் எல்லாம் போற்றுபவள் குறைகளெல்லாம் நீக்குவாள்!

பிறை அணிந்த நாதனுடன் பிறவித் துன்பம் போக்குவாள்!


--கவிநயா 

1 comment:

  1. மிக மிக அருமையான வார்த்தைகளில் அமைந்த பாடல்...கவிநயாம்மா. நவராத்திரி வாழ்த்துகள்!

    ReplyDelete